துரிதமாக வலுப்பெறும் இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு உறவுகள்

தமிழில்; விஜயன்

துரிதமாக வலுப்பெறும் இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு உறவுகள்

இந்தியாவின் பிரதான ஆயுத வியாபாரியாக இன்றளவும் ரஷ்யாதான் திகழ்கிறது. இருப்பினும், இந்தியா தற்போது அமெரிக்காவிடமிருந்து பெருமளவில் ஆயுதங்களைக் கொள்முதல் செய்ய முனைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கை ஒன்றில், சில அதிமுக்கியமான தரவுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அவ்வறிக்கை தெரிவிப்பது யாதெனில்: 2019 முதல் 2023 வரையிலான காலப்பகுதியில், உலகிலேயே அதிகளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடாக இந்தியா விளங்கியதுடன், முந்தைய காலப்பகுதியான 2014–2018 உடன் ஒப்பிடுகையில், இந்தியாவின் இறக்குமதிகள் 4.7% உயர்வைக் கண்டுள்ளன. அவ்வறிக்கை மேலும் சுட்டுவது யாதெனில், இக்காலப்பகுதியில் இந்தியாவின் ஆயுதத் தேவையில் 36% ரஷ்யாவால் பூர்த்தி செய்யப்பட்டது. ஆயினும், ரஷ்யா (அல்லது முன்னைய சோவியத் யூனியன்) இந்தியாவின் ஆயுதத் தேவையில் பாதியளவை விடக் குறைவாகவே வழங்கியிருப்பது என்பது 1960–64 காலகட்டத்திற்குப் பிறகு இதுவே முதற் தடவையாகும்.

இதிலிருந்து புலப்படுவது யாதெனில், ரஷ்யா இன்னமும் பிரதான ஆயுத விற்பனை நாடாக நீடித்த போதிலும், அமெரிக்காவிடமிருந்து இந்தியா கணிசமான அளவிலான பலதரப்பட்ட ஆயுதங்களைக் கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. அவற்றுள் சில:

•C-17 குளோப்மாஸ்டர் III போக்குவரத்து விமானங்கள்

•AH-64 அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள்

•MH-60 ரோமியோ கடற்படை ஹெலிகாப்டர்கள்

•P-8I பொசைடன் கடல்சார் கண்காணிப்பு விமானங்கள்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் மேலும் பல ஆயுத ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கு தற்போது திட்டமிடப்பட்டு வருகின்றன.

நரேந்திர மோடி 2023 ஜூன் மாத அமெரிக்கப் பயணத்தின்போது, முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க நிறுவனமான GE ஏரோஸ்பேஸ் மற்றும் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) ஆகியவை இணைந்து, இந்திய மண்ணிலேயே போர் விமானங்களுக்கான என்ஜின்களைத் தயாரிக்கும் ஒரு திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்தன. இத்தகைய சக்திவாய்ந்த என்ஜின்கள், இந்தியாவால் தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான (LCA) Mk-II 'தேஜஸ்' ரக வானூர்திகளில் பொருத்தப்படவுள்ளன. இரு நாடுகளுக்குமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த ஒப்பந்தம், வருங்காலத்தில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பாதுகாப்புத் துறையிலான ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த வழிவகுக்கலாம்.

காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள்

முன்னர், இந்தியா தனது பாதுகாப்புத் தளவாடத் தேவைகளுக்குப் பெருமளவில் ரஷ்யாயே(சோவியத் யூனியனையே) சார்ந்திருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில், இந்தியா பல்வேறு தேசங்களிடமிருந்தும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்கிறது. அவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய  குறிப்பிடத்தக்கவையாக விளங்குகின்றன.

மேற்குத் திசையில் பாகிஸ்தானும், வடக்குத் திசையில் சீனாவும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களாக விளங்குகின்றன. அவ்வகையில், இந்தியா தனது இரு திசைகளிலிருந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால், அமெரிக்காவை ஒரு முதன்மையான போர்த்தந்திர கூட்டாளியாகக் கருதுகிறது. 

2008-ஆம் ஆண்டில் ஏற்கப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றது. அவ்வொப்பந்தத்தின்படி, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் (NPT) அல்லது விரிவான அணு ஆயுதச் சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) ஆகியவற்றில் இந்தியா கையெழுத்திடாத போதிலும், அமெரிக்காவுடன் அணுசக்தித் துறை சார்ந்த வர்த்தகத்தை மேற்கொள்வதற்கு பாதையமைத்து தரப்பட்டது.

ஷி ஜின்பிங்கின் தலைமையில் ஆற்றல் மிக்க நாடாக உருவெடுத்து வரும் சீனாவைச் சமாளிப்பதற்கான உத்தியில், இந்தியாவை ஒரு மிக இன்றியமையாத பங்காளியாக அமெரிக்கா கருதுகிறது. இப்பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த சீனா முனைப்புக் காட்டி வருகிறது. இதற்கு முன்னர் அமெரிக்கா 'ஹப் அண்ட் ஸ்போக்ஸ்' (அமெரிக்காவை மையமாகக் கொண்டு இருதரப்பு ஒப்பந்தங்கள் வாயிலாக நட்பு நாடுகள் பிணைக்கப்பட்டிருத்தல்) என்ற உத்தியைப் பின்பற்றியது. ஆயினும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ஆற்றலை எதிர்கொள்ள பழைய உத்திக்கு மாற்றாக தற்போது போதுமான அளவு, பொருளாதார வலிமையும், போர்த்தந்திர ஆற்றலையும் கொண்ட ஒரே நாடு இந்தியாதான் என அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.

சவால்கள்

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இராணுவ ஒத்துழைப்பிற்கான பயணத்தில், தொழில்நுட்பப் பகிர்வு என்பது ஒரு பிரதான சவாலாக எழுந்து நிற்கிறது. இந்தியாவின் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே அதிகளவில் ஆயுத உற்பத்தியை மேற்கொள்ள வேண்டுமென இந்தியா எதிர்ப்பார்க்கிறது. ஆகவே, அமெரிக்கா தன் தொழில்நுட்பத்தை வழங்கத் தயாராக இருக்க வேண்டிய சூழல் உருவாகிறது, இது எப்போதும் எளிதில் சாத்தியமாகும் காரியமன்று.

மேலும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்தும் ஆயுதங்களைக் கொள்முதல் செய்து வருகிறது. உதாரணமாக:

•ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

•இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தடைகள் விதிப்போம் என எச்சரித்த போதிலும், இந்தியா தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இந்தியாவின் தற்போதைய இராணுவத் தளவாடங்களில் ஏறத்தாழ அறுபது விழுக்காட்டளவிலானவை ரஷ்யத் தயாரிப்புகளே. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா புதிதாக இறக்குமதி செய்யும் ஆயுதங்களின் அளவு குறைந்திருந்த போதிலும் (2017ல் 62 சதவீதமாக இருந்தது 2022ல் 45 சதவீதமாகக் குறைந்துள்ளது), தனது பழைய இராணுவத் தளவாடங்களுக்கான தொழில்நுட்ப உதவி மற்றும் பராமரிப்புக்கு இந்தியா இன்னமும் ரஷ்யாவையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

பிரம்மோஸ் ஏவுகணைகளை ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கும் பணிகளிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

மற்றொரு முக்கியச் சிக்கலாகப் பாகிஸ்தான் விவகாரம் தலையெடுக்கிறது. அமெரிக்கா பாகிஸ்தானுக்கு எஃப்-16 ரகப் போர் விமானங்களை விற்றுள்ளதுடன், பாகிஸ்தான் அந்த விமானங்களை இந்தியாவுக்கு எதிரான போர்களிலும் பயன்படுத்தியுள்ளது. இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவ வேண்டிய நம்பிக்கைக்குப் பெரும் பின்னடைவாக அமைகிறது.

அடுத்தது என்ன

ஒன்று மிகத் தெளிவாகிறது — இரு நாடுகளிலும் புதிய அரசாங்கங்கள் பொறுப்பேற்றாலும் கூட, இந்தியா–அமெரிக்கா இராணுவ உறவுகள் தொடர்ந்து அதிகரிக்கும்.

மிகப் பெரிய, சிக்கலான முன்னெடுப்புகளில் இறங்குவதற்கு முன்னர், இரு நாடுகளும் முதலில் சிறிய, எளிதில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

இந்தியாவும், அமெரிக்காவும் எப்போதும் எல்லா விஷயங்களிலும் ஒருமித்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்காது. எடுத்துக்காட்டாக:

•பாகிஸ்தான் குறித்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மாறுபட்ட கண்ணோட்டங்கள் உள்ளன.

•ரஷ்யா தொடர்பாக அவர்களுக்கு வேறுபட்ட நிலைப்பாடுகளும் உள்ளன.

ஆனால், இரு நாடுகளும் நீண்டகால நோக்கிலிருந்து விலகக் கூடாது; சிறிய விஷயங்களில் தடுமாறி நிற்கக் கூடாது. மரம் நடுகிறோம் என்ற பெயரில் காட்டை இழந்துவிடக் கூடாது என்னும் பழமொழி கூறுவது போல், சிறிய வேறுபாடுகள் காரணமாகப் பரந்துபட்ட நோக்கத்தை மறந்துவிடக் கூடாது.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: The Diplomat 

 

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு