அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த இந்திய அரசு மறுதலிப்பது ஏன்?

சிவப்ரியன் செம்பியன்

அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த இந்திய அரசு மறுதலிப்பது ஏன்?

அந்நிய நாடான பாகிஸ்தானுடன் போர்நிறுத்தம் செய்ய முடிந்த அரசால் சொந்த நாட்டின் மக்களான பழங்குடிகளுடன், மாவோயிஸ்டுகளுடன் போர் நிறுத்தம் செய்ய முடியவில்லையே ஏன்? 

இந்திய ஒன்றிய அரசு, குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மார்ச் 2026க்குள் இந்தியாவை "மாவோயிஸ்ட் இல்லாத நிலமாக" மாற்றுவதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, அதற்கு எல்லையோ, விதியோ, வரையறையோ இல்லாத வழியில் பழங்குடிகள் மீது போர் தொடுத்து வருகிறார். ஆனால், போர் வெறியர்கள் என்றும் ஆயுத நேசர்கள் என்றும் ஆளும் வர்க்கத்தால் வர்ணிக்கப்பட்ட மாவோயிஸ்டுகள் ஆயுத வழி தீர்வுக்கு பதிலாக அமைதி வழியில் தீர்வு காண வேண்டுமென எல்லா அரங்குகளிலும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்த கொடிய யுத்த அறிவிப்பை திருவாளர் அமித்ஷா வெளியிடுவதற்கு முன்னரே சரியாக ஓராண்டிற்கு முன்பு அதாவது 2025 மார்ச் 28 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மத்திய குழு, "எப்போதும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக" இருப்பதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரு "சாதகமான சூழ்நிலையை" உருவாக்க வேண்டும் என்றும் இன்று பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காக அறிவித்திருந்தது. அத்துடன்  "ஆபரேஷன் காகர்" என்ற பெயரில் நடைபெறும் மனித வேட்டையை, இனப்படுகொலையை நிறுத்த படுகொலையை நிறுத்தவும், ஆயுதப்படைகளின் புதிய முகாம்களை அமைப்பதை நிறுத்தி வைக்கவும் அரசாங்கத்தை அக்கட்சி தனது செய்தித் தொடர்பாளர் அபய் வழியே வலியுறுத்தியது. 

இதைத் தொடர்ந்து, கட்சியின் வடமேற்கு துணை மண்டல பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் ரூபேஷ், ஏப்ரல் 8, 17 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மூன்று அறிக்கைகளை வெளியிட்டார். கூடுதலாக பஸ்தார் டாக்கீஸ் (Bastar Talkies) என்ற யூடியூப் சேனலுக்கு ஒரு மணி நேர நேர்காணலையும் வழங்கினார். அது பேசும் பொருளானது. 

 

இந்நிலையில்தான், 2025 மே 10 அன்று அபய் என்ற பெயரில் மற்றொரு அறிக்கை முன்னணி இதழ்களில், பத்திரிகைகளில் வெளிவந்தது. ஆனால், பல உள் முரண்பாடுகள் காரணமாக அதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த அனைத்து அறிக்கைகளின் சாராம்சம் போர் நிறுத்தத்திற்கான அழைப்பு விடுக்கும் வகையில் இருந்தன. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் எண்ணத்தையே வெளிப்படுத்தின. இவை சர்வதேச அளவில் உள்ள இயக்கங்களின் கவனத்தை பெற்றன.  

மறுபுறம், பாதுகாப்புப்படையைச் சேர்ந்தவர்களுக்கு திருவாளர் அமித் ஷாவின் உத்தரவு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட வேண்டும் என்பது போல் தெரிகிறது. இருப்பினும், அவர் மாவோயிஸ்டுகளை "சகோதரர்கள்" என்று குறிப்பிட்டு அவர்களை சரணடைய "கோரினார்". சத்தீஸ்கரின் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான விஜய் சர்மாவும், போர் நிறுத்தம் அல்லது அமைதிப் பேச்சுவார்த்தை பற்றி எதுவும் குறிப்பிடாமல் மாவோயிஸ்டுகள் சரணடைய வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொண்டார். 

சத்தீஸ்கர் & தெலுங்கானா எல்லையையொட்டிய கர்ரேகுட்டலு (அதன் பொருள் கருப்பு மலைத்தொடர்) என்று அழைக்கப்படும் அடர்ந்த காடுகள் மற்றும் கடினமான மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்ட 300 சதுர கி.மீ., பரப்பளவை பாதுகாப்புப் படைகள் சுற்றி வளைத்தன. 24,000 எண்ணிக்கையிலான (அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள், பல்வேறு ஆதாரங்களிலிருந்து) பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டனர். அங்கு முகாம்களை அமைத்து, இராணுவ சோதனை & படைத்துறை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  

உயர் தொழில்நுட்ப ட்ரோன் கண்காணிப்பு, குண்டுவீச்சு மற்றும் ஹெலிகாப்டர்களில் இருந்து இயந்திர துப்பாக்கிச் சூடு, மற்றும் எல்லையில் உள்ள 30 மலைகளில் இரண்டு அல்லது மூன்று மலைகளைக் கைப்பற்றி, அங்கு செங்கொடியை கீழிறக்கி  மூவர்ணக் கொடியை ஏற்றியது போன்றவற்றைக் கொண்ட நடவடிக்கையை மேற்கொண்டனர். மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில், குறைந்தபட்சம் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் பார்வையில், 9,000 மத்தியப் படைகள் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டதன் மூலம் இந்த படைத்துறை நடவடிக்கை அங்கு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. தற்போது சத்தீஸ்கர் மலைப் பகுதிகளில் படைகள் தொடர்ந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

மே 17 அன்று பத்திரிகை தகவல் பணியகம் (Press Information Bureau) வெளியிட்ட கருத்தின்படி, “…நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றான சத்தீஸ்கர் - தெலுங்கானா எல்லையில் இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ஒரு பெரிய திருப்புமுனையை அடைந்தனர். ஏப்ரல் 21 முதல் மே 11 வரை, மாவோயிஸ்ட் குழுக்களின் கோட்டையாக அறியப்பட்ட கர்ரேகுட்டலு மலை (KGH) பகுதியில் ஒரு பெரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. CRPF , சிறப்புப் பணிக்குழு (STF), மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG) மற்றும் மாநில காவல்துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக 16 பெண்கள் உட்பட 31 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் பணியாளர்களில் யாருக்கும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை…” என தெரியவந்தது. 

இருப்பினும், வெயிலின் தாக்கம், கடினமான நிலப்பரப்பில் ஏற்பட்ட சோர்வு காரணமாக ஏராளமான பாதுகாப்புப் படையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அரசு தரப்பு மறைத்தது. தெலுங்கானாவின் உயரடுக்கு காவல் படையான கிரேஹவுண்ட்ஸைச் சேர்ந்த மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதைக் குறித்தும் தகவல் வெளியிடவில்லை. ஆரம்ப அறிக்கைகள் IED குண்டுவெடிப்பு அல்லது மாவோயிஸ்ட் துப்பாக்கிச் சூட்டில் பணியாளர்கள் இறந்ததாகக் கூறினாலும், ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் அதன் விளைவாக மத்திய மற்றும் மாநிலப் படைகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சண்டையே அவர்களின் இறப்புகளுக்கு உண்மையான காரணங்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் பின்னர் செய்தி வெளியிட்டன. 

ஆதிவாசிகளின் குடியிருப்புகள், வாழ்விடங்கள் மீதான கடுமையான ஷெல் தாக்குதல்கள், பாரிய அளவிலான உயிரிழப்புகள், நீடித்த அச்சங்களுக்கு மத்தியில், தெலங்கானா எல்லையில் தொடரும் இராணுவ நடவடிக்கையை போர்நிறுத்தம் மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கைகள் வலுவடைந்தன. 

போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி  தெலங்கானா சிவில் லிபர்ட்டிஸ் கமிட்டி, ஆதிவாசி ஹக்குலா போரட்டா சங்கிபவ சமிதி மற்றும் நிர்பந்த வியாதிரேக வேதிகா உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்தன.  ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கோரிக்கை விளக்கக் கூட்டங்களை ஏற்பாடு செய்து, முன்னெடுத்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அத்துடன், ஓய்வுபெற்ற நீதிபதி சந்திர குமார் தலைமையில், அமைதி பேச்சுவார்த்தை குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. சமூக ஊடக தளங்களில் எழுந்த பகுப்பாய்வு & அறிவுத்தள விவாதங்கள், தெலுங்கு ஊடகங்களில் செய்திகளாகின. போராடும் மனித உரிமை அமைப்புகளின் கருத்துக்கள் மக்களிடையே பிரபலமடைந்தன.  

பேரா. ஜி. ஹரகோபால் தலைமையிலான குழு, தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து, போர் நிறுத்தத்தையும், மாநில அளவிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கேட்டுக் கொண்டது. இரு தரப்பிலிருந்தும் எந்தக் கொலைகளும் நடக்கக்கூடாது என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்திய அவர், அப்பாவி மக்களை பாதிப்பிற்குள்ளாகும் இந்த போர் நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்த வேண்டும் எனவும்  கேட்டுக் கொண்டார். இருப்பினும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் டெல்லி மேலிடம்தான் வைத்திருப்பதாக கூறி, மத்திய அரசின்பால்  கைக்காட்டினார். 

முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியின் அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குள், எதிர்க்கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தனது கட்சியான பாரத ராஷ்டிர சமிதியின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் தலைமை உரையாற்றினார். கூட்டத்தில், பாஜக அரசை கண்டித்த அவர், காகர் ஆபரேஷன் என்ற பெயரில் "ஆதிவாசிகள் படுகொலையை" நடத்தி வருகிறது என கடுமையாக சாடி, மத்திய அரசை நேரடியாக தாக்கும் கூர்மையான மொழியைப் பயன்படுத்தினார். மேலும் அவர், கொலைகளை உடனடியாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்றும் கோரினார். 

பார்வையாளர்களாக அமர்ந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் அவரது போர் நிறுத்த ஆதரவு முழக்கத்தை ஆரவாரத்தோடு ஆதரித்தனர். கூட்டத்தில் காகர் ஆபரேஷனை நிறுத்தக் கோரி  ஒரு தீர்மானமம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை மத்திய அரசுக்கு கட்சி அனுப்பும் என்று கே. சந்திரசேகர் ராவ் உறுதியளித்தார்.

29 ஏப்ரல் 2025 அன்று பாரத் பச்சாவ் என்ற சிவில் சமூக அமைப்பு, அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து 'போர் நிறுத்தம்' கொண்டுவர வேண்டுமென கோரிக்கையை முன்வைத்து ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தியது. மே 2 ஆம் தேதியன்று CPI, CPI (M), CPI (ML) உட்பட 10 இடதுசாரிக் கட்சிகள் இணைந்து  மனித சங்கிலி போராட்டம் நடத்தின. அதன் பின் பத்திரிகையாளர் சந்திப்பையும் பொதுக் கூட்டத்தையும் நடத்தின. அக்கூட்டத்தில், ஆதிவாசி மக்கள் மீதான படுகொலை, அராஜகங்களை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு 10 கட்சிகளின் பிரதிநிதிகளும் மத்திய அரசைக் கோரினர். கடந்த நான்கு வாரங்களாக, ஊடகங்கள் இந்த விவகாரம் குறித்து தினமும் பல நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றன.   ஏராளமான ஆதிவாசி மற்றும் பிற மக்கள் அமைப்புகள் மற்றும் சாதாரண குடிமக்கள் எழுப்பிய கோரிக்கைகளால் சமூக ஊடகங்கள் பரபரப்பாகி வருகின்றன. சுருக்கமாக சொல்வதானால், ஆபரேஷன் காகர் என்ற பெயரில் நடைபெறும் கொலைகளை உடனடியாக நிறுத்த அழுத்தம் அதிகரித்துள்ளது.

வரலாறு பார்வையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள்...

பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக ஒரு சிலர் கூறுகின்றனர். இடதுசாரி தீவிரவாதிகளுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.  பாதிக்கப்படும் ஆதிவாசி மக்களின் கையறு நிலையை உணர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை என்று சமூக அக்கறையோடு இருதரப்பையும் கோருபவர்களை நக்சல் ஆதரவாளர்கள் என்றும் முத்திரை குத்தும் போக்கும் அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் "கிளர்ச்சியாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும்" இடையிலான பேச்சுவார்த்தைகளின் வரலாற்றை அறியாமல் அல்லது தெரியாமல் அல்லது வேண்டுமென்றே மறைத்து சிலர் விஷம பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், இந்தியாவில் கடந்த காலங்களில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆராய்ந்தபோது, சுவாரஸ்யமான பல தகவல்கள் கிடைத்தன. அவற்றை மக்களுக்குரியத்தரும் நோக்கில் இந்த கட்டுரையை வரைகிறோம். 

வடகிழக்கில் உள்ள கிளர்ச்சியாளர்களான நாகாலாந்து தேசிய சோசலிச கவுன்சில், மிசோ தேசிய முன்னணி, திரிபுரா தேசிய விடுதலை முன்னணி மற்றும் அனைத்து திரிபுரா புலிப் படை போன்ற இயக்கங்களுடன் ஒன்றியத்தை ஆண்ட காங்கிரஸ் & ஆளும் பாஜக அரசாங்கம் நூற்றுக்கணக்கான முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஒரு கணக்கின்படி, இந்திய அரசாங்கம் 27 ஆண்டுகளில் நாகா கிளர்ச்சியாளர்களுடன் குறைந்தது 600 சுற்று பேச்சுவார்த்தைகளை ஒன்றிய ஆட்சியாளர்கள் நடத்தியுள்ளனர். அத்துடன், பல சந்தர்ப்பங்களில் போர்நிறுத்தங்களை அறிவித்து, அமைதியை கடைப்பிடித்துள்ளது. 

கிளர்ச்சியாளர்கள் தனிக் கொடி, தனி அரசியலமைப்பு அல்லது ஒன்றியத்திலிருந்து சிறப்பு அதிகாரங்களை  கோரியபோதும், அரசாங்கம் ஒரு ஆலிவ் கிளையை அவர்களிடம் நீட்டியது. ஆயுதமேந்திய மார்க்சிஸ்ட், லெனினிய, மாவோவிய கிளர்ச்சியாளர்கள் இந்தியாவில் இருந்து பிரிவினையை நாடவில்லை மாறாக ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தி ஒன்றுபட்ட இந்தியாவில் பொதுவுடமையை நிலைநாட்டவே போராடியது என்றாலும், அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவில்லை.

இன்னும் தெளிவாக சொல்வதானால், மத்திய அரசு வடகிழக்கு கிளர்ச்சியாளர்களையும் மார்க்சிய கிளர்ச்சியாளர்களான நக்சலைட்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதில்லை; கையாள்வதில். இதற்கு ஒருவேளை பல செல்லுபடியாகும் அல்லது கேள்விக்குரிய காரணங்கள் இருக்கலாம் என பலரும் கருதுகின்றனர். பேச்சுவார்த்தை என வெளியே சொன்னாலும், பல சந்தர்ப்பங்களில் அராஜகப் போக்கையும் ஆட்சியாளர்கள் கையாண்டு உள்ளனர். 

வடகிழக்கிலும் சரி,  சிவப்பு தாழ்வாரப் பகுதிகளிலும்  (Red Corridor) சரி ஒன்றிய அரசாங்கம் நீதிக்கு புறம்பான வழிகளில் பலமுறை பதிலளித்துள்ளது.  "இரகசிய சந்திப்புகள்" என்று பெயரளவில் குறிப்பிடப்படும் சந்திப்புகளை கொலைகள், சித்ரவதைகள் மூலம் நாகரீகமாக கையாண்டது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் நிலவும் பிரச்னைகளை சரிசெய்து, அனைவரையும் அரவணைப்பதை விடுத்து, அவர்களை ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்டு இயங்கி இருப்பதையும் இங்கே நாம் மறுக்க முடியாது. 

நக்சலைட்டுகளைவிட வடகிழக்கில் அடிக்கடி பேச்சுவார்த்தை  என அழைத்து என்கவுண்டர் கொலைகளை நடத்தி, அதன் மூலம் போர் நிறுத்தத்தை ரத்து செய்து, மீண்டும் இராணுவ நடவடிக்கையை முடுக்கிய நீண்ட வரலாறும் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.  

மார்க்சிய கெரில்லா கிளர்ச்சியாளர்களுடனான ஒன்றிய அரசாங்கம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் வரலாற்றைக் கண்டறியும் போது, ​​1951 ஆம் ஆண்டில் நிறைவுற்ற (பிரிட்டனிடமிருந்து இந்திய ஒன்றியம் விடுதலை பெற்றதாக நம்பப்படும் 1947 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குப் பின்) முதல் கிளர்ச்சியை நாம் பகுப்பாய்வு செய்ய வாய்ப்பு கிட்டியது. அதை வெற்றிபெற்ற ஒன்றாக நாம் காண முடியவில்லை. தோல்வியடைந்த முயற்சியாகவே வரலாற்றில் பதிவாகியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஐதராபாத் நிசாமிற்கு எதிராக முதன்முதலில் ஆயுதமேந்திய விவசாயிகள் போராட்டம்  அன்றைய ஹைதராபாத்தில்  (தெலங்கானா) வெடித்தது. 

கம்யூனிஸ்ட்களின் தலைமையையேற்று உழைக்கும் பாட்டாளிகளும், விவசாய கூலிகளும் நடத்திய 'தெலுங்கானப் புரட்சி' கொதிநிலையில் இருந்தபோது, செப்டம்பர் 17, 1948 அன்று ஹைதராபாத்திற்குள் நுழைந்த புதிதாக அமைந்த இந்திய ஒன்றிய அரசின் யூனியன் ராணுவம் 'போலீஸ் நடவடிக்கை' என்ற பெயரில் ஒடுக்க முனைந்தது. நிஜாமிடமிருந்து யூனியன் ராணுவத்திற்கு அதிகாரம் மாற்றப்பட்ட பிறகு, CPI கட்சியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் போராட்டத்தை முன்னெடுத்தனர். 

அந்த நேரத்தில், ஹைதராபாத்தில் கம்யூனிஸ்ட் கெரில்லாக்களையும் அரசாங்கத்தையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர சில சிவில் சமூக முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால், அவை பலனளிக்கவில்லை.

அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த Peace Dialogue Committee ஆக செயல்பட்ட ஏ.கே. கோபாலன், முசாபர் அகமது, ஜோதிபாசு ஆகியோர் அன்றைய பிரதமர் நேருவைச் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால், உண்மையான ஜனநாயகவாதி என போற்றப்பட்ட நேரு அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். இதற்கு ஒரு மேலே சென்ற மத்திய உள்துறை அமைச்சகம், "கம்யூனிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிடாவிட்டால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை" என்று கூறி ஏ.கே. கோபாலன் தலைமையிலான குழுவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. வெற்றிக்கு சாதகமற்ற சூழ்நிலையில், தலைமை ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, அக்டோபர் 20, 1951ஆம் தேதி அன்று "ஆயுதப் போராட்டத்தை கைவிடுவதாக" அறிவித்தது. 

'தெலங்கானா புரட்சி' நடந்த பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1967 ஆம் ஆண்டில் நக்சல்பாரியில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு பகுதியினரால் ஆயுதப் போராட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி கோட்டத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில், 25 மே 1967ஆம் ஆண்டில் எட்டு பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட பதினோரு பேர் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.அதைத் தொடர்ந்து கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் போராட்டம் "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை முன்வைத்து, சாரு மசூம்தார் மற்றும் கானு சன்யால் ஆகியோர் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ (எம்எல்) என்ற கட்சியாக உயிர்பெற்றது. 

மேற்கு வங்கத்தில் ஒலிக்கத் தொடங்கிய 'வசந்த காலத்தின் இடிமுழக்கம்' என வர்ணிக்கப்பட்ட அந்த இயக்கத்தின் முழக்கம் கேரளா, ஒன்றிணைந்த ஆந்திரா (ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா) தமிழ்நாடு என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓங்கி ஒலித்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் முதலில் நக்சல்பாரி அரசியலுக்குள் ஈர்க்கப்பட்டனர்.

நடைமுறையிலிருக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத சிபிஐ (எம்எல்) இயக்கத்தினர், "தேர்தல் பாதை, திருடர் பாதை" என்று விமர்சித்தனர்.

1967 - 2025 வரையிலான 58 ஆண்டுகளில், சிபிஐ (எம்எல்) கட்சியானது ஆரோக்கியமான விவாதங்கள், அரசியல் செயல்பாடுகள், கையாண்ட வழிமுறைகளால் எழுந்த உள்முரண்பாடுகள் காரணமாக எண்ணற்ற பிரிவுகளாகப் பிரிந்தபோதும், சிலர் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்; தொடர்கின்றனர். மற்றவர்கள் அதைக் கைவிட்டு தேர்தல்களில் போட்டியிடுவதை ஏற்றுக்கொண்டனர். தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற கொள்கையைக் கொண்ட பல்வேறு பிரிவுகள் மாவோயிஸ்ட் என்ற பெயரிலும் செயல்படுகின்றனர்.

ஆயுதப் போராட்ட வழியில் புரட்சி என்ற நிலைப்பாட்டை உறுதியாக ஏற்றவர்கள் இன்று  நக்சலைட் என்று கருதப்படுகின்றனர். சிபிஐ - மாவோயிஸ்ட் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட்)  என்ற கட்சி வடிவம் கொண்டு இயங்கும் இது மக்கள் யுத்தக் குழு (PWG) மற்றும் இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் (MCCI)) ஆகியவற்றின் இணைப்பால் உருவாக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டுகளில் ஒரு வலிமையான சக்தியாக மாறியது. மார்க்சிய - லெனினிய அமைப்பினருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு அரசாங்கங்களை அசைத்து பார்த்தது. இதன் காரணமாக 1990 களில், அரசாங்கத்திற்கும் நக்சலைட்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. 

ஜூலை 1996 இல், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி எம்.என். ராவ், தடா சட்டத்தின் கீழ் மாவோயிஸ்டுகள் கைதுசெய்யப்பட்ட ஒரு வழக்கில் தீர்ப்பை வழங்கும்போது, ​​"இடதுசாரி தீவிரவாதம் நிர்வாகத்தால் ஒரு பிரச்சனையாகக் கருதப்பட்டாலும், பொதுசமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களால் அது (மாவோயிஸம்) அவர்களின் பிரச்னைகளுக்கான தீர்வாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களிடம் அதிகரித்து வருகிறது" என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில், அவர் ஒரு ஆலோசனையை வழங்கினார்: 

அதாவது, "சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில்,   அமைதியை நிலைநாட்டுவதற்காக குழு (peace commission backed by state power and consent) அரசின் சம்மதத்துடனும், ஆதரவுடனும் அமைக்கப்பட வேண்டும். அக்குழு நிலவும் சூழலை ஆராய்ந்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன் மூலமே அரசால் காவல்துறை, துணை இராணுவம் உட்பட  அரசப் படைகள் நடத்தும் போலி மோதல் படுகொலைகள் மற்றும் நக்சலைட்டுகளின் வன்முறையை உடனடியாக நிறுத்த முடியும். நிரந்தர தீர்வையும், அமைதியையும் நிலைநாட்டிடமுடியும் . அர்த்தமுள்ள தேடல் சாத்தியமாக்க இதுவே வழியே என்று நாங்கள் நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டார். 

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், ஓய்வுபெற்ற IAS அதிகாரி எஸ்.ஆர். சங்கரன் (கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில் பெரும் பங்களிப்பு ஆற்றியவர்), மூத்த பத்திரிகையாளர் பொட்டூரி வெங்கடேஸ்வர ராவ், மனித உரிமைப் போராளி கே.ஜி. கண்ணபிரான்,  கல்வியாளர்கள் கே. ஜெயசங்கர், ஜி. ஹரகோபால் &  டி. நரசிம்ம ரெட்டி போன்ற செல்வாக்கு மிக்க நபர்கள் அங்கம் வகிக்கும்  அமைதி செயல்முறை மீது அக்கறை கொண்ட குடிமக்கள் குழுவை (Committee of Concerned Citizens - CCC) ஆந்திர அரசு உருவாக்கியது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டுமென நல்லெண்ணம் கொண்ட CCC குழுவினர் உத்வேகத்துடன் தமது கள ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், 1997 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று, ஆளுநர் கிருஷ்ண காந்த் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரபா சங்கர் மிஸ்ரா இருவரும் தங்கள் நிலவிய சூழல் குறித்து தங்களது கவலையை வெளிப்படுத்தியதுடன்,  அமைதியான தீர்வை பேச்சுவார்த்தை மூலம் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்துமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தனர். 

பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் CCC குழு சென்று, நிலவும் கள யதார்த்தத்தை ஆய்வு செய்து, ஒருபுறம் மக்கள் யுத்தக்குழுவுடனும், மறுபுறம் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துடனும் (GoAP) கடிதப் பரிமாற்றங்கள், நேரடி சந்திப்புகள் உள்ளிட்ட வழிகளில் தொடர்பு கொண்டது.  1998 ஜனவரியில் மக்கள் யுத்தக்குழுவின் மத்திய குழு உறுப்பினர்களுடனும் (அமைப்பு மீதான தடை இருந்தபோதிலும்), ஏப்ரலில் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துடனும் CCC குழு கலந்துரையாடல்களை நடத்தியதில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகள் உச்சக்கட்டத்தை அடைந்தது.

நான்காண்டு கால ஆய்வானது, பல ஏற்ற தாழ்வுகள் கண்டன. 2000 & 2001 ஆம் ஆண்டுகளில் அரசியல் தலையீடுகள் கடைசி நிமிட பின்னடைவை ஏற்படுத்தின. இருப்பினும், 2002 ஜனவரி - ஜூன் இடையிலான காலப்பகுதியில் சில குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டன. மக்கள் யுத்தக்குழு (நக்ஸலைட்கள் தரப்பில்) போர் நிறுத்தத்தை அறிவித்து, அதன் விதிமுறைகளை வரையறுத்து இறுதி செய்ய கவிஞர் வரவர ராவ் மற்றும் நாட்டுப்புற பாடகர் கத்தார் ஆகியோரை தூதர்களாக முன்மொழிந்தது. முறைமைகள் அமைக்கப்பட்டவுடன், அவர்களும் இணைய சம்மதித்தனர். ஆந்திர மாநில அரசாங்கம், அதன் பங்கிற்கு, அமைச்சர்கள் டி. சீதாராம் மற்றும் கே. விஜயராம ராவ் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று அறிவித்தது.  அதே நேரம், போர் நிறுத்தம் குறித்து எந்த பதிலும் தராமல், மௌனம் சாதித்தது. 

ஜூலை 8 ஆம் தேதி அன்று தூதர்களின் சந்திப்பு முன்மொழியப்பட்ட கூட்டம் நடந்தது. அன்றைய காலை பொழுது, இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் அற்றமற்றதாக மாற்றியது. ஆம், அன்றைய தினம் காவல்துறையினர் மற்றொரு போலி என்கவுன்டரை நடத்தினர். இது அரசாங்கத்தின் நேர்மையற்ற தன்மையை அம்பலப்படுத்திக் காட்டுவதாக  நக்ஸலைட்களின் தூதர்கள் விமர்சித்தனர். அரசின் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன் தூதர்களின் சந்திப்பு கூட்டத்தையும் புறக்கணித்தனர்.  இந்த சம்பவம் செய்தித்தாள்களில் ஒரு பெரிய விவாதத்தைத் தூண்டியது. 

தடைசெய்யப்பட்ட அமைப்பான நக்ஸலைட்களின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட தூதர்கள் அக்கட்சியின் கருத்துக்களைப் பற்றி, அதன் மீதான தடையை வெளிப்படையாக மீறி பேச அம்மாநிலத்தின் தலைமைச்  செயலகத்தில் அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தும் அளவுக்கு சூழ்நிலை மிகவும் விசித்திரமாக மாறியது.  

அரசுத் தரப்பில் மேலும் பல  போலி மோதல் படுகொலைகள் (என்கவுண்டர்கள்) அரங்கேற்றப்பட்டன. நிலைமை மோசமடைந்தது. அக்டோபர் 1, 2003 அன்று திருப்பதியில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது படுகொலை முயற்சி நடந்தது. அதிர்ஷ்டவசமாக அவர் அதிலிருந்து தப்பித்தார்.  

படுகாயங்களுடன் உயிர் பிழைத்த நாயுடு , உடல் நலம் பெற்று மீண்டார். மீண்டு வந்தவுடன் முதல் வேலையாக சட்டமன்றத்தைக் கலைத்து, இடைக்காலத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். அனுதாப அலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று அவர் உறுதியாக நம்பியதே இதற்கு காரணம். செல்வாக்கு இழப்பு, குடும்ப அரசியல், சட்ட ஒழுங்கு சீர்கேடு, ரவுடிகளின் அராஜகம், ஊழல் குற்றச்சாட்டுகள் அவருக்கு தோல்வியை அளிக்கும் என்ற கணிப்புகள் நிலவிய சூழலில், இந்த தாக்குதல் நடந்தது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. 

ஏப்ரல் 2004 தேர்தல் பிரசாரத்தின் போது, ​​ தெலுங்கு தேசக் கட்சியின் மூன்று முக்கிய முழக்கங்களில் ஒன்று "மாவோயிஸ்டுகளை வேரறுப்போம்!" என்பதாகும். இதற்கு நேர்மாறாக, ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியானது, தேர்தலில் வென்றால் மாவோயிஸ்டுகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தது.  தேர்தலில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற காங்கிரஸ் 2004 மே மாதம் அரசாங்கத்தை அமைத்தது. ஜூன் மாதம் போர் நிறுத்தத்தை அமல்படுத்தி, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான  செயல்முறையைத் தொடங்கியது.

2004 ஆம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தைகள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் மாவோயிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயமாக இன்றளவும் உள்ளது. ஆந்திர அரசாங்கப் பிரதிநிதிகள், CCC குழு, அமைதி முயற்சி குழு & இரு தரப்பு தூதர்கள் சம்பந்தப்பட்ட 4 மாத ஆயத்த உரையாடல்களுக்குப் பின், உண்மையான பேச்சுவார்த்தைகள் அக்.,15ஆம் தேதியன்று தொடங்க திட்டமிடப்பட்டன. இதற்கிடையில், CPI (ML) மக்கள் யுத்தக்குழு, CPI (ML) ஜனசக்தி ஆகிய இருகட்சிகளை பேச்சுவார்த்தை மேஜைக்கு அழைத்து வர விரும்பியது. கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  அரசாங்கம் இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

அக்டோபர் 11 அன்று ஊடகவியலாளர்கள் முன்னிலையில், இரு புரட்சிகரக் கட்சிகளைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவின் ஏற்பாட்டில், நல்லமலா காட்டில் இருந்து வெளியே வந்த தோழர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். 1969 ஆம் ஆண்டு நக்சல்பாரி இயக்கத்தின் தோற்றுநரான சாரு மஜும்தார் பார்வையிட்ட ஒரு வரலாற்று பெருமை வாய்ந்த குண்டூர் மாவட்டத்தில் உள்ள குட்டிகொண்டா பிலாமில் ஒரு நினைவுச் சிலையைத் திறந்து வைத்து, அங்கிருந்து நடைப்பயணமாக ஹைதராபாத் சென்றனர். அங்குள்ள அரசாங்க விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர்கள் அனைவரும், ஒரு வாரம் விருந்தினராக தங்கி இருந்து அரசு பிரதிநிதிகளைச் சந்தித்து அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பயண வழியில் ஆயிரக்கணக்கான மக்கள்  குழுமி நின்று, மலர் தூவி, ஆரத்தி எடுத்து அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பொது நீரோட்ட அரசியலுக்குள் போராளிகள் காலடி எடுத்து வைத்த நிகழ்வு பெரும் பேசுபொருளானது.  

முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, மக்கள் யுத்தக் குழு சார்பில்  பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அவர்களின் கட்சி மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையத்துடன் இணைந்து CPI (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளதாகவும், இனிமேல் அவர்கள் புதிய பெயரில் அரசியலில் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்தது. குறைந்தபட்ச ஜனநாயக சூழலை ஏற்படுத்த அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், நில பகிர்வு,  விவசாய மேம்பாடு, சுயசார்பு பொருளாதார திட்டங்கள்,  தலித்துகள், பெண்கள், ஆதிவாசிகள் & சிறுபான்மையினர் போன்ற பல்வேறு சமூகக் குழுக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும், தெலங்கானாவிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் , ராயலசீமா மற்றும் வடக்கு கடலோர ஆந்திராவில் பின்தங்கிய நிலையை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மதுவிலக்கு, கல்வி, சுகாதாரம் மற்றும் மக்கள் நலன் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை CPI (மாவோயிஸ்ட்)  கட்சி முன்வைத்தது. அவற்றை அரசும் ஏற்றுக்கொண்டது. அமைதிக்கான தீர்வை நடைமுறைப்படுத்தும் நிகழ்ச்சி நிரலில் இரு தரப்பினரும் ஒன்றிணைத்தது. 

அரசாங்கக் குழுவிற்கு உள்துறை அமைச்சர் கே. ஜனா ரெட்டியும், நக்சலைட் குழுவிற்கு மத்தியக் குழு உறுப்பினரும், ஆந்திரப் பிரதேச மாநிலக் குழுச் செயலாளருமான அக்கிராஜு ஹரகோபால் ராமகிருஷ்ணாவும் தலைமைத் தாங்கினர். CCC குழு, அமைதி முயற்சிக் குழுவின் பிரதிநிதிகள் மற்றும் இரு தரப்பிலிருந்தும் தூதர்களும் கலந்து கொண்டனர். அக்டோபர் 15 முதல் 18 வரை பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற இக்கூட்டத்தில், மூன்று முக்கியப் பிரச்னைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டன.   

நிலப் பிரச்னைகளைத் தீர்க்க, அரசாங்கம் ஒரு ஆணையத்தை அமைக்க ஒப்புக்கொண்டது. காவல்துறை அட்டூழியங்கள், பொய் வழக்குகள் மற்றும் மலைக்கிராமங்களில் உள்ள மக்களின் உரிமைகள் மீதான தடைகள் குறித்த  கவலைகளைத் தீர்ப்பதாக அரசாங்கம் தரப்பு உறுதியளித்தது. அக்டோபர் 18 அன்று, குறிப்பிட்ட தேதி நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், இரண்டாவது சுற்றில் பேச்சுவார்த்தையைத் தொடர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். பின்னோக்கிப் பார்த்தால், பேச்சுவார்த்தைகள் சிறிதளவே பலன் அளித்தன என்றே முடிவு செய்யலாம். இருப்பினும், மாவோயிஸ்டுகள் குறிப்பிடத்தக்க பிரபலத்தைப் பெற்றனர். சமகால செய்தித்தாள்கள், முதலமைச்சர் அலுவலகத்திற்குச் சென்றவர்களைவிட அதிகமான மக்கள் மாவோயிஸ்டுகளைச் சந்தித்ததாக குறிப்பிட்டன. 

உள்ளாட்சி நிர்வாகம், உள்ளூர் பஞ்சாயத்துகள், நிலம் தொடர்பான சிக்கல்கள், சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை நிவர்த்தி செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்து ஆயிரக்கணக்கான கோரிக்கைளை மனுக்களை பொதுமக்கள் கொடுத்திருந்தனர். வெளி உலகத்துடன் குறைந்த அளவிலான தொடர்பு கொண்டிருந்தபோதிலும், இரகசியக் குழுவாக செயல்பட்டவர்களால்  விரிவான குறிப்புகள், துணை ஆவணங்கள் மற்றும் வாத பிரதிவாதங்களுடன் நன்கு தயாரிக்கப்பட்டது. அதே நேரத்தில் அரசாங்கம், அதன் பரந்த அளவிலான வளங்களும், அதிகாரங்களும்  கொண்டிருந்தபோதிலும், போதுமான பணிகளைச் செய்யவில்லை என்பதையும் கவனித்தவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த முதல் சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரண்டாவது சுற்று நடக்கவே இல்லை.  2005 ஜனவரி வாக்கில், அரசப் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக மீறி, "போலி மோதல் கொலைகளை" தினசரி அடிப்படையில் மீண்டும் தொடங்கின. இதனால் மாவோயிஸ்டுகள் தாங்களும் ஒப்பந்தத்தை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அறிவித்து, காட்டில் மீண்டும் ஆயுதமேந்திய நடவடிக்கையைத் தொடங்கினர். போலீஸ் & துணை இராணுவனத்தினரின் தாக்குதல் தீவிரமடைந்தது. 2007 வாக்கில், மாவோயிஸ்டுகள் நல்லமலா காடுகளில் இருந்து அனைத்து ஆயுதமேந்திய போராளிகளையும் விலக்கி அடர்வனம் புகுந்து கொண்டனர்.

இந்த அனைத்து முயற்சிகளுக்கும் பிறகு, 2007 ஆம் ஆண்டு சிபிஐ (மாவோயிஸ்ட்) ஒற்றுமை மாநாடு மேம்போக்காக அரசுத்தரப்பில் சொல்லப்பட்ட பேச்சுவார்த்தை என்ற நகர்வை காரண காரியங்களைக் கூறி, திறம்பட எதிர்த்தது. அதன் அதிகாரப்பூர்வ வெளியீடான People’s Marchஇல், "ஆந்திர அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை பிரச்னை நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. மேலும், பெரும்பான்மையான வாக்குகளால், ஆந்திராவில் நிலவிய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அந்த சூழ்நிலையில், பேச்சுவார்த்தைக்கு செல்வது விரும்பத்தக்கது அல்ல என்று உணரப்பட்டது" (April 2007, p.6). அது ஒரு அப்பட்டமான முடிவைக் குறித்தது. CCC குழு உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நினைவுகூர்ந்ததைத் தவிர, வேறு எந்த ஆக்கப்பூர்வமான விவாதமும் நடைபெறவே இல்லை.

பேச்சுவார்த்தைகளை கட்சி அதிகாரப்பூர்வமாக மறுத்த போதிலும், 2010இல் மற்றொரு முயற்சிக்கு மாவோயிஸ்டுகள் ஒத்துழைப்பு நல்கினர். UPA கூட்டணி ஆட்சியின் இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய மறைந்த சுவாமி அக்னிவேஷ் மேற்கொண்ட பணிகளை இங்கே நினைவுகூறலாம். 

ஏப்ரல் 14, 2010 அன்று தி இந்துவில் வெளியான ஒரு நேர்காணலில், மத்திய குழு உறுப்பினரும் சிபிஐ (மாவோயிஸ்ட்) செய்தித் தொடர்பாளருமான ஆசாத் செருகுரி ராஜ்குமார், "பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை, 2007 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற எங்கள் ஒற்றுமை மாநாட்டின் வழிகாட்டுதல்களை எங்கள் கட்சி பின்பற்றும்” என தெரிவுபடுத்தினார். இதன் மூலம் வேற்று அரசியல் விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படும் நோக்கமோ அல்லது  தெளிவோ அற்ற பேச்சுவார்த்தையால் எந்த பலனும் இல்லை என நாம் கொள்ளலாம் என்று அவர் மறைமுகமாக தெளிவுபடுத்தினார். 

இருப்பினும், சுவாமி அக்னிவேஷ் பேச்சுவார்த்தையை எப்படியாவது மீண்டும் தொடங்கிட வேண்டுமென பிடிவாதமாக இருந்தார். ஜூலை 2, 2010 அன்று அடிலாபாத்தில் நடந்த ஒரு "போலி மோதலில்" ஆசாத் படுகொலை செய்யப்பட்டார். சுவாமி அக்னிவேஷின் திட்டத்தைப் பற்றி விவாதிக்க ஆசாத், பத்திரிகையாளர் ஹேமச்சந்திர பாண்டேவுடன் தண்டகாரண்யாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​நாக்பூரில் தடுத்து நிறுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டதாக களத்தில் இருந்து தகவல் வெளியாகி இருந்தது. இந்த போலி மோதல் படுகொலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தபோது, ​​"குடியரசு அதன் சொந்தக் குழந்தைகளைக் கொல்ல அனுமதிக்க முடியாது" என்று வேதனையுடன் கூறியது.

அடுத்து வந்த 15 ஆண்டுகளில், குடிமக்கள் மீதான குடியரசின் கொலைவெறி தொடர்ந்தது, குறிப்பாக ஜனவரி 1, 2024 அன்று தொடங்கிய ஆபரேஷன் காகர் மூலம், குறைந்தது 200 நிராயுதபாணியான, போர் களத்திற்கு சம்பந்தமில்லாதாக ஆதிவாசிகள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பச்சைப் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் ஆறு மாதக் குழந்தை, பள்ளிச் சிறுமிகள், காது கேளா - வாய் பேச முடியாத ஒரு இளம்பெண், டெண்டு இலைகளைச் சேகரிக்கும் மக்கள், வயல்களில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள், குடிசைகளில் தூங்கி கொண்டிருந்தவர்களும் இந்த பட்டியலில் அடங்குவர்.

இந்த நடவடிக்கை இடைவிடாமல் தொடர்ந்தது, கர்ரேகுட்டலுவின் சுற்றிவளைப்பை அடைந்தது, அங்கு 24,000 பாதுகாப்புப் படையினருக்கு மத்தியில் சில நூறு மாவோயிஸ்டுகள் மற்றும் ஆதிவாசிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தற்போது மாவோயிஸ்டுகள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் பழங்குடிகள் மீது அக்கறை கொண்ட தனிநபர்களிடமிருந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவு,  தவிர்க்கக்கூடிய இரத்தக்களரி & கற்பனை செய்ய முடியாத துயரத்தை எப்படியாவது, எப்பாடு பட்டாவது தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டுமே கொண்டுள்ளது. போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக வாதிடுபவர்கள், ஆதிவாசிகள், மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினர் என எவரும் இனி உயிரிழக்கக்கூடாது என்ற நல்ல எண்ணத்திலேயே தங்களது மன்றாடலை முன்வைக்கின்றனர்.

இந்தக் கவலையை அதிகாரத்தில் இருப்பவர்கள் புரிந்துகொள்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. டாலர் தேசம் செய்யும் மத்தியஸ்தத்திற்கு மட்டுமே செவி சாய்ப்பவர்கள் எளியவர்களின் குரலுக்கு மதிப்பளிப்பார்களா? 

அரசு மிகவும் சக்திவாய்ந்ததாகவும், இறுக்கமாகவும் மாறிவிட்டது; ஆயுதப் போராட்டம் நடத்தும் அமைப்புகள், அதற்கு நிபந்தனையுடன் ஆதரவளிக்கும் இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள் உட்பட சமூக இயக்கங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துவிட்டன. போர் நிறுத்தம் & அமைதிப் பேச்சுவார்த்தைகளின் 30 ஆண்டுகால வரலாற்றையும், கணிசமாக மாறிவிட்ட நடைமுறையில் உள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் யதார்த்தங்களை ஆளுவோர் புரிந்துகொள்வார்களா? 

கம்யூனிஸ்டுகளை அதன் மூன்று முக்கிய எதிரிகளில் ஒருவராகக் கருதும் ஒரு சித்தாந்தத்தால் இயக்கப்படும் தற்போதைய ஆட்சியில், அவர்களை ஒடுக்க எந்த எல்லைக்கும் செல்லும் மனநிலையிலேயே அந்த முக்கியஸ்தர்கள் இருக்கிறார்கள்.  இந்த சூழ்நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மரியாதை எங்கே? 

கடந்த கால அமைதிப் பேச்சுவார்த்தைகள் உண்மையான பிரச்னைகளை பொது விவாதத்திற்கு கொண்டு வந்து, மக்களின் விழிப்புணர்வையும் பங்கேற்பையும் குறைந்தபட்சமாகவேணும் விரிவுபடுத்தின. இன்று அது சாத்தியமா? சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின்படி தவிர, யாரும் உயிரையோ அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தையோ பறிக்கக்கூடாது என்பதை உத்தரவாதம் செய்யும் அரசியலமைப்பின் 21வது பிரிவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்காவிட்டால்,  சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் சட்ட செயல்முறை இல்லாமல் மக்களை ஒழிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதில் ஆட்சியாளர்கள் உறுதியாக இருப்பார்கள். 

ஜனநாயகம், சகோதரத்துவம், சமத்துவம், சமநீதி, சம அதிகாரம், மனிதாபிமானம், சட்டத்தின் படியான ஆட்சி, மக்களாட்சிக்கான அரசியல் சாசன உறுதிமொழி காக்கப்படாமல் போகலாம். எனவே இவற்றை காக்கவேனும்  மக்கள் அர்த்தமுள்ள வகையில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவாக உரத்து குரல் கொடுக்க வேண்டும். 

தெலுங்கு & ஆங்கிலத்தில் ஆசிரியர் என்.வேணுகோபால் N Venugopal 

தமிழில் சிவப்ரியன் செம்பியன் SivaPriyan Sempiyan 

(தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப மூலத்தைவிட சில கூடுதல் தகவல்களை விரிவாக அளித்திருக்கிறேன்)

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு