புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதில் தமிழ்நாடு அரசின் இரட்டை நிலைப்பாடு

CPS ஒழிப்பு இயக்கம் கேள்வி

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதில் தமிழ்நாடு அரசின் இரட்டை நிலைப்பாடு

2003 பேட்ஜ் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியிடம் மட்டும் ஒதுக்கப்படாத சூழலில் 01.04.2003-க்கு முன்னதாக பெண் காவலர்களும் 01.04.2003-க்குப் பின்னர் ஆண் காவலர்களும் பணியேற்கின்றனர்.

CPS திட்டத்தை அப்போதைய அஇஅதிமுக அரசு முன்தேதியிட்டு 01.04.2003ல் நடைமுறைப்படுத்தவே, பெண் காவலர்கள் GPF திட்டத்திலும் ஆண் காவலர்கள் CPS திட்டத்திலும் சேர்க்கப்படுகின்றனர்.

அரசின் காலதாமத பணி நியமனத்தால் CPS திட்டத்தில் சேர்க்கப்பட்ட 8431 காவலர்களில் 25 காவலர்கள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க 25 காவலர்களையும், 12 வாரங்களில் GPFல் சேர்க்கும்படி கடந்த  2023 பிப்ரவரி மாதம் 10ஆம்  தேதி  தீர்ப்பளிக்கப்படுகிறது. இத்தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாத சூழலில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படுகிறது.

அவ்வழக்கு I. NO ( 102 & 103) 15.09.23 வெள்ளியன்று மாண்புமிகு நீதியரசர் திரு. ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் திரு.P.S.இராமன் மற்றும்  கூடுதல் அட்வகேட் ஜெனரல் திரு. சிலம்பண்ணன் தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்படி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால்  இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை 4 வாரங்களுக்கு நிலுவையில்  வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதாவது அரசின் கால தாமதத்தால் அநீதிக்கு உள்ளான 2003 பேட்ஜ் காவலர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றுமாறு அளித்த தீர்ப்பை எதிர்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முடியாது என்று மேல்முறையீடு அதாவது எதிர்வாதம்  செய்ய உள்ளது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு.

2021 தேர்தல் வாக்குறுதியில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்த திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக உள்ள தமிழ்நாட்டு அரசு மிகக் குறைவான எண்ணிக்கையிலான காவலர்களுக்கே பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று மேல்முறையீடு செய்துள்ளது  எனில் 6,30,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வாறு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றும்?.

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு வழங்கிய நிதிசார் வாக்குறுதிகளில் இதுவரை ஒன்றைக்கூட நிறைவேற்றாத திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு தற்போது தான் அளித்த வாக்குறுதிக்கே எதிராகச் செயல்படத் துணிந்துள்ளது என்பது ஒட்டுமொத்த அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் திமுக மீது வைத்த நம்பிக்கையைச் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளது.

சொல்வதைச் செய்வேன் என்று சொல்லி வரும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சார்ந்து சொல்லியதைச் செய்யும் எண்ணமாகிலும் தற்போது உள்ளதா என்பதை மாண்புமிகு முதலமைச்சர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

CPS ஒழிப்பு இயக்கம், மாநில மையம்

16.09.2023

- சேரன் வாஞ்சிநாதன்

(முகநூலில்)

Disclaimer: இந்த பகுதி பதிவாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு