சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம்: பாகிஸ்தானின் இராணுவ பலம் இப்போது விமானப்படையின் கைகளில்
தமிழில்: விஜயன்

சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் விமானப்படை (PAF) தனது திறன்களுக்காகப் புதியதொரு மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் தரைப்படையை விஞ்சி மேலாதிக்கம் செலுத்தும் நிலைக்கு உயர்ந்துள்ளது. மேம்பட்ட மின்னணுப் போர் முறைமைகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மட்டுமல்லாது சீனாவின் பக்கபலத்துடன், பாகிஸ்தான் விமானப் படையின் அபாரச் செயல்திறன், பாகிஸ்தானுக்குள் இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான அதிகாரச் சமநிலை குறித்தும், யார் வியூகங்களை வகுக்கிறார்கள், இராணுவத்தின் எந்தப் பிரிவு தலையாயது என்பது குறித்தும் புதியதொரு விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இது பாகிஸ்தான் இராணுவத்திற்குள் அதிகாரப் பகிர்வு முறையில் ஒரு சிறு அளவிலான, எனினும் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிக்கிறது.
பாகிஸ்தானின் ஆதிக்கம் மிக்க இராணுவக் கட்டமைப்பினுள் ஒரு சிறு அளவிலான, எனினும் கண்கூடான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் விமானப்படை தற்போது இராணுவ நடவடிக்கைகளில் பாகிஸ்தான் தரைப்படையை விட மேலான கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. பாரம்பரியமாக இராணுவத்தின் முதன்மைப் பிரிவாகக் கருதப்பட்டு வந்த தரைப்படையை இது விஞ்சி நிற்கிறது. நான்கு நாட்கள் நீடித்த மோதலின்போது, பாகிஸ்தான் விமானப்படை வான்பரப்பு மட்டுமல்லாது மின்னணுப் போரையும் திறம்படக் கையாண்டுள்ளது என்பது வெளிப்படையான ஆதாரங்கள், தொடர் கண்காணிப்பில் பெறப்படும் தரவுகள் மூலம் கிடைத்த தகவல்கள் தெள்ளத்தெளிவாகக் காட்டுகின்றன. மே 7 அன்று அதிகாலையில், பாகிஸ்தான் முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) நடத்திய தாக்குதல்களுக்கு அவர்களால் உடனடியாகவும் துரிதமாகவும் பதிலடி கொடுக்க முடிந்தது.
மறுபுறம், இராணுவத்தின் தரைப்படை வசமிருந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் மந்தமாகச் செயல்பட்டன, சம்பவங்கள் நடந்த பின்னரே அவை எதிர்வினையாற்றின. மேலும், ஆரம்பகட்ட எச்சரிக்கைகளை வழங்குவதற்கும், அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கும் பாகிஸ்தான் விமானப்படையை பெருமளவுக்குச் சார்ந்திருக்க நேர்ந்தது. இது இராணுவத்தின் பங்கை முக்கியத்துவமற்றதாக்கியதோடு, முன்னணியில் நிற்பவர் என்ற நிலைக்கு பதிலாக துணை நிற்பவரின் நிலைக்குத் தள்ளியது. இந்தியாவுடனான ஒரு பெரிய, நேரடி மோதலில், முதன்முறையாக, பாகிஸ்தான் விமானப்படையின் சாதனைகள் முன் தரைப்படை வெளிப்படையாகவே மங்கிப்போனது. வெளிநாட்டு வல்லுநர்கள், பாகிஸ்தானின் இராணுவத் தலைவர்கள், அரசுத் தலைவர்கள் மட்டுமல்லாது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள பொதுமக்களின் சில பிரிவுகளிடமிருந்தும் வெகுவான பாராட்டுகள் பாகிஸ்தான் விமானப் படைக்கு குவிந்தது.
‘இன்னும் தலைமைப் பொறுப்பில் தரைப்படையே’
இராணுவத்தில் தற்போது நிலவும் இந்த “புதிய சமநிலையின்மை”யே, கடந்த வாரம் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிரை, ஐந்து நட்சத்திரப் அந்தஸ்திலான ஃபீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்வு வழங்குவதென்ற முடிவுக்கு இட்டுச் சென்றிருக்கலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை வல்லுநர்களும், ஆய்வாளர்கள் பலரும் கருதுகிறார்கள். இந்த நகர்வு, பாகிஸ்தான் இராணுவத்தில் தரைப்படையே இன்றும் மிகவும் செல்வாக்கு மிக்கப் படைப்பிரிவு என்பதை எடுத்துக்காட்டும் ஒரு வழியாகவும் பார்க்கப்படுகிறது. ‘தி வயர்’ பத்திரிகைக்கு ஒரு பாகிஸ்தான் விமர்சகர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டது போல, முனிரின் சீருடையில் உள்ள கூடுதல் நட்சத்திரம், பாகிஸ்தான் மக்கள் மத்தியில் யார் உண்மையில் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டும் ஒரு குறியீடாகும்.
‘பனியன்-உம்-மர்சூஸ்’ (Bunyan-um-Marsoos - இதன் பொருள் ‘ஈயச் சுவர்’) நடவடிக்கையில் விமானப்படையின் செயல்திறன் குறித்து பேசும்போது, விமானப்படைத் தளபதி ஜாஹீர் அஹ்மத் பாபர் சித்துவைப் பாகிஸ்தானின் அரசியல் தலைவர்கள், ஊடகங்கள் மட்டுமல்லாது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் கூடப் பாராட்டினர். இதனால் அனைவரின் கவனமும் ஜாஹீர் அஹ்மத் பாபர் சித்து மீதே குவிந்தது. இச்செயல், ராவல்பிண்டியில் உள்ள இராணுவத்தின் பிரதான தலைமையகத்திலிருந்து கவனத்தை இஸ்லாமாபாத்தில் உள்ள விமானப்படைத் தலைமையகம் பக்கம் திருப்பியது. இதன்மூலம், விமானப்படை ஒரு “தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட படைப்பிரிவு” என்றும், அதன் அளவை விடவும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது என்றும் பலர் ஒப்புக்கொண்டனர்.
இந்த மாற்றம், நாட்டின் அரசியலைக் கட்டுப்படுத்த தரைப்படை நீண்டகாலமாகப் பயன்படுத்திவரும் வியூகத்தைப் போலவே, பாகிஸ்தானின் சிவில் அரசாங்கம் விமானப்படையை தரைப்படைக்கு எதிராகக் சாமர்த்தியமாகப் பயன்படுத்துகிறதா என்ற விவாதங்கள் பாதுகாப்பு வல்லுநர்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. விமானப்படையின் வலிமையான, தொழில்முறை செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக, பிரதமர் ஷேபாஸ் ஷெரிஃப், மே 20 அன்று விமானப்படைத் தளபதி சித்துவின் பதவிக்கால நீட்டிப்பிற்கு ஒப்புதல் அளித்தார். இதன் மூலம், 1981 இல் ஏ.சி.எம். அன்வர் ஷாமினுக்குப் (ACM Anwar Shamin) பிறகு, இத்தகைய பதவிக்கால நீட்டிப்பைப் பெற்ற பாகிஸ்தானின் இரண்டாவது விமானப்படைத் தளபதி என்ற பெருமையை சித்து பெற்றார். எனினும், சித்துவின் புதிய பதவிக்காலத்தின் கால அளவு வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இந்தத் தகவல் மறைப்புகூட ஒரு திட்டமிட்ட நகர்வாக இருக்கலாம்; தரைப்படையே தொடர்ந்து மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் அசிம் முனிரால் முன்மொழியப்பட்டதாகவும் இருக்கலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
மின்னணுப் போரில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதிலும், பல்வேறு உணரிகளிலிருந்து (sensors) பெறும் தகவல்களை உடனடியாக ஒருங்கிணைக்கும் திறனில்தான் விமானப்படையின் முதன்மையான பலம் அடங்கியுள்ளது என்று விமானப்படைக்குள் உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திறன்கள், 2018-ம் ஆண்டு முதல் சீனாவின் உதவியுடன், விமானப்படைத் தலைமையகத்தில் உள்ள சைபர் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பிரிவு (Cyber and Emerging Technologies Cell) மூலம் ரகசியமாக உருவாக்கப்பட்டுள்ளன.
சீனாவின் பங்கு
சீனாவுடனான கூட்டு நடவடிக்கைகள், பாகிஸ்தான் விமானப்படையை (PAF) நிகழ்வுகளுக்கு வெறும் எதிர்வினை புரியும் நிலையிலிருந்து, போர்க்களத்தின் போக்கை வடிவமைத்து, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வல்லமை மிக்க சக்தியாக மாற்றியுள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, ரேடார், சீன பெய்டு (BeiDou) மற்றும் காஃபென் (Gaofen) செயற்கைக்கோள்கள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் வான்வழி ஆரம்ப எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு (AEW&C) அமைப்புகளிலிருந்து கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து, மின்னணு மற்றும் சிக்னல் வழியாக வரும் புலனாய்வுத் தகவல்களை (ELINT/SIGINT) பாகிஸ்தான் விமானப்படை நிகழ்நேரத்தில் பெற்றுக்கொள்கிறது. மே 7 அன்று நடைபெற்ற மோதல்களின்போது, இத்தகைய தகவல் ஒருங்கிணைப்பு, பாகிஸ்தான் விமானப்படை தனது விமானங்கள் மற்றும் ஆயுதங்களைத் 'தாக்குதல் வலயங்கள்' (kill-zones) எனப்படும் போரியல் ரீதியான சாதகமான நிலைகளில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், துல்லியமான தாக்குதல்களை மேற்கொள்ளவும், ஏவுகணைகளைத் திறம்படத் முறியடிக்கவும் பெரிதும் உதவியது. இந்த முக்கிய அம்சத்தை இந்திய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சில வல்லுநர்களும்கூட குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் விமானப்படை தற்போது JF-10C/CE 'விகரஸ் டிராகன்ஸ்', JF-17 'தண்டர்ஸ்' போன்ற அதிநவீன சீனத் தயாரிப்புப் போர் விமானங்களைப் பயன்படுத்துவதால் இந்தச் சாதகமான நிலை மேலும் வலுவடைந்துள்ளது. இவ்வகை விமானங்கள் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படுவதுடன், நீண்ட தூர இலக்குகளைத் தாக்கக்கூடிய PL-15/E ஏவுகணைகள், மேம்படுத்தப்பட்ட F-16 ரக விமானங்களுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து போர் விமானங்களுக்கும், முன்கூட்டிய எச்சரிக்கைகளை வழங்குவதற்கும் கட்டுப்பாட்டிற்கும் துணையாக Saab 2000 'எரிஐ' (Erieye) AEW&C விமானங்கள் துணை நிற்கின்றன. பாகிஸ்தான் விமானப்படை தனது மின்னணுப் போர் அமைப்புகள், ரேடார் ஆயுதங்கள், துல்லியத்தாக்கு ஆயுதங்களை மேலும் மேம்படுத்துவதற்காக, இந்த விமானங்களுக்குத் தமக்கே உரிய 'ஜுகாட்' பாணியிலான சீர்திருத்தங்களையும் – அதாவது, உள்நாட்டுப் பொறியியல் மேம்பாடுகளையும் – செய்துள்ளது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலின்போது ஐந்து இந்திய விமானப்படை (IAF) போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் அறிவித்தது. ஆயினும், இந்தியா தமது எந்த விமானங்களையும் இழந்ததை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை. இத்தகைய போர்க்களச் செயல்பாடுகளில் சில போர் விமானங்களை இழப்பது இயல்பானதுதான் என்று இந்தியா பொதுவாகக் கருத்துத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் விமானப்படையுடனான இந்த தொலை தூர மோதல்களில் இந்தியா இரண்டு முதல் நான்கு போர் விமானங்களை இழந்திருக்கக்கூடும்; எனினும், தற்போதுவரை துல்லியமான விவரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று ஒருபக்க சார்பற்ற மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அரசியல் ஆதரவு
ஒரு பாகிஸ்தானிய நிபுணரின் கூற்றுப்படி, சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் விமானப்படை (PAF) தனது மேம்பட்ட பலம் மற்றும் செயல்திறன் காரணமாக, குறிப்பாக இராணுவ நிபுணர்களிடையே, பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் ஈட்டியிருக்கலாம். ஆயினும், இந்த அனுகூலத்தை நாட்டுக்குள் பயன்படுத்திக்கொள்ள விமானப்படைக்குத் தேவையான அரசியல் செல்வாக்கு இல்லை. மேலும், தன் மீதான பொதுக் கருத்தையோ அல்லது மக்கள் மத்தியில் தனக்கான பிம்பத்தையோ உருவாக்கும் அதிகாரம் அதற்கு இல்லை, ஏனெனில் இது இன்றளவும் இராணுவத்தின் இன்டர்-சர்வீசஸ் இன்டெலிஜென்ஸ் டைரக்டரேட்டின் (ISID) கட்டுப்பாட்டிலேயே உள்ளது. ISID என்பது அரசாங்கத்தின் மீதும் அரசு அமைப்புகள் மீதும் இராணுவத்தின் தரைப்படை தன் இரும்புக் கரத்தை நிலைநிறுத்த உதவும் உளவு அமைப்பாகும்.
மறுபுறம், பெயர் வெளியிட விரும்பாத அந்த நிபுணர், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பின் மீது தரைப்படையே இன்றும் முழுமையான ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று தெரிவித்தார். இது, நாட்டின் அணு ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடு, அரசியல், பொருளாதாரம், வெளியுறவு மட்டுமல்லாது கருத்தியல் தளத்தின் மீதான வலுவான செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியதாக விளங்குகிறது. இவ்வளவு அதிகாரத்தைக் கொண்டிருந்த போதிலும், இந்தியாவின் சிந்தூர் நடவடிக்கையின் போது மந்தமாகச் செயல்பட்டதற்காக தரைப்படை அண்மையில் மறைமுக விமர்சனங்களுக்கு ஆளானது. தரைப்படை தனது அதிகாரத்தை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தியதாகவும், 'வியூக ஆழம்' (strategic depth) அதாவது நாட்டின் எல்லைக்கும் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் இருக்கும் பகுதிகளுக்கும் இடையிலான தொலைவு அதிகம் தேவை என்பன போன்ற பழைய கருத்தாக்கங்கள் இனிப் பயன்படாதெனத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தும் இன்னமும் அவற்றை தக்கவைத்துக்கொண்டிருப்பதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். தரைப்படை ஏன் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதற்கு இவை பலவீனமான காரணங்களே என்பது பலரின் கருத்தாக விளங்குகிறது.
அதே சமயம், பாகிஸ்தான் விமானப்படையும் (PAF) பாகிஸ்தான் கடற்படையும் (PN) பாகிஸ்தானின் அணு ஆயுத வலிமையின் இன்றியமையாத அங்கங்களாகும்; இவை அணு ஆயுதங்களை நிலம், வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல்தொடுக்கும் ஆற்றல் கொண்டவை. இருப்பினும், வழக்கமான இராணுவ நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகித்தாலும், விமானப்படையும் கடற்படையும் எப்போதும் தரைப்படையை விடக் குறைவான மதிப்பையே பெற்று வந்துள்ளன. இந்தச் சமமற்ற நிலை இந்தியப் பிரிவினையின் காலத்திலிருந்தே வேரூன்றியுள்ளது; அப்போது தரைப்படை மற்றப் படைகளை விட மிகுதியான ஆள் பலத்தையும், பிற வள ஆதாரங்களையும் தனதாக்கிக்கொண்டது. இதுவே பாகிஸ்தானின் இராணுவத்தில், தரைப்படையை மிகவும் சக்திவாய்ந்த பிரிவாக மாற்ற வழிவகுத்ததுடன், “பெரும்பாலான நாடுகளுக்கு ஒரு இராணுவம் உண்டு, ஆனால் பாகிஸ்தான் இராணுவத்திற்கு ஒரு நாடு உண்டு” என்னும் பிரபலமான கூற்று உருவாவதற்கு அடித்தளமிட்டது.
பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற வேளையில், கடற்படையில் சுமார் 3,000 வீரர்களும், ராயல் இந்தியக் கடற்படையிலிருந்து வந்த சில பழைய கப்பல்களும் இருந்தன. விமானப்படை சுமார் 2,000 முதல் 2,500 வீரர்களுடனும், ராயல் இந்திய விமானப்படையிலிருந்து பெறப்பட்ட 16 பழைய ஹாக்கர் டெம்பஸ்ட் II ரக போர் விமானங்களைக் கொண்ட ஒரே ஒரு படைப்பிரிவுடன் தன் பயணத்தைத் தொடங்கியது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக, மூன்று படைகளும் பிரிட்டிஷ் அதிகாரிகளின் தலைமையின் கீழ் இயங்கின; மேலும் உள்நாட்டுத் தலைமையோ, தனித்துவமான உள்கட்டமைப்போ, நீண்டகால வியூகங்களோ அமையப்பெறவில்லை. இந்தப் பிரச்சனை விமானப்படையிலும் கடற்படையிலும் மிக மோசமாக வெளிப்பட்டது; அவை தரைப்படைக்கு சேவைசெய்யும் பிரிவுகளாகச் சுருங்கிப் போயின. விரைவிலேயே தரைப்படை பாகிஸ்தானில் பிரதான அதிகார மையமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
சுமார் எண்பது ஆண்டுகள் கழிந்த பின்னரும், இந்தச் சமமின்மை இன்னும் நிலைத்து நிற்கிறது. தரைப்படையில் சுமார் 5,60,000 வீரர்கள் உள்ளனர், அதே நேரத்தில் விமானப்படையில் சுமார் 70,000 வீரர்களும், கடற்படையில் சுமார் 30,000 வீரர்களும் இருக்கின்றனர். இராணுவப் புரட்சிகள் மூலமாக தரைப்படையின் பிடி மேலும் வலுப்பெற்றது, ஏனெனில் அது பாகிஸ்தானை முப்பத்து நான்கு ஆண்டுகள் நேரடியாக ஆட்சி செய்ததுடன், எஞ்சிய நாற்பத்து நான்கு ஆண்டுகளில் பெரும் பகுதியைக் மறைமுக கட்டுப்பாட்டின்கீழ் இயக்கியது.
வரலாற்றுப் போக்கில் தரைப்படையின் மேலாதிக்கம்
பாகிஸ்தான் இராணுவத்தில், தரைப்படை பெரும்பலம் மிக்க சக்தியாக உருவெடுக்க வரலாறும் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. ஆரம்பத்திலிருந்தே, தரைப்படையானது பாகிஸ்தானின் நாட்டின் எல்லைகளுகு மட்டுமல்லாது இஸ்லாமிய விழுமியங்களுக்கும் ஒரு காவல் அரணாகவே கருதப்பட்டது. இந்தியாவுடன் தரைப்படை நான்கு போர்களில் ஈடுபட்டது, அவற்றில் மூன்று காஷ்மீர் தொடர்பானவை, இதுவே தரைப்படையை நாட்டின் பிரதான போர் சக்தியாக நன்கு உறுதிப்படுத்தியது. மேலும், தலைநகருக்கு அருகாமையில் பீரங்கிகள் நிலைபெற்றிருக்கும்போது, தொலைதூர விமானத் தளங்களிலோ அல்லது கடலில் கப்பல்களிலோ இருப்பதை விட, ஒரு சதிப்புரட்சியின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவது எளிது என்பதைத் தரைப்படை ஆரம்பத்திலேயே உணர்ந்திருந்தது.
இதன் விளைவாக, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கான முதன்மை உத்திகளைத் தரைப்படை வகுத்தது, தலைமைப் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டது, மேலும் விமானப்படை (PAF) மற்றும் கடற்படை (PN) ஆகியவற்றைத் துணை நிற்கும்படி செய்தது. நாட்டின் பாதுகாப்பு அமைப்பைப் பொறுத்தமட்டில் பிரதான தயாரிப்பாளராக, இயக்குநராக, முன்னணி நட்சத்திரமாக தரைப்படையே விளங்கியது. பாகிஸ்தானுக்குள் மட்மல்லாது, ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளிலும், பலுசிஸ்தானிலும் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் முழுப் பொறுப்பையும் தரைப்படை ஏற்றுக்கொண்டது. சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது, அதற்கு எதிராகப் போராடுவதற்காக முஜாஹிதீன் எனப்படும் போராளிகளுக்குப் பயிற்சி அளித்து, ஆயுத உதவிகளை வழங்கியதுடன், பிற்காலத்தில் தாலிபான்களுக்கும் ஆதரவளித்தது.
மூன்று படைகளின் உளவுத்துறையைக் கண்காணிக்கும் அதிகாரமிக்க இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் டைரக்டோரேட் (ISID) அமைப்பின் தலைவராக எப்போதும் தரைப்படையைச் சேர்ந்த ஒரு லெப்டினன்ட் ஜெனரலே இருந்து வந்துள்ளார். 1948-இல் மேஜர் ஜெனரல் வால்டர் கேத்தோர்ன் (அப்போது பாகிஸ்தான் இராணுவத்தின் துணைத் தளபதி) என்பவரால் ISID தொடங்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில், 1950களின் முற்பகுதியில், ஒரு கடற்படை அதிகாரி குறுகிய காலம் இந்தப் பொறுப்பினை வகித்தார். ஆனால் அதன்பிறகு, தரைப்படை அதிகாரிகள் மட்டுமே இப்பதவியில் இருந்து வருகின்றனர். பாகிஸ்தானின் மிக உயரிய இராணுவப் பதவியான, மூன்று படைகளையும் ஒருங்கிணைக்கும் கடமையைக் கொண்ட கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதிகள் குழுவின் தலைவர் (CJCSC) பதவியையும் கிட்டத்தட்ட எப்போதும் தரைப்படையினரே வகித்துள்ளனர். 1976-இல் இப்பதவி உருவாக்கப்பட்ட நாளிலிருந்து, கடற்படை அல்லது விமானப்படையைச் சேர்ந்த ஒருவர் இதை வகித்தது இரு முறை மட்டுமே, அதுவும் தலா மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே நீடித்துள்ளது. 1997 முதல், இப்பதவி தரைப்படையின் ஏகபோக உரிமையாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மட்டுமல்லாது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த படைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள போர்த்தந்திரத் திட்டங்கள் பிரிவு (SPD), 2000ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து எப்போதும் ஒரு மூன்று நட்சத்திர அந்தஸ்திலுள்ள தரைப்படை அதிகாரியின் தலைமையில்தான் இயங்கி வருகிறது. SPD முப்படைகளுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அணு ஆயுதங்கள் என்பது இந்தியத் தாக்குதலைத் முறியடிப்பதற்கான மற்றொரு ஆயுதமே என்ற தரைப்படையின் குறுகலான பார்வையை வெளிப்படுத்துகிறது. இதன் விளைவாக, விமானப்படை மற்றும் கடற்படையின் அணு ஆயுதங்கள் கூட SPD வழியாகத் தரைப்படையின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளன, இது தரைப்படையின் அதிகார வரம்பை மேலும் விசாலமானதாக மாற்றுகிறது. தரைப்படையின் ஆதிக்கம் வெறும் இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடுவதில்லை.
ஃபௌஜி ஃபவுண்டேஷன் (Fauji Foundation), இராணுவ நலன்புரி அறக்கட்டளை (Army Welfare Trust), எல்லைப் பணிகள் அமைப்பு (Frontier Works Organisation), தேசிய தளவாடப் பிரிவு (National Logistics Cell) போன்ற பல பெரிய வணிகக் குழுமங்களையும் தரைப்படை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இக்குழுமங்கள் ரியல் எஸ்டேட், வீட்டு வசதி, சாலை அமைத்தல், சுரங்கப் பணிகள், மற்றும் உணவு உற்பத்தி (சர்க்கரை மற்றும் தானியங்கள் உட்பட) எனப் பல்வேறு துறைகளில் வணிகச் செயல்பாடுகளை முன்னெடுக்கின்றன. இவை பாகிஸ்தானின் பொருளாதாரத்திலும், சில்லறை வர்த்தகச் சந்தைகளிலும் கணிசமான பகுதிகளைத் தங்கள் பிடியில் வைத்துள்ளன.
களத்தில் கால் பதித்தலை விடத் தொழில் திறனே முக்கியம்
தரைப்படை நடத்தும் இத்தொழில் நிறுவனங்கள், சிறப்பு வரிச் சலுகைகள் மட்டுமல்லாது பல்வேறு உதவிகளையும் பெறுவதால், தரைப்படைக்கும் நாட்டின் பொதுப் பொருளாதாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கண்டறிவது கடினமாகிறது என்று சிலர் வாதிடுகின்றனர். ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், இராணுவப் பணியிலிருந்து விலகிய பிறகு இத்தகைய நிறுவனங்களில் உயர் ஊதியப் பதவிகளைப் பெறுவது வழக்கம். இத்தொழில்கள் ஆரம்பத்தில் போர் வீரர்களின் நலனுக்காகத் தொடங்கப்பட்ட போதிலும், இன்று பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றன. மறுபுறம், பாகிஸ்தான் விமானப்படை (PAF) மற்றும் பாகிஸ்தான் கடற்படை (PN) ஆகியவை, தங்கள் வீரர்களுக்கு உதவும் நோக்குடன், மிகச் சிறிய அளவில் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பாகிஸ்தான் விமானப்படையின் ஷாஹீன் (ஃபால்கன்) அறக்கட்டளை, குறைந்த அளவில் அசையாச் சொத்து வணிகத்திலும், சுகாதார சேவைகளிலும் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் கடற்படையின் பஹ்ரியா அறக்கட்டளை பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை நடத்தி வருவதுடன், துறைமுகம் மற்றும் கப்பல் மேலாண்மை சேவைகளை வரையறுக்கப்பட்ட அளவில் வழங்கி வருகிறது.
இராணுவ நடவடிக்கைகளைப் பொருத்தவரை, பாகிஸ்தானுக்குள் கடற்படையின் இருப்பு விமானப்படையை விடவும் குறைவாகவே புலப்படுகிறது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) காரணமாக கடற்படையின் முக்கியத்துவம் அதிகரித்து வந்தபோதிலும், தேசிய பாதுகாப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய முதன்மைப் பிரிவாகக் கருதப்படவில்லை; மேலும், புதிய தளவாடங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைவாகவே உள்ளது. பாகிஸ்தானின் 1,000 கிலோமீட்டர் நீள கடற்கரையைப் பாதுகாப்பதும், பிராந்திய அச்சுறுத்தல்களைத் தடுப்பதும் மட்டுமே கடற்படையின் முக்கியப் பணி; தொலைதூரங்களில் தனது வலிமையைப் பறைசாற்றுவது அதன் நோக்கம் அல்ல. வலுவான கடற்படை சார்ந்த அணுசக்தித் திறனை உருவாக்கும் கடற்படையின் முயற்சிகள், நிதிப் பற்றாக்குறை, அரசியல் ரீதியிலான ஆதரவின்மின்மை காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.
தரைப்படையைப் போலல்லாமல், விமானப்படையும் கடற்படையும் அரசியல்வாதிகளுடனோ அல்லது ஊடகங்களுடனோ வலுவான தொடர்புகளை ஒருபோதும் ஏற்படுத்திக் கொண்டதில்லை. இது, தேசப் பாதுகாப்பு முடிவுகளில் அவர்கள் செல்வாக்கு செலுத்துவதைக் கடினமாக்கியுள்ளது. தேசிய வளர்ச்சி, அவசகர கால நிலைமைகளை சமாளிப்பது அல்லது வெளியுறவுக் கொள்கை குறித்த விவாதங்களிலும் அவர்களுக்கு மிகக் குறைவான பங்களிப்பே உள்ளது. நகர்ப்புறங்களில் கணிசமான எண்ணிக்கையிலான துருப்புகளை நிலைநிறுத்தும் வாய்ப்பு இல்லாததாலும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னின்று நடத்திய வரலாறு அற்றதாலும், தலைநகருக்கு அருகில் பீரங்கிகள் அல்லது படை அணிவகுப்பு இல்லாததாலும், விமானப்படையாலும் கடற்படையாலும் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்ளவோ அல்லது இராணுவ ஆட்சியை நிலைநாட்டவோ முடிவதில்லை. பாகிஸ்தானில், அரசியல் அதிகாரம் பெரும்பாலும் களத்தில் நிற்கும் தரைப்படையின் இருப்பிலிருந்தே கிடைக்கிறது – இது விமானப்படையாலும் கடற்படையாலும் வழங்க முடியாத ஒரு அம்சமாகும்.
விமானப்படையும் கடற்படையும் எப்போதும் தங்களின் தொழில்நுட்பத் திறன்கள், சிறப்புப் பயிற்சிகளின் மீது பெருமிதம் கொள்கின்றன. குறிப்பாக விமானப்படையானது, அரசியல் ஈடுபாட்டை விடவும் விண்வெளித் துறையில் புதுமைகள் நிகழ்த்துவதற்கு அதிக மதிப்பளிக்கிறது. இந்த அணுகுமுறை, பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களிலிருந்தும் அவர்கள் மேற்கொள்ளும் பரந்தளவிலான, நேர்மையான ஆட்சேர்ப்பிலும் பிரதிபலிக்கிறது. தரைப்படையோ, பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வாவின் குறிப்பிட்ட சில பகுதிகளிலிருந்தே படைவீர்ர்களைத் திரட்டுகிறது. சுருக்கமாகக் கூறினால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முடிவுகள், பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்மட்டத்தில் பிளவுகளை வெளிப்படுத்தியுள்ளன. இதற்கு, விமானப்படையின் திறனும், அதன் புதுமையான அணுகுமுறைகளும் – அத்துடன், ஐந்து இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை வெளியிட்ட, இன்னும் உறுதிப்படுத்தப்படாத – கூற்றுமே காரணம். வெளிப்படையான மோதல் இல்லாவிட்டாலும், விமானப்படையின் பெருகிவரும் முக்கியத்துவமும், தரைப்படையின் அண்மைக் காலத் தவறுகளும் பாகிஸ்தான் இராணுவத்திற்குள் ஒரு மறைமுகப் போட்டிக்கு வழிவகுத்துள்ளன. குறிப்பாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விவாதங்களையும், அதிநவீன தொழில்நுட்பப் போரையும் யார் கட்டுப்படுத்துவது என்ற அம்சத்தில் இப்போட்டி கூர்மையாக வெளிப்பட்டுள்ளது.
எனினும், எதிர்காலத்தில் நிலைமைகள் மாறக்கூடும். முக்கியப் பணிகளில் விமானப்படை தொடர்ந்து தரைப்படையை விடச் சிறப்பாகச் செயல்பட்டு, சீனாவுடனான தனது தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்தி, பொதுமக்களுடனோ அல்லது கொள்கை வகுப்பாளர்களுடனோ சிறந்த உறவுகளை மேம்படுத்திக் கொண்டால், நாட்டின் இராணுவ மற்றும் அரசாங்க முடிவுகளில் அது ஒரு வலுவான குரலாக ஒலிக்கக்கூடும்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://m.thewire.in/article/security/operation-sindoor-pakistan-air-force-military-balance-army
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு