பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படையினர் ஆதிக்கம் - இந்தியா சமாளிக்குமா?
பிரவீன் சாவ்னி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனப் படையினர் ஆதிக்கம் பெறுவது காஷ்மீரில் இந்தியாவுக்கான தடைகளை மேலும் அதிகரிக்கிறது
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியில் சீனப் படையினர் நிலை கொண்டிருப்பது, காஷ்மீர் விவகாரத்தை இந்தியா கையாள்வதை மிகவும் சிக்கலுக்குரியதாக மாற்றியுள்ளது. இந்தியாவுக்கு வெளியிலிருந்து எழும் மிகப்பெரிய அச்சுறுத்தல் பாகிஸ்தானிடமிருந்தோ அல்லது சீனாவிடமிருந்தோ வருவதில்லை; மாறாக, புது தில்லியிலுள்ள இந்திய அரசாங்கத்தின் சொந்தக் கொள்கைகளாலேயே உருவாகிறது எனத் தோன்றுகிறது. சீனாவுடனான நேரடி மோதலைத் தவிர்ப்பது என்ற அபாயகரமான போக்கிலிருந்து இக்கொள்கைகள் வெளிப்படுகிறது. பாகிஸ்தானில் வலுவான உள்ளூர் தொடர்பிற்கான வலைபின்னலைக் கொண்டுள்ள இந்திய ராணுவமும், அமெரிக்க உளவுத்துறையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) சீனப் படைகளின் இருப்பை திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளன. POK பகுதியில் ஏறத்தாழ 11,000 சீனப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. வடக்கு பிராந்திய இராணுவதளத்தின் தலைவரும், போர் முனைகளில் மிகுந்த அனுபவம் வாய்ந்த அதிகாரியுமான லெப்டினன்ட் ஜெனரல் கே.டி. பர்நாயக், அண்மையில் ஜம்முவில் நடந்த ஒரு சந்திப்பில், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் நெருங்கிய ஒத்துழைப்பு குறித்து பேசிய போது ஏராளமான பிரச்சனைகள் இருப்பதை சுட்டிக்காட்டினார். காஷ்மீரில் இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LC) அருகில் சீனப் படையினர் நிலை கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விரிவாக ஆராய வேண்டும் என்று வல்லுநர்களிடம் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து, காஷ்மீர் மற்றும் சீனா குறித்த ஆழமான புலமை கொண்ட ராணுவ தலைமை தளபதி ஜெனரல் வி.கே. சிங், லடாக் பொறுப்பிலுள்ள 14வது படைப்பிரிவு (கார்ப்ஸ்) முகாமிட்டுள்ள லேஹ் நகருக்கு விரைந்து சென்று, அங்கு களத் தளபதிகளுடன் நேரடியாகக் கலந்தாலோசனை நடத்தினார். POK பகுதியில் நிலைகொண்டுள்ள சீனப் படையினர் குறித்த ராணுவத்தின் ஆழ்ந்த கவலைகளை அவர் அரசாங்கத் தரப்பிடம் நிச்சயம் எடுத்துரைத்திருப்பார் என்பது புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால், அரசின் உயர் மட்டங்களில் இவற்றைக் கவனத்தில் கொள்வோர் எவரேனும் இருக்கிறார்களா என்பதே இங்கு எழக்கூடிய முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
தேசிய பாதுகாப்பு சார்ந்த இதழான 'ஃபோர்ஸ்', 2008 ஆம் ஆண்டு முதல், இந்த விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் கொண்டுள்ள கண்ணோட்டங்களை அராய்ந்து வந்துள்ளது. இந்தியாவின் முப்படைப் பிரிவுகளான தரைப்படை, கடற்படை, மற்றும் விமானப்படை, தாங்கள் ஒருங்கிணைப்புடன் செயல்படுவதாகக் கூறிக்கொண்டாலும், சீன இராணுவத்திடம் இருந்து எழும் அச்சுறுத்தல் குறித்து வெவ்வேறுபட்ட பார்வைகளைக் கொண்டுள்ளன.
• இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படையின் வளர்ந்து வரும் ஆதிக்கம் குறித்து இந்தியக் கடற்படை கவலைப்படுகிறது.
• சீன விமானப்படையின் மேம்பட்ட தொழில்நுட்பத் திறன்கள் மீது இந்திய விமானப்படை கவனம் செலுத்துகிறது.
ஆனால், இவ்விரு படைப் பிரிவுகளுமே, சீனாவின் முதன்மையான அச்சுறுத்தல் என்பது சர்ச்சைக்குரிய நில எல்லையிலிருந்தும்; சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடும் (LAC), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள (POK) பாகிஸ்தானுடனான கட்டுப்பாட்டுக் கோடும் (LC) ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து வரும் நிலையில், அங்கு இரு நாடுகளும் தற்போது தீவிரமாகச் ஒருங்கிணைந்து செயல்பட்டு வரும் எதார்த்தத்திலிருந்தும்தான் தோன்றுகிறது என்பதை முழுமையாக உணர்ந்து உள்வாங்கவில்லை.
முப்படைகளின் தலைவர்களையும் உள்ளடக்கிய தலைமைப் படைத் தளபதிகள் குழு, சீன அச்சுறுத்தல் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம் இதுவரை ஒரு அறிக்கையையும் அளித்ததில்லை. அதற்குப் பதிலாக, ஒவ்வொரு படைப் பிரிவும் தத்தம் தனித்தனி அறிக்கைகளையே சமர்ப்பித்துள்ளன. இந்த விவகாரம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அல்லது பிரதமரின் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவுமில்லை. குறிப்பிடத்தக்க வகையில், அத்தகைய ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஒருபோதும் அவர்கள் கேட்டதுமில்லை.
2008 நவம்பர் 26 அன்று நிகழ்ந்த மும்பைத் தாக்குதல்களுக்குப் பிறகு, நவம்பர் 29 அன்று பிரதமர் மன்மோகன் சிங் முப்படைத் தளபதிகளைச் சந்தித்து, என்ன மாதிரியான இராணுவ நடவடிக்கைகளை எடுப்பது, பாகிஸ்தானுடனான போர் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்துப் பேசியபோது, அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமா, மோதல் எவ்வழியில் இருந்தாலும் அதில் சீனாவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற இரண்டு முக்கியமான அம்சங்கள் அப்போது விவாதத்திற்கு வரவேயில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில் அப்போதைய பிரதமர் தயக்கம் காட்டினார்.
நிலத்தின் வழியாக சீனாவின் அச்சுறுத்தல் குறித்த இந்திய இராணுவத்தின் இடையறாத எச்சரிக்கைகளே, பாதுகாப்பு அமைச்சகம் இவ்விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கவனத்தில் கொள்ளச் செய்தன. 2010ஆம் ஆண்டில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி ஓர் ஆணையை வெளியிட்டார். இருமுனைப் போருக்கு, அதாவது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் ஒரே சமயத்தில் எதிர்கொள்ளும் நிலைக்கு இராணுவம் தயாராக வேண்டும் என அந்த ஆணையில் வலியுறுத்தியிருந்தார். இது, முன்னர் பாகிஸ்தானை மட்டுமே மையப்படுத்தியிருந்த, மேலும் சீனாவுடனான பிரச்சனைகளை இராஜதந்திர வழிகளில் தீர்க்கலாம் என்று கருதியிருந்த முந்தைய ஆணைகளிலிருந்து ஏற்பட்ட ஒரு முக்கியமான மாற்றம் ஆகும். ஆண்டனியின் பரிந்துரையை ஏற்று, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு (CCS), புதிய இராணுவப் பிரிவுகளைச் சேர்க்க அனுமதி அளித்தது. இது 1983ஆம் ஆண்டிற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முதல் பெரிய இராணுவ விரிவாக்கம் ஆகும். 11வது மற்றும் 12வது பாதுகாப்புத் திட்டங்களின்படி, 2017ஆம் ஆண்டிற்குள் நான்கு படைப்பிரிவுகள் (சுமார் 50,000 வீரர்கள்) சேர்க்கப்படுவர் எனத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த இருமுனைப் போர் உத்தி ஏன் அவசியமானது என்பதை கூட்டாக ஆய்வு செய்வதற்கு பாதுகாப்பு துறை அமைச்சகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை.
இது கொள்கை வகுக்கும் மட்டத்தில் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) சீனப் படைகள் நிலைகொண்டிருப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமது அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகத்திடம் இதுகுறித்த விவரங்களைக் கோரியுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்தார். 2010ம் ஆண்டு செப்டம்பரில் சீனத் துணை அமைச்சர் ஜாங் ஜிஜும்முடன் இவ்விவகாரம் பற்றி சீனாவுக்கான அப்போதைய இந்தியத் தூதர் எஸ். ஜெய்சங்கர் உரையாடிய போதும், 2010 நவம்பரில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ டெல்லி வருகையின்போது இதைப் பற்றி பிரதமர் மன்மோகன் சிங் கலந்துரையாடியதும், அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தமது கவலைகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்திய நிகழ்வுகளுக்குப் பின்னரும் இந்த குழப்பமான நிலை தொடரவே செய்தது. உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) நெடுகே இந்திய எல்லைக்குள் சீனப் படைகளின் அத்துமீறல்கள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ராவ் அவற்றைச் சிறிய அளவிலான அத்துமீறல்கள் என்றும், LAC எங்கு உள்ளது என்பது குறித்த மாறுபட்ட புரிதல்கள் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறினார். ஆனால் இது முழு உண்மையல்ல. காரணம், இந்திய ரோந்துப் படைகள், தாங்கள் கருதும் LAC-க்கு அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழுவினராலும்(CSS), வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனும் சேர்ந்துதான் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) தீர்மானிக்கப்படுகிறது. இதில் இராணுவத்தின் பங்கு மிக மிகக் குறைவுதான். மேலும், இந்திய நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீர் மக்களுக்கு, ஸ்டேபிள்(Staple) செய்யப்பட்ட தனி விசாக்கள் வழங்கும் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்ய சீனா ஒப்புக்கொண்டிருப்பதை ராவ் அன்று பெருமிதத்துடன் தெரிவித்தார். நடந்த சம்பவங்களைக் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி நோக்கும் பொழுது, எந்தளவிற்கு இந்தியா மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறது என்பது புலப்படும்.
காஷ்மீரில் வசிக்கும் இந்தியக் குடிமக்களுக்குச் சீனா, ஏறத்தாழ 2007-இன் பிற்பகுதியில் இருந்தே தனி விசாக்களை வழங்கத் தொடங்கியது. இந்த விவகாரம் மெல்ல மெல்ல ஊடகங்களின் கவனத்தைப் பெறத் தொடங்கியிருந்த வேளையில், 2010-இல் சீனா ஒரு முக்கிய நகர்வை மேற்கொண்டது. இந்தியாவின் சர்ச்சைக்குரிய எல்லைக் கோட்டின் (LAC) நீளம் 4,000 கி.மீ அல்ல, 2,000 கி.மீதான் என்று அறிவித்தது. இதன் மூலம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே முன்னர் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என்பது பாகிஸ்தானின் ஒரு ஒருங்கிணைந்த பகுதிதான் எனச் சீனா பகிரங்கமாக அறிவித்தது. இந்த வியூக மாற்றத்திற்குப் பின்னால் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் பர்வேஸ் கயானி இருந்தார். அவர்தான் காஷ்மீர் விவகாரத்தில் சீனாவை ஒரு பிரதான சக்தியாகக் களமிறக்கத் தீர்மானித்தார். முன்னாள் பாகிஸ்தான் தலைவர் பர்வேஸ் முஷாரப்பின் நான்கு அம்சக் காஷ்மீர் திட்டத்தின் நீட்சியாகப் பார்க்கப்பட்ட இந்த நகர்வு, மாறிவரும் உலக யதார்த்தங்களுக்கு ஏற்பச் செய்யப்பட்ட ஒரு சாமர்த்தியமான வியூகமாகும்.
அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் நிலவிய நிலையற்ற தன்மை, அமெரிக்காவும் இந்தியாவும் நெருங்கி வரும் போக்கு, பயங்கரவாதத்திற்கான பாகிஸ்தானின் தொடர் ஆதரவு ஆகியவற்றை மனதிற்கொண்டு, கயானி, தனது நம்பகமான கூட்டாளியான சீனாவை, காஷ்மீரிலிருந்து கராச்சி வரையிலான வர்த்தகப் பாதையை அமைப்பதற்காக POK பகுதிக்குள் நுழைய அழைப்பு விடுத்தார். காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தானுக்குச் சாதகமாகத் தீர்த்து வைப்பதில், அமெரிக்காவை விடச் சீனா மிகவும் நம்பகமான துணையாக இருக்கும் என கயானி அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்.
இந்த வியூக மாற்றங்களைக் கூர்ந்து கவனித்த, காஷ்மீரின் பிரபல பிரிவினைவாதத் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபாரூக், டிசம்பர் 2009-இல் ஆற்றிய தமது சொற்பொழிவின் போது, காஷ்மீர் விவகாரத்தில் சீனா தலையிட வேண்டும் எனப் பகிரங்கமாக வலியுறுத்திய முதல் நபராக அறியப்படுகிறார். சீனக் குழு ஒன்றின் அழைப்பை ஏற்று (இது நிச்சயமாகப் பெய்ஜிங்கின் அங்கீகாரத்துடனேயே நிகழ்ந்திருக்க வேண்டும்) மிர்வைஸ் சீனா செல்ல முயன்றபோது, இந்தியா அப்பயணத்தைத் தடுத்து நிறுத்தியது. சீனா செல்வதற்கு முறையான விசா கட்டாயமென்றும், தனி விசாக்கள் எக்காலத்திலும் ஏற்கப்படாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தது.
குறைக்கப்பட்ட LAC எல்லையை இந்தியா ஏற்றுக்கொண்டதன் மூலம் சீனா திருப்தியடைந்திருப்பதால்தான், தனது தனி விசா கொள்கை விரைவில் கைவிடப்படுவது பற்றி மறுபரிசீலினை செய்வதாக அறிவித்துள்ளது என்பது அப்பட்டமாக தெரிகிறது.
மிர்வைஸின் கருத்தோடு ஒத்துப் போகும் காஷ்மீர் பிரிவினைவாதிகள் ஏராளம். இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கும் முக்கியப் புள்ளிகளில் ஒருவராக அனைத்து ஜம்மு காஷ்மீர் முஸ்லிம் கட்சியின் தலைவரும், ஹுரியத் கூட்டமைப்பின் உறுப்பினருமான பேராசிரியர் அப்துல் கனி பட் இருந்து வருகிறார். அண்மையில் நான் காஷ்மீர் சென்றிருந்தபோது, பேராசிரியரைச் சந்தித்தேன். அவரது பரந்துபட்ட அறிவைக் கண்டு மலைத்தேன்; இவ்வளவு காலம் இவரைச் சந்திக்கத் தவறிவிட்டேனே என்ற எண்ணம் மனதில் எழுந்தது. பேராசிரியர் பட் அவர்கள், காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணவும், அமைதியை நிலைநாட்டவும், சீனா உள்ளிட்ட சர்வதேச சக்திகளின் கூட்டு முயற்சி அவசியம் என அழுத்தமாகக் கூறினார். "காஷ்மீர் விவகாரத்தில் சீனா களமிறங்கினால், பதட்டங்கள் நிச்சயம் குறையும்" என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். இந்தப் பதட்டங்கள் யாருக்கிடையே எழுகின்றன என்று நான் கேட்டபோது, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஆழமான நட்பு இருப்பதாகவும், ஆனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் போட்டி மனப்பான்மை நிலவுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். எனவே, இந்த மூன்று நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்றுவது காலத்தின் கட்டாயம் என்றார். நேரடியாக அவர் கூறவில்லை என்றாலும், காஷ்மீர் சிக்கலுக்கான தீர்வைக் அடைவதில் அமெரிக்காவின் பங்கை அவர் குறைத்து மதிப்பிட்டதன் மூலம், அமெரிக்காவை ஒதுக்கி வைப்பதே கயானியின் விருப்பமாக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
2009 முதல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் (PoK), முன்னர் வடக்கு பகுதிகள் என அறியப்பட்ட கில்கிட்-பால்டிஸ்தான் பிரதேசங்களிலும் தனது நடவடிக்கைகளை மிகப்பெரிய அளவில் சீனா அதிகரித்துள்ளது. அங்கே, அலைபேசி கோபுரங்கள், மின் நிலையங்கள், நெடுஞ்சாலைகளோடு தொடர்வண்டிப் பாதைகள் என 17 திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, அவை அதிவேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. FORCE ஊடக குழுவினர், தித்வாலுக்கு(Tithwal) அருகாமையில் அமைந்திருக்கும் நீலம் நதிப் பள்ளத்தாக்கின் கீழ்ப் பகுதிச் சாலையில் (LNVR) சீனத் தொழிலாளர்கள் இருப்பதை நேரடியாகக் கண்டனர். இந்தச் சாலை, முசாபராபாத்திலிருந்து கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LC) அண்மையில் உள்ள வடக்கு PoK பிரதேசங்களை இணைக்கும் முக்கியமான பாதையாகும். கீழ் நீலப் பள்ளத்தாக்குச் சாலையை (LNVR) இருவழி நெடுஞ்சாலையாக விரிவாக்குவதும், சுமார் 40 கி.மீ. வடக்கில் அமைந்துள்ள காரகோரம் நெடுஞ்சாலையை எந்தக் காலநிலையையும் தாங்கும் வகையில் மேம்படுத்துவதும் இவர்களது இலக்குகளாக உள்ளன. மேலும், இந்தியா கட்டிவரும் 330 மெகாவாட் கிஷன் கங்கா நீர்மின் திட்டத்திற்கு போட்டியாக, 969 மெகாவாட் நீலம்-ஜீலம் நீர்மின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கச் சீனப் பொறியாளர்கள் இரவும் பகலும் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பணிகளில் சிவிலியன் தொழிலாளர்களே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனச் சீனா தெரிவிக்கும் அதே வேளையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனது வழக்கமான துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதையும் சீனா வலுவாக மறுக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனச் சிப்பாய்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்ற செய்திகள் உண்மையற்றவையாகவே இருந்தாலும்கூட, அங்கே தனது படை வீரர்களை நிறுத்துவதற்கான அவசியம் உண்மையில் சீனாவுக்கு ஏன் வரப் போகிறது? சிவிலியன் உடையில் இருக்கும் சீனப் பணியாளர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியமான இராணுவ நடவடிக்கைகளுக்கான நிலப்பரப்பை ஆய்வு செய்வது கூறுவதே அவர்களுக்கு போதுமானதாக இராதா என்ன?
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) மற்றும் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதிகளில் சீனப் பணியாளர்கள் தொடர்ச்சியாக நிலைக்கொண்டு வருவது, இந்தியாவின் ராணுவ வியூகங்களில், குறிப்பாக இருமுனைப் போர்ச் சூழலில், தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, இந்தியாவின் தற்காப்பு வாய்ப்புகளையும் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இந்திய ராணுவத்தின் மதிப்பீட்டின்படி, சீனா நேரடியாக இந்தியாவுடன் போர் தொடுப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு. ஆயினும், அவ்வாறான ஒரு சூழல் நிகழ்ந்தால், பாகிஸ்தான் மற்றொரு முனையைத் தொடங்கி, இருமுனைப் போரை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதைவிட அதிக சாத்தியக்கூறு வாய்ந்த ஒரு நிலை என்னவெனில், மும்பைத் தாக்குதல் போன்ற மற்றொரு பயங்கரவாத நிகழ்வு அரங்கேறுவதுதான். அத்தகையத் தாக்குதல் பொதுமக்களிடையே இருந்து கடுமையான அழுத்தம் ஏற்படுத்தும் போது, இந்தியா ஒரு கட்டாய இராணுவ பதிலடியை மேற்கொள்ளத் தூண்டுவதோடு, பாகிஸ்தானுடனான நேரடிப் போராக மாறவும் கூடும். அத்தகையத் தாக்குதலுக்கும், அதனைத் தொடர்ந்த இந்தியாவின் ராணுவத் தயார்நிலைக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதி (LAC) நெடுகிலும் சீனா தனது ஆக்ரோஷமான நகர்வுகளை மேற்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது வரையறுக்கப்பட்ட அளவிலேயே இருக்கும் என உயர்நிலை ராணுவ அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்; ஏனெனில், சீனா மற்றொரு போர்முனையை துவக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இச்சூழ்நிலை, LAC-யில் இருந்து LOC பகுதி வரை, பாகிஸ்தானை எதிர்கொள்வதற்காக, மலைப்பகுதியில் போரிடுவதற்கு பயிற்சி பெற்ற மூன்று படைப்பிரிவுகளை நகர்த்துவதற்கு இந்திய ராணுவத்திற்கு வாய்ப்பளிக்கும். 2017 ஆம் ஆண்டளவில், சீனாவை எதிர்கொள்ள 2009 இல் ஒப்புதலளிக்கப்பட்ட நான்கு புதிய படைப்பிரிவுகளைச் சேர்த்த பின்னர், இந்திய ராணுவம் இந்த மூன்று படைப்பிரிவுகளையும் எந்தவித தயக்கமுமின்றி அணிதிரட்ட முடியும்; ஏனெனில், புதிதாகச் சேர்க்கப்பட்ட படைகள் சீனாவின் நகர்வுகளைச் சமாளிக்கும் திறன் பெற்றிருக்கின்றன.
ஆயினும், பொதுவாகக் கவனத்தில் கொள்ளப்படாத வேறொரு போர்ச்சூழல் உருவாவதற்கான வாய்ப்புகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு சிறு போர் என்றால் மூன்று வாரங்களுக்குள்ளாக ஐந்து முதல் ஆறு படைப்பிரிவுகளையும், நடுத்தரப் போர் என்றால் நான்கு வாரங்களுக்குள்ளாக எட்டு முதல் பத்து படைப்பிரிவுகளையும், அல்லது ஒரு பெரும் மோதல் நிகழுமெனில் (இதற்கு அதிக காலம் பிடிக்கும்) சுமார் 32 படைப்பிரிவுகள் வரையிலும் சீனாவின் அதிரடி தாக்குதல் படைகளால் (RRFs) விரைவாக அணிதிரட்ட முடியும் என்று இந்திய ராணுவம் மதிப்பீடு வைத்துள்ளது. லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை சுமார் 4,000 கி.மீ நீளத்துக்குப் விரிந்திருக்கக்கூடிய LAC-ஐத் தன்னகத்தே கொண்டுள்ள திபெத் தன்னாட்சிப் பகுதியில்தான் (TAR) இத்தகைய அணிதிரட்டல் நிகழக்கூடிய களமாக விளங்குகிறது. இத்தகையப் போர் நடவடிக்கைகளுக்கென இந்திய இராணுவம் நான்கு வெவ்வேறு கட்டளைப் பிரிவுகளைப் பயன்படுத்துவதற்கு மாறாக திபெத் தன்னாட்சிப் பகுதியில் சீனா ஒரேயொரு தளபதியின் கீழ் ஒற்றை கட்டளைப் பிரிவைப் பயன்படுத்துகிறது. POK பகுதியில் ஏற்கெனவே வலுவாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து வானிலைக்கும் உகந்த, இருவழிச் சாலைகள் போன்ற தேவையான உட்கட்டமைப்பும், அந்தப் பகுதியின் புவியியல் குறித்த சீனாவின் நுட்பமான அறிவையும் கருத்தில் கொள்ளும்போது, இராணுவச் செயற்பாடுகளுக்கு திபெத் தன்னாட்சிப் பகுதியின் (TAR) ஓர் அங்கமாக POK மாறுவதற்காக சாத்தியம் உண்டா? என்ற கேள்வி எழுகிறது.
ஒரு மும்பைத் தாக்குதல் போன்ற ஒன்றை பாகிஸ்தான் அரங்கேற்றி, அதற்குப் பதிலடியாக இந்திய இராணுவம் செயல்படுகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியில் பணிபுரியும் சீனத் தொழிலாளர்கள் இந்திய இராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்களிலோ அல்லது வான்வழித் தாக்குதல்களிலோ அகப்பட்டு உயிரிழக்கும் ஒரு சூழலைக் கற்பனை செய்து பாருங்கள். சீனத் தொழிலாளர்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால், நிச்சயமாகச் தற்காப்பு என்ற பெயரில் சீனா பதிலடி கொடுக்கும். இது இந்திய இராணுவம் எதிர்நோக்கும் வரையறுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதோடு, உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LAC) எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LC) இந்தியப் படைகள் நகர்வதையும் இது தடுத்து நிறுத்திவிடும். அதோடு, அனைத்து விநியோகங்களுக்கும் முழுமையாக வான்வழி போக்குவரத்தையே சார்ந்திருக்கும் சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படையினர், இரு முனைகளிலிருந்தும் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும். இது மிகவும் கடுமையான, அழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு நெருக்கடி நிலையை உருவாக்கும். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (LC) அருகில் சீனப் படைகள் அதிக அளவில் குவிந்திருக்கும் நிலையில், இந்தியாவுக்குக் கிடைக்கும் 'குறைந்தபட்ச வாய்ப்புகள்' அல்லது 'வழிமுறைகள்' குறித்து வடக்கு இராணுவத் தளபதி கவலை தெரிவித்தபோது, இந்தச் சூழலையே அவர் குறிப்பிட்டிருக்கக்கூடும். இதனை விடவும் மோசமான பின்விளைவாக, போர் நடவடிக்கைகள் ஓய்ந்த பிறகு, காஷ்மீர்ப் பிரச்சனைக்கான தீர்வில் சீனா ஒரு வலிமையான, முக்கியப் சக்தியாக உயர்வதற்கும் வாய்ப்புள்ளது. இதற்கான ஆரம்பக் குறியீடுகள் தற்போதே பகிரங்கமாகத் தென்படத் தொடங்கிவிட்டன.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://forceindia.net/bottomline/red-wall/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு