இந்திய - பாகிஸ்தான் போர்: பாகிஸ்தானை தனது இராணுவ வலிமையின் சோதனைக்களமாக பயன்படுத்தும் சீனா !!

தமிழில்: விஜயன்

இந்திய - பாகிஸ்தான் போர்: பாகிஸ்தானை தனது இராணுவ வலிமையின் சோதனைக்களமாக பயன்படுத்தும் சீனா !!

சீனா தனது இராணுவத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காகப் பல பில்லியன் டாலர்களை வாரி இறைத்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஒரு மோதல் மேம்பட்ட சீனத் தொழில்நுட்பத்திற்கான முதல் முக்கிய சோதனைக்களமாக அமையக்கூடும்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பகைமைச் சூழல், நிரூபிக்கப்பட்ட மேற்கத்தியப் போர்க்கருவிகளுடன் ஒப்பிடுகையில் சீன ராணுவத் தளவாடங்கள் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை உலகம் முதன்முறையாகத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கான ஒரு அரிய தருணத்தை உருவாக்கியது எனலாம் – இதன் விளைவாக, சீனப் இராணுவத் துறை நிறுவனங்களின் பங்கு மதிப்பு ஏற்கெனவே கிடுகிடுவென உயர்வைக் கண்டுள்ளன.

இந்த வாரம், சீனாவின் AVIC செங்டு ஏர்கிராஃப்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 40% உயர்ந்தது. கடந்த புதன்கிழமை நடந்த ஒரு வான்வெளி போரின்போது, மேம்பட்ட பிரெஞ்சுத் தயாரிப்பான ரஃபேல் உள்ளிட்ட இந்தியப் போர் விமானங்களைத் நாங்கள், சீனத்(AVIC) தயாரிப்பான J-10C போர்-ஜெட் விமானங்களைப் பயன்படுத்திச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் உறுதிபடத் தெரிவித்ததே இதற்கு காரணம். 

பாகிஸ்தானின் இந்த உரிமை கோரலுக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை. தனது விமானங்களுக்கு ஏற்பட்ட எந்தவிதமான இழப்புகளையும் இந்தியத் தரப்பு உறுதிப்படுத்தவும் இல்லை. சீனத் தயாரிப்பு ஜெட் விமானங்களின் பயன்பாடு பற்றி வியாழக்கிழமை அன்று கேள்வி எழுப்பப்பட்டபோது, நிலைமை என்னவென்று தனக்குத் தெரியாது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆயினும், பாகிஸ்தானின் முதன்மையான ஆயுத விநியோகஸ்தராக விளங்கும் சீனா, தனது ஆயுதத் தளவாடங்கள் உண்மையான போர்க்களத்தில் எவ்வாறு செயலாற்றுகின்றன என்பதை மிகவும் நுட்பமாகக் கவனித்து வருவதற்கான வாய்ப்புகளே அதிகம். வேகமாக வளர்ந்து வரும் ஒரு இராணுவ வல்லரசாக இருந்தபோதிலும், சீனா கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு பெரிய போரிலும் ஈடுபடவில்லை. ஆனால், ஷி ஜின்பிங்கின் தலைமையின்கீழ், தனது இராணுவப் படைகளை நவீனமயமாக்குவதில் தீவிரமாக செயலாற்றி வருகிறது. மேலும், மேம்பட்ட ஆயுதங்கள், அதிநவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் மிக அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.

சீனா தனது நவீனமயமாக்கும் முனைப்புகளை, நெடுங்காலமாகத் தன்னுடைய ‘நிரந்தரமான, உறுதியான சகோதரன்' எனப் போற்றி வரும் பாகிஸ்தானுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆய்வு நிறுவனத்தின் (சிப்ரி) தரவுகளின்படி, கடந்த ஐந்தாண்டுகளில் பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் எண்பத்து ஒரு சதவிகிதம் (81%) சீனாவிலிருந்து வந்துள்ளது. வல்லுநர்களின் கருத்தின்படி, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எழக்கூடிய எந்தவொரு இராணுவ மோதலிலும் இன்றியமையாப் பங்கு வகிக்கக்கூடிய மேம்பட்ட போர் விமானங்கள், ஏவுகணைகள், ரேடார் கருவிகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் ஆகியனவும் சீனா வழங்கும் ஆயுதங்களில் இடம்பெறுகின்றன. மேலும், பாகிஸ்தானில் உருவாக்கப்படும் சில ஆயுதங்கள், சீன நிறுவனங்களுடன் இணைந்து மேம்படுத்தப்பட்டவையாகவோ அல்லது சீன தொழில்நுட்பதின், சீன தனித்திறனின் துணை கொண்டு உருவாக்கப்பட்டவையாகவோத்தான் உள்ளன.

"அவ்வகையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எழக்கூடிய எந்தவொரு மோதலையும், சீனா வழங்கும் ஆயுதங்களுக்கான சோதனைக் களமாக மாற்றிவிடுகிறது," என லண்டனைச் சார்ந்த ஆய்வு நிறுவனமான ஆசியா-பசிபிக் அறக்கட்டளையின் பன்னாட்டுப் பாதுகாப்பு இயக்குநர் சஜ்ஜன் கோஹெல் தெரிவித்தார். சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து, வான்வழி, கடல்வழி, நிலவழி என மேலும் மேலும் உயர்நிலை கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகளில் போர் ஒத்திகைகள் மட்டுமன்றி வீரர்கள் இடமாற்றம்(மாற்றுப்பணி) செய்து கொள்ளும் பயிற்சிகளும் கூட இடம்பெறுகின்றன. "பாகிஸ்தானுக்கு சீனா வழங்கும் நீண்டகால ஆதரவைப் பொறுத்தமட்டில் – அது இராணுவ உபகரணங்கள் வழங்குவதாகட்டும், பயிற்சிகள் அளிப்பதாகட்டும், அல்லது தற்போது இலக்குகளை அடையாளம் காண்பதற்காகப் பெருகி வரும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகட்டும் – போர்த் தந்திரச் சமநிலையை மெல்ல மெல்ல மாற்றியமைத்துள்ளது', என்று அமெரிக்காவைச் சார்ந்த ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் அறக்கட்டளையின் முதுநிலை ஆய்வாளர் கிரேக் சிங்கிள்டன் சுட்டிக்காட்டுகிறார்.

இது வெறுமனே இரு நாடுகளுக்கு இடையே நிகழும் ஒரு மோதல் என்று மட்டும் கருத முடியாது; மாறாக, சீன ராணுவ ஏற்றுமதிகள் எவ்வாறு பிராந்தியத்தின் இராணுவச் சமநிலையை மறுவடிவமைப்பிற்கு இட்டுச் செல்கின்றன என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியத் திறவுகோலாகவும் அமைகிறது. காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்ட கோர சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கனன்றெழுந்த பதட்டங்கள் எடுத்துக்காட்டும் இந்த நிலை மாற்றம், இப்பிராந்தியத்தில் ஒரு பரந்த அரசியல் மறுவடிவமைப்பு நிகழ்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இங்கு, அமெரிக்காவின் செல்வாக்கிற்கு எதிராக சீனா ஒரு பெரும் சவாலாகத் தலைதூக்கியுள்ளது.

1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள் தொட்டு, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மூன்று முறை போர்க்களம் கண்டுள்ளன. பனிப்போரின் உச்ச நிலையில், சோவியத் யூனியன் இந்தியாவிற்குத் தோள் கொடுத்தது; அதே நேரத்தில், அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவுக் கரம் நீட்டின. ஆனால் இன்று, வல்லரசு நாடுகளுக்கிடையே புதியதோர் போட்டி அத்தியாயம் தொடங்கியுள்ளது. இதுவே, அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் தெற்காசிய அண்டை நாடுகளான இந்தியா-பாகிஸ்தானுக்கிடையில் தற்போதைய மோதலில் கூடுதலாக தாக்கம் செலுத்தி வருகிறது.

தனது பாரம்பரியமான நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலிருந்து விலகி, இந்தியா தற்போது அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது. இதன் பின்னணி என்னவெனில், சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் ஒரு வியூகமாக, வேகமாக வளர்ந்து வரும் தெற்காசிய நாடான இந்தியாவுடன் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கத் ஆட்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர். இதன் விளைவாக, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதை இந்தியா அதிகரித்துள்ளது. அதே சமயம், ரஷ்ய ஆயுதங்களைச் சார்ந்திருக்கும் தனது நிலையை படிப்படியாகக் குறைத்தும் வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தான் சீனாவுடனான தனது உறவை மிக ஆழமாக வளர்த்துக்கொண்டுள்ளது. சீனாவின் “எக்காலத்திற்குமான போர்த்தந்திர பங்காளியாக” பாகிஸ்தான் உருமாறியுள்ளதுடன், ஷி ஜின்பிங்கின் உலகளாவிய கட்டமைப்புத் திட்டமான "பட்டுப்பாதை முன்னெடுப்பில்" (Belt and Road Initiative) ஓர் இன்றியமையாதப் பங்குதாரராகவும் பாகிஸ்தான் விளங்குகிறது. 2000-களின் பிற்பகுதியில், பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியை அமெரிக்காவும், அதே அளவு பகுதியைச் சீனாவும் வழங்கியுள்ளன என்று சிப்ரியின் (SIPRI) தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆயினும், அண்மைக்காலமாக, அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களை பாகிஸ்தான் கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டதுடன், சீன ஆயுதங்களையே மிக அதிகமாக சார்ந்திருக்கத் தொடங்கியுள்ளது. 1960-களின் நடுப்பகுதியில் இருந்து சீனா பாகிஸ்தானுக்கு ஓர் முதன்மையான ஆயுத வியாபாரியாக திகழ்ந்து வந்த போதிலும், அதன் இன்றைய மேலாதிக்கம், பெருமளவு அமெரிக்கா விட்டுச் சென்ற இடைவெளியை நிரப்பியதால் ஏற்பட்டதேயாகும் என்று சிப்ரி ஆயுதப் பரிமாற்றங்கள் திட்டத்தின் (SIPRI Arms Transfers Program) மூத்த ஆய்வாளரான சைமன் வெஸ்மேன் (Siemon Wezeman) சுட்டிக்காட்டுகிறார். பாகிஸ்தானில் இருந்து இயங்கிய அல்லது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ‘பயங்கரவாதிகளுக்கு’ எதிராக (தலிபான்கள் உட்பட) பாகிஸ்தான் திருப்திகரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பத்து-பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா பாகிஸ்தான் மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது. பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம், ஜனநாயக விரோத போக்கு போன்றவற்றில் அமெரிக்காவிற்கு ஏற்கனவே இருந்த முரண்பாடுகளை இது மேலும் கூர்மைப்படுத்தியது என்கிறார் வெஸ்மேன்.

"காலப்போக்கில் அமெரிக்கா இப்பிராந்தியத்தில் இந்தியாவை ஒரு மாற்று சக்தியாகக் கண்டது. இதன் விளைவாக, பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்குவதை அமெரிக்கா பெருமளவு நிறுத்திக்கொண்டது," என்று அவர் தெரிவித்தார். "மறுபுறம், சீனாவின் ஆயுத விநியோகம் கணிசமாக உயர்ந்தது - பாகிஸ்தானின் ஒரே உண்மையான நண்பனும் கூட்டாளியும் தானே என்பதை நிலைநிறுத்திக்கொள்ள சீனா இந்த வாய்ப்பை வலுவாகப் பயன்படுத்திக் கொண்டது என்றே கூறலாம்," என்கிறார் வெஸ்மேன்.

இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவத் தாக்குதல்கள் குறித்து சீனா வருத்தம் தெரிவித்ததுடன், அமைதியையும் நிதானத்தையும் கடைப்பிடிக்குமாறு இருதரப்பையும் வலியுறுத்தியுள்ளது. சமீபத்திய பதற்றம் தீவிரமடைவதற்கு சற்று முன்னர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, பாகிஸ்தானுக்கு தமது ஆதரவை வலியுறுத்தினார்; அப்போது, என்ன நடந்தாலும் பாகிஸ்தானின் "நிரந்தரமான, உறுதியான நண்பனாக" சீனா துணை நிற்கும் என்று வர்ணித்திருந்தார்.

பாகிஸ்தான் தனது இராணுவ வலிமைக்கு பெரும்பாலும் சீனாவையே சார்ந்திருப்பதாலும், இந்தியா தனது ஆயுதங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளிடமிருந்தே பெற்று வருவதாலும், இவ்விரு அண்டை நாடுகளுக்கு இடையே வெடிக்கும் எந்தவொரு மோதலும், சற்றேறக்குறைய சீன மற்றும் மேற்கத்திய இராணுவத் தொழில்நுட்பங்களுக்கு இடையேயான ஒரு போட்டித் களமாக மாறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது.

நேரடியான இராணுவ மோதல்

இந்திய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீரின் ஓர் எழிலார்ந்த மலைப்பகுதியில், பயங்கரவாதிகளால் 26 பேர் (அவர்களில் பெரும்பாலோர் இந்தியச் சுற்றுலாப் பயணிகள்) கொல்லப்பட்டதையடுத்துப் பல வாரங்களாக கடுமையடைந்த பகைமை மற்றும் பதற்றங்களுக்குப் பிறகு, இந்தியா புதன்கிழமை அதிகாலையில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது; பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காஷ்மீர் இரண்டிலும், "பயங்கரவாதகளுடன் தொடர்புடைய இடம்" என்று தான் கருதிய பகுதிகளை இந்தியா குறிவைத்துத் தாக்கியது.

இந்தியாவிடம் உள்ள ஃபிரெஞ்சுத் தயாரிப்பு ரஃபேல் மற்றும் ரஷ்யத் தயாரிப்பு Su-30 போர் விமானங்களிலிருந்தே அந்த ஏவுகணைகளும் பிற தாக்குதல் ஆயுதங்களும் ஏவப்பட்டதாகப் பல ஆய்வாளர்கள் உறுதியாகக் கருதுகின்றனர்.

அதே சமயம், பாகிஸ்தான் தனது விமானப்படை மாபெரும் வெற்றி ஈட்டியதாக முழங்கியது; 125 போர் விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் களமிறக்கப்பட்ட சண்டையில், இந்தியாவிற்குச் சொந்தமான ஐந்து போர் விமானங்களை (அவற்றுள் மூன்று ரஃபேல்கள், ஒரு MiG-29 மற்றும் ஒரு Su-30 விமானங்கள் அடக்கம்)  தமது J-10C போர் விமானங்கள், 160 கிலோமீட்டருக்கு (100 மைல்களுக்கும்) அப்பாலிருந்தபோதே சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அழுத்தமாகத் தெரிவித்தது.

"தற்போது இரண்டு அணு ஆயுதம் கொண்ட நாடுகளுக்கு இடையே நடந்த சண்டை மிகக் கடுமையான வான்வெளிப் போராக விவரிக்கப்படுகிறது," என்று இஸ்லாமாபாத்தில் உள்ள குவாய்ட்-இ-அசம் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை அறிஞர் சல்மான் அலி பெத்தானி இது குறித்து பேசும்போது கூறினார். "இந்த மோதல், அதிநவீன சீனத் தயாரிப்பு ஆயுதங்களின் களப் பயன்பாட்டினை அறிவதற்கான திருப்புமுனையாக அமைந்தது," என்றும் அவர் சேர்த்துக் குறிப்பிட்டார்.

ஆனால், இந்தியா தரப்பிலிருந்து எந்த விமான இழப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மேலும் பாகிஸ்தான் தனது வாதங்களை உறுதிப்படுத்த இதுவரையிலும் எந்தவிதமான சான்றுகளையும் முன்வைக்கவில்லை. எனினும், ஃபிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த வட்டாரம், இந்தியாவின் ஆகப் புதிய, மிக நவீன போர் விமானங்களில் ஒன்றான – அதாவது ஃபிரெஞ்சுத் தயாரிப்பு ரஃபேல் ஜெட் விமானம் இந்த சண்டையில் வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்தது. 

"இச்செய்தி உறுதிப்படுத்தப்படுமாயின், பாகிஸ்தானிடம் உள்ள ஆயுத அமைப்புகள், குறைந்தபட்சம், மேற்கு ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக பிரான்ஸ் வழங்கும் ஆயுதங்களுக்கு ஒப்பானவை என்பதையே இது உணர்த்துகிறது," என்று டொரண்டோவை தலைமையகமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வு நிறுவனமான குவா குரூப் இன்க்.’ன் நிறுவனர் பிலால் கான் குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலோ அல்லது வலுவான ஆதாரமோ இன்னும் கிடைக்காத நிலையிலும், சீனத் தேசியவாதிகளும், இராணுவ விவகாரங்களில் ஆர்வமுடையோரும் சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுத அமைப்புகளுக்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி என்று கருதி அதனைச் சிறப்பித்துக் கொண்டாடி வருகின்றனர்.

பாகிஸ்தானின் J-10C போர் விமானங்களைத் தயாரிக்கும் சீனாவின் அரசுக்குச் சொந்தமான AVIC செங்டு ஏர்கிராஃப்ட் நிறுவனத்தின் பங்குகள்- பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்த ஜெட்கள் இந்தியாவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுவதற்கு முன்னரே - புதன்கிழமை அன்று ஷென்ஜென் பங்குச் சந்தையில் 17% உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

அந்த நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை அன்று மேலும் 20% ஏற்றம் கண்டன.

J-10C போர் விமானம், சீனாவின் ஒற்றை எஞ்சின் கொண்ட, பல்தரப்பு செயற்பாடுகளுக்குரிய J-10 போர் விமான வரிசையின் மிக அண்மைய, மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாகும். இது 2000களின் தொடக்கத்தில் சீன விமானப்படையின் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஆயுத அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட மின்னணுவியல் கருவிகளைக் கொண்டுள்ள J-10C, 4.5 ஆம் தலைமுறை போர் விமானமாக வகைப்படுத்தப்படுகிறது. இது ரஃபேல் ரக விமானத்தைப் போன்றதாக அமைந்திருந்தாலும், சீனாவின் J-20 அல்லது அமெரிக்காவின் F-35 போன்ற 5 ஆம் தலைமுறை ஸ்டெல்த் ஜெட்களைக் காட்டிலும் தொழில்நுட்ப ரீதியாகத் திறன் குறைந்த ஒன்றுதான்.

சீன அரசு ஒளிபரப்பு நிறுவனமான CCTV வெளியிட்ட தகவலின்படி, சீனா தனது ஏற்றுமதிக்கான J-10CE போர் விமானங்களின் முதல் தொகுதியை 2022-இல் பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. பாகிஸ்தானும் சீனாவும் இணைந்து உருவாக்கிய 4.5-வது தலைமுறை இலகுரக போர் விமானமான JF-17 Block III உடன் சேர்த்து, தற்போது இந்த J-10CE விமானம் பாகிஸ்தான் வான்படையின் வசம் உள்ள மிகவும் மேம்பட்ட போர் விமானமாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானிய விமானப்படை, பெரிய எண்ணிக்கையிலான அமெரிக்கத் தயாரிப்பு F-16 விமானங்களையும் பயன்படுத்தி வருகிறது. 2019-இல் நிகழ்ந்த ஒரு குறுகிய கால எல்லை மோதலின் போது, இந்த F-16 விமானங்களில் ஒன்று, சோவியத் வடிவமைப்பில் உருவான ஒரு இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தப்பட்டது.

ஆயினும், பாகிஸ்தான் விமானப்படையின் F-16 விமானங்கள் இன்னும் 2000-களின் தொடக்க காலத் தொழில்நுட்பத்தையே கொண்டுள்ளன. இது அமெரிக்கா தற்போது வழங்கும் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளை விடப் பன்மடங்கு பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில், சீனாவில் தயாரிக்கப்பட்ட J-10CE மற்றும் JF-17 Block III விமானங்கள், தற்போதுள்ள மின்னணு முறையில் ஸ்கேன் திறம்பெற்ற அணிநிரல் (AESA) ரேடார்கள் போன்ற நவீன தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளன என்று பிலால் கான் குறிப்பிட்டுள்ளார்.

“அவ்வகையில், பாகிஸ்தானிய விமானப்படையின் எந்தவொரு தற்காப்பு நடவடிக்கையிலும் F-16-கள் ஒரு குறிப்பிடத்தக்க அங்கமாகத் தொடர்ந்து இருக்கும் என்றபோதிலும் அவை மையமான அல்லது இன்றியமையாத முதன்மையான விசயமாக இருக்கப்போவதில்லை” என்று அவர் கூறினார்.

பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் போர்த்தந்திர மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரும், ஓய்வுபெற்ற மூத்த கர்னலுமான ஷோ பூ கூறுகையில், சீனத் தயாரிப்பு J-10C விமானங்கள் உண்மையாகவே பிரெஞ்சுத் தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தப் பயன்படுத்தப்பட்டிருக்குமானால், அது “சீன ஆயுத தளவாடங்கள் மீதான நம்பிக்கைக்குப் பெரும் உத்வேகத்தை அளிக்கும்” என்றார்.

குறிப்பாக சீனா கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தப் போரிலும் ஈடுபடவில்லை என்பதால் இது முதலீட்டாளர்களை "உண்மையிலேயே வியக்க வைக்கும்," என்று Zhou கூறினார். "இது சர்வதேச சந்தையில் சீனாவின் ஆயுத விற்பனைக்கு ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக அமையக்கூடும்," என்றும் அவர் கூறினார்.

அதிரடியான விளம்பர நடவடிக்கை

SIPRI தரவுகளின்படி, 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் 43% பங்கைக் கொண்டு, அமெரிக்கா உலகின் முதன்மையான ஆயுத விற்பனைளயாளராகத் தொடர்ந்து நீடிக்கிறது. இது இரண்டாவது இடத்தில் உள்ள பிரான்சின் பங்கை விட நான்கு மடங்கு அதிகமாகும்; பிரான்சைத் தொடர்ந்து ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.

சீனா நான்காவது இடத்தில் இருக்கிறது; அதன் ஆயுத ஏற்றுமதியில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஒரே ஒரு நாட்டிற்கு அதாவது பாகிஸ்தானிற்கு செல்கிறது.

டொராண்டோவைச் சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் பிலால் கான் (Khan), அந்த சுட்டு வீழ்த்தும் சம்பவம் உறுதி செய்யப்பட்டால், அது சீனாவின் பாதுகாப்புத் தொழில்துறைக்கு ஒரு பெரும் முன்னேற்றமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொண்டார். வழக்கமாக "மிகவும் மேம்பட்ட மேற்கத்திய தொழில்நுட்பத்தை" பெற முடியாத "மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து" சீன ஆயுதங்களை வாங்குவதற்கான ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷ்யா பலவீனமடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் பாரம்பரிய சந்தைகளான - அல்ஜீரியா, எகிப்து, ஈராக் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் - முக்கிய விற்பனைகளைக் கைப்பற்றுவதற்கு சீனா தீவிரமான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது என்பதில் எனக்குச் சந்தேகமில்லை," என்று கான் தெரிவித்தார்.

பாகிஸ்தானிய விமானப்படையின் வசம் உள்ள J-10C போர் விமானங்கள், சீனாவின் அதிநவீன வான்-வழி ஏவுகணையான PL-15 உடன் இணைக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று பாகிஸ்தான் மற்றும் சீனாவைச் சேர்ந்த இராணுவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். PL-15 ஏவுகணை, 200 முதல் 300 கிலோமீட்டர் (120-190 மைல்) வரையிலான வீச்செல்லை கொண்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவே ஏற்றுமதி வழியாக மற்ற நாடுகளுக்கு விற்கப்படும் பொழுது வீச்செல்லை 145 கிலோமீட்டராக (90 மைல்) குறைக்கப்படுகிறது.

கடந்த வாரம், அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாகிஸ்தானிய விமானப்படை தனது போர் விமானங்களின் வலிமையைக் காட்டும் மூன்று நிமிட காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தக் காணொளியில், PL-15 ஏவுகணைகளுடன் கூடிய JF-17 Block III போர் விமானம் காட்சிப்படுத்தப்பட்டது. அதனை 'பாகிஸ்தானிய விமானப்படையின் வலிமைமிக்க ஆயுதம்' என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

"இது அடிப்படையில் ஒரு அதிரடியான விளம்பர நடவடிக்கையாகவே சீனத் தரப்பில் கருதப்படும்," என்று மக்காவ்வைச் சேர்ந்த இராணுவ விவகாரங்களை ஆராய்ந்து வரும் ஆண்டனி வோங் டாங் கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், "இது அமெரிக்கா போன்ற நாடுகளையே கூட அதிர்ச்சிக்குள்ளாக்கும் - உண்மையில் தனது எதிராளி எவ்வளவு வலிமை வாய்ந்தவர்? போரில் பயன்படுத்தப்படும் ஜெட் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டும் நாடுகள் மட்டுமன்றி, சீனாவின் பிராந்தியப் போட்டியாளர்களாக விளங்கும் நாடுகள் என அனைவருமே இந்தக் கேள்வியை - இந்த புதிய யதார்த்தத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? என்பதையும் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவின் தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்புகள் -  அவை உறுதிசெய்யப்படுமானால் - சீனாவின் நவீன ஆயுத பலத்தினைவிட, இந்திய விமானப்படையின் மோசமான உத்திகள், திட்டமிடலினால்கூட இந்தியத் தரப்பில் இழப்புகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதால் சில வல்லுநர்கள் அவசரகதியில் எந்த முடிவுக்கும் வர வேண்டாமென வலியுறுத்தியுள்ளனர்.

இந்தியாவின் பல விமானங்கள் வீழத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையாக இருப்பின், அது இந்திய விமானப்படையின் தயார்நிலை குறித்து—வெறும் போர்ச்சாதனங்கள் தொடர்பான வினாக்களைத் தாண்டி—மிக ஆழமான கேள்விகளையும் எழுப்பும். "ரஃபேல்கள் நவீன ரகத்தைச் சேர்ந்தவைதான். ஆயினும், போர் என்பது ஒருங்கிணைப்பு, சீரிய திட்டமிடுதல் மற்றும் தாக்குப்பிடிக்கும் திறனைப் பற்றியதே ஆகும்—வெறும் பெரும் தொகை கொடுத்து வாங்கப்படும் உயர்தொழில்நுட்ப ஆயுதங்களால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை," என்று ஜனநாயகப் பாதுகாப்பு அறக்கட்டளையின் ஆய்வாளர் சிங்கிள்டன் கூறினார்.

அத்துடன், PL-15 ஏவுகணை குறித்து இந்தியா கொண்டிருந்த உளவுத் தகவல் என்ன என்பதும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக, பாகிஸ்தானிடம் அதன் குறைந்த தூரம் மட்டுமே பாயும் ஏற்றுமதிக்கான தயாரிப்புதான் உள்ளது என இந்தியா நம்பியிருந்து, இந்திய விமானங்கள் பாதுகாப்பற்ற வான்பரப்புகளில் நீண்ட நேரம் பறந்திருப்பதற்கும் வாய்ப்புள்ளது.

ஒஸ்லோ பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கொள்கை ஆராய்ச்சி நிபுணரான ஃபேபியன் ஹாஃப்மேனின் கருத்துப்படி, சண்டைக்கான விதிகள் - இந்திய விமானிகள் முதலில் தாக்குதல் தொடுப்பதையோ அல்லது பாகிஸ்தான் விமானங்களைத் திருப்பித் தாக்குவதையோ தடுத்திருக்கக்கூடும். மேற்குறிப்பிட்ட சூழல்களில், இந்தியாவின் தவறான கணிப்புகளால்கூட பாகிஸ்தானின் போர்க்கருவிகள் அதிக செயல்திறன் வாய்ந்தவையாகக் காட்சியளிக்க வழிவகுத்திருக்கக்கூடும்," என்று ஹாஃப்மேன் தனது "ஏவுகணை விடயங்கள்"( 'மிசைல் மேட்டர்ஸ்' - Missile Matters)  என்ற வலைப்பதிவில் எழுதியுள்ளார். வல்லுநர்கள் மேலும் சுட்டிக்காட்டுவது யாதெனில், இந்தியாவின் தாக்குதல்கள் பாகிஸ்தானில் குறிவைக்கப்பட்ட பல இலக்குகளை வெற்றிகரமாகத் தாக்கியுள்ளன. இந்திய ஏவுகணைகள் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஊடுருவிச் சென்றுள்ளன என்பதையே இவை உணர்த்துகின்றன. நிலத்திலிருந்து வான்வழியே தாக்கும் சீன ஏவுகணைகள், குறிப்பாக நீண்ட தூரம் பாயும் HQ-9B போன்றவையும் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளில் இடம்பெற்றுள்ளது.

"சீனத் தயாரிப்பு ரேடார் அமைப்புகள் அல்லது ஏவுகணை அமைப்புகள் இந்தியத் தாக்குதல்களைக் கண்டறியவோ அல்லது தடுக்கவோ தவறியிருந்தால், அது ஆயுத ஏற்றுமதியாளராக அறியப்படும் சீனாவின் பெயருக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்," என்று லண்டனைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் கோஹல் குறிப்பிட்டார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://edition.cnn.com/2025/05/09/china/china-military-tech-pakistan-india-conflict-intl-hnk?fbclid=IwY2xjawKKyllleHRuA2FlbQIxMQABHplEQJX3BZh8JbPr_RRhNMgM34ClaZdjqmfTgTqtfzqmE3zn9SGri3kaAYET_aem_mN15YIAx7-VbwVy3t7uivQ