த.வெ.க ஆட்சியிலும் தொடரும் லாக்கப் கொலைகள்...மாற்றுத்திறனாளி இளைஞரை கொலை செய்த காவலர்கள்!!
செந்தளம் செய்திப்பிரிவு
கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைக்குளத்தை சேர்ந்த பெட்டிக்கடை நடத்திவரும் மாற்றுத்திறனாளியான சபரி வர்மன் (35) தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்பனை செய்ததாக கூறி ஜூலை 9ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சபரி வர்மன் நாகர்கோயில் கிளை சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜூலை 13 அன்று சபரிவர்மனுக்கு உடல் நிலை சரியில்லை என கூறி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்பதை உறுதிபடுத்தினர். பெரும் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் எந்த வித நோய் பாதிப்பும் இல்லாத சபரி வர்மனை போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக கூறி மருத்துவமணை வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி முன் நடந்த உடற்கூராய்வு அறிக்கையில்
சபரிசனின் உடலில் 19 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதும் அவரது கை, கால்கள், நெஞ்சு, தலை, கழுத்தின் பின் பகுதியில் காயமும், வலது கையில் முறிவும் ஏற்பட்டுள்ளது எனவும், அவரது உடலில் கை, கால்கள் கட்டிப்போட்டு தாக்கியதற்கான அடையாளமும் இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூன்று காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 6 ம் தேதிதான் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கஷ்டடி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மதுரை நீதிமன்றம் மரண தண்டனை அறிவித்தது.
ஆனால் இதோ! இன்னொரு கஷ்டடி கொலையை தமிழ்நாடு காவல்துறை அரங்கேற்றியுள்ளது. த.வெ.க ஆட்சியிலும் தொடரும் கஷ்டடி மரணங்களுக்கு எதிராக மக்கள் கொதிப்படைந்திருக்கும் நிலையில், சபரிவர்மனை கொலை செய்த காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதோடு, காவல்துறை சீர்த்திருத்தம் செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வருகிறது.
- செந்தளம் செய்திப்பிரிவு