காஷ்மீரில் அமெரிக்க ராணுவக் குழு வருகை: குளிர் பிரதேச போர் தயாரிப்புகளுக்கு அதிகரிக்கும் முக்கியத்துவம்
தமிழில்: விஜயன்

அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த உயர்மட்ட இராணுவ குழு ஒன்று இந்த வாரம் ஜம்மு காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவத்தின் உயர் மலைப் போர் பயிற்சி பள்ளிக்கு (HAWS) வருகை புரிந்தது. இந்தியாவும் அமெரிக்காவும் தற்போது அதிகக் குளிரான, உயரமான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த முனைவதையே இந்த வருகை எடுத்துக்காட்டுகிறது. உலக அரசியல் சூழலிலும், பாதுகாப்புச் சூழலிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்குப் பின்னணியில் உள்ளன.
1947க்கு பின்னிருந்தே, பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளுக்கு அருகில் அமைந்துள்ள உயரமான மலைப் பகுதிகளில் இந்திய ராணுவம் செயல்பட்டு வருகிறது. ஆனால், உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LAC) அருகே 2020-இல் சீனாவுடன் ஏற்பட்ட எல்லை மோதலுக்குப் பின்னர், இத்தகைய சவாலான நிலப்பரப்புகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு செயல்பாடுகளில் இந்தியா மேலும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியது.
சமீபத்திய ஆண்டுகளில், இந்திய இராணுவம் ஏராளமான வீரர்களை மிகவும் உயரமான, கடுங்குளிர் மிகுந்த பகுதிகளில் நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்தி வருகிறது. முன்னர், இது போன்ற பகுதிகள் எப்போதும் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுவதோ அல்லது முழுமையாகப் காவல்காக்கப்பட்டதோ இல்லை. இப்போது, இந்தியா கூடுதல் தங்குமிடங்களைக் கட்டியமைத்து வருகிறது; விநியோகப் பாதைகளை மேம்படுத்துகிறது; தேவையான உபகரணங்களை உருவாக்கி வருகிறது. இராணுவம் வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதுடன், குளிர் காலநிலையில் மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து வருகிறது, மேலும் இது போன்ற சூழல்களுக்கு ஏற்ற சிறந்த உணவுகளையும், உடைகளையும் தயாரித்து வருகிறது.
அதேபோல, ஆர்க்டிக் போன்ற குளிரும் பனியும் நிறைந்த பகுதிகளில் அமெரிக்க இராணுவமும் இப்போது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா பெரும்பாலும் மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் போன்ற வெப்ப மண்டலப் பகுதிகளில் தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் இப்போது, ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையில் மிக நெருக்கமான, வலுவான உறவு ஏற்பட்டு வருவதோடு, ஆர்க்டிக் பிராந்தியத்தில் தங்கள் தலையீட்டையும் செல்வாக்கையும் அவர்கள் அதிகரிக்க முயல்வது என்பது அமெரிக்காவிற்கு தலைவலியாக மாறியிருக்கிறது. அவர்கள் அந்தப் பகுதியை வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தவும், இயற்கை வளங்களைச் சூறையாடவும், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டவும் முயன்று வருகின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், குளிர் பிரதேசங்களில் ராணுவப் பணிகளுக்காக அமெரிக்கா ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளதாக அமெரிக்க ராணுவ இணையதளம் ஒன்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. "காலநிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பகுதி வெப்பமடைவதால், அங்கு செல்வது வருங்காலத்தில் எளிதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மாறும். நமது பணிகளை அங்கே முடிக்க நாம் தயாராக இருக்க வேண்டும்," என அந்த இணையதளம் குறிப்பிட்டிருந்தது.
அமெரிக்க ராணுவக் குழுவின் வருகையின் போது, இரு தரப்பினரும் பயிற்சி முறைகள் குறித்தும், குளிர் பிரதேசங்களில் போர் புரிவது எப்படி என்றும், எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர் என்று சிம்லாவில் உள்ள இந்திய ராணுவத்தின் பயிற்சிப் பிரிவு(HAWS) தெரிவித்திருந்தது. இந்த வருகையின் ஒரு பகுதியாக, கள ராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
உயர் மலைப் போர் பயிற்சிப் பள்ளி (HAWS) டிசம்பர் 1948 இல் தொடங்கப்பட்டது. பனி மற்றும் குளிர் காலநிலைகளில் பணியாற்ற வீரர்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மலைப் போர் பயிற்சிப் படிப்பு (Mountain Warfare Course) மற்றும் குளிர்காலப் போர் பயிற்சிப் படிப்பு (Winter Warfare Course) என இங்கு இரண்டு முக்கிய பயிற்சிப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. உயரமான, பனி நிறைந்த பகுதிகளில் எவ்வாறு உயிர் தப்பிப் பிழைப்பது, நகர்வது, போர் புரிவது என்பது மட்டுமல்லாது எதிரிகளின் உளவு நடவடிக்கைகளை எவ்வாறு முறியடிப்பது என்பன பற்றியும் இப்படிப்புகள் வாயிலாக வீரர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன.
சியாச்சின் பனியாற்றுப் பகுதிகள் அல்லது பிற உயர்மட்ட இராணுவ நிலைகளில் பணியமர்த்தப்படும் வீரர்கள், இந்தக் கட்டாயப் பயிற்சிகளை நிறைவு செய்ய வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நட்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்தப் பயிற்சியைப் பெறுவதற்காக HAWS-க்கு வருகின்றனர். பனிச்சறுக்கு (ஸ்கீயிங்), பனி பலகை விளையாட்டு (ஸ்னோபோர்டிங்) போன்ற குளிர்கால விளையாட்டுக்களிலும் பங்குபெறுவதற்கு இந்தப் பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதே நோக்கத்திற்காக அமெரிக்க இராணுவமும் ஒரு பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறது. அதற்கு இராணுவ மலைப் போர் பயிற்சி பள்ளி (AMWS) என்று பெயர். வெர்மான்ட் மாகாணத்திலுள்ள ஜெரிகோ மலைகளில் இப்பள்ளி அமைந்துள்ளது. குளிர்கால மற்றும் மலைப்பகுதிச் சூழல்களில் பயிற்சி பெறுவதற்காக அடிப்படைக் கல்வியும், உயர்நிலை கல்வியும் வழங்கப்படுகிறது.
11வது வான்வழிப் பிரிவு (11th Airborne Division) என்பது அமெரிக்க இராணுவத்தில் குளிர்காலச் சூழல்களில் போரிடுவதற்கான படைப் பிரிவு ஆகும். மிகக் கடுமையானக் குளிர் காலநிலையைக் கொண்டுள்ள அலாஸ்காவில் இப்படைப்பிரிவு தளம் அமைந்துள்ளது. புவியியல் ரீதியாக நோக்கும் பொழுது, அலாஸ்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில்கூட மிக நெருக்கமான எல்லைகள் உள்ளன. இந்தப் படைப்பிரிவு முதலில் 1943 முதல் 1958 வரை வெவ்வேறு பணிகளுக்காக செயல்பாட்டில் இருந்தது. பின்னர், 2022 ஆம் ஆண்டில், குளிர்கால போர்த் தயாரிப்புகளுக்காக இப்பள்ளி மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளது.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: டிரிப்பியூன் நியூஸ் சர்வீஸ்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு