காஸா மக்களை விரட்டியடிக்க டிரம்ப் முன்மொழிந்த திட்டம் நிச்சயம் தோல்வியடையும்
தமிழில்: விஜயன்

காசா மக்களை வெளியேற்ற வேண்டும் என்று டிரம்ப் விடுத்த அழைப்பானது கடந்த கால கசப்பான நினைவுகளை நினைவுபடுத்துகிறது என்று நக்பா நிகழ்வில் உயிர் தப்பியவர்கள் கூறுகிறார்கள்.
காஸா மக்களை விரட்டியடிக்க டிரம்ப் முன்மொழிந்த திட்டம் நிச்சயம் தோல்வியடையும் என்று அமெரிக்காவில் வாழும் புலம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் வெள்ளை மாளிகையில் உரையாடியபோது, காசா நிலப்பரப்பை தமது "கட்டுப்பாட்டின் கீழ்" கொண்டு வந்து பாலஸ்தீனியர்களை பிற நாடுகளில் குடியமர்த்தப்போவதாகக் கூறியது சர்ச்சையை கிளப்பியதோடு, அபாய மணியாகவும் பார்க்கப்படுகிறது.
வெடிக்காத வெடிபொருட்கள், நிலையற்ற கட்டிட அமைப்புகளால் ஏற்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டி, இஸ்ரேலின் குண்டுவீச்சுகளால் உருக்குலைந்துபோன காசா பகுதியில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவது என்பது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்று டிரம்ப் வாதித்தார்.
பாலஸ்தீனியர்கள் "வசதியான வீடுகளில்" வாழ வேண்டும் என்றும், ஆனால் அது காசாவுக்கு வெளியே இருக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
பாலஸ்தீனியர்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கையைத் திசை திருப்புவதற்காகவே வெளிநாடுகளில் புதிய கட்டுமானங்கள் உருவாக்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன என்பதே பாலஸ்தீனியர்களின் வாதமாக இருக்கிறது. அதாவது, பாலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த வரலாற்று தாயகத்தில் கண்ணியத்துடனும், சம உரிமையுடனும் வாழும் உரிமையைப் பெற வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
கலிபோர்னியாவில் வசிக்கும் பாலஸ்தீனியரான லீலா கிரீஸ் கூறுகையில், "ஒரு அதிபர், இருபது லட்சம் மக்களை அவர்களின் சொந்த நிலத்திலிருந்து வெளியேறச் சொல்வதை என்னால் யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இதைக் கேள்விப்பட்ட பொழுது நம்பமுடியாதளவிற்கான அதிர்ச்சிதான் முதலில் என்னை ஆட்கொண்டது," என்றார்.
வெளியேற்றத்திற்கான இந்த அறைகூவல், உடைமைகளை இழந்து, நாடு கடத்தப்பட்ட கசப்பான நினைவுகளையே மீண்டும் கண்முன் நிறுத்துகிறது என்று லீலா கிரீஸ் மட்டுமல்லாது பிற பாலஸ்தீனியர்களும் கூறுகின்றனர்.
பாலஸ்தீனியர்கள் நக்பா என்று குறிப்பிடும் அந்த துயர நிகழ்வுகளின்போது உயிர் தப்பியவர்தான் லீலா கிரீஸ். நக்பா என்றால் "பேரழிவு" என்று பொருள்.
நக்பா என்ற சொல், 1948-ல் இஸ்ரேல் அரசு உருவாக்கப்பட்ட சமயத்தில், சியோனிச துணை இராணுவக் குழுக்கள் மூலம் ஏறத்தாழ 7,50,000 பாலஸ்தீனியர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட துயரமான நிகழ்வைக் குறிக்கிறது. அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட பாலஸ்தீனிய நகரங்களையும், கிராமங்களையும் சேர்ந்த மக்கள், புதிதாக அமைக்கப்பட்ட இஸ்ரேல் அரசால் "ஊடுருவல்காரர்கள்" என்று முத்திரை குத்தப்பட்டு, தங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் தடுக்கப்பட்டனர்.
லீலா கிரீஸ் என்பவர், தனது தாயாரின் சொந்த ஊரான ஐன் கரிமை விட்டு வெளியேறும்போது எடுத்துச் சென்ற கைப்பையை, கலிபோர்னியாவில் உள்ள தனது இல்லத்தில் ஒரு சட்டகத்தினுள்(frame) வைத்துப் பாதுகாத்து வருகிறார். அதோடு, வரலாற்றுச் சிறப்புமிக்க பாலஸ்தீனத்தில் அவர்கள் வாழ்ந்த வீடு, வெளியேற்றப்பட்ட பின்னர் தகர்க்கப்பட்டதன் அடையாளமாக, அதன் சாவியையும் பொக்கிஷம் பாதுகாத்து வைத்துள்ளார்.
இந்தச் சின்னங்கள், நாடுகடத்தப்பட்டதால் ஏற்பட்ட வேதனையையும், தமது தாய் மண்ணுடனான உறவை என்றென்றும் காத்துக்கொள்ள வேண்டும் என்ற அவரது மன உறுதியையும் ஒருங்கே பிரதிபலிக்கின்றன.
"நான் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறியபோது எனக்கு எட்டு வயது. ஆனால், அந்த நினைவுகளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஏனெனில், அதுதான் என் பெற்றோரின் பூமி, என் பாட்டன் பாட்டியின் மண். நான் அந்த மண்ணோடு ஆழமாகப் பிணைந்துள்ளேன்," என்று கிரீஸ் கூறினார்.
"காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் கூட்டமாக சாலையில் நடந்து செல்லும் காட்சிகளைப் பார்க்கும்போது, என் இதயம் துடித்துடிக்கிறது. அந்தப் காட்சிகள் என் மனதில் பழைய நினைவுகளை அலை அலையாய் நினைவூட்டுகின்றன," என்று அவர் வேதனையுடன் கூறுகிறார்.
‘பாலஸ்தீனியர்கள் மறைந்துபோகவோ, மாண்டுபோகவோ மாட்டார்கள்.’
பாலஸ்தீனியர்கள், மனித உரிமை அமைப்புகள், எகிப்து, சவுதி அரேபியா, ஜோர்டான் போன்ற நாடுகளின் தலைவர்களின் கூட்டமைப்பு ஆகியோரிடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புகளின் விளைவாக, டிரம்ப் தனது திட்டத்தை "ஒரு ஆலோசனையாக மட்டுமே" முன்வைப்பதாகக் கூறி, தனது நிலைப்பாட்டை சற்றே தளர்த்திக்கொண்டார்.
அமெரிக்க அதிபர் முன்னதாக காசாவைத் "தனதாக்கிக் கொள்ள" விரும்புவதாகக் குறிப்பிட்டார்; மேலும் அதன் கடற்கரை அமைவிடம் மிக உயர்ந்த தரத்திலான ரியல் எஸ்டேட் வணிகத்திற்கு ஏற்ற இடமாக மாற்றக்கூடும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த வாரம், டிரம்ப் சமூக ஊடகங்களில் ஒரு வினோதமான, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட (AI) ஒரு காணொளியைப் பகிர்ந்துகொண்டார். அதில் காசா வானுயர்ந்த கட்டிடங்கள், ஆடம்பர உல்லாச விடுதிகளால் நிரம்பியிருக்க, அவரும் நெதன்யாகுவும் நீச்சல் குளத்தின் அருகே ஓய்வெடுப்பது போலக் காட்சியளித்தது.
தலைமுறை தலைமுறையாக காஸாவைத் தங்கள் தாயகமாகக் கருதி வாழும் பாலஸ்தீனியர்களின் சுவடுகூட அந்தக் காணொளியில் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
"காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை முற்றிலுமாக வெளியேற்றிவிட்டு, அங்கே ஒரு ரியல் எஸ்டேட் திட்டத்தை உருவாக்கலாம் என்று நினைப்பது வடிகட்டிய முட்டாள்தனம்" என்று 1948-ல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த நசரேத்திலிருந்து தப்பிப் பிழைத்த மைக்கேல் ஹர்டோஷ் சொல்கிறார். இஸ்ரேலிய ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீனியர்கள், 1966 வரை எந்தவித உரிமையுமின்றி இராணுவ ஆட்சியின்கீழ் உயிர் பிழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
"உண்மை என்னவென்றால், பாலஸ்தீனியர்கள் மறைந்து போகவோ அல்லது மாண்டுபோகவோ மாட்டார்கள்."
ஆனால் இஸ்ரேலியத் தலைவர்களும் அதிகாரிகளும் டிரம்ப்பின் தொலைநோக்குப் பார்வையைத் தொடர்ந்து தீவிரமாக ஆதரித்து வருகின்றனர். காசா பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற்றும் தங்களது நெடுங்காலக் கனவை நனவாக்க இது ஒரு வாய்ப்பாக அவர்கள் கருதுகிறார்கள்.
கடந்த வாரம் ஒரு அறிக்கையில், "அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் காசாவை மாற்றியமைக்கும் திட்டத்திற்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்" என்று நெதன்யாகு திட்டவட்டமாகக் கூறினார். முன்னதாக, அவர் இந்தத் திட்டத்தை "புரட்சிகரமானது" என்று புகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
அயலுறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் வருகை தரும் ஆய்வாளராக அறியப்படும் முஹம்மது ஷெஹாடா காசாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அல் ஜசீரா ஊடகத்திடம் பேசுகையில், பாலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த நிலத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற இஸ்ரேலும் அமெரிக்காவும் எடுக்கும் முயற்சிகள் காசாவின் நவீன வரலாற்றில் ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.
1967ம் ஆண்டு இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றிய காலகட்டத்தில், மக்கள் தாமாகவே வெளியேறுவதை ஊக்குவிக்கும் வகையில் அகதிகள் முகாம்களை திட்டமிட்டு அழிப்பது என்பன போன்ற வேலைகளைச் செய்தனர். மேலும், வெளியேற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில் பணம், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், போக்குவரத்து வசதிகள் போன்ற கவர்ச்சிகரமான சலுகைகளையும் வழங்கினர்.
இத்தகைய தூண்டுதல்கள் எதிர்பார்த்த பலனைத் தராதபோது, இஸ்ரேல் கொடிய இராணுவத் தாக்குதல்களையும், பல ஆண்டுக்கால முற்றுகைகள் போன்ற கடுமையான அணுகுமுறைகளையும் கையாண்டது. இதன் விளைவாக, தற்போதைய போர்ச் சூழல் ஏற்படுவதற்கு முன்பே காஸாவில் மிக மோசமான வாழ்வியல் நெருக்கடி நிலை உருவானது.
"சாத்தியமான அனைத்து தந்திரோபாயங்களையும் அவர்கள் பரிசோதித்துப் பார்த்துள்ளனர்," என்று ஷெஹாடா அழுத்தமாக கூறினார்.
இருப்பினும், இந்த முயற்சிகள் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டவில்லை. மாறாக, பாலஸ்தீனியர்களிடமிருந்து வலுவான எதிர்ப்பை சந்தித்தன. பாலஸ்தீனியர்கள், காஸாவிலிருந்து தங்களை வெளியேற்றும் இத்தகைய முயற்சிகளை, தங்கள் தேசிய உரிமைகளை திட்டமிட்டு பறிப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவே கருதுவதால், மன உறுதியுடன் அவர்கள் சமரசமின்றி எதிர்த்து நிற்கின்றனர்.
1953-ல், சுமார் 12,000 பாலஸ்தீனியர்களை காஸாவிலிருந்து எகிப்தின் சினாய் பகுதிக்கு குடியமர்த்தும் திட்டம், காஸாவில் வெடித்த ஒரு மாபெரும் மக்கள் கிளர்ச்சியின் விளைவாக கைவிடப்பட்டது என்று ஷெஹாடா சுட்டிக்காட்டுகிறார்.
மண்ணின் மீதான பற்று
காஸா மீதான இஸ்ரேலின் சமீபத்திய 15 மாத கால இராணுவ நடவடிக்கை, முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரழிவையும், மனித உயிரிழப்பையும் ஏற்படுத்தியிருந்த நிலையிலும், பல பாலஸ்தீனியர்கள் காஸாவில் தங்கள் மண்ணின் மீதான பற்றை விட்டுக்கொடுக்கவில்லை.
காஸாவில் பிறந்து தற்போது தெற்கு கலிபோர்னியாவில் வசிக்கும் 58 வயது அர்வா ஷுராப் அவர்கள், "காஸா பகுதியில் வாழ்ந்து வந்த எனது குடும்பத்தினர் வேறு வழியில்லை என்ற நிலை வரும் வரையில் வெளியேற மறுத்துவிட்டனர்," என்று கூறுகிறார்.
"நான் என் சகோதரியை எகிப்துக்குச் செல்லும்படி வற்புறுத்தினேன், ஏனெனில் அங்கு பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், 'நான் தங்கியிருக்கும் கட்டிடம் குண்டு வீசப்பட்டால் மட்டுமே வெளியேறுவேன்' என்று அவள் திட்டவட்டமாகச் சொன்னாள்," என அர்வா ஷுராப் தெரிவித்தார்.
போரின்போது அவரது சகோதரியும், குடும்பத்தினரும் பலமுறை இடம்பெயர்ந்ததாக அவர் விளக்கினார். அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தின்மீது குண்டு வீசப்பட்டபோது, வேறு வழியின்றி அவர்கள் வெளியேற வேண்டியதாயிற்று. நல்ல வேளையாக, அவர்கள் அந்த நேரத்தில் கூடாரத்திற்குள் இல்லை.
"அவள் ஒரு குழந்தை நல மருத்துவர்; காஸாவில் தங்கி தன் மக்களுக்கு உதவ விரும்பினாள். ஆனால், அதற்காக அவள் எல்லாவற்றையும் இழந்துவிட்டாள்," என்று அர்வா ஷுராப் மேலும் கூறினார்.
கடந்த மாதம் இஸ்ரேலின் குண்டுவீச்சுத் தாக்குதல் ஒரு உறுதியற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் இன்னமும் அபாயகரமான சூழ்நிலையில்தான் வாழ்ந்து வருகின்றனர். இராணுவத்தின் இந்தத் தாக்குதலானது காஸாவின் பல சுற்றுவட்டாரப் பகுதிகளை அழித்து தரைமட்டமாக்கியது.
போர்க்காலத்தில், பாலஸ்தீனியர்கள் போர் முடிவடைந்த பின்னர் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்விடக்கூடாது என்ற நோக்கில், இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனியிர்களின் வீடுகள், விவசாய நிலங்கள், மருத்துவ உதவிக்கான கட்டுமானங்கள், நீர் மற்றும் மின்சார வசதி போன்றவற்றை வேண்டுமென்றே அழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆயினும், காஸா மக்கள் தாங்கள் ஒரு புதிய பாதையை உருவாக்க உறுதியுடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். "பாலஸ்தீனியர்கள் இந்த மண்ணோடு மிகவும் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் அனைவரும் திரும்பிச் செல்லவே விரும்புகிறார்கள். இது முடியுமா என்ற கேள்வியே இல்லை, எப்போது என்பதே கேள்வி," என்று ஷுராப் கூறினார்.
"டிரம்ப்பின் கருத்துக்கள் என்னை கொஞ்சமும் பாதிக்கவில்லை. நான் அதை பொருட்படுத்துவதில்லை, ஏனெனில் எனக்கு என் குடும்பத்தைப் பற்றி தெரியும், காஸா மக்களைப் பற்றியும் தெரியும். அவர்களை ஒருபோதும் சொந்த மண்ணிலிருந்து விரட்டியடித்துவிட முடியாது,” "டிரம்ப் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், அதனால் எதுவும் மாறிவிடப் போவதில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2025/2/27/nakba-survivors-see-echoes-of-the-past-in-trumps-calls-for-gaza-expulsion