தொழில்நுட்பப் போரும் மூலப்பொருட்களுக்கான போட்டியும் தீவிரமடைவதால் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வரும் அமெரிக்கா - சீனா முரண்பாடு

தமிழில்: விஜயன்

தொழில்நுட்பப் போரும் மூலப்பொருட்களுக்கான போட்டியும் தீவிரமடைவதால் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வரும் அமெரிக்கா - சீனா முரண்பாடு

ஜெனீவாவில் நடைபெற்ற வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் போது எட்டப்பட்ட உடன்படிக்கையை மீறியதாக அமெரிக்கா-சீனா ஆகிய இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மே 30 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில், சீனா “எங்களுடன் செய்த உடன்படிக்கையை முழுமையாக மீறிவிட்டது” என்று பதிவிட்டதை அடுத்து, நிலைமை மேலும் கொந்தளிப்பானது.

சீனப் பொருளாதாரம் மிகவும் வலுவிழந்து, சீன மக்களிடையே சமூக அமைதியின்மையை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே, மே 12 அன்று சீனாவுடன் தாம் ஒரு விரைவான உடன்பாட்டைச் செய்துகொண்டதாக டிரம்ப் தெரிவித்தார். இருப்பினும், இனி தான் “மென்மையான அணுகுமுறையை” மேற்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறினார். ஜூன் 2, திங்கட்கிழமை அன்று, சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் (MoC) பெயர் வெளியிடப்படாத செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதற்குப் பதிலுரைத்து இவ்வாறு கூறினார்:

“தன்னிலை அறியாது, அமெரிக்கா எந்தக் காரணமுமின்றி சீனாவைக் குறை கூறி, உடன்படிக்கையை சீனா மீறிவிட்டதாக கூறி வருகிறது. இது உண்மைகளை அப்பட்டமாகத் திரிக்கும் செயலாகும். இந்த நியாயமற்ற குற்றச்சாட்டுகளை சீனா கண்டிப்புடன் நிராகரிக்கிறது”.

 “அமெரிக்கா மீண்டும் மீண்டும் தன்னிச்சையாகவே புதிய பொருளாதார-வர்த்தகப் மோதல்ளைத் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவில் பெரும் நிச்சயமற்ற தன்மையையும், உறுதியற்ற நிலையையும் அதிகரித்துள்ளது,” என்று வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தொடர்ந்து வலியுறுத்தி பேசியிருந்தார்.

மட்டுமல்லாது, சீனாவை குறிவைத்து பல புதிய நியாயமற்ற விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஜெனீவாவில் எட்டப்பட்ட உடன்படிக்கையை அமெரிக்கா கடுமையாகச் சீர்குலைத்துள்ளது என்றும் சீனத் தரப்பு சுட்டிக்காட்டியது.

சீனாவுடனான பதற்றங்களை மென்மேலும் தூண்டும் வகையில் பல புதிய நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) சில்லுகளை ஏற்றுமதி செய்வதில் புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்தல், சீனாவுக்கு சிப் வடிவமைப்பு மென்பொருள் விற்பனையை நிறுத்துதல் மட்மல்லாது தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் கல்வி பயிலும் சீன மாணவர்களுக்குக் கூட விசாக்களை இரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் (MoC) செய்தித் தொடர்பாளர் ஒருவர், ஜனவரி 17 அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது இருநாட்டு அதிபர்களுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடுகளுக்கு அமெரிக்கா குந்தகம் விளைவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த உரையாடலின்போது, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்ததோடு, மோதலையும், பகைமையையும் இரு நாடுகளும் ஒரு தீர்வாக கருதக்கூடாது என்று ஷி ஜின்பிங் வலியுறுத்தினார். அதற்கு டிரம்ப், அமெரிக்காவும் சீனாவும் எதிர்காலத்தில் பல ஆண்டுகள் சுமூகமான உறவைப் பேண வேண்டும் என்று பதிலளித்திருந்தார்.

மே 29 அன்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் என்பவர் ஃபாக்ஸ் நியூஸிடம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் "சற்றே முடங்கியுள்ளன" என்று தெரிவித்த பின்னரே சீன வர்த்தக அமைச்சகத்தின் (MoC) மேற்கண்ட கருத்துகள் வெளியாகின. முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இரு நாடுகளின் தலைவர்களும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஸ்காட் பெசென்ட் வலியுறுத்தினார்.

அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரிய தாதுப்பொருட்களின் ஏற்றுமதியை அனுமதிக்க சீனா மறுத்ததும்கூட, ஜெனீவா வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக டிரம்ப் கருதுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி(வர்த்தக ஒப்பந்தத்திற்கான தலைமை அதிகாரி) ஜாமிசன் கிரீர் மே 30 அன்று கூறினார்.

அதனையடுத்து, ஜூன் 1 அன்று, வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதாரக் கழகத்தின் (National Economic Council) இயக்குநர் கெவின் ஹாசெட், ஏபிசி நியூஸிடம் இந்த வாரத்திலேயே இரு நாட்டின் அதிபர்களும்  வர்த்தக விவகாரங்கள் குறித்து தொலைபேசியில் உரையாடல் நிகழ்த்தக்கூடும் என்று தெரிவித்தார். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்குத் திறந்த மனதுடன் உள்ளனர் என்ற கூறிவந்த போதிலும் இருநாட்டு அதிபர்களுக்கும் இடையேயான உரையாடலுக்கான தேதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கெவின் ஹாசெட் கூறினார். சீன தரப்புடன் நாள்தோறும் தொடர்பில் இருப்பதாகவும், "விஷயங்களை முன்னோக்கி நகர்த்த" – அதாவது, முன்னேற்றத்திற்காக ஜாமிசன் கிரீரின் குழு பாடுபடுவதாகவும் கெவின் ஹாசெட் சேர்த்துக் குறிப்பிட்டார்.

இருப்பினும், அண்மையில் நிகழ்ந்த பரஸ்பர குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, ஷி ஜின்பிங் மற்றும் டிரம்புக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் விரைவில் நடக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இதுவரை, சீனத் தரப்பு அத்தகையதொரு உரையாடல் நிகழுமா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.

முக்கிய கனிம ஏற்றுமதிகள் தொடர்பாக அமெரிக்க-சீன கூட்டு அறிக்கையில் வெளிப்படும் முரண்பாடுகள்

மே மாதம் 12 ஆம் தேதி, சீனாவும் அமெரிக்காவும் தமக்கிடையேயான வர்த்தக மோதலைத் தணிக்கும் நோக்கில், 90 நாட்களுக்கு வரிகளைக் குறைத்துக்கொள்ள ஒப்புக்கொண்டன. ஜெனீவாவில் நடைபெற்ற வர்த்தகக் கூட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா தனது வரியை 145%-இலிருந்து 30% ஆகக் குறைத்தது; சீனாவும் பதிலடியாக விதித்த வரியை 125%-இலிருந்து 10% ஆகக் குறைத்தது. இவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, ஏப்ரல் 2, 2025 முதல் அமெரிக்கா மீது சீனா விதித்திருந்த வரிகள் அல்லாத நடவடிக்கைகளை நீக்குவதற்கோ அல்லது தற்காலிகமாக நிறுத்துவதற்கோ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க சீனா சம்மதித்திருக்கிறது.

எனினும், எந்தெந்த வரிகள் அல்லாத நடவடிக்கைகள் நீக்கப்படும் என்று இந்த ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்பதைப் பல சீன நிபுணர்கள் உடனடியாகச் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக, முக்கிய கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கான தனது விதிமுறைகளைச் சீனா தளர்த்த வேண்டிய அவசியமில்லை என்பது அவர்கள் வாதமாக இருக்கிறது. மே 13 அன்று ஹெபேவைச் சேர்ந்த ஒரு கட்டுரையாசிரியர், “இந்த நிலைமை ஆர்வமூட்டக்கூடிய வகையில் மாறிவருகிறது. சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துகொண்டாலும், அது மிகவும் எதிர்ப்பார்த்தவைகளை பெறவில்லை,” என்று எழுதியிருந்தார். மேலும், “வரிகள் என்பது பணம் சம்பந்தப்பட்டவை, ஆனால் அரிய கனிமங்கள் தேசப் பாதுகாப்புடன் பிணைக்கப்பட்டுள்ளன. அதில் பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் பலவீனமான அம்சத்தைக் அமெரிக்கா  கண்டறிந்துவிட்டதாக எண்ணியிருந்தாலும், அதற்கு மாறாகக் கடுமையான எதிர்ப்பையே சந்தித்திருக்கிறது என்று அந்தக் கட்டுரையாளர் மேலும் தெரிவித்தார். உண்மையில், இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பே, மே 9 ஆம் தேதி, தேசியளவில் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பிற்கான நிர்வாக அலுவலகமும், பல அரசாங்கத் துறைகளும் ஷென்சென் என்ற இடத்தில் ஒரு கூட்டத்தை நடத்தி, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் சட்டவிரோத ஏற்றுமதியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து விவாதித்தன. அந்தக் கூட்டத்தில், இந்தக் கனிமங்கள் எவ்வாறு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்பதற்கான விதிமுறைகளை நிர்வகிக்கவும், கடுமையாக்கவும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், அமலாக்கக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், கனிமங்களை எவ்வாறு, எப்போது ஏற்றுமதி செய்யலாம் என்பதற்கான தெளிவான விதிகளை உருவாக்குதல் மட்டுமல்லாது பொருளின் வகையின் அடிப்படையில் கட்டுப்பாட்டு அளவை நிர்ணயித்தல் ஆகியவை விவாதிக்கப்பட்டன.

பின்னர், மே 19 ஆம் தேதி, சீனாவின் கைலியன் பிரஸ் நிறுவனம், சாமாரியம், கடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம், லுடேசியம், ஸ்கேன்டியம் மற்றும் இட்ரியம் ஆகிய ஏழு வகையான அரிய கனிமங்கள் மீதும் ஆறு சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதிக்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகள் மற்றும் ரேடார் அமைப்புகள் போன்ற இராணுவ உபகரணங்களுக்கான பாகங்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாக இந்தக் கனிமங்கள் பயன்படுகின்றன. அதிபர் டிரம்ப் ஏப்ரல் 2 அன்று, அதாவது சீன விடுதலை நாளில், உலக நாடுகள் மீது காப்பு வரிகளை விதித்த இரண்டே நாள்களில், அதாவது, ஏப்ரல் 4 அன்றே இந்தக் கனிமங்கள் மீது புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளைச் சீனா அறிவித்திருந்தது.

இந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் பெறுவதற்கு பொதுவாக 45 முதல் 60 நாட்கள் ஆகும் என்றும் கைலியன் பிரஸ் குறிப்பிட்டது. ஒரு நிறுவனம் தனது தயாரிப்பின் கலவையை மாற்றினால், அது புதிய உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு சரக்கு ஏற்றுமதிக்கும் அதிகாரப்பூர்வ அனுமதி தேவை. ஜூன் 2 ஆம் தேதி, ஷான்சி-ஐச் சேர்ந்த கட்டுரையாசிரியர் லி ஜியான் ஒரு கட்டுரையில், “நாம் இரு வழி போர்த்தந்திரத்தைப் பின்பற்ற வேண்டும் – முக்கியமான சீன கனிமங்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதியை எளிதாக்க வேண்டும்,” என்று எழுதியிருந்தார். “ஒளிஉணர்பூச்சுக்கான வேதிவாய்ப்பாடு(Photoresist formula) மட்டுமல்லாது அரிய அதிஉயர் சக்திவாய்ந்த காந்த வடிவமைப்புக்கான தொழில்நுட்பத்தை சீனாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நாம் தளர்த்தலாம்,” என்று லி ஜியான் இரட்டைவழி உத்தி பற்றி விளக்கியுள்ளார்.

“அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு ஹுவாய் தயாரிப்புகளுக்குத் தடை விதிக்க முயலும் எந்தவொரு நிறுவனத்திற்கும் சீனாவிலிருந்து கிடைக்கும் அரிய கனிமங்களின் அளவைக் குறைக்க வேண்டும்,” என்கிறார். “இது ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களை அமெரிக்காவுடன் இணைவதா அல்லது சீனாவுடன் இணைவதா என்று முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளும்,”. இந்தக் கனிமங்களைப் பதப்படுத்த ஹங்கேரி போன்ற நட்பு நாடுகளில் தொழிற்சாலைகளைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது என்றும் லி ஜியான் மேலும் தெரிவித்தார். இதன் விளைவாக, சீன கட்டுப்பாட்டின் கீழுள்ள முக்கிய மூலப்பொருட்கள், மூல வளங்கள் சார்ந்தவற்றில் தலையிட முனையும் அமெரிக்காவிற்கு பெருந்தடைக்கற்களாக மாறும்.

போர்த்தந்திர ரீதியாக எதிரெதிர் நிலைக்கு செல்லும் அமெரிக்க-சீன உறவு

மே 12 அன்று அமெரிக்காவும் சீனாவும் ஓர் வர்த்தக உடன்பாட்டை எட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், சீனச் சார்புநிலையை முழுமையாக துண்டித்துக்கொள்ள அமெரிக்கா முனையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். மாறாக, எஃகு, அத்தியாவசிய மருந்துகள், குறைக்கடத்திகள் (கணினிச் சில்லுகள்) போன்ற சில குறிப்பிட்ட, நுட்பமான துறைகளில் மட்டும் ‘சீனச் சார்புநிலையை முறித்துக்கொள்வதே’ தமது இலக்கு என்று கூறியுள்ளார்.

மே 13 அன்று, அமெரிக்க வர்த்தகத் துறையின் தொழில் மற்றும் பாதுகாப்புப் பணியகம், பைடன் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுப் பரவல் விதியை இரத்து செய்தது. கார்ப்பரேட் நிறுவனங்கள் பின்வரும் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் புதியதாக விதிகள் அறிவிக்கப்பட்டது:

*   ஹுவாவே நிறுவனத்தின் 'அசென்ட்' கணினிச் சில்லுகளைப் பயன்படுத்துவதற்கு தடை;

*   சீன நிறுவனங்கள் தங்களின் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கத் தயாரிப்புச் சில்லுகளைப் பயன்படுத்துவதற்கு தடை;

*   உயர்திறன்பெற்ற அமெரிக்கச் சில்லுகளைப் பிற நாடுகள் வாயிலாக மறைமுகமாகச் சீனாவிற்கு அனுப்புவதற்கு தடை; 

பின்னர், மே 23 அன்று, மென்பொருள் வழியாக மின்னணு சிப் வடிவமைப்பில் ஈடுபடும் (EDA) நிறுவனங்களுக்கு, EDA மென்பொருள் பயன்பாட்டிலும் புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இந்தக் கட்டுப்பாடுகள் சீனாவிற்கும், சீன இராணுவத்துடன் தொடர்புடைய உலகளாவிய இராணுவப் பயனர்கள் அனைவரையும் குறிவைத்தே அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கோமாக் (Comac) C919 பயணிகள் ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் CFM LEAP-1C என்ஜின்களின் விநியோகத்தையும் அமெரிக்கா நிறுத்தியது.

மே 30 அன்று, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜின் இவ்வாறு குறிப்பிட்டார்:

"அமெரிக்கா தேசிப் பாதுகாப்பு என்ற கருத்தை வரம்புகடந்து விரிவுபடுத்தி, வர்த்தகம், தொழில்நுட்ப விவகாரங்களை அரசியல் ஆயுதங்களாக மாற்றி, சீனாவை வெளிப்படையாகத் தடுக்கவும், நெருக்கடி கொடுக்கவும் முனைந்து நிற்கிறது."

எவ்வாறாயினும், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிற நாடுகளுடனும் பிராந்தியங்களுடனும் பேச்சுவார்த்தைகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த சீனா தயாராக இருப்பதாக லின் ஜின் மேலும் சுட்டிக்காட்டினார். உலக தொழில்துறையையும், உலக விநியோகச் சங்கிலிகளின் நிலைத்தன்மையையும் சீனா ஆதரிக்க தயாராக இருக்கிறது என்பதை அவர் அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://asiatimes.com/2025/06/us-china-tensions-surge-as-tech-and-mineral-wars-intensify/?fbclid=IwY2xjawKr26RleHRuA2FlbQIxMQABHrol8mYL_UMPCnT3ZWgoLHSDfW0yrPDsNKPBtF6Ce8vSEMaLawfq4RnGtcU6_aem_njZd4BUrI5X7i_z1CTEoEQ&sfnsn=wiwspwa

 Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு