பாஜக அரசின் பகாசூர ஊழல்கள்!

அறம் இணைய இதழ்

பாஜக அரசின் பகாசூர ஊழல்கள்!
”அனைத்து கட்சிகளும் ஊழல்கட்சிகள்! நாங்களே உத்தமர்கள்” என மார்தட்டி, சிபிஐ ரெய்டுகள்,  விசாரணைகள் யாவற்றையும் செய்யும் பாஜக அரசு எத்தகைய படுகேவலமான ஊழல்களை செய்துள்ளது என இந்திய கணக்கு தணிக்கை ஆணையம் (CAG) அம்பலப்படுத்தி உள்ளது! இந்திய வரலாறே இதற்கு முன் கண்டறியாத பாஜக ஆட்சியின் ஊழல் பட்டியலைப் பாரீர்;

ஒன்றல்ல, இரண்டல்ல, ஒவ்வொரு துறையிலும் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பது CAG ஆய்வில் கன கச்சிதமாக வெளிப்பட்டுள்ளது!  துரதிர்ஷ்டவசமாக இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் திடீரென்று ஊமையாக மாறிவிட்டன. அறம் இணைய இதழ் வாசகர்களுக்கு இந்த பகாசூர ஊழல்களின் சாராம்சத்தை இங்கு தருகிறோம்.

CAG எனப்படும் இந்திய கட்டுப்பாட்டு கணக்கு தணிக்கை ஆணையம் என்பது இந்திய நீதித் துறையைப் போல ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இதன் தலைவர் உச்ச நீதிமன்ற நீதிபதிக்குரிய அந்தஸ்த்து உள்ளவராவார். தற்போது இதன் தலைவராக கிரிஸ் சந்திர முர்மு உள்ளார். இந்த அமைப்பு எல்லா ஆட்சி காலங்களிலும் பாரபட்சமில்லாமல் ஒவ்வொரு துறையின் ஆடிட் ரிப்போர்ட்களை அலசி ஆராய்ந்து உண்மைகளை தெரிவிப்பார்கள். இது இந்திய ஜனநாயகத்தின் ஆகச் சிறந்த சிறப்பம்சமாகும்.

பாரத்மாலாவில் 6,90790 கோடிகள் ஏப்பம்!

பாஜக  அரசின் பாரத் மாலா திட்ட ஏலம் விடுதலில் ஏடாகூடமாக முறைகேடுகள்  நடந்திருக்கின்றன. ஒரு கிலோ மீட்டர் சாலை  அமைக்க அதிகபட்ச மதிப்பீடே 15.37 கோடி ரூபாய்  தான் என்பது நடைமுறையில் உள்ள  நிலையில், இந்த திட்டத்தில் வழங்கப் பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, செலவு 32.17 கோடியாக அதிகரித்து காட்டியுள்ளனர். அதாவது,  ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்க இத்திட்டத் தின் நிதி இரண்டு மடங்காக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த வகையில் இந்தியா முழுமையும் உள்ள  நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை விரைவுச் சாலைகளாக இணைக்கும் பாரத் மாலா திட்டத்தின் முதல் கட்டத்தில் 34,800 கிலோ மீட்டர் சாலை அமைக்க, மத்திய அமைச்சரவை 5,35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு  செய் தது. இரண்டாம் கட்டத்தில். 26,316 கிலோ மீட்டர் சாலை  அமைக்க  8,46,588 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப் பட்டுள்ளன. ஆக மொத்தம் 13 லட்சத்து 81 ஆயிரத்து 588 கோடி பணம் ஒதுக்கப்பட்டதில், 6 லட்சத்து 90 ஆயிரம் கோடி 790 கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

எவரும் செய்யத் துணியாத மோசடி!

துவாரகா விரைவுப் பாதை கட்டுமானத்தில், ஒப்பந்ததாரர் தேர்வு முதல் இறுதி வரை ஊழலோ ஊழல்! எங்கே சாலை போடுவதென நிலத்தை கையகப்படுத்தாமலே ஒப்பந்த பணிகள் கொடுத்த ஆட்சி இதுவாகத் தான் இருக்கும்.ஒரு கிலோ மீட்டருக்கு திட்டச் செலவு என்பது  18 கோடி ரூபாய் தான்! ஆனால்,  250 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாட்டின் முதல் எட்டு வழி விரைவு சாலையான துவாரகா பாதை  சுமார்  9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட  திட்டமிடப்பட்டது. ஹரியானாவில் 18.9 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தில்லியில் 10.1 கிலோ  மீட்டர் தூரத்துக்குமான இத்திட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் சாலையை அமைக்க தாராள மதிப்பீடாக 18 கோடி ஆகும் என்று முடிவு செய்திருந்த சூழலில் அதிரடியாக அது ஒரு கிலோ மீட்ட ருக்கு 250 கோடி ரூபாய் என அதிகரித்து கணக்கு காட்டப்பட்டுள்ளது. அதாவது, திட்ட மதிப்பீட்டை விடவும் பல மடங்கு உயர்த்தி காட்டப்பட்டது  10 சதவிதம், 20 சதவிகிதமல்ல, 1,400 சதவிகிதம்! இது நினைத்துப் பார்க்கவே முடியாத, யாரும் செய்யக் கூசும் ஊழலாகும். இது வரை இந்திய நெடுஞ்சாலைத் துறையில் திட்ட மதிப்பை விடவும் 14 மடங்கு உயர்த்தி கணக்கு எழுதி, பணத்தை அள்ளும் களவாணித்தனத்தை எவரும் செய்யத் துணிந்ததில்லை!

துவாரக விரைவுப் பாதை ஊழல்களை எதிர்த்து ஆம் ஆத்மி போராட்டம்

வாகன ஓட்டிகளை சூறையாடும் சுங்கச் சாவடிகள்!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் வாகன ஓட்டிகளிடம் பகிரங்கமான பகல்கொள்ளை நடத்தி வருவதையும் மத்திய கணக்கு ஆணையம் அம்பலப்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட ஐந்து சுங்கச்சாவடிகளிண் கணக்குகளை ஆய்வு செய்ததிலேயே  வாகன ஓட்டிகளிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட, ரூ.154 கோடி  அளவிற்கு அதிக தொகையை வசூல் செய்திருப்பது  உறுதியாகியுள்ளது. இப்படி இந்தியா முழுமையும் உள்ளவற்றை கணக்கில் கொண்டால் சில லட்சங்களில் இதில் ஊழல் கரைபுரண்டோடுவதை அறியலாம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அகோர ஊழல்!

தேர்தலை கருத்தில் கொண்டு 2018ஆம் ஆண்டு  பிரதமர் நரேந்திர மோடி  ஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் மருத்துவக் காப்பீடு  திட்டம் அறிவித்து, அதை வைத்து வெற்றியும் பெற்றார். அந்த மருத்துவ திட்டத்தில் மக்களின் பெயரால் மருத்துவ நிறுவனங்களும், மந்திரிமார்களும் தான் பலன் அடைந்துள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்யா யோஜனா எனப்படும் டேட்டா தளத்தில் இல்லாத விலாசங்கள், போலிப் பெயா்கள், சம்பந்தமில்லாத பிறந்த தேதிகள், இஷ்டத்திற்கு எழுதப்பட்ட சுகாதாரக் கணக்குகள், குடும்ப உறிப்பினர் எண்ணிக்கையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் போன்ற முரண்பாடுகள் இருப்பதாக அந்த சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகள், எந்த வசதியுமற்ற மருத்துவமனைகள் பேரில் எல்லாம் கணக்கு எழுதி பணத்தை களவாடியுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

தற்போதைய நிலவரப்படி 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டதாக கணக்கில் உள்ளது.  இதில் 7  லட்சத்து 49 ஆயிரத்து 820  இன்சூரன்ஸ் அட்டைகளில் ஒரே செல்போன் எண் (9999999999) உள்ளது என்றால், எவ்வளவு தெனாவெட்டாக ஊழல் செய்திருப்பார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. மருத்துவக் காப்பீடு திட்ட சிகிச்சையில் 88,670 பேர் இறந்துள்ளனர்.  இப்படி சிகிச்சையின் போது  இறந்த 3,346 நபர்களுக்கு புதிதாக சிகிச்சை  பார்த்ததாகச் சொல்லியும் மோசடி செய்து காப்பீடு பெறப்பட்டிருப்பது தான் கொடுமை!  இதில் பல்லாயிரம் கோடிகளில் படு பயங்கர முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி  அறிக்கை உறுதி செய்கிறது.

அயோத்தி ராமர் கோவில் அயோக்கியத்தனங்கள்!

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மிகக் குறைந்த விலையில் நிலங்களை வாங்கி குவித்து, அதை அயோத்தி ராமர் அறக்கட்டளைக்கு பல மடங்கு அதிகமாக விற்று பக்தியின் பெயரால் மோசடிகள் அரங்கேறியுள்ளன. கோவில் மற்றும் நகர மேம்பாட்டு கட்டுமானங்களில் எல்லாம் ஆதாயங்களுக்கு மேல் ஆதாயம் அடைந்துள்ளனர். அயோத்யா மேம்பாடு திட்டத்தில், ஒப்பந்த பணி கொடுப்பதில் கையூட்டு, உத்திரவாதப் பணத்தில் சலுகைகள்..என எதிலும் ஊழல்களே!  இந்தப்படி  பார்த்தால், ஒப்பந்ததாரர்கள்  கோடிக் கணக்கில் ஓகோன்னு லாபம் அடைந்திருப்பதாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்திய வகையில் சுமார் ரூ.8.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அம்பலமாகியுள்ளது.

கிராமப்புற மேம்பாட்டு திட்ட கிராதக ஊழல்!

செயல்பாடுகளை விட விளம்பரங்களை அதிகம் நம்பும் அரசாக பாஜக அரசு உள்ளது என்பது இந்த ஊழலில் உறுதியாகியுள்ளது. கிராமப்புற மேம்பாட்டு அமைச்ச கத்தின் ஓய்வூதிய திட்டத்துக்கான நிதி, விளம்பரத்துக்காக அள்ளி இறைக்கப்பட்டுள்ளது . 2017 ஆம் ஆண்டு இத்திட்ட த்தை 19 மாநிலங்களில் விளம்பரப் படுத்த தலா  5 விளம்பரப் பலகைகள் வைக்க, 2. கோடி 444 லட்சம் ரூபாய் ஓய்வூதிய திட்டநிதியில் இருந்து முறைகேடாக எடுத்து செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் திட்ட செயல்பாட்டை ஆராய்ந்தால் என்னென்ன ஊழல்கள் தெரிய வருமோ?

ஹெச்.ஏ.எல்லில் ஏப்பம் விட்ட 160 கோடி!

ஹெச்ஏஎல் என அழைக்கப்படும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்  பொதுத் துறை நிறு வனத்தில் சென்ற ஆட்சி காலத்திலேயே சட்ட விரோதமாக ஒப்பந்தாரார்களுக்கு பணம் தந்த வகையில் 13.28 கோடி ஊழல் செய்ததாக சி.ஏ.ஜி அறிக்கை தந்து 2019ல் மோடி அரசு அவமானப்பட்டது. ஹெச்ஏஎல் விமான எஞ்சின் வடிவமைப்பில் கோளாறு செய்த வகையில் பல கோடி ரூபாய்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது., தவறான திட்ட வடி வமைப்பு கோளாறுகள், உற்பத்தி யில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு கார ணங்களால்  சுமார் ரூ.159.23 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வகையில் CAG தரும் ஆய்வு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் வைத்தாக வேண்டும் என்பது தொன்றுதொட்டு மரபாக உள்ளது. அந்த வகையில் சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இறுதி நாளில் ‘காக் ரிப்போர்ட்’ சபையில் மின்னல் வேகத்தில் வைக்கப்பட்டு, விவாதங்களின்றி கடந்து போனது. இது குறித்து பெரும்பாலான இந்திய ஊடகங்கள் மெளனம் சாதிப்பதையும் நாம் உணரலாம். எனினும், ஒரு சில ஊடகங்கள் இதை வெளிக் கொண்டு வந்துள்ளன. இதை தடுப்பதற்காகத் தான் குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்து மசோதாவை நிறைவேற்றியுள்ளது பாஜக அரசு. அந்த வகையில் அடுத்த முறை பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய கணக்கு தணிக்கை ஆணையத்தின் தலைவரைக் கூட கட்டுப்படுத்தும் அல்லது கைது செய்யும் அதிகாரம் கொண்டதாக மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

aramonline.in /14688/bjp-govt-corruption-records/