திருப்பரங்குன்றம்: வடநாட்டில் ராமன்! தமிழகத்தில் முருகன்! ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை நடைமுறைப்படுத்தும் திராவிட இந்துத்துவ மாடல்!

சமரன்

திருப்பரங்குன்றம்: வடநாட்டில் ராமன்! தமிழகத்தில் முருகன்! ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவை நடைமுறைப்படுத்தும் திராவிட இந்துத்துவ மாடல்!

வடமாநிலங்களில் இந்து-முஸ்லீம் கலவரங்களை உருவாக்கி இஸ்லாமிய மக்களின் ரத்தம் குடிக்கும் இந்து மதவெறி காவிக் கொலைக்கார கும்பல், தமிழ் நாட்டிலும் அத்தகைய வெறிச்செயல்களை அரங்கேற்ற சாம-பேத-தான-தண்ட முயற்சிகளை செய்து வருவதன் ஒரு பகுதிதான் திருப்பரங்குன்றத்தில் அரங்கேறிய நிகழ்வுகள் ஆகும்.

முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படை வீடு எனக் கூறப்படும் திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்கா உள்ளது. முருகன் கோவில்-தர்கா என இரண்டு வழிபாட்டு தலங்களிலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையுடன் வழிபட்டு வருவது காலங்காலமாக தொடரும் வழக்கமாகும். கடந்த 2024 டிசம்பர் மாதம் நேர்த்திக் கடன் செலுத்த வந்தவர்கள் ஆடு பலியிட்டு வழிபட மலை ஏற சென்றபோது அவர்கள் தடுக்கப்பட்டு காவல் நிலையம் அழைத்து கொண்டு செல்லப்பட்ட பின்னரே ஊர்த் திரும்பியுள்ளனர். இப்படி சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்த அரிட்டாப்பட்டியிலிருந்து வந்தவர்கள் இந்துக்கள் ஆவர். பின்னர் டிசம்பர்-25ந்தேதி ஒரு இஸ்லாமிய குடும்பம் வழக்கமான தங்கள் கந்தூரி வழிபாட்டினை செய்ய ஆடு மற்றும் கோழியை எடுத்துக் கொண்டு தர்காவிற்கு சென்றனர், அவர்களை கந்தூரி வழிபாடு செய்யவிடாமல் மலையடிவாரத்திலேயே காவல்துறை தடுத்து நிறுத்தியது.

தங்கள் வழிபாட்டு உரிமை தடுக்கப்பட்டதை மலைமேல் இருந்த தர்காவில் ஜமாத் நிர்வாகிகளிடம், கந்தூரி வழிபாடு நடத்த வந்தவர்கள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து ஜமாத் நிர்வாகிகள் தங்கள் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதை மாவட்ட நிர்வாகத்திடம் கொண்டு சென்று முறையிட்டனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ, கந்தூரி விழாவினை நிறுத்தும்படி அவர்களிடம் அறிவுறுத்தியது. இதையடுத்து மறுக்கப்படும் தங்கள் வழிபாட்டு உரிமைக்காக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களை திராவிட மாடல் தி.மு.க. அரசு கைது செய்தது.

இந்நிலையில் இஸ்லாமியர்களின் போராட்டம் மதக் கலவரத்தைத் தூண்டக் கூடியது என்று பா.ஜ.க அண்ணாமலை கூறவும், கடந்த ஜனவரி-12ந்தேதி கந்தர் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதாகவும், இந்துக்களின் வழிபாட்டு புனிதத்தை இஸ்லாமியர்கள் கெடுக்க முயற்சிப்பதாகவும் கூறி இந்து மதவெறி அமைப்புகள் பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டன.

தொடர்ந்து ஜனவரி-18ந்தேதி கந்தூரி விழாவினை நடத்தும் போராட்டத்தை இஸ்லாமிய அமைப்பினர் அறிவித்தனர். அதையடுத்து ஜனவரி 19-அன்று தடையை மீறி போராட்டத்தை நடத்திய இஸ்லாமியர்களை தமிழக காவல்துறை கைது செய்தது.

அதனையடுத்து நவாஸ்கணி எம்.பி. தர்காவில் ஆய்வு நடத்தினார். அவருடன் வந்தவர்கள் மலைமீது அசைவ உணவு உண்டதாக கூறி புகைப்படங்களை பதிவிட்டு மத நல்லிணக்கத்தை குலைக்கக்கூடிய செயல் என்று அண்ணாமலை உள்ளிட்ட இந்து மத வெறியர்களால் கண்டனம் தெரிவிக்கப்பட்டு மத மோதலுக்கு தூபமிடப்பட்டது.

திருப்பரங்குன்ற மலை தர்க்காவில் இந்து முஸ்லிம் வழிப்பாட்டு உரிமையை பறிக்கும் திராவிட மாடல்!

திருப்பரங்குன்றம் பிரச்சனையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "நீதிமன்ற உத்தரவுகளை ஆய்வு செய்து திருப்பரங்குன்றம் பிரச்னையை அரசு நடுநிலையோடு அணுகுகிறது." என்று கூறினார் இந்தப் பிரச்சனையில் நடுநிலையுடன் நடந்துக் கொள்ள என்ன இருக்கிறது? இஸ்லாமிர்களின் வழிபாட்டு உரிமையை தடுத்து விட்டு இந்து மதவெறிகூட்டத்தின் ஆட்டத்தை அமைதியாக வேடிக்கை பார்ப்பதுதான் இவர்களின் நடுநிலை!

சொல்லப்போனல் பிரச்சனைக்கு காரணமே இந்த திராவிட மாடல் அரசுதான்.ஒருவகையில் இந்துத்துவ சக்திகளின் கோரிக்கையான மலைமீது அசைவம் உண்ணக்கூடாது என்ற கோரிக்கையை நடைமுறை படுத்தியதால்தான் பிரச்சனையே எழுந்தது என்றே கூறலாம்!

எந்த வித அறிவிப்பும் இன்றி திருட்டுதனமாக திராவிடமாடல் அரசு மலையில் ஆடு கோழி பலியிடபடுவதை தடுத்து வாய்மொழி உத்தரவை தனது போலீஸ் ராஜ்ஜியத்தின் மூலம் செயல்படுத்தியது.இவ்வாறுதான் கடந்த டிசம்பர் 25ந்தேதி தர்காவில் வழிபட வந்தவர்களை தடுத்து திருப்பியனுப்பியதன் மூலம் பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது.மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட ஜாமாத்தாரிடமும் ஆடு கோழி பலியிடுவதை நிறுத்திக் கொள்ள அறிவுறையை வழங்கியது! 

மறுபுறம் பிரச்சனையை தீவிரப்படுத்தி மதக்கலவரத்தை நடத்த வெளியிலிருந்து வந்து திட்டம் போட்டு சுற்றிக்கொண்டிருந்த சங்பரிவார கும்பல்களை சுதந்திரமாக திரியவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது திமுக அரசு. ஆனால் அதேவேளையில் வழிபாட்டு உரிமை தடுக்கப்படுவதாக திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் ஜமாத் நிர்வாகிகள் இணைந்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்ட 450 பேரை கைது செய்தது தி.மு க அரசு.

இந்த பிரச்சனையை பற்றி பேசிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன்:

அயோத்தி துவங்கி சம்பல் வரை அரங்கேற்றிய நிகழ்ச்சி நிரலை திருப்பரங்குன்றத்திலும் அச்சு அசலாக அதே மாதிரியை இவர்களால் அரங்கேற்ற முடிகிறது என்றால் மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது என்பதே இதன் பொருள். திடீரென இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது எனவும் தர்காவில் கந்தூரி வழிபாட்டு உரிமையில் எந்த அடிப்படையில் காவல்துறை தலையிட்டது? காவல்துறைக்கு புகார் கொடுத்தது யார்? வருவாய் துறை எந்த அடிப்படையில் இதில் தலையிட்டது?

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்று அவர்களாகவே கேள்வி எழுப்பி, போலி வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்கி, பொது சமூகத்தில் பரப்பியவர்கள் குறித்து துளி அளவாவது அக்கறை கொண்டு காவல்துறை தலையீடு செய்ததா? வெறுப்பு பிரச்சாரம் தங்கு தடையின்றி பரப்பப்படும் போது ஒரு நடவடிக்கைகூட காவல்துறையிடமிருந்து இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது எனக்கூறினார்.

தமிழ்நாட்டில் காவல்துறை செய்யும் அட்டூழியங்களுக்கு முதல்வர் பொறுப்பாக முடியாது.காவல்துறை அதிகார அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்தி வருவதால் மக்களுக்கு விரோதமாக காவல்துறையில் உள்ளவர்கள் நடந்துக் கொள்வதாக கூறி பலர் முட்டுக்கொடுத்து வந்த நிலையில் அதே முட்டுகளால் திருப்பரங்குன்றம் மலை பிரச்சனையிலும் முதல்வர் தூக்கி நிறுத்தப்பட்டார். ஆனால் திராவிட நாயகன் ஸ்டாலின் அவர்கள் சமீபத்திய தனது பேச்சின் மூலம் இம்முட்டுகளை உடைத்தெறிந்து பின்வருமாறு தெளிவுபடுத்தினார்:

அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதை ஊதி பெரிதாக்குவதாகவும் மக்கள் பாதுகாப்புக்காக உழைத்துக் கொண்டிருக்கும் காவல் துறைக்கு இழுக்கு ஏற்படுத்த முயல்கின்றனர் என்று கூறி தனது நேரடிகட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையில் தன்னை தாண்டி எதுவும் நடக்காது என்பதை தெளிவுபடுத்தினார்.

இப்படி போலீஸ் மூலம் இஸ்லாமியர்களின் வழிபாட்டு உரிமையை பறித்து திருப்பரங்கன்றத்தில் பதற்றத்தை உருவாக்கி மத மோதலுக்கு தூபமிட்டதே இந்த திராவிட மாடல்தான்.

முருகனுக்கு மாநாடு நடத்தி கந்த சஷ்டி கவசம் பாடித் திரியும் இந்த இந்துத்துவ திராவிட மாடல் அரசு தலையில் குல்லாவை மாட்டிக் கொண்டு, நோன்பு கஞ்சியையும் குடித்துவிட்டு இஸ்லாமிய மக்களின் வழிபாட்டு உரிமையை தடுக்கிறது, தங்கள் உரிமைக்காக போராடும் இஸ்லாமியர்களை கைது செய்கிறது.

தர்காவில் பலியிட்டு வழிபடும் உரிமையை தடுக்கும் திராவிட மாடல் எனும் தி.மு.கவின் இந்துமதவாத செயல்பாடுகளுமே இப்பிரச்சனையின் போக்கில் முக்கிய மையமாக இருக்கிறது.

கொக்கரிக்கும் இந்துத்துவ சக்திகள்

இந்துக்கள் மனதை புண்படுத்தி விட்டனர். முருகன் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றுவதற்கு இஸ்லாமியர்கள் முயற்சிப்பதாகவும், நாங்களும் வெள்ளிக்கிழமை பன்றியை வெட்டுவோம் எனவும், தர்காவிற்கு சொந்தமான கொடி மரத்தில் தீபம் ஏற்ற வேண்டும், தர்காவை மலையிலிருந்து அகற்ற வேண்டும் எனவும், திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என அண்ணாமலை, எச்ச ராஜா உள்ளிட்ட காவி காடையர்கள் தொடர்ந்து கொக்கரித்து வருகின்றனர். 

உண்மையில் நாடெங்கும் மசூதிகளை தகர்ப்பதற்கான முனைப்பில் இந்து மதவெறி சக்திகள் ஈடுபட்டுவருவதன் ஒருபகுதியே இதுவாகும்.

பா.ஜ.க சங்பரிவார பரதேசி கும்பல்கள் இந்து மதவெறியூட்டி இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கலவரங்களை நடத்துவதில் எந்நேரமும் குறியாக இருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இடித்தவனுக்கே இடத்தைக் கொடுத்த காவி மடாதிபதிகளின் தீர்ப்பிற்கு பிறகு அதை காரணம் காட்டி அனைத்து மசூதிகளும் இந்துக் கோவில்களை இடித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி வெறிச் செயல்களுடன் செயல்பட்டு வருகின்றன இந்துத்துவ பாசிச சக்திகள்.

காசி, மதுராவில் உள்ள மசூதிகள், தாஜ்மஹால் உள்ளிட்ட 3000 மசூதிகள் இந்து கோவில்களை இடித்துக் கட்டப்பட்டுள்ளதாகவும் அந்த இடங்கள் இந்துக்களுக்கு சொந்தமானது என சூளாயுதம் ஏந்தி வெறிகொண்டு திரிகின்றன இந்துமதவாத கும்பல்கள் இந்த வரிசையில்தான் தற்போது முருகனின் படை வீடுகளில் ஒன்றான முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஆடு, கோழியை இஸ்லாமியர்கள் பலியிடுவதன் மூலம் மலையின் புனிதத்தை கெடுக்கிறார்கள், அதை தடுக்க வேண்டும், சிக்கந்தர் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூக்குரலிட்டு'திருப்பரங்குன்றம் காப்போம்' என்று கூறி இந்த காவி காடையர்கள் கலவரம் செய்ய கிளம்பியுள்ளனர். பாபர் மசூதி, ஞானவாபி மசூதி என இன்று சிக்கந்தர் தர்காவிற்கு எதிராக இந்த சூளாயுத கும்பல்கள் வலம் வருகிறது.

திருப்பரங்குன்றம் மலை வழக்கு வரலாறு

கிழக்கிந்திய கம்பெனியின் காலனிய ஆட்சிகாலத்தில் லண்டனின் பிரிவி கவுன்சிலே (Privy council) இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஆகும். 1931-ம் ஆண்டு லண்டன் பிரிவு கௌன்சில் அளித்த தீர்ப்பின் படி, இந்திய உயர் நீதிமன்ற சட்டம் 1861-ன் மூலம் கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் என மூன்று இடங்களில் உயர் நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன. இருப்பினும் இந்த மூன்று உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய லண்டன் பிரிவி கவுன்சிலுக்கே இறுதி அதிகாரம் இருந்து வந்தது. பின்னர் 1935-ல் இந்திய அரசாங்க சட்டம் மூலம் இந்திய பெடரல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இது மேல்முறையீடு வழக்குகளை கையாண்டாலும் பிரிவி கவுன்சிலுக்கும் வழக்குகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.

பின்பாக இந்தியா போலி சுதந்திரத்திற்கு பிற்பாடுதான் உச்ச நீதிமன்றமாக செயல்படும் பிரிவி கவுன்சிலின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. பின்னர் 1950க்கு பிறகு இந்திய உச்ச நீதிமன்றம் செயல்பட தொடங்கியது. ஆனாலும் இன்றளவும் பிரிவி கவுன்சில் வழங்கிய தீர்ப்புகள் இந்தி சட்ட வழக்குகளில் குறிப்பிடப்பட்டு வருகின்றன.

1920-ல் திருப்பரங்குன்றம் தேவஸ்தானம் மதுரை விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குதான் துவக்கப்புள்ளி. சாகுபடி செய்யப்பட்ட மற்றும் மதிப்பிடப்பட்ட தர்கா இருக்கும் இடம் தவிர முழுமையும் கோயில் சொத்து என்று அவ்வழக்கில் தேவஸ்தானம் கூறியது. பிரதிவாதியான இஸ்லாம் அமைப்பினர் தர்கா அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதியும் நெல்லித்தோப்பு என்று அழைக்கப்படுகிற மலையின் பிற பகுதியும் தங்களுக்கு சொந்தம் என்று வாதிட்டனர். இவ்வழக்கின் மற்றொரு பிரதிவாதியான பிரிட்டிஷ் அரசாங்கம் மலையின் ஆக்கிரமிக்கப்படாத சொத்துகள் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்றது. 1923-ஆகஸ்ட் 23 அன்று மதுரை விசாரணை நிதிமன்றத்தின் நீதிபதி பிரிட்டிஷ் அரசின் கோரிக்கைக்கு எதிராகவும் தேவஸ்தானத்திற்கு ஆதரவாகவும் தீர்ப்பினை வழங்கினர். மேலும் நெல்லித் தோப்பு தர்கா மற்றும் அதன் கொடிக்கம்பம் அமைந்துள்ள பகுதி அதனை நோக்கிச் செல்லும் படிக்கட்டுகள் ஆகியவை இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டது. அதேவேளையில் தர்காவினர் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல் முறையீடு வழக்கு 1926-ம் ஆண்டு தொடரப்பட்டது. இவ்வழக்கில் அரசை குறுக்கு மேல்முறையீடு செய்ய மெட்ராஸ் உயர் நீதிமன்றம், அறிவுறுத்தியது. பின்னர் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மலையின் உரிமை அரசாங்கத்திற்கு சொந்தமானது என கண்டறிந்ததாக கூறியதுடன், தர்கா தரப்பினரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மதுரை விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதன் பின்னர் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து 1930-ல் பிரிவி கவுன்சிலில் தேவஸ்தானம் மேல்முறையீடு செய்தது. அம்மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த லண்டன் பிரிவி கவுன்சில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, மதுரை நிதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. இத்தீர்ப்பின் மூலம் நெல்லித் தோப்பு, தர்கா மற்றும் அதன் கொடிக் கம்பம் அமைந்துள்ள பகுதி அவற்றை நோக்கிச் செல்லும் படிகட்டுகள் ஆகியவை தர்காவிற்கு சொந்தம் என்பதும், தேவஸ்தானம் உரிமை கோரிய அனைத்தும் அதாவது தர்காவிற்குஒதுக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து முழுதிருப்பரங்குன்றம் மலை, கிரிவீதி, சன்னதி வீதி, கோவிலுக்கு சொந்தமானது என பிரிவி கவுன்சில் தீர்ப்பு உறுதி செய்தது.

இதன் பின்னர் 1996-ல் தர்கா அமைந்துள்ள மலை உச்சியில் திருவண்ணாமலை மலைமேல் தீபம் ஏற்றுவதுபோல் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்துத்துவ சக்திகளால் கோரப்பட்டது. தர்காவிலுள்ள பகுதியில் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது, அவர்களது இடத்திலிருந்து சற்று தள்ளி தீபம் ஏற்றிக் கொள்ள வழிகாட்டியுது.

இதன் பின்னர் 1998-ல் தர்கா இங்கு இருக்கக்கூடாது என இந்து முன்னணி உள்ளிட்ட இந்து மதவாத அமைப்புகள் தீவிர பிரச்சாரம் செய்தன. அதனை எதிர்த்து தர்கா சார்பாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் அதனை கண்டித்து போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரியது.

கடந்த 2023-ம் ஆண்டு பக்ரித்திற்கு தொழுகை நடத்தக்கூடாது என பாரத் அனுமன் சேனா என்ற இந்து மதவெறி அமைப்பு வழக்கு தொடுத்தது. இதற்கெல்லாம் தடைவிதிக்க முடியாது. அது அவர்கள் இடம் அவர்கள் தொழுகை நடத்துவதை தடுக்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவ்வாறு தர்காவை திருப்பரங்குன்றம் மலையிலிருந்து முற்றாக அகற்றும் நோக்கில்தான் இந்து மத பாசிச சக்திகளின் செயல்திட்டமானது திருப்பரங்குன்றத்தில் (தமிழகத்தில்) பதற்றத்தை பற்றவைத்துள்ளது.

வரலாற்றை பின்னோக்கி இழுத்து தற்போது பழி தீர்க்க முடியாது 

இன்று முருகனின் புனிதத்தை காக்க வேண்டும் எனக் கூறி வருகின்றன பாசிச இந்து மதவெறிக் கும்பல்கள். ஆனால் குலமரபு குழு கடவுளான வேலாயுதம் வைத்திருந்த முருகனையும், வடநாட்டு ஸ்கந்தனையும் ஒன்றாக்கி விட்டனர். நேர்முரண் கொண்ட தமிழர்களின் முருக வழிபாட்டையும் வட நாட்டு ஸ்கந்த வழிபாட்டையும் இணைத்து கலந்ததின் மூலம் பிற்காலத்தில் வழிபாட்டு முறை முற்றாக மாறிப்போனது. தமிழ் நாட்டின் பழங்கால முருக வணக்கமும், பின்னரான பரிபாடல் கால முருக வணக்கமும் வேறுபட்டிருப்பதை நாம் அறிகிறோம்.

மற்றொருபுறம், கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டுகளில் பரங்குன்ற மலைமீது இருந்தது சிவன் கோயில் என்றே தெரிய வருகிறது. பக்தி இலக்கிய காலத்தில் கி.பி, 7-9 நூற்றாண்டுகளில் பரங்குன்ற கோயில் சிவனை பற்றியே பாடப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. சங்க இலக்கிய காலத்திற்கு சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகுதான் அதாவது 12-ம் நூற்றாண்டிற்கு பிறகுதான் பிந்தைய இலக்கியங்களில் முருகனைப் பற்றிய பாடல்கள் இடம் பெறுகின்றன. சமணக் குன்றுகளை கைப்பற்றிக் கொண்ட இந்து மதம் சமண அடையாளங்களை அழித்து அவ்விடங்களை தமதாக்கிக் கொண்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது பழைய வரலாறுகளை - மன்னர்கால வெற்றி தோல்வி வரலாறுகளை எல்லாம் தற்போது பேசுவதன் மூலம் பிரிவினைவாதங்களைத்தான் வளர்க்க முடியும். மக்களிடம் தொடரும் நீண்டகால வழிபாட்டு ஒற்றுமை மற்றும் சமூக ஒற்றுமைகளுக்கு இவைகள் எதிரானதாகவே அமையும். மன்னர்கால முரண்பாடுகளை பேசி அவைகளுக்கு தற்காலத்தில் பழி தீர்க்கும் வெறியை கிழப்பிவிடும் இந்து மதவெறிக் கும்பலின் பிரச்சாரமானது, 12-ஆம் நூற்றாண்டிலிருந்து 700 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பரங்குன்றம் மலைமேல் இருக்கும் சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்களும் - இந்துக்களும் ஒற்றுமையுடன் வழிபடுவதை சிதைத்து வடமாநிலங்களைப் போல் தமிழகத்தில் மதக் கலவரங்களை உருவாக்கும் சூழ்ச்சியன்றி வேறல்ல.

மத வேற்றுமையின்றி வழிபடும் தமிழ் மக்கள்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில்களும் தர்காவும் இணைந்தே உள்ளன. தர்காகளில் இந்துக்கள் நேர்த்திக் கடன் செலுத்துவது, வழிபடுவது என்பது இயல்பான ஒன்றாகும். சிக்கந்தர் தர்காவிலும் அப்படித்தான் ஆடு, கோழிகளை வெட்டி பலியிடுவது அதை அங்கேயே சமைத்து உண்பது என்பதை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் இயல்பாக காலங்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பல குன்றுகளின் மேல் தர்காக்கள் அமையப் பெற்றுள்ளன. நார்த்தமலை, பிரான்மலை, திருச்சி மலைக்கோட்டை பொதிகைமலை, பழனிமலை, கீழவளவு, வேலூர், விளாம்பாக்கம், திருப்பரங்குன்றம் என குன்றின் மீது தர்காக்கள் உள்ளன.

இந்து முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் வழிபடுவதற்கு சிக்கந்தர் தர்காவே உதாரணம். மட்டுமின்றி தொப்பூர் தர்கா, தஞ்சையில் உள்ள பாப்பாத்தியம்மன் தர்கா இந்து முஸ்லிம் ஒற்றுமையுடன் வழிபடுவதுடன் சந்தனக்கூடு விழாவில் அதிகமான அளவில் இந்துக்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் மக்கள் கடைப்பிடித்து வரும் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் வழிபாட்டு முறையும், தர்காவின் வழிபாட்டு முறையும் பல இடங்களில் ஓர்மை பெறுகிறது. இப்போக்கு மதவேறுபாடுகளை மங்கச் செய்வதுடன் வழிபாட்டு ஓர்மையின் புள்ளியில் இணைக்க செய்கிறது. இந்நிலையில் பலியிட்டு வழிபாடு நடத்தும் முறையை எதிர்க்கின்ற தயிர் சாதங்களுக்கு இங்கு என்ன வேலை? முருக கடவுளுக்கே விலங்குகளை பலியிட்டு வழிபாடு செய்வதுதான் வரலாறாக உள்ளது. இன்று தர்காவில் பலியிட்டு வழிபாடு நடத்துவதன் மூலம் குன்றின் கீழே இருக்கும் முருகனின் புனிதம் கெட்டு விடுவதாக காவி கும்பல்கள் கூத்தாடுவது பெரும் கேலிகூத்தாகவே உள்ளது.

முடிவாக திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என கிளம்பியுள்ள பா.ஜ.க சங்பரிவார கும்பல்களின் எண்ணங்கள் தமிழ்நாட்டில் ஆரம்பக் கட்டத்திலே கருவறுக்கப்பட வேண்டும். வடமாநிலங்களில் மதக்கலவரத்தை உருவாக்கி ரத்தம் குடிக்கும் அதன் கோரப்பற்கள் தமிழகத்தில் நீளுவதை உடைத்தெறிய வேண்டும். இன்று ஏகாதிபத்திய நிதி மூலதன ஆதிகத்திற்கு சேவை செய்ய இந்துமதவெறி சக்திகளின் மூர்க்கதனமான பாசிச செயல்திட்டங்களை முறியடிக்க அனைத்து ஜனநாயக புரட்சிக சக்திகள் ஓரணி திரளவேண்டும்!

உதட்டில் முற்போக்கு சாயம் உள்ளத்தில் இந்துத்துவம் அதுவே திராவிடமாடல்!

இங்கே பாசிசத்தை எதிர்ப்பதாக முன்னிலைப்படுத்தப்படும் திராவிட மாடல் தி.மு.க அரசு பாசிசம் உருவாவதற்கான மத்திய பா.ஜ.க அரசின் அதே பொருளாதார கொள்கைகளையே தீவிரமாக அமல்படுத்தி வருவதுடன் மக்கள் மீது பாசிச ஒடுக்கு முறைகளையும் கட்டவிழ்த்து விடுகிறது. பா.ஜ.க எதிர்ப்பு என்பது திமுகவின் தேர்தலுக்கான நாடகமே ஆகும். தமிழ்நாட்டில் பா.ஜ.கவை எதிர்க்கும் சக்திகளை ஒருங்கிணைத்து கொள்வதன் மூலமே தேர்தலில் வெல்ல முடியும் என்ற நோக்கில் தேர்தல் காலமென்றால் பா.ஜ.கவை எதிர்த்து வீராவசனம் பேசுவது, தேர்தல் முடிந்து விட்டால் பா.ஜ.க என்ன தீண்டதகாத கட்சியா? என்றுக் கூறி கூடி குலாவுவது, பா.ஜ.க தலைவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து அவர்களை நல்ல மனிதர்கள் என்று மகுடம் சூட்டுவது என்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

பாசிச பா.ஜ.வை எதிர்ப்போம் என தற்போது தி.மு.க கூறுவதெல்லாம் நாடகமாகும். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பாசிச பாஜகவை வீழ்த்துவோம் என்று கம்யூனிஸ்டுகள் விசிக உள்ளிட்ட கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தது தி.மு.க. ஆனால் ஆட்சிக்கு வந்த உடனையே பாசிச மோடி கும்பலுடன் கூடி குலாவத் துவங்கிவிட்டது பாசிச மோடி கும்பலின் மக்கள் விரோத கொள்கைகளை திராவிட மாடல் என்ற பெயரில் வரிந்துக் கட்டிக்கொண்டு அமல்படுத்த துவங்கியது. மோடிக்கு கருப்பு கொடி காட்டிய ஸ்டாலின் வெள்ளை குடை பிடித்து கட்டித்தழுவி வரவேற்றார். ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்று சுவை அறிந்தது, நாணய வெளியிட்டில் நாணம் கொண்டது, மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கல்விக் கொள்கையை உருவாக்கியது (புதிய கல்விக் கொள்கையின் பல நல்ல அம்சங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக ஸ்டாலினே கூறினார்) என எல்லாவற்றிற்கும் மேலாக பழனியில் முருகன் மாநாட்டை நடத்தி தனது பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியை பறைசாற்றியது இந்த திராவிட மாடல். திமுக கூட்டணி கட்சிகளே முருகன் மாநாடு மதவாதத்திற்கு சேவை செய்யக்கூடியது என்று கண்டித்தும் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் முருகன் மாநாட்டில் நிறைவேற்றிய உளுத்துப்போன பிற்போக்குத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. கல்வியை காவிமயமாக்கும் கொடுஞ்செயலை செய்து வருகிறது. தொடர்ந்து அம்மன் மாநாடு நடத்தப் போவதாக இப்பிற்போக்கு திராவிட மாடல் கும்பல் கூவுகிறது. அதேபோல வி.சி.க பொதுச்செயலாளரும் எம்.பியுமான ரவிக்குமார், "கல்வியைக் காவிமயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள்,

5 ஆவது தீர்மானமாக: "முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது" எனவும்;

8 ஆவது தீர்மானமாக: "விழாக் காலங்களில் அருள்மிகு கந்தசஷ்டி முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது" எனவும்;

12 ஆவது தீர்மானமாக: "முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மீகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது" எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வியை சமயச் சார்புடையதாக்குதல் என்னும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை இது முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சியன்றி வேறல்ல. இந்து சமய அறநிலையத் துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை எவரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித் துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமயச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிக்கு எதிரானதாகும். இது கண்டனத்துக்குரியது!" எனவும்

மேலும், "முருகன் மாநாடு வகுப்புவாதத்தையே வலுபடுத்தும்" எனவும் ரவிக்குமார் கூறியிருந்தார். இவ்வாறு ஒருபுறம் கூறிக்கொண்டே மறுபுறம் திமுகவிற்கு முட்டுக் கொடுத்து வருகிறார்கள்.

இவையெல்லாம் இன்று நடைமுறைப்படுத்தியும் வருகிறது திராவிடமால் அரசு.

வடக்கே ராமனை வைத்து ஆர்எஸ்எஸ் சங்பரிவார கும்பல் தங்கள் மதவாத அரசியலை முன்னெடுக்கிறது என்றால், இங்கே முருகன் பெயரில் திராவிட முகம் கொண்டு இந்துத்துவத்தை முன்னெடுக்கிறது இந்த இந்துத்துவ திராவிடமாடல் என்பது தான் உண்மையாகும். திராவிட மாடல் அரசின் இந்தப்போக்குதான் திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவில் வழிபாட்டு உரிமையை தடுத்து மதவாத பிரச்சனைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது. அரசியல் பொருளாதாரக் கொள்கையில் மட்டுமின்றி இந்து மதவாத செயல்பாட்டிலும் பாஜக சங்பரிவார கும்பலுடன் போட்டி போட்டுக் கொண்டு - வரிந்து கட்டி கொண்டு நிற்கிறது திராவிட மாடல். இன்று பாஜக எதிர்ப்பரசியலை முன்னெடுப்பதெல்லாம் மக்களிடம் உள்ள பாஜக எதிர்ப்பினை பயன்படுத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான அதன் நரித்தந்திரமன்றி வேறல்ல. சமீபத்தில் பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? என திமுக கூறியது யாவருக்கும் மறந்திருக்காது. பாஜக திமுகவின் ஊடலும் கூடலும் அதன் அரசியல் வாழ்வின் அடிப்படையாகும் என்பதைதான் இக்கட்சிகளின் வரலாறு கூறுகிறது.

இன்று வெளிப்படையாக திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம் என கொக்கரிக்கும் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் மூட்டும் தீயில் எண்ணெய் வார்க்கும் திராவிட மாடல், இக்கும்பல்களின் மதவெறி செயல்பாடுகளுக்கு எதிராக போராடுகின்ற இஸ்லாமியர்கள் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் குரல்வலையை நெரித்து கடித்துக்கொண்டிருக்கிறது. கைது செய்து அடக்குமுறையை ஏவிவருகிறது. பாசிச எதிர்ப்புக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கிறது. திருப்பரங்குன்றத்திலிருந்து தர்காவை தகர்க்க முயலும் சங்பரிவார கும்பல்களுக்கு எதிராகவும் கந்தூரி வழிபாட்டை தடுக்கின்ற தி.மு.கவின் "அப்பா" பாசிச அரசிற்கு எதிராகவும் மக்கள் போராட்டங்களை கட்டமைப்போம்! சமரசமின்றி களம் காண்போம்!! திராவிட -இந்துத்துவக் கூட்டை நிர்மூலமாக்குவோம்!!!

- சமரன்
(ஏப்ரல் - மே இதழில்)