தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் முகநூல் வாதங்களும்

தெய்வ சுந்தரம் நயினார் - இரா. முருகவேள் - துரை. சண்முகம் - Chandran Dhamodaran - மகுடேசுவரன் - Lingam Deva - சாவித்திரி கண்ணன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் முகநூல் வாதங்களும்

1
தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவு . . . விஜய் அவர்களின்  வெற்றி 1 & 2

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம்  . . .  அண்மையில் துவக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி . . .  கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஆட்சிபுரிந்து வந்த திராவிடக் கட்சிகளைத் தனித்து எதிர்த்து நின்று . . .  வேறு எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் . . .  தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ளது. 

இரண்டுநாள்களுக்குமுன்பு இதுபற்றி நான் இட்ட ஒரு பதிவில் தமிழகத்தில் இளைஞர்களிடையே ஒரு எழுச்சி தோன்றி நீடிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த எழுச்சி விஜய் கட்சிக்கு ஆதரவாக நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தேன். சீமான் அவர்களுக்கும் இளைஞர்களின் ஆதரவு நீடித்துவந்தாலும், விஜயின் அரசியல் வருகைக்குப்பிறகு , இளைஞர்களின் எழுச்சி அலை திசைதிரும்பியுள்ளது என்றும் கூறியிருந்தேன். இளைஞர்களின் எழுச்சி அவர்களுடைய பெற்றோர்களின் வாக்குகளையும் திசைதிருப்பியுள்ளது. அதன் பிரதிபலிப்புதான் இன்றைய தேர்தல் முடிவு!

நாம் கவனமாக ஆராயவேண்டியது . . .  இன்றைய இளைஞர்களின் எழுச்சிக்கு என்ன காரணிகள் என்பதுபற்றி ஆகும்! இது வெறும் திரைப்பட மோகம் என்று புறந்தள்ளிவிடக்கூடாது. ஏனென்றால் திராவிடக் கட்சிகளின் கடந்தகால வெற்றிக்கு மிகப்பெரிய அளவு பங்களித்தவர்கள் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களே! 

மக்களின் வாழ்க்கைப் புறச்சூழலில் நீடிக்கிற அல்லது தோன்றியுள்ள சமூகக்காரணிகளே இளைஞர்களின் உள்ளங்களில் மாற்றத்தைத் தேடும் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளதற்குக் காரணமாக அமையமுடியும். பொருளாதாரக் காரணிகளே முதன்மையானவையாக இருக்கமுடியும். விலைவாசிப் பிரச்சினை, அன்றாட அவசியத் தேவைகளை நிறைவேற்றுவதிலேயே நீடிக்கிற இன்னல், கடன் வாங்கிக் கல்வியைப் பெற்றாலும் வேலை பெறுவது என்பது குதிரைக்கொம்பாக இருப்பது, வேலை கிடைத்தாலும் போதிய ஊதியம் இல்லாதது, லஞ்ச லாவண்யம். . .  இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இப்பாதிப்புகளுக்கு எந்தவித நிவாரணம் தராத இன்றைய அரசியல் பொருளாதாரச் சூழல், அதற்கு மாற்றாக மது, போதை மருந்து, பாலியல் வன்முறை, சாதிய மோதல், ஆணவக்கொலைகள், பணத்திற்காக எல்லாவித சமூகவிரோத வன்முறைகளிலும் ஈடுபடத் தூண்டும் ஒரு சூழல், கூலிப்படை ஆதிக்கம் ஆகியவற்றையே வளர்த்துவிட்டுள்ளது. 

தேர்தலின்போது இவற்றையெல்லாம் மக்கள் 'மறந்துவிட'  . . .  ''இலவசங்கள்'' தொடர்பான வாக்குறுதிகளும், ஓட்டுக்குப்  பணம் வழங்குவதும் போதும் என்றும்,  ஆண்ட, ஆளுகின்ற கட்சிகள் கருதுகின்றன. இந்த வகையான 'மறக்கடி மருந்து' ஒரு கட்டத்திற்குமேல் செயல்படாது என்பதையே தற்போதைய தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. 

ஆட்சிக்கு வந்தவர்களின் குடும்பங்கள் பல கோடிகளுக்கு அதிபர்களாக ஆவதையும், ஆட்சிப் பதவிகள் 'வாரிசுகளின்' சொந்தமாக ஆவதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குத் தற்போது எந்தவொரு கட்சியும் விதிவிலக்கு இல்லை. ஆட்சியாளர்களின் துணைகொண்டு, 'காண்டிராக்டர்களும் தொழில் அதிபர்களும்' வளர்வதையும் மக்கள் பார்க்கின்றனர். மேலும் ஆட்சியில் அமர்கிற கட்சிகளின் 'தொண்டர்கள் (மாவட்டங்கள், வட்டங்கள்) ' ஆகியவர்களின் பலவகை அடாவடித்தனங்கள் ஆகியவற்றாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் அரசியல் கட்சிகள் நீட் எதிர்ப்பு, இந்திமொழி ஆதிக்கம், தமிழ்ப் பாதுகாப்பு, தொகுதி மறுவறையீடு போன்றவற்றை முன்வைக்கும்போது,  அவற்றிற்கு மக்கள் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கத் தயார் இல்லை என்பது தெரிகிறது. 

மேற்கூறியவைபோன்ற வெளிப்படையான பல கூறுகளே தற்போதைய 'விஜய் அலைக்கு' அடிப்படை எனக் கருதுகிறேன். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் அடிப்படை . . .  இந்திய அரசியல் பொருளாதார அமைப்பு, உலக அளவிலான பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் , பாசிச வளர்ச்சி போன்றவையே. இவையெல்லாம் உலகிலிருந்து அகற்றப்படும்வரை, அவற்றால் வெளிப்படும்  மேற்கூறிய பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் தோன்றி நீடிக்கத்தான் செய்யும். 

இவைபோன்ற உண்மையான பிரச்சினைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் ஆழமான ஆய்வு இன்றி வெளிப்படையாகப் புரியாது. ஒரு சரியான அரசியல் தலைமையினால்தான் இதைச் செய்யமுடியும். மக்கள் இவற்றைப் புரியாதவரைக்கும் அல்லது புரியவைக்கப்படாதவரைக்கும் ஆளும் வர்க்கங்களுக்கு நல்லதே. 

மேற்கூறியவற்றை மக்களுக்குப் புரியவைத்து , அவர்களை அணிதிரட்டி, மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமையுள்ள, தெளிவுள்ள அரசியல்கட்சிகள் கட்டமைக்கப்படாமல் மக்களின் உண்மையான பிரச்சினைகள் தீராது. அதுவரை மக்கள் தேர்தல் அரசியலில் 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்னும் அடிப்படையில் மாறி, மாறி கட்சிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். இது தவிர்க்க இயலாத ஒன்று. 

மேற்கூறிய எனது கருத்துகளுக்கு அடிப்படை பின்கண்ட உண்மையே!  ஒரு காரணமின்றி ஒரு செயல் நிகழாது!காரணமின்றித் தற்போதைய தேர்தலில் 'விஜய் அலை' அடிக்கவில்லை! ஏதோ மூன்று வயது குழந்தைகள் உட்பட சிறுவர்கள், இளைஞர்கள் ''வேண்டுகோளுக்கு'' இணங்கப் பெற்றோர்கள் வாக்களித்துவிட்டனர் என்று எளிதாகப் புறந்தள்ளிவிடக்கூடாது! 

நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இன்றைய 'எழுச்சி அலையை' உருவாக்கிய இளைஞர்கள் தொடர்ந்து உண்மையான அரசியல் பொருளாதாரத்தையும் சமூக இயக்கத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். தங்கள் பிரச்சினைகளையும் அவற்றிற்கான தீர்வுகளையும் உணரவேண்டும். இல்லையென்றால் தற்போதைய அலையானது பயனற்ற அலையாகவே  அமைந்துவிடும்.

விஜய் அவர்களின் வெற்றிபற்றிய எனது கருத்துக்குத் தோழர் ஜமாலன் அவர்கள் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். தோழருடைய உணர்வை நான் மதிக்கிறேன். விஜயின் வெற்றியை - திமுக, அதிமுக எதிர்ப்பு அலையை - இளைஞர்களின் சமூகப்பார்வை கொண்ட 'எழுச்சியாக' , முற்போக்குச் சமூகப்பார்வைகொண்ட 'எழுச்சியாக' பார்க்கக்கூடாது என்பதில் எனக்கு 100 விழுக்காடு உடன்பாடு. இதில் தோழருக்கு ஐயமே வேண்டாம். 

இந்தத் தேர்தல் முடிவில் ஒரே ஒரு அம்சத்தைத்தான் நான் குறிப்பிட விரும்பினேன். இன்றைய சமூகச் சூழல் - பொருளாதார, பண்பாட்டுச்சூழல் - இளைஞர்களின் வாழ்க்கையையும் மனதையும் மிகவும் பாதித்துள்ளது. இந்தச் சூழல், தற்போது தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றிக்கு வழி விட்டுள்ளது. 

ஆனால் இன்றைய தமிழகத்தின் பிரச்சினைகளை இக்கட்சி தீர்த்துவிடும் என நான் கருதவில்லை. அவ்வாறு தேர்தல் அரசியல்மூலம் தீர்த்துவிடவும் முடியாது. அதற்குத் தெளிவான அரசியல் பொருளாதார ஆய்வு, தெளிவான மாற்றுத்திட்டம் , உண்மையான அரசியல் உணர்வு போன்றவை தேவைப்படுகின்றன. இவற்றையெல்லாம் அளிக்கும் ஒரு அரசியல்கட்சித் தலைமை உருவாகாமல் இளைஞர்களின், தமிழக மக்களின் பிரச்சினைகள் தீராது.

இந்தத் தேர்தல் நமக்கு வெளிக்காட்டுவது . . . இன்றைய தமிழகத்து அரசியல் பொருளாதார, பண்பாட்டுச்சூழலின்மீது இளைஞர்களுக்குக் கடுமையான அதிருப்தி உள்ளது. அவ்வளவுதான். இச்சூழலை விஜய் தலைமையிலான ஆட்சி தீர்த்துவைத்துவிடும் என நான் கூறவரவில்லை. இந்தியாவின் அடிப்படை அரசியல் பொருளாதார அமைப்பு மாற்றப்படாமல் இப்பிரச்சினைகள் தீராது. இளைஞர்களின் மாற்றத்தில் ஒரு படிதான் இது. அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆனால் சரியான மாற்று அரசியல் உருவாகாமல் இளைஞர்களின் அதிருப்தி மறையாது. அந்த மாற்று அரசியல் தமிழகத்தில் உருவாகும்; உருவாகவேண்டும். இந்த மாற்று அரசியல் தவெக -இன் அரசியல் என்று நான் கூறவில்லை. ஒன்றின் ஆதிக்கம், அல்லது அழிவு அல்லது மறைவில்தான் மற்றொரு ஆக்கம் தோன்றி நீடிக்கும். இக்கட்டத்தில் தெளிவான அரசியல் பொருளாதாரக் கொள்கை, திட்டம் உடைய ஒரு சரியான அரசியல் இயக்கம் தோன்றி வளரவேண்டும். சரியான மாற்று அரசியலை முன்வைக்கவேண்டும். அதற்கான சூழலும் தேவையும் இப்போது உள்ளது. இல்லையென்றால், தற்போதைய எதிர்ப்பு அலை விழலுக்கு இறைத்த நீராக அமைந்துவிடும். தேர்தல் அரசியலுக்கு வெளியே நின்று நான் இதைக் கூறுகிறேன்.

தெய்வ சுந்தரம் நயினார்

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid02x8EPdLmL2GhXqMwMuAQgfkC8xDfjQ5CcEB81nBUjviTvrtPQFrVRmeP6vvtajptSl&id=100004424580477&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&_rdr

https://www.facebook.com/100004424580477/posts/3643865199104264/?rdid=qYQOLcRY2LQ076NE

===============================================

2
நடுவண், மாநில அரசாங்கங்களின் ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் மாறி மாறி அமைவதற்கு ஒரு முக்கியக் காரணம்

(சமூக உணர்வுள்ள நண்பர்களுக்குமட்டும்  - அரசியல் பாடத்தின் அடிப்படை )

இத்தலைப்பில் உள்ளே செல்வதற்குமுன் . . .  ஒரு நாட்டின் ஆளும் வர்க்கங்கள்,(Ruling Classes)  அரசு (State), அரசாங்கங்கள் (Governments) ஆகியவற்றைப்பற்றி ஒரு சிறு விளக்கத்தை முன்வைக்க விரும்புகிறேன். 

ஒரு நாட்டின் அடிப்படை பொருளாதார அமைப்பைக் கட்டுப்படுத்துகிற வர்க்கங்களே அந்நாட்டின் ஆளும் வர்க்கங்கள். நிலவுடைமை வர்க்கம், முதலாளித்துவ வர்க்கம் , ஏகாதிபத்திய வர்க்கம், தேசிய முதலாளி வர்க்கம், ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக ஒரு நாட்டில் செயல்படும் தரகு முதலாளி வர்க்கம் என்று பலவகைப்பட்ட வர்க்கங்கள் நீடிக்கின்றன. விவசாயிகள், தொழிலாளிகள், மத்தியதர வர்க்கம் ஆகியவை ஆளப்படுகின்ற வர்க்கங்கள்.

நாட்டின் பொருளாதார அமைப்பைக் கட்டுப்படுத்துகிற வர்க்கங்களே ஆளும் வர்க்கங்கள். இந்த வர்க்கங்கள் தங்களுக்கான - தங்களுடைய பொருளாதார அமைப்பைப் பாதுகாப்பதற்காக ஒரு அரசியல் அமைப்பை உருவாக்கிவைத்துக்கொள்ளும். இந்த அரசியல் அமைப்பை உருவாக்கிக் கட்டுப்படுத்துகிறவர்கள் ஆளும் வர்க்கங்களே என்றாலும் , வெளிப்படையாக அவர்கள் அரசியல் அமைப்பில் வெளிப்படமாட்டார்கள்.  

இந்த அரசியல் அமைப்பே 'அரசு' என்னும் முக்கியமான அங்கமாகும். அரசியல் சட்டம், இராணுவம், அதிகாரி வர்க்கம், நீதிமன்றங்கள், காவல்துறை, அரசாங்கங்கள்  ஆகியவையே அரசின் பல்வேறு அங்கங்களாகும். இவற்றின் ஒட்டுமொத்தச் செயல்பாடுகள் அனைத்தும் ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கும்வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த உறுப்புகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று இணைந்து ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கும்.

ஒரு நாட்டின் நடுவண் அரசாங்கமும் மாநிலங்களின் அரசாங்கங்களும் தங்களை உருவாக்கிச் செயல்படுத்தும் 'அரசின்' உறுப்புகளே. இந்த அரசாங்கங்கள் 'தேர்தல்' என்னும் ஒரு 'வாக்கெடுப்புமுறையில்' தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதிக வாக்கு பெற்றவர்கள் 'ஆளும் கட்சியாகவும்' குறைவான வாக்குபெற்றவர்கள் 'எதிர்க் கட்சிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் இந்த இரு கட்சிகளுமே 'ஆளும் வர்க்கங்களின் கட்சிகளே' ஆகும். 

'அரசு' எந்திரத்தைப் பாதுகாப்பதும், அதன்மூலம் ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாப்பதுமே இந்த  'அரசாங்கங்களின்'   அடிப்படை வேலையாகும். ஆளும் வர்க்கங்கள் தங்களின் 'அரசு' வழியே இந்த 'அரசாங்கங்களை' கட்டுப்படுத்தும். நீதிமன்றங்கள், இராணுவம், அதிகாரி வர்க்கம் போன்றவை இதற்குப் பயன்படுத்தப்படும். 'தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம்' தன்னைக் கட்டுப்படுத்தும் 'அரசுக்கு' எதிராகச் செயல்பட்டால், அந்த 'அரசாங்கம்' கலைக்கப்படும். ஒருவேளை ஆளப்படுகின்ற வர்க்கங்களின் அரசியல் கட்சிகள் எதிர்பாராதவிதமாக தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றால், ஏதாவது ஒரு காரணத்தின் அடிப்படையில் அதன் 'அரசாங்கம்'  கலைக்கப்படும். 

இங்குக் கவனமாகப் பார்க்கவேண்டியது . . .  பொதுவாக, அரசாங்கங்களின் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கவே செயல்படும். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 'ஆளும் கட்சி' மக்களின் நம்பிக்கையை இழந்தால், 'எதிர்க்கட்சிகளை' ஆளும் கட்சிகளாக மாற்றுவதில் ஆளும் வர்க்கங்கள் ஈடுபடும். அல்லது அரசாங்கத்தின் ஆளும் கட்சி 'அரசைக்' காப்பாற்றச் சரிவரச் செயல்படவில்லையென்றால், அரசாங்கம் கலைக்கப்படும். 

ஆகவே, தேர்தல்மூலம் ஒரு ஆளுங்கட்சி எதிர்க்கட்சியாகவும் மாறுவது என்பதும் எதிர்க்கட்சி ஆளும் கட்சியாகவும் மாறுவது என்பதும் அடிப்படையில் 'ஆளும் வர்க்கங்களின் நலன்களைக் ' காப்பாற்றுவதற்கே ஆகும். மக்கள் 'அரசுக்கு' எதிராகவும் அதன்மூலம் 'ஆளும் வர்க்கங்களின் நீடிப்பு எதிராகவும்'  கிளர்ந்தெழுந்துவிடக்கூடாது என்பதற்கே இந்த அரசாங்க மாற்றங்கள் நடைபெறுகின்றன. தங்கள் நலன்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு செயல்படும். 

மக்களின் 'ஆதரவை' இழக்கிற ஆளும் கட்சியினால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால்,  ஆளும் வர்க்கங்கள் இந்த 'ஆளுங்கட்சிகளை' மாற்றும். அதுவரை 'எதிர்க்கட்சியாக ' இருந்த ஒன்றை 'ஆளும் கட்சியாக' மாற்றும். இந்த ஆட்சி மாற்றங்களால் தங்கள் 'நலன்கள்' காப்பற்றப்படுவதுபோல் மக்கள் நம்பவைக்கப்படுவார்கள். 

மேற்கூறிய கருத்துக்களே சமூக உணர்வுள்ள இளைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டிய அடிப்படையாகும். இதுவே உண்மையான 'அரசியல்' ஆகும்! 

ஆளும் வர்க்கங்களைத் தூக்கியெறிவதே 'சமூகப் புரட்சி'! மாறாக, ஆளும் வர்க்கங்களின் நலன்களைப் பாதுகாக்கும் 'ஆளும் கட்சி' 'எதிர்க்கட்சி' இடமாற்றம் உண்மையில் சமூகப் புரட்சி இல்லை! இந்த இடமாற்றத்திற்குப் பின்னணியில் இருப்பது ஆளும் வர்க்கங்களே. இதை நாம் உணருவது சமூகப் புரட்சிக்கான முதல் படியாகும்!

தெய்வ சுந்தரம் நயினார்

https://www.facebook.com/100004424580477/posts/3644365909054193/?rdid=59QBNFvDZjpMkZQH

============================================

3
இந்தா தொடங்கிடாங்கப்பா 

மக்களுக்கு நன்றி இல்லை. மக்களுக்கு அரசியல் உணரவில்லை அது இல்லை இது இல்லை....

இப்போதும் மக்களுக்கு நாங்கள் இதெல்லாம் செய்தோம். எனவே எங்களுக்கு ஓட்டு போட்டிருக்க வேண்டும் என்ற தொனியே உடன் பிறப்புகள் இடமிருந்து வருகிறது.

இதில் விஜய்க்கு ஓட்டுப் போட்ட மக்கள் தரப்பு என்று ஒன்று இருக்கும் இல்லையா . . 

திமுக ஏராளமான சிறு சிறு தொகைகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டே இருந்தது. மகளிர் உதவித் தொகை, மாணவர் உதவித் தொகை, ரேஷனில் அவ்வப்போது தொகைகள் பொருட்கள்... இவை மக்களுக்கு நிச்சயம் உதவியாக இருந்து இருக்கும். 

ஆனால் இந்தத் தொகைகள் மக்கள் வாழ்க்கையை மாற்றவில்லை. பத்தாயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்கும் ஊழியர்களின் நெருக்கடியான வாழ்க்கை மாறவில்லை. நீண்ட வேலை நேரங்கள், கடுமையான பணியிட அடக்குமுறைகள்.....உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமை இன்னும் மோசமானது. நடுத்தர வர்க்கமும் EMI யும் பூவும் மணமும் போல பிரிக்க முடியாமல் பின்னிப் பிணைந்துள்ளன.

ஒரு சினிமா ஹீரோ, சூப்பர் ஹீரோ இதையெல்லாம் மாற்றி விடுவார் என்று நினைத்து இருக்கிறார்கள். 

திமுகவும் அதிமுகவும் மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று முயன்றனர். குட்டிக் குட்டி சாதிவெறி கட்சிகளுக்கு இடமளித்து அங்கீகாரமும் அளித்தனர். இந்தக் கட்சிகள்  இந்த அலையில் துடைக்கப் பட்டு விட்டன. இந்தக் கட்சிகள் ஜெயித்து இருந்தாலும் சமூகத்துக்கு ஆபத்துதான்.

விஜயால் மக்களின் எந்த எதிர்பார்ப்பையும் சரி செய்ய முடியாது.  கொஞ்ச காலத்துக்கு ஒரு மாற்றமாக இருப்பார். ஏதோ நம்பிக்கை கொடுப்பார்.

விஜய்க்கு கார்ப்பரேட் ஆதரவு இருக்கிறது. அது யார் என்று பாருங்கள் என்றால் முடியாது. அது தற்குறிகள் கூடாரம்.

இப்போது மக்களுக்கு பிரச்சினைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன என்றால் மக்கள் முட்டாள்கள். நம்பிக்கை துரோகிகள். 

ம் ஹும் மாறும் என்பதே மாறாது என்ற எங்காளின் வாக்கே பொய்யாகி விட்டதே.

இரா. முருகவேள்

https://www.facebook.com/1714910257/posts/10216322044119791/?rdid=WFyLR001k20lgddy

=====================================

4
தற்குறி திடீரென்று எழுச்சி ஆகி விட்டது.

த வெ கவுக்கு பெரிய அளவுக்கு கார்ப்பரேட் ஆதரவு இருந்ததும், திமுகவை விட சிறப்பான கட்சி கட்டமைப்பை அவர்கள் ஏற்படுத்தி இருந்ததும் நன்றாகவே தெரிந்தது. கோவையில் எல்லாம் அவர்களுக்கு அட்டகாசமான அலுவலகங்கள் உள்ளன.  திமுக அலுவலகங்கள் இதற்கு பக்கத்திலேயே வர முடியாது. எனவே வெற்றி இயல்பானதுதான்.

தற்குறி, தற்குறி என்று திமுகவினரும் கம்யுனிஸ்ட் காரர்களும் சொன்ன போது காமெடி போலிருந்தது.

ஆனால் கருத்துக் கணிப்பு காரர்கள் திமுக வெற்றி பெறும் என்று திரும்பத் திரும்ப சொன்ன போது தேர்தல் அறிவியலை நம்பாமல் எப்படி இருக்க முடியும் என்ற சந்தேகம் வந்தது.

பெண்களும் இளைஞர்களும் விஜய்க்கு ஓட்டு போடப் போவதை வெளியே சொல்லவில்லை போலிருக்கிறது. Axis my இந்தியா நிறுவனத்தின் vote sample பெரியது என்கிறார்கள். அதனால் அது சரியாக இருந்து இருக்கிறது.

ஆனால் ராகுல்காந்தி முன்பே ஓரளவு ஊகித்து இருக்கிறார். Cpim முரண்டு பிடித்தது கூட இதனால் இருக்கும். கார்ப்பரேட் வட்டங்களில் அந்தப் பேச்சு இருந்து இருக்கும் போலிருக்கிறது.

தேர்தலுக்கு பிறகு திருமா, பாலகிருஷ்ணன்,  வைகோ போன்றோர் ஊகித்து விட்டார்கள் போலிருக்கிறது.  எப்படி அந்த முடிவுக்கு வந்தரகள்  என்று அவர்கள்தான் விளக்க வேண்டும். தற்குறி திடீரென்று எழுச்சி ஆகி விட்டது.

கண் முன் அனைத்து அறிகுறிகளும் இருந்திருந்தும்  சரியாக புரிந்து கொள்ளாமல் இருந்து இருக்கிறோம்.

இரா. முருகவேள்

www.facebook.com/story.php?story_fbid=10216319494296047&id=1714910257&rdid=MD8drX930hCakG6A

===========================================

5
பாசிச எதிர்ப்பில்  பாட்டாளி வர்க்க அரசியலின் அடிப்படைக் கொள்வோம்!

முடியாட்சிக்கு எதிராக 

கலகம் செய்த நாட்டில் 

எப்படிடா?

 

இந்த 

ஃபோனபர்ட்  வந்து 

ஏறிக்கொண்டான்!

தலையில்!

என்று,

எல்லோரும் 

தலையை

பிய்த்துக் கொண்டனர்.

கடந்த காலத்தைப்

 பொறுத்தவரை

 புரட்சிகரமானதாகவும் 

எதிர்காலத்தைப்

 பொறுத்தவரை 

எதிர் புரட்சிகரமானதாகவும் 

விளங்கும்

முதலாளித்துவ

 ஜனநாயகத்தின் 

முற்போக்கு 

நாடகத் திரைகளை 

விலக்கி

அதன் 

உள்ளடக்கம் உருவாக்கும்

கேலிக்குரிய விளைவை

சமூக வர்க்கப் பின்னணியில் 

சரியாக விளக்கினார் 

மார்க்ஸ்,

" வரலாறு மீண்டும் நிகழ்கிறது

 முதல் முறை 

சோகமாக  

இரண்டாம் முறை

 கேலிக்குரியதாக!"

வரலாற்றின் 

நிர்ணயிக்கத்தக்க 

லட்சியவாத வர்க்கமான 

பாட்டாளி வர்க்கத்தின் 

இயக்கு விசைகளை

 கண்டறிந்து, 

சமூக அறிவியல் விதிப்படி 

தொழிலாளர் வர்க்கத்தின் மேல்

 நம்பிக்கை வைத்து 

அதற்காகவே 

இயங்கினார் மார்க்ஸ்.

தற்புகழ்ச்சியற்ற 

உழைக்கும் மக்களை

 காதலிக்கும் 

நெஞ்சம் அது! 

சொந்தக் கொள்கைக்கு 

குழி தோண்டி 

உழைக்கும் வர்க்க நலனை

 காலில் மிதித்து;

நெஞ்சமெல்லாம் 

வஞ்சமென 

கொஞ்சம் 

கொஞ்சமாக 

பாட்டாளி வர்க்க

 இயக்கத்தை சிதைத்து,

தஞ்சமென 

முதலாளித்துவ 

மஞ்சமெலாம் 

உருண்டு 

இங்கே 

திமுகவின் 

கொஞ்சும் புறாக்கள்

உடன்கட்டை 

சிறகடிக்கின்றன

ஒரு முதலாளித்துவ கட்சியின்

 தேர்தல் தோல்விக்காக 

தேம்பி விம்முகின்றன

கம்யூனிசத்தை 

இழந்ததற்காக கூட

கம்யூனிஸ்டுகள்

 ஒழிக்கப்படுவதற்காக கூட

கண்ணீர் சிந்தாத 

திருத்தல்வாத நாயகர்கள்! 

இவ்வாறு

வருந்தியது இல்லை 

இந்த உயிரினங்கள்!

துரத்தப்பட்ட 

வறுமையிலும் கூட  

மார்க்ஸ் 

வருத்தப்பட்டதெல்லாம் 

 பாட்டாளி வர்க்கத்துக்காகவே!

கண்ணீர் 

கண்டவருக்கும் 

அல்ல 

ரத்தம் 

எதிரிகளுக்கு 

அல்ல 

சித்தம் 

சுரண்டுபவருக்கு 

அல்ல 

வக்கப் போராட்டத்தின் 

யுத்தம் 

ஒன்றே வாழ்வு!

என வாழ்வாங்கு வாழ்ந்த மார்க்ஸ் பிறந்த நாளில் 

"மார்க்சிய திருத்தல்

 வாதங்களை "

தூக்கி எறிவோம்! 

பாசிச எதிர்ப்பில் 

பாட்டாளி வர்க்க அரசியலின் 

 அடிப்படைக் கொள்வோம்!

       - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1001877415852388/?rdid=PtKKs3e11aahsq5F

=====================================

6
செங்கொடிக்கு எதிராக செங்கொடியை அசைப்பவர்களை இனியும் கம்யூனிஸ்டுகள் என நம்புவது பேதமை!

"நல்லாட்சி" என்பது பொதுமக்களின் அனுபவ அடிப்படையில் பொருளாதார வழியில் தங்களுக்கு உதவி செய்வது, "நல்லது" செய்வது எனும் அடிப்படையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புரிதல் மட்டத்தை மெயின்டெய்ன் செய்வதையே ஆளும் கட்சிகள் தங்களுடைய அரசியல் தந்திரமாக கொண்டுள்ளன. 

நாங்கள்  அதை கொடுத்தோம்! இதைக் கொடுத்தோம்! என்று நலத்திட்ட உதவிகளைச் சொல்லி தாங்கள்தான் நல்லாட்சி! இது வேண்டுமா? 

இல்லை இன்னும் கஷ்டப்பட வேண்டுமா? எனும் மென்மையான மிரட்டல் அரசியல் அணுகுமுறையில் 

இதுதான் நல்லாட்சிக்கான அரசியல் என்பதை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வைத்துள்ளது அரசு. 

உழைத்து வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் எவ்வளவு எவ்வளவு சிதைக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நலத்திட்டங்களுக்கான ஏக்கங்களும் பிறக்கிறது. "முதலாளித்துவ நல அரசு" மேலும் மேலும் மூர்க்கமாக மூலதனத்தின் ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டே" மக்கள் நல அரசு" எனும் கோட்பாட்டை 

நிலை நிறுத்துவதில் மக்களின் சமூக வாழ்வில் முரண்பாடு வெடிக்கிறது. 

இந்த புறநிலை எதார்த்த வாழ்க்கைக் போராட்டங்கள், 

"நலத்திட்டங்கள்" " நல்லாட்சி" என்பவைகளை மக்களின் சுயமரியாதையான வாழ்விற்கு பொருந்தாததாக மேலும் மேலும் முரண்பாட்டை வளர்க்கிறது.

இந்த முரண்பாடு இன்னும் துலக்கமான வடிவத்தில் வெளிப்படாத வர்க்க முரண்பாட்டின் சூக்குமங்களைக் கொண்டுள்ளது. 

எனவே இது நலத்திட்டம் நல்லாட்சி என்பதன் போதாமையை மட்டுமல்ல முதலாளித்துவ அரசியலின் போதாமையையும் மக்களுக்கு எதிர்நிலை சக்திகளாக மாறிவிட்ட அதன் முரண்பாட்டையும் சேர்த்தே கொண்டு வருகிறது. 

இந்தப் போக்கில் கம்யூனிஸ்டுகள் கவனிக்க வேண்டியது முதலாளித்துவ நல அரசுகளின் நலத்திட்டம் நல்லாட்சி எனும் கோட்பாடுகளுக்கு பின்னே ஓடுவது அல்ல. மக்கள் தன்னியல்பாக இந்த போக்கில் இருந்து வெளிப்படுத்தும் அரசியல் அதிருப்தியை, கம்யூனிச அரசியலுக்கான உள்ளடக்கத்தோடு வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

மக்களே தன் அறிவிற்கு தன் முன்னே பரப்பப்பட்டுள்ள முதலாளித்து வகைப்பட்ட பழைய கருத்தாக்கங்களை நிராகரிக்கும் போது, அவர்களின் புதிய அரசியல் தேவைகளை ஈடு செய்யும் திறன் பெற்றவர்களாக கம்யூனிஸ்டுகள் முன்னே வந்து நிற்க வேண்டும். 

ஆனால் நமது தற்காலத்திய சுற்றுப்புற அவலம் மக்களே வெறுத்துப் போன கட்சிகளை

வென்றெடுக்கப் போவதுதான் 

கம்யூனிசம்! என கதை விட்டுக் கொண்டிருக்கும் திருத்தல்வாதம். 

உண்மையில் மக்கள் தன்னியல் பாக குறிப்பு காட்டும் சூழல்களை, மக்களை வென்றெடுக்கும் தருணத்தை சரியாக அரசியல் படுத்த பயன்படுத்திக் கொள்வதுதான் உண்மையான கம்யூனிஸ்டுகளின் அளப்பரிய பணி. 

ஆனால் தேர்தல் புனித வாதிகளின் பிழைப்பிற்கு இது தேவைப்படவில்லை. 

தமிழக அரசியல் களத்தில் மக்கள் ஆள்வதற்கு கொடுத்த வாய்ப்பை உழைக்கும் மக்களின் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்கு எதிராக பிரயோகித்த திமுகவை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள். தங்கள் வர்க்க நலனுக்கு அப்பாற்பட்டு சப்பை கட்ட வேண்டிய தேவை மக்களுக்கு இல்லை. 

திராவிட மாடல் கதைகளை நம்பவும் தயாராக இல்லை. 

"உனது திராவிட மாடல் புதிய பொருளாதாரக் கொள்கை தனியார்மய உலகமயத்தை ஏற்கிறதா? எதிர்க்கிறதா?" என்பதைச் சொல்! என நடைமுறை போராட்டங்களின் மூலமாக கேள்விகளை எழுப்பி அதன் ஏகாதிபத்திய முதலாளி வர்க்க சேர்மானத்தை அம்பலப்படுத்தி விட்டார்கள். 

ஓட்டு போடுவது எனும் அரங்கிலும் கூட தொடர்ந்து உன்னுடைய அரசியல் எங்களிடம் செல்லாது என்று தங்களுக்குத் தெரிந்த ஏதோ ஒரு முறையில் வெளிப்படுத்துவது என்பது ஒருவகையில் முன்னோக்கிய சிந்தனை. இந்த நிலையை மேற்கொண்டு வளர்த்தெடுப்பதற்கு தான் கம்யூனிஸ்டுகள் தேவை.

இத்தனைக்கும் பிறகும் கூட மக்களை விடவும் பின்தங்கி நின்று கொண்டு செங்கொடிக்கு எதிராக செங்கொடியை அசைப்பவர்களை இனியும் கம்யூனிஸ்டுகள் என நம்புவது பேதமை! 

கம்யூனிஸ்டுகளுக்கே உரிய வர்க்கப் போராட்ட அரசியல் திட்டங்களை முன்வைத்து மக்களை குறைந்தபட்சம் இடதுசாரி அரசியல் தோழமை சக்தியாக வென்றெடுக்கும் வேலைதான், தேர்தல் அரசியலின் உள் முரண்களில் இருந்தும் மக்களின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப கம்யூனிஸ்டுகள் தங்களை வளர்த்துக் கொள்ளும் வழிமுறையாக இருக்க முடியும்.

        - துரை. சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1004234335616696/?rdid=a7hoqqiXJ9NRyv06

===========================================

7
பெயரளவிற்கு மார்க்சியம் பேசுவதைக் கூட முதலாளித்துவம் ஏற்றுக் கொள்ளாத நிலைக்கு பாராளுமன்றப் பாதை போய்விட்டது

தேர்தல் அரசியலில் பங்கு கொண்டு பாராளுமன்றப் பாதையை நிராகரித்த அமைப்புகளுக்கு எதிராக,

அப்பாதையை ஏற்றுக் கொண்டன சில கம்யூனிஸ்டு கட்சிகள்.

நிராகரித்தவர்கள் ஒருபுறம் தங்களுடைய அதிதீவிர நடவடிக்கைகளால் பின்னடைவை சந்தித்தனர்.

ஏற்றுக் கொண்டவர்கள் சற்று முன்னேறியது போலத் தெரிந்தது.

அவ்வாறு ஏற்றுக் கொண்டவர்களின் பணி என்பது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் மூலம் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதும்,

உழைக்கும் மக்களின் குரலை ஒலிப்பதுவும்தான்.

ஆனால் அக்கட்சிகளோ நிராகரித்தவர்கள் ஒரு எல்லைக்குப் போய்விட்டதைப் போன்று, இவர்கள் வேறொரு எல்லைக்குப் போய்,

 பாராளுமன்றங்களின் மூலமே சமூக மாற்றத்தை உருவாக்கிவிட முடியும் என்று நம்பினார்கள்.

அதையே தங்களுடைய செயல்தந்திரமாகவும் மாற்றிக் கொண்டார்கள்.

இப்போது இப்படி ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்டு கட்சிகள் பாராளுமன்றத்தை புறக்கணிக்கவில்லை

மாறாக பாராளுமன்றப் பாதை இவர்களை புறக்கணித்துவிட்டது.

அதாவது பெயரளவிற்கு மார்க்சியம் பேசுவதைக் கூட முதலாளித்துவம் ஏற்றுக் கொள்ளாத நிலைக்கு பாராளுமன்றப் பாதை போய்விட்டது.

இனி இருதரப்பும் என்ன செய்யப் போகிறது.

தங்களுடைய தோல்விகளை சுயவிமர்சனமாக பரிசீலித்துக் கொள்ளப் போகின்றனவா அல்லது தவறுகளுக்கு காரணம் கற்பிக்கப் போகின்றனவா ?

Chandran Dhamodaran

https://www.facebook.com/story.php?story_fbid=122280598370244910&id=61557347300989&rdid=nCDR0UY0fZVtzQfG

========================================

8
விஜய் முதலாளித்துவத்தின் மற்றொரு தயாரிப்புதான்

வாக்கு இயந்திரத்தில் குளறுபடி மூலம் பா ஜக விஜயின் தவெகவை வெற்றி பெற வைத்திருக்கிறது என்று திமுக ஆதரவாளர்களும், திமுக ஆதரவு முற்போக்கு அறிவுஜீவிகளும், திமுகவை ஆதரிக்காத சில முற்போக்காளர்களும் எழுத ஆரம்பித்துள்ளனர்.

அதை உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும் கூட

அப்படிப்பட்ட வெற்றியைத் தரும் அளவுக்கான வாக்குகளுக்கு அருகாமையிலாவது தவெக வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.

மாறாக நாதகவின் வாக்குகளைப் போன்ற வாக்குகளைப் பெற்றிருந்தால் தவெகவை வெற்றியாளராக்க முடியாது.

அப்படிப் பார்த்தாலும் தவெகவிற்கு பெருவாரியான வாக்குகள் பதிவாகியிருப்பதை முதலில் ஒப்புக் கொள்ளவேண்டும்.

அந்த அளவு திராவிடக் கட்சிகளின் மீதான,

அவர்களுடைய பண்ணையார்த்தனம், ஊழல் , அதிகார மமதை, அதிகார துஷ்பிரயோகம்,

நிர்வாக சீர்கேடு,

முதலாளிகளுக்கு ஆதரவும், உழைக்கும் மக்களுக்கு எதிர்ப்புமான கொள்கைகள், நடவடிக்கைகள் போன்றவற்றின் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பைத்தான் இந்த வாக்குகள் வெளிப்படுத்துகிறது.

அடுத்து இதை பா ஜகதான் செய்யுமா, வேறு யாரும் பாஜகவை செய்ய வைத்திருக்கக் கூடாதா என்ற கேள்வியை எழுப்பி விடை தேடலாம்.

இவ்வாறான கேள்வியை எழுப்புவதே வித்தியாசமானதாகவும், அதீதமானதாகவும் தோன்றலாம்.

ஆனால் இப்படிப்பட்ட கேள்வியை மார்க்சியவாதிகள்தான் எழுப்ப முடியும்.

ஏனென்றால் மார்க்சியம்தான் பொருளுற்பத்தி என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் என்ற மேல்கட்டுமானம் உருவாகிறது என்ற தத்துவத்தை அளித்திருக்கிறது.

ஆனால் மற்ற கட்சிகள் இப்படியொரு தத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை அதனால் அவர்கள் இப்படிப்பட்ட கேள்வியை எழுப்ப மாட்டார்கள்.

உதாரணமாக திமுகவைப் பொருத்தவரை திராவிடம் எனும் தத்துவம்தான் சமூகத்தை இயக்குவதாக நம்புகிறார்கள், அதனால்தான் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மனிதக் குரங்காக இருந்த மனிதன் ஆறறிவு பெற்றவனாக ஆனான் என்று பேசுகிற நிலை உருவாகிறது.

அடித்தளம், மேற்கட்டுமானத்தை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது முதலாளித்துவ வர்க்கம் தனக்குத் தேவையான அரசியல் கட்சிகளை பல வண்ணங்களில் உருவாக்கிக் கொள்ளும், ஒருவேளை மக்களிடமிருந்து எழுச்சியோடு ஒரு அரசியல் இயக்கம் உருவானால் அதை தனக்கேற்ப வளைத்து இயக்கும்.

அதிலொன்றுதான் பா ஜக. மற்றபடி இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது, ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது பா ஜக அல்ல, முதலாளித்துவ அடித்தளம்.

இதைச் சொல்லும் போது பாசிசம் என்பதன் அரசியல் வடிவம்  முதலாளித்துவ அதிகாரத்திற்கு கட்டுப்பட்டதுதான் என்பதை ஏற்கவேண்டும்.

ஆனால் திமுக போன்ற முதலாளித்துவ கட்சிகள் அதை ஏற்பதில்லை.

மாறாக பாசிசத்தை அனைத்துக்கும் மேலானதாக உயர்த்திக் காட்டுகிறார்கள்.

எனவே விஜய் முதலாளித்துவத்தின் மற்றொரு தயாரிப்புதான்.

இது மக்கள் எழுச்சியோடு மேலெழுந்து வருமென்று கண்டுணர்ந்து விஜயைக் கூட சில பல ஆண்டுகளாக திரைத்துறையிலும் வளர்த்தெடுத்து வந்திருக்கலாம்.

அதறுகேற்ப அவருடைய வியாபாரத்தை எப்போதும் முன்னணியிலேயே வைத்திருந்து பிம்பத்தை வளர்த்தெடுத்திருக்கலாம்

இன்றும் விஜய் தேர்தல் களத்திலும் பெருவாரியான வாக்குகள் பெறும் போது வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருக்கலாம்.

அதை பா ஜ க மூலமும் , அதன் கைப்பாவையாக இயங்கும் தேர்தல் ஆணையம் மூலமும் நடைமுறைப்படுத்தி இருக்கலாம்.

எனவே விஜய் ஒரு முதலாளித்துவ வர்க்க விளைபொருளென்று பார்க்காமல் பா ஜகவின்  விளைபொருளென்று  திராவிடக் கருத்தியலாளர்கள் போல

மார்க்சியவாதிகள்

 பார்க்கக் கூடாது.

இதுகூட ஒரு பார்வைதான்.

இதுவே இறுதியானதென்பதில்லை.

சரியானதென்பதில்லை என்று கூட வாதிடலாம்.

எது சரியான பார்வை என விளக்கி நிரூபிக்க வேண்டியது கம்யூனிஸ்டு கட்சிகளின் பணி.

அவர்கள் வலுவான ஆதாரத்தோடு வாதத்தை முன்வைக்கும் போதுதான் உண்மையை நம்மைப் போன்றவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

அதோடு  பா ஜ க பற்றிய அதீதமான கட்டமைப்புகளை உருவாக்காமலும், அதன் மூலம் பா ஜகவிற்கு பலமான பிம்பத்தையும் முற்போக்காளர்களே உருவாக்காத நிலையும் வரும்.

ஆனால் இங்கோ திராவிடக் கருத்தியலாளர்கள் மற்றும்  கம்யூனிஸ்டுகள், முற்போக்காளர்கள் என்று கூறிக்கொண்டு திராவிடக் கருத்தியலை தூக்கிச் சுமப்பவர்களின் கருத்தைத்தான் கம்யூனிஸ்டு கட்சிகளே முன்வைக்கின்றன என்ற பரிதாப நிலை.

இதைவிட மோசமானது, அடித்தளம், மேற்கட்டுமானம் என்ற மார்க்சிய சமூக இயக்கவியல் விதியே தவறு என்றும்,

பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வன்முறையானது அஹிம்சைதான் சிறந்தது என்றும்,

பொதுவான ஜனநாயகம் என்று ஒன்று உண்டு என்றும்,

முதலாளித்துவ சர்வாதிகாரத்தையே பொதுவான ஜனநாயகம் என்றும் திரித்து,

திரிபுவாதக் கருத்துக்களை பரப்பும் அந்நிய என்ஜிஓ கையாட்களை மார்க்சிய அறிஞர் என்று தூக்கிச் சுமக்கும் கட்சிகளிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியம்.

Chandran Dhamodaran

https://www.facebook.com/61557347300989/posts/122280733286244910/?rdid=YSDoXvCe7ugrEEFy

=============================================

9
காலத்தினால் என்றும் மறக்க முடியாத மாபெரும் தேர்தல் 2026

தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியல் களம் முன்பிருந்ததுபோல் இல்லை. முற்றிலும் மாறியிருக்கிறது. இதனை எளிய மக்கள்கூட ஓரளவு  உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், கட்சி அரசியலுக்குள்ளேயே உழன்றுகொண்டிருக்கின்ற பெருங்கட்சிக்காரர்கள் அறவே உணரவில்லை. அவர்களுடைய பேச்சும் கருத்தும் கொள்கைகளும் அறைகூவல்களும் களமனநிலையைப் பெரிதும் கருத்தில்கொண்டு எழுந்தனவாக இல்லை. அதே பழைய முறையிலான புள்ளிவைப்புகளாகவே இருந்தன. அல்லது அவர்கட்குத் தெரிந்திருந்தும் தாம் நம்பியவற்றையே பேசவேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறார்கள். 

தொண்ணூற்றைந்துக்குப் பிறகு பிறந்தவர்கள் தொழில்நுட்பப் பேருலகில் வாழத் தலைப்பட்டவர்கள். உண்மையிலேயே இவர்களுடைய உலகம் முற்றிலும் வேறாக இருந்திருக்கிறது. இருக்கிறது. இனி அவர்களோடு பழைய தலைமுறையினர் போட்டியிட்டு வெல்வது எங்ஙனம் ? எண்பதுகளில் நாம் வாழ்ந்த பசித்த வாழ்க்கையினர் அல்லர். ஒருவகையில் பசிப்பிணிக்குத் தீர்வு கிடைத்த தலைமுறையினர் அவர்கள். இவற்றோடு இணைய ஊடகப் பங்கேற்பிலும் அவர்கள் வல்லவர்களாகத் திகழ்கிறார்கள். அவற்றில் அவர்கள் ஏதேனும் ஒருவகையில் பங்கேற்கிறார்கள். நன்கு எழுதப் படிக்கத் தெரியவேண்டுமென்ற கட்டாயம்கூட இல்லை. ஒரு காணொளியில் அன்றாடப் பேச்சுவழக்கில் பேசிப் பதிவேற்றிவிடலாம். அவர்களும் படைப்பாளிகள். எண்மப் படைப்பாளிகள் என்றே ஊடகமும் அவர்களை அழைக்கிறதே. (உண்மையான ஊடகங்களில் பலவும் அகம் ஊடும் தன்மையழிந்தன.) 

தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் நான் இளைய தலைமுறையினரோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன். எனது தனிப்பட்ட வகுப்புகளில் பலரையும் காண்கிறேன். அவர்கள் முற்றிலும் வேறுபட்ட மனநிலையினராக இருப்பதனை அறிந்தேன். அவர்கள் மிகவும் நிகழ்வுலகத் தொடர்போடு வாழ்கிறார்கள். அவர்களிடம் பழையன பேச இயலாது. புதிய பொறுப்புகளைக் கற்பித்து அழுத்தவும் கூடாது. அப்படிச் செய்தால் உங்கள் திசைக்கே வரமாட்டார்கள். அவரவர் போக்கில் அடையத்தக்க  மேம்பாடுகளைத்தாம் வலியுறுத்தமுடியும். அப்படித்தான் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய “அண்டமே” (யுனிவெர்ஸ்) வேறு. மெல்ல மெல்லவே பழைய கட்டுக்கோப்பான மனத்தினரின் தொகை குறைந்துபோய் புதுத்தலைமுறைப் போக்குடையோரின் எண்ணிக்கை பெரும்பான்மை ஆகிவிட்டது. அவர்கள் தரப்பினரை முன்வைக்கும் ஓர் அமைப்பு நம்மிடையே ஏதேனும் உண்டா ? இல்லை. அப்பொருளில் பெருவெற்றிடம் நிலவுகிறது. இப்போதுள்ள எவ்வகை அமைப்பாலும் அவர்களை ஈர்க்கவும் இயலாது. 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் - நம்மிடையே திகழ்கின்ற கட்சி அரசியல், தேர்தல் நேரத்து அரசியல், கொள்கை அரசியல், கோட்பாட்டு அரசியல், கூட்டணி அரசியல், ஊழல் ஆட்சியியல் என அனைத்தின்மீதும் மாபெரும் கசப்புணர்ச்சியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோமா, இல்லையா ? அது குறித்த உரையாடலைக்கூட நாம் முன்னெடுக்க முடிவதில்லை. ’ஐயோ மனம் புண்பட்டுவிடுமோ’ என்று பலரும் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். பொறுப்பிலிருக்கின்ற நட்பு ஆற்றலர்கள் அவற்றுக்கெதிரான ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லையே. முற்றுமுழுக்கக்கூட வேண்டா, எதனையும் சிறிதளவாவது மேம்படுத்த முடியாதா ?  

தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு எனது பதிவுகளையே குறைத்துக்கொண்டேன். பொதுவாக ஒரு சொல் குற்றஞ்சாட்டி வந்தால்கூட அது தம்மைத்தான் சுட்டுகிறதோ என்று கொண்டு ஏடாகூடம் செய்யத் தொடங்கவேண்டியது.  கட்சிப்பற்று கரையுடைந்து பாய்ந்ததில் நல்லோர் அல்லோர் வேறுபாடற்றுக் கடித்தார்கள். இளைய தலைமுறையினரின் இப்போக்கினை உணர்ந்து, அவர்களை ஈர்ப்பதில் விட்டுவிட்ட காலத்தாழ்ச்சியை உணர்த்தும்வகையில் சில சொற்களைக்கூட எழுத முடியவில்லை. தமிழுக்கு எதிரான ஆங்கிலமொழிப் பெரும்பரவலைச் சாடி எழுதியபோது நட்பு ஆற்றலர்களே அதிலுள்ள ஒரு புள்ளியைக்கூடப் பொருட்படுத்தாமல் மனம்போன போக்கில் எழுதினர். நமக்கு நாமே எழுதிக்கொள்வதில் யாது பயன் ? வெளியே பெருந்திரளான மக்கட்கூட்டம்தானே ஆட்சியைத் தேர்ந்தெடுக்கிறது ? அவர்கட்குத் தெரியாதென்றா நினைத்துக்கொள்வது ? 

தேர்தல் காலங்களில் தொடர்ந்து சாதி மதக் கணக்குகளைக் குறுக்கும் நெடுக்கும் போட்டுக் கொண்டாடியவர்களைக் கண்டாலே குமட்டியது.  “மக்கள் எப்போதும் அப்படியில்லை, நம்மவர்களிடையே வேறுபாட்டுணர்ச்சியைத் தூண்ட இயலாது, பெரும்பான்மைக்கு அந்தப் பார்வை என்றுமே இல்லை”  என்று தொடர்ந்து நண்பர்களிடம் கூறியிருக்கிறேன். இன்றைக்குத் தோற்றுப் போனது எந்தக் கணக்கு என்று அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். மேலும் மேலும் இந்தக் கணக்கு தோற்றுக்கொண்டேதான் இருக்கும். 

நூறு நூறு படிப்பனைகளைக் கொடுத்துச் சென்றுள்ள, காலத்தினால் என்றும் மறக்க முடியாத மாபெரும் தேர்தல் என்று ஈராயிரத்து இருபத்தாறு சட்டமன்றத் தேர்தலைக் குறித்துவைத்துக்கொள்வோம். இந்தப் போக்கினை உணர்த்தியலில், அதாவது இதிலும்  தமிழ்நாடே முந்திக்கொண்டதாக இருக்கலாம். 

வாழ்க மக்கள், வாழ்க தமிழ்நாடு !  

- கவிஞர் மகுடேசுவரன்

https://www.facebook.com/100000854949412/posts/27026154186996381/?rdid=MgvGBi8GkOTfK9eJ

============================================

10
ஒருநாள் இந்த வானம் நம் வசப்படும். அன்றதன் விடியலும் அழகும் அணைவருக்குமானதாக இருக்கும்

கடந்த 5 ஆண்டுகளாக மக்களை புரிந்து கொள்ளாமல், மக்கள் பக்கம் உறுதியாக நிற்காமல், தி.மு.க அரசை மக்களிடம் இருந்தும் மற்ற சக்திகளிடம் இருந்தும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றதற்காக மக்கள் தக்க பாடம் புகட்டி.இருக்கிறார்கள்.

ஆனால், இப்போதும் கூட அவர்களின் மொழியை புரிந்து கொள்ளாமல், மக்களுக்கு அரசியல் புரியவில்லை, மக்கள் கவர்ச்சியில் மயங்கி விட்டார்கள், இளைஞர்கள் இதற்கான விளைவை அனுபவிப்பார்கள் என்றெல்லாம் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தோழர்கள் பலரும் எழுதுகிறார்கள், "திரைக்கவர்ச்சியில் மக்கள் விழுந்து விட்டார்கள் வேறொன்றும் இல்லை."

இப்படி எளிமையாக காரணம் சொல்லி, அடுத்தவரை கை காட்டி, தற்கால சமூக ஓட்டத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய கடமையில் இருந்து நழுவுகிறார்கள். ஏற்கானவே இபப்டி நழுவி நழுவி தான் இந்த இடத்தில் வந்து நிற்கிறோம் என்பதைக் கூட உணராமல், இப்பவும் இப்படி பேசுவது வருத்தத்தையும் ஆத்திரத்தையும் அளிக்கிறது. இந்த "வேறொன்றும் இல்லை" என்பதன் பின்னால் தான் இத்தனை காலம் தவற விட்ட ஆய்வுகளும், வர்க்க கண்ணோட்டமும், இயக்கவியல் பார்வையும் உள்ளடங்கி இருக்கிறது.

பெரும்பாலும் நேற்றைய நாள் நிகழ்வாக இது சுருக்கி பேசப்படுத்திறது. ஆனால் இது கால ஓட்டத்தின் ஒரு நிலை. குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையில் இருந்து இது துவங்கப்பட வேண்டும்.

தி.மு.க ஆட்சி அமைத்த உடன் முதல் பொங்கல் 2022 இல் வந்தது அந்த பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி இருந்ததாக புகார் அளித்த ஒருவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கடுமையாக விசாரணை செய்தது. இதில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவரின் மகன் தீக்குளித்து உயிரிழந்தார். பின்னர் கைது செய்யப்பட்டிருந்த தந்தையும் உயிரிழந்தார். 

இது தான் அரசு மக்களை கையாள்வதில் முக்கிய உறுப்பான காவல்துறையின் துவக்க நிலை போக்காகவே இருந்தது. அது தொட்டு, காவல் மரணங்கள், காவல்நிலையம் முன்னரே விசம் அருந்தி மரணம், போராடியவர்களை காவல்துறை நடத்திய விதம் என தொடர்ந்து அரசு தனது கோர முகத்தை காட்டிக் கொண்டே இருந்தது. 

மக்களின் அன்றாட வாழ்க்கை அனைத்து வகைகளிலும் பாதிக்கப்பட்டு கஞ்சா, போதை, சாதிய வெறி, வேலை இல்லா திண்டாட்டம், பெண்கள் பாதுகாப்பு இல்லாமை என ஏகப்பட்ட விஷயங்கள் மக்களின் கோவத்துக்கு இந்த அரசை ஆளாக்கியது.

இந்தக் கோவம் ஏதேனும் ஒரு வகையில் முறையாக கையாளப்பட்டிருக்க வேண்டும். ஐந்தாண்டுகள் துவக்கம் முதலே அ.தி.மு.க hybernate mode க்கு சென்று விட்டது. மக்கள் அரசின் மீது கொண்டிருந்த கோவம் இந்த அரச எந்திரத்தின் மீதான விரக்தியாக மாற துவங்கி இருந்தது. இதையும் அந்த இடத்திலும் கூட இடதுசாரிகள் உணரவில்லை. ஆளும் வர்க்கம் மிக சரியாக அந்த எச்சரிக்கையை உணர்ந்து கொண்டது. மக்களை மீண்டும் இந்த முதலாளித்துவ ஜனநாயக போர்வையின் மீது நம்பிக்கை கொள்ள வைக்க ஒரு ஊன்று கோல் கொணர்ந்தது. 

த.வெ.க இங்கு பாலாறும் தேனாரும் கொண்டு வரும் என்று மக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை. மாறாக, அவர்களின் address பண்ணப்படாத கோவத்தை எழுந்து வந்த ஆளுமையின் மேல் சுமத்தி வடிகாலாக தங்களை பிரதிபலிக்கும் பிம்பமாக உருவகப்படுத்திக் கொண்டார்கள்.

விஜய்யின் பின்னால் இருக்கும் ஆளும் வர்க்கத்தின் தரப்பு மிக வலிமையானதாகவும் எந்த இடத்திலும் நிலவுடைமை உற்பத்தி சாராத நவீன மூலதன சகத்தியாகவும் இருப்பதாகத்தான் தெரிகிறது. சத்யாபாமா, சாய் ராம் போன்றவை எல்லாம் விஜய் கட்சிக்கு மூன்றாம் நிலை நிதி ஆதாரங்களாகத்தான் இருக்க முடியும். மற்றபடி தொழில்நுட்ப துறை சார்ந்த, ngo வகைப்பட்ட மூலதன சக்திகள் தான் பெரிய பலமாக இருந்திருக்கும். நிற்க.

அத்தகைய ஆளும் வர்க்க தரப்பு மக்களின் இந்த நிலையை மிகச் சரியாக கணித்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. பலரும் சொல்வது போல எதிர்பாராத luck என்று இதனை எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி எடுத்துக் கொள்வதானால், அதற்கு பதில் எல்லாம் அவன் செயல் என்று மொத்தமாக சொல்லி விட்டுப் போகலாம். 

இது இன்றைய நேற்றைய பிரச்சனை அல்ல குறைந்தபட்சம் 5 வருடங்களுக்கு முன் தி.மு.க ஆட்சியில் அமர்ந்து "அரசாக" மக்களுக்கு எதிர் நின்று தனது வேலையை செய்ய துவங்கிய போது, மக்களின் கோவத்தை துன்பத்தை சரியான முறையில் address பண்ணும் வலுவான ஆளும் வர்க்க எதிர் சக்தி இல்லாத நிலையில், இடதுசாரிகள் அந்த இடத்தை எடுத்திருக்க வேண்டும். மத்திய பி.ஜே.பி அரசையும் மாநில தி.மு.க அரசையும் வலுவாக எதிர்த்திருக்க வேண்டும். (ஆனால், நமது தோழர்கள் பி.ஜே.பி யை கூட தி.மு.க விடம் இருந்து உத்தரவு வந்தால் மட்டுமே எதிர்ப்பது எனும் நிலைக்கு தாழ்ந்து விட்டார்கள்) அப்படி செய்ய முடிந்திருக்கும் பட்சத்தில் அரசியல் களத்திலான முரணை வேறு வகையில் மாற்றி எழுதி ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி இருக்கலாம். 

அதன் பின்னர் விஜய்யே வந்திருந்தாலும் கூட அவரும் இன்னொரு தி.மு.க தான். ரெண்டு பேரும் ஒன்னு தான் என narrative shift க்கு முயற்சி செய்திருக்கலாம்.

முதலாளித்துவம் தனக்கான சவக்குழியை தானே தோண்டிக் கொள்ளும் என்பது உற்பத்தி சார்ந்து வேறொரு இடத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இந்த இடத்தில் பொருந்துவதால் எடுத்துக் கொள்ளலாம். மக்களை இந்த முதலாளித்துவ ஜனநாயக போர்வையின் மீது - இந்த அரச எந்திரத்தின் மீது - நம்பிக்கை கொள்ள வைக்க ஆளும் வர்க்கம் இளைஞர்களையும் மாணவர்களையும் பெண்களையும் அரசியல் களத்திற்கு உள்ளே இழுத்து விட்டிருக்கிறது.

பழைய உற்பத்தி முறைகள் நிலவிய காலம் போல மக்கள் ஒன்றின் மீது அதிருப்தி கொள்வதற்கு மிக அதிக காலம் இந்த முதலாளித்துவ சமூகத்தில் தேவைப்படுவதில்லை. சரியாக வேலை செய்தால் மிக விரைவில் - சில ஆண்டுகளில் - அது நடக்கும்.

காந்தி தனது போராட்டங்களில் மிகக் குறிப்பாக அன்றைய புரட்சிகர சக்திகளான விவசாயிகளையும் பாட்டாளிகளையும் கொண்டு வருவதை தவிர்த்தே வந்தார் என பகத்சிங் வைத்த கருத்து நாம் ஊன்றி கவனத்தில் கொள்ள வேண்டியது. ஏனெனில் அவர்கள் உள்ளே வந்தால் அது காந்தி விரும்பும் நோக்கங்களோடு நிற்காமல் வர்க்க விடுதலை என்பதை நோக்கி சென்று விடும் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. 

அதே போல இங்கு இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அரசியலற்று இருத்திவைக்கப்பட்ட பெருங்கூட்டம் ஒன்று தற்போது களம் நோக்கி இழுத்து விடப்பட்டுள்ளது.

இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை தோழர்களே !

Stage is all set. தி.மு.க தான் பா.ஜ.க வுக்கு மாற்று என்பது போல தி.மு.க தான் தா.வெ. க வுக்கு மாற்று என பழைய பல்லவி பாடிக் கொண்டிருக்க வேண்டாம்.

இனியேனும் தி.மு.க விடம் இருந்து கடன் வாங்கிய narrative களையும், விவரங்களையும் வைத்து பேசிக் கொண்டிருக்காமல், அவர்களது நலனுக்காக அடியார்க்கு அடியாராக வேலை செய்யாமல், சொந்தமாக ஆய்வு செய்து, மார்க்சிய அடிப்படையில், மக்களின் நலனுக்காக மட்டுமே நமது  செயல்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும். 

தி.மு.க வின் கருத்துருவாக்கங்கள் பின் செல்வதை விடுவோம். தி.மு.க வின் எதிரிகள் நமது எதிரிகள் அல்ல. தி.மு.க வும் நமக்கு எதிரி தான் என உணர்வோம். மக்களை திட்டும் மண்டை வீங்கித்தனத்தை விடுவோம். மக்களிடம் கற்போம் அவர்களுள் உள்ள புரட்சிகர தன்மையை சரியாகக் கண்டு address பண்ணுவோம்.

பின் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படையில் அவர்களோடு இணைந்து தீர்வு நோக்கி முன்னேறுவோம். மிகப்பெரிய தலைகீழ் மாற்றம் தேவையாக உள்ள சமூக சூழலில் இன்றய ஆட்சி மாற்றம் போதுமானதல்ல என்பதை சீக்கிரமே உணர்ந்து கொள்வார்கள். கரித்துக் கொட்ட அல்ல. அவர்கள் கரம் பற்ற தயாராகுவோம். 

ஒருநாள் இந்த வானம் நம் வசப்படும். அன்றதன் விடியலும் அழகும் அணைவருக்குமானதாக இருக்கும். 

இன்குலாப் ஜிந்தாபாத் !

Lingam Deva

https://www.facebook.com/100002769735269/posts/25736996235976015/?rdid=oTlQQDrXnRTBLV1U

=======================

11
நினைத்துப் பார்க்க முடியாத  அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து கொண்டுள்ளன...!

தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுகவும், அதிமுகவும் கை கோர்க்கிறார்களாம்! தவெகவுடன் இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஓன்றிணைந்து அதிகாரம் பெறுவதை திமுகவும், அதிமுகவும் கை கோர்த்து தடுப்பானேன்? இதன் பின்னணி என்ன?

‘எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்கும்’ என்ற நிலைபாட்டை ஸ்டாலின் எடுத்துள்ளார். இதற்கான முன்னெடுப்புகள்  வேகம் பெற்றுள்ளன.

மே-5 ஆம் தேதி மாலை எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுன், உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, ”தவெக ஆட்சி அமைவதை தடுக்க, ”நம் இரு திராவிட இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும்..’’ என்று ஆதரவு கேட்ட தகவல் கிடைத்த போது நம்ப முடியவில்லை.

பெரியாரையும், அம்பேத்காரையும் வழிகாட்டித் தலைவராக அறிவித்து செயல்படும் விஜய் திராவிட கருத்தியலுக்கு எதிராக ஒரு போதும் பேசியதில்லையே. ‘பாஜக கொள்கை விரோதி என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் சமரசமே இல்லை’ என கடைசி நாள் தேர்தல் பிரச்சாரத்திலும் விஜய் உறுதிபடுத்தி உள்ளாரே.

‘அவசரப்பட்டு எதையும் எழுத வேண்டாம்’ என நாம் அமைதி காத்தோம்.

அதன் பிறகு திமுகவிடம் ஆதரவு கேட்ட எடப்பாடி பழனிச்சாமியை மிகக் கடுமையாக விமர்சித்து  சி.வி. சண்முகம் உள்ளிட்ட சில அதிமுக எம்.எல்.ஏக்கள் பேசிய செய்தி  வந்தது.

’பரவாயில்லையே அதிமுகவில் ஒரு சிலருக்கேனும் சுயமரியாதை இருக்கிறதே?  அறச் சீற்றம் இருக்கிறதே.. தலைமையை தட்டிக் கேட்கும் ஜனநாயகம் இருக்கிறதே’ என நினைத்துக் கொண்டோம்.

அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி சுதாரித்துக் கொண்டு, அதிமுக எம்.எல்.ஏக்களை புதுச்சேரி தூக்கிச் சென்று தங்க வைத்து, ’’நல்ல செய்தி தரப்போகிறேன். நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம்’’ எனப் பேசிய தகவல்கள் வெளியாயின.

”எடப்பாடியார் ஆட்சி அமைக்கும் வரை எம்.எல்.ஏ.க்கள் பாண்டிச்சேரியிலேயே தங்கியிருப்பார்கள்” என அந்தக் கட்சி நிர்வாகி அன்பழகன் கூறி இருக்கிறார்.

அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளிடமும் ஸ்டாலின் தகவல் கூறியுள்ளார்.

கட்சிக் கூட்டத்திலும் ”நான் எந்த முடிவு எடுத்தாலும், நீங்க எல்லாம் கட்டுபட்டு நடக்கனும்.. வர்ற 10-ந் தேதி வரைக்கும் சென்னையில் தான் இருக்கனும்”  என்று அதிரடியாக உத்தரவு போட்டுள்ளார் ஸ்டாலின். அவசரகால முடிவுகளை கட்சி தலைமை எடுக்கும் போது அதனை அங்கீகரிக்க வேண்டும்…’’ என்றும் கூறியுள்ளார், ஸ்டாலின்.

“நிலையான ஆட்சி அமைய, அவசரமான எந்த முடிவையும் எடுக்க” ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கி,  திமுகவின் உயர் நிலை கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.

”பாஜக முகமுடியை போட்டுக் கொண்டுள்ளது அதிமுக . அதிமுகவிற்கு வாக்களிப்பது  பாஜகவின்  மறைமுக ஆட்சிக்கு வித்திடுவதாகவே முடியும்” என்று மேடைதோறும் ஸ்டாலினும், உடன் பிறப்புகளும் பேசிய வார்த்தைகளின் ஈரம் இன்னும் காயவில்லை. திடீரென்று அதிமுக புனிதமான கட்சியாகிவிட்டதா திமுகவிற்கு? ‘விஜய் ஆட்சி அமைப்பதைக் காட்டிலும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்தால் பரவாயில்லை’ என நினைக்க வேண்டிய அவசியம் எப்படி வந்தது…?

விஜய் ஆட்சி அமைத்தால், இடதுசாரிகளும், விசிகவும் அதிகாரம் பெறக் கூடிய நிலை உள்ளது. அவர்கள் உடனிருந்து விஜய்யை வழி நடத்தும் வாய்ப்பு  ஏற்படும், மதச்சார்பற்ற ஆரோக்கியமான அரசியல் சூழல் கனிந்துள்ளது. அத்துடன் சிறுபான்மையினரை பிரதிபலிக்கும் ஐ.யு.எம்.எல்லிடமும் தவெக ஆதரவு கேட்டுள்ளது. இந்த சிறிய கட்சிகள் அதிமுக, திமுக கூட்டணியில் இன்னும் ஒரு நூற்றாண்டுகள் தொடர்ந்தாலும் ஒரு போதும் ஆட்சிக்கு வர முடியாது.

”பாஜக அங்கம் வகித்துள்ள தேசிய ஜனநாயகக்  கூட்டணியில் உள்ள பாமகவிடம் கூட ஆதரவு கோரமட்டோம்” என தவெக திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இப்படியாக பாஜக எதிர்ப்பு கட்சிகள் ஓன்றிணைந்து அதிகாரம் பெறுவதை திமுகவும், அதிமுகவும் கைகோர்த்து தடுப்பானேன்?

பாஜகவின் ஆளுநர் அர்லேகரின் அராஜக செயல்பாட்டுக்கு திமுக ஆதரவளித்துள்ளது. ”தவெகவிற்கு பெரும்பான்மை எண்ணிக்கையை காட்ட முடியவில்லை. ஆகவே, ஆட்சி அமைக்க அவர்களை அழைக்க மாட்டேன். தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினால் நான் அழைப்பது சாத்தியம் ’’ என்று  ஆளுநர் கூறியுள்ளார்.

திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைந்து வரும் வரை விஜய்யை அழைக்கப் போவதில்லை’ என ஆளுநர் காத்திருக்கிறார்…என்றால், விஜய்யை எதிர்க்க திமுக, அதிமுக,பாஜக ஆகியவை ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

”தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.க.வோ கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினால், 108 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம்” என தவெக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

தற்போது நாம் புரிந்து கொள்ள வேண்டியது இது தான்;

திமுக, அதிமுக இருவருக்கும் ஒரே பாஸ் தான். அந்த பாஜக என்ற பாஸ் தான் விஜய் ஆட்சிக்கு வருவதை தடுக்க தன்னுடைய இரு அடிமைகளையும் ஒன்றிணைய கட்டளை இட்டுள்ளது.

அதிமுக ஆட்சி அமைக்க திமுக உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற பாஜகவின் கட்டளை நடிகர் ரஜினிகாந்த் மூலமாக ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ”உங்களால் நீண்ட காலத்திற்கு இடதுசாரிகளையும், விசிகவையும் கண்ரோல் பண்ண முடியாது. விரைந்து முடிவெடுங்கள்” எனச் சொல்லப்பட்டுள்ளது.

அதிமுகவானது திமுக தயவில் ஆட்சியில் அமர்வதை அதிமுகவின் கடைக் கோடி தொண்டன் கூட ஏற்கமாட்டான். அப்படி அதிமுக தலைமை முடிவெடுப்பது என்பது அந்தக் கட்சிக்கே முடிவுரை எழுதிவிடும். அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு இந்த அசிங்கமான முடிவை எடுத்தால், கட்சியே அழிந்து போவது திண்ணம். திமுக ஒரு தீய சக்தி என அரை நூற்றாண்டுக்கும் மேலாக எம்.ஜி.ஆரால். ஜெயலலிதாவால் சொல்லிச் சொல்லி வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவின் தொண்டன் எடப்பாடி பழனிச்சாமியை எள்ளவும் ஏற்கமாட்டான்.

அதே போல தவெகவின் விஜய் ஆட்சி அமைப்பதைத் தடுக்க தனது பரம விரோதியான அதிமுகவை ஆதரிக்க திமுக முடிவெடுப்பதை அந்தக் கட்சியில்  எம்.எல்.ஏக்கள்  ஏற்கலாம். ஆனால், 56 ஆண்டுகளாக அதிமுகவை அடிமை கட்சியாக  காட்டியே அரசியல் செய்த திமுக தலைமை இன்று திசைமாறி கைகோர்ப்பதை அடி நிலை திமுக தொண்டன் கூட அறவே ஏற்கமாட்டான்.

திமுக ஆட்சிக்கு வந்தால் உதயநிதியை முதல்வராக்கி அழகுபார்க்கத் துடித்தார் ஸ்டாலின். அதற்கு குறுக்காக விஜய் விஸ்வரூம் எடுத்து வளர்வதை ஸ்டாலின் விரும்பவில்லை. உதயநிதியின் எதிர்காலத்திற்காக விஜய்யின் வளர்ச்சியை முடக்கத் துடிக்கிறார் ஸ்டாலின். இதற்காக எந்த அசிங்கத்தையும் செய்ய தயாராகிவிட்டார் ஸ்டாலின்.

திமுகவில் உள்ள கொள்கை பற்றாளர்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். திமுகவின் கொள்கை வழிப் பயணத்தை திசைமாற்றிக் கொண்டு செல்லத் துடிக்கும் ஸ்டாலின் தலைமைக்கு எதிராக திமுகவில் உள்ள சுயமரியாதைக்காரர்கள் நிச்சயம் குரல் கொடுப்பார்கள் என நம்புவோம்.

காங்கிரசும், இடதுசாரிகளும் அதிகாரம் பெறுவதை தடுக்கும் பாஜகவின் சூழ்ச்சிக்கு ஏற்ப செயல்பட்டு இரு திராவிட கட்சிகளும் கைகோர்த்து அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் இடதுசாரிகளும், விசிகவும் இன்னும் உள்ள முற்போக்கு அமைப்புகளும் ஜன நாயகத்தை காக்கும் வரலாற்று கடமையை சரியாக செய்வார்கள் என்று நம்புவோம்.

*சாவித்திரி கண்ணன் (ஆசிரியர், அறம் இணைய இதழ்)

https://www.facebook.com/100000227053317/posts/36435061489417960/?rdid=87lOKZ1gzrscuTBq

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு