அமெரிக்க-சீன Chip war: ஹுவாய் நிறுவனத்தின் மீதான புதிய தடைகள்
தமிழில்: விஜயன்

ஹுவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்கா சமீபத்தில் Chip தொடர்பான விசயத்தில் தடைகள் விதித்துள்ளதை நோக்கும் போது அதிகரித்து வரும் அச்சங்களையும், கூர்மையாகி வரும் சவால்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஹுவாய் நிறுவனத்தின் அசெண்ட் ஏஐ Chipகளை உலகெங்கிலும் - அதாவது எங்கு பயன்படுத்தினாலும் - அது அமெரிக்க ஏற்றுமதி விதிமுறைகளை மீறிய செயலாக கருதப்படும், என்று அமெரிக்க வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் திட்டவட்டமாகக் கூறுகிறது. இந்த எச்சரிக்கை, செவ்வாய்க்கிழமை அன்று, அத்துறையின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் பாதுகாப்புப் பணியகத்தால் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஏஐ Chipகளைக் கொண்டு, சீன ஏஐ அமைப்புகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டாலோ அல்லது அவற்றை இயக்க அனுமதித்தாலோ, அது மிகவும் கடுமையான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று அதில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிநவீன கணினி Chipகளை சீனா அடையாவண்ணம் தடுத்து நிறுத்தும் அமெரிக்க அரசாங்கத்தின் இடையறாத முனைப்பின் ஓர் அங்கமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது அதைவிட ஆழ்ந்ததொரு கவலையையும் நம் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறது: ஆம், செயற்கை நுண்ணறிவுத் துறையில் தனது மேலாதிக்க நிலையை இழந்துவிடுமோ என்ற பதற்றம் அமெரிக்காவை பீடித்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
ஏஐ விஷயத்தில் அமெரிக்காவை விட சீனா கொஞ்சம்கூட 'பின்தங்கிய நிலையில் இல்லை' என்று என்விடியா(Nvidia) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, ஜென்சன் ஹுவாங், அண்மையில் ஒரு முக்கியக் கருத்தை முன்வைத்தார். வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்பக் கருத்தரங்கில் உரையாற்றுகையில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிலவும் போட்டி என்பது ஒரு 'நீண்ட கால, முடிவற்ற பந்தயம்' என்று அவர் தெளிவாக வரையறுத்துக் கூறினார்.
அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த ஆய்வுக் கூட்டமொன்றில், அமெரிக்காவின் பிரம்மாண்ட தொழில்நுட்ப கார்ப்பரேட் அதிபர்கள் – OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், மைக்ரோசாஃப்ட் உயர்மட்ட நிர்வாகிகள், மற்றும் Chip தயாரிப்பு நிறுவனமான AMD-யின் பிரதிநிதிகள் ஆகியோர் – சட்டமன்ற உறுப்பினர்கள் முன் தத்தமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தினர். செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த ஆய்வுக்கும், அதன் மேம்பாட்டிற்கான நிதியுதவிக்கும் மேலதிக ஆதரவை நல்குமாறும், அதேநேரம் எளிமையும் நடைமுறைக்கு உகந்தனவுமான விதிமுறைகளை வகுக்குமாறும் சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் வலியுறுத்தினர். இதன்மூலம், செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் சீனாவைப் பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முன்னிலை வகிக்க முடியும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கு முன்னர் குறிப்பிட்ட சமயத்தில் விதிகள் பல முறை மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது; அக்குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின்னர் இப்போது இந்த புதிய வழிகாட்டல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முன்னர் பைடன் ஆட்சியின் கீழ், அமெரிக்க அரசாங்கம் 'செயற்கை நுண்ணறிவுப் பரவல் விதிமுறை' எனப் பெயரிடப்பட்ட ஓர் ஆணையை வெளியிட்டிருந்தது. ஆனால், பின்னர் அந்த ஆணை திரும்பப் பெறப்பட்டது. தற்போது, அமெரிக்கா அதைவிட மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. விதிமுறைகளைத் தமது தேசத்திற்கு வெளியே நடைமுறைப்படுத்துவது எத்துனை சவாலானது என்பதையே இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கடுமையான விதிகள் பறைசாற்றுகிறன.
பிற நாடுகள் அமெரிக்காவின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவதைச் சாத்தியப்படுத்துவது – அதிலும் குறிப்பாக, அத்தகைய சட்டங்கள் அவற்றின் சொந்த தொழில்நுட்பப் பாய்ச்சலுக்குத் தடையாக அமையும் தருணங்களில் – ஒருபோதும் இலகுவான காரியமாக இருக்காது. இது, இராஜதந்திர ரீதியிலான சவால்களையும், நடைமுறைச் சிக்கல்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் நிலைக்கு அமெரிக்காவை தள்ளுகிறது.
“உலகெங்கிலுமுள்ள நம்பிக்கைக்குரிய நாடுகளுடன் கைகோர்த்து, அமெரிக்கச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்காக ஒரு வலிமையான, வெளிப்படையான உத்தியை உருவாக்கி டிரம்ப் நிர்வாகம் செயற்படும்,” என்று இவ்வாரச் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், அமெரிக்க வர்த்தகத் துறை குறிப்பிட்டிருந்தது.
ஆயினும், இந்த விதிகள் உலகெங்கிலும் தடையின்றிப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமானால், அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படும், கடினமான அரசியல் பேச்சுவார்த்தைகளையும் நடத்த வேண்டியிருக்கும்; மேலும் இறுதியில் எதிர்பார்த்த நற்பலன்களைத் தராமலும் போகலாம்.
சீன அரசாங்கம் அமெரிக்காவின் நடவடிக்கைகளை பலமுறை கடுமையாக விமர்சித்துள்ளது. பிப்ரவரி 25 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் அவர்கள் கூறுகையில், அமெரிக்கா வர்த்தகத்தையும் தொழில்நுட்பத்தையும் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார். Chip ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும், சீனாவின் Chip தொழில்துறைக்கு எதிராகச் செயல்படுமாறு பிற நாடுகளைத் தூண்டவும் அமெரிக்கா தனது தேசிய பாதுகாப்பை வெறும் சாக்குப்போக்காகப் பயன்படுத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
"இந்த நடவடிக்கைகள் உலகளாவிய Chip தொழில்துறையைப் பாதிக்கின்றன," என்று லின் திட்டவட்டமாகக் கூறினார். "மேலும் இவை நீண்டகால நோக்கில் அமெரிக்காவுக்கு மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கும் தீங்கு விளைவிக்கும்," என்றார்.
உண்மையில், இத்தகைய முயற்சிகள் சீனாவைத் தொழில்நுட்பத் துறையில் மேலும் அதிக சுயசார்பு நிலையை அடைய மட்டுமே தூண்டக்கூடும். இதற்கு ஹுவாய் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2019ஆம் ஆண்டில் அமெரிக்கா ஹுவாய் நிறுவனத்தின் மீது தடைகளை விதித்த காலம் தொட்டு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் Chip தயாரிப்புத் துறைகளில் அந்நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழின் செய்தியின்படி, சமீபத்தில் அந்நிறுவனம் தனது அதிநவீனமும் மிகுந்த திறன்வாய்ந்ததுமான அசென்ட் 910D Chipபைச் சில சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் சோதனை செய்ய அனுமதியளித்துள்ளது. இந்த Chip என்விடியா(Nvidia)வின் H100 Chipபிற்கு இணையானதாகவோ அல்லது அதை மிஞ்சக்கூடியதாகவோகூட இருக்கக்கூடும், என்று விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இத்தகைய தீவிர அழுத்தங்களுக்கு மத்தியிலும், சீனா இதுபோன்ற முன்னேற்றங்களைத் தொடர்ந்து ஈட்டினால், அமெரிக்கா தனது உத்தியை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருப்பதோடு சீனாவைத் தடுத்து நிறுத்துவதுதான் தனது இலக்கா - அல்லது இது உண்மையில் சீனாவை இன்னும் வேகமாகப் புதுமைகளை கண்டுபிடிக்கத் தூண்டுகிறதா? என்று தன்னைத்தானே கேள்விக்குட்படுத்திக்கொள்ள வேண்டும்.
- விஜயன் (தமிழில்)