அமெரிக்க இராணுவ உதவி இல்லையென்றால் உக்ரைனால் தாக்குப்பிடித்து போராட முடியுமா?

தமிழில்: விஜயன்

அமெரிக்க இராணுவ உதவி இல்லையென்றால் உக்ரைனால் தாக்குப்பிடித்து போராட முடியுமா?

"உக்ரைனுக்கு வழங்கி வந்த எந்தெந்த இராணுவ உதவிகளை டிரம்ப் நிறுத்தி வைத்தார்? அமெரிக்க இராணுவ உதவி இல்லையென்றால் உக்ரைனால் தாக்குப்பிடித்து போராட முடியுமா? 

அமெரிக்க இராணுவ உதவி இல்லாமல் உக்ரைனால் சில மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 

ஜெலென்ஸ்கியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து இராணுவ உதவிகளையும் டிரம்ப் நிறுத்தி வைத்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையிலான உறவுகள் விரிசலடைந்து வரும் இச்சூழலில், உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதை திங்களன்று நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். 2022 பிப்ரவரியில் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சிலான போரை தொடுத்ததிலிருந்து, உக்ரைனுக்குப் இராணுவ உதவிகளை அளித்து வரும் மிகப்பெரிய நாடாக அமெரிக்கா திகழ்கிறது. மேலும், ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளை ஓரணியில் திரட்டி பரந்த கூட்டமைப்பை உருவாக்கியதோடு ராஜாங்க ரீதியிலும் அமெரிக்கா அச்சாணியாக செயல்பட்டு வருகிறது. டிரம்ப்பும், அவரது உயர்மட்ட அதிகாரிகளும் ஜெலென்ஸ்கியை பகிரங்கமாக விமர்சித்து வரும் வேளையில், உக்ரைனோ அமெரிக்காவிடம் இதற்கு நேர்மாறான கோரிக்கையை முன்வைத்துள்ளது – அதாவது, டிரம்ப் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்கா தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று உக்ரைன் விரும்புகிறது. எனவே, டிரம்ப் உண்மையில் எதை நிறுத்தியுள்ளார், அவர் ஏன் அவ்வாறு செய்தார், புதிததாக அமெரிக்க இராணுவ உதவிகளில்லாமல் உக்ரைனால் ரஷ்யாவுடன் தொடர்ந்து போராட முடியுமா?

நிகழ்ந்தது என்ன?

ஜெலன்ஸ்கியுடனான உரசல்கள் அதிகரித்த நிலையில், உக்ரைனுக்கான இராணுவ உதவியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். போர் நிறுத்தத்திற்கு ஜெலன்ஸ்கி முழுமையாக உறுதியளிக்கவில்லை என்று டிரம்ப் புரிந்து கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிடாமல் அமெரிக்க ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன. டிரம்ப் தனது Truth Social என்ற சமூக ஊடக பக்கத்தில், ஜெலன்ஸ்கி "அமெரிக்காவின் ஆதரவு இருக்கும் வரை" போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்பவில்லை என்று குற்றம் சாட்டிய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத் தற்காலிக இராணுவ உதவி நிறுத்தம் பற்றிய செய்தி வெளியானது.

உக்ரைன், ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வரை இந்தத் தற்காலிக நிறுத்தம் தொடரும் என்று வெள்ளை மாளிகை அதிகாரியின் கருத்தை மேற்கோள் காட்டி Associated Press பத்திரிகை செய்தி வெளியிட்டது.

அமெரிக்கா ஏன் இராணுவ உதவியை நிறுத்தியது?

டிரம்ப்பின் இந்தத் தற்காலிக நிறுத்த செய்தி வருவதற்கு முன்பு, Truth Social சமூக ஊடகத்தில் பதிவிடுவதற்கு முன்பு, ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை கியூவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உக்ரைன் போர் முற்றுபெறுவதற்கு "இன்னும் வெகு நாள்கள் உள்ளன" என்று கூறியிருந்தார்.

"ஜெலன்ஸ்கி கூறியிருக்கக்கூடிய மோசமான கருத்து இது. அமெரிக்கா இதை அதிக நாள்கள் பொறுத்துக்கொள்ளாது!" என்று Truth Social சமூக ஊடக பத்த்தில் Trump பதிலளித்தார்.

பிப்ரவரி 28-ஆம் தேதி வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில், டிரம்ப், அமெரிக்காவின் துணை அதிபர் JD Vance மற்றும் வெளியுறவுத் துறைச் செயலாளர் Marco Rubio ஆகியோரை ஜெலன்ஸ்கி சந்தித்தார். அப்போது, அமெரிக்கா உக்ரைனுக்கு அனுப்பிய இராணுவ உதவிக்கு, உக்ரைன் அதிபர் போதிய நன்றியுணர்வுடன் நடந்துகொள்ளவில்லை என்று டிரம்ப்பும், Vance’ம் குற்றம் சாட்டியதால், அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு விரைவிலேயே கசப்பானதாக மாறியது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தும் வகையில் டிரம்ப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள், உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்காவின் கொள்கையை மாற்றியுள்ளார். கடந்த மாதம், சவுதி அரேபியாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால், உக்ரைனுக்கோ அல்லது ஐரோப்பாவிற்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதுகுறித்து ஜெலன்ஸ்கியும், அவரது ஐரோப்பிய கூட்டாளிகளும் அதிருப்தி தெரிவித்தபோது, உக்ரைன் அதிபர்தான் போரைத் தொடங்கியதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

டிரம்ப்புடன் அண்மையில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் இருந்தபோதிலும், ஜெலன்ஸ்கி ஞாயிற்றுக்கிழமை அன்று, "எங்கள் உறவு (அமெரிக்காவுடன்) தொடரும் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், இது வெறும் மேலோட்டமான உறவல்ல" என்று கூறினார்.

இந்நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வந்த அனைத்து இராணுவ உதவிகளையும் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்

அமெரிக்கா உக்ரைனுக்கு எவ்வளவு இராணுவ உதவிகளை வழங்க ஒப்புக்கொண்டது?

2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது முழுவீச்சில் படையெடுத்ததிலிருந்து, நாடாளுமன்றும் மட்டுமல்லாது பாதுகாப்புத் துறையின் (DoD) நிதி ஒதுக்கீட்டின் மூலமாகவும் உக்ரைனுக்கு சுமார் 86 பில்லியன் டாலர்கள் வரை அமெரிக்க அரசாங்கம் இராணுவ உதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. வாஷிங்டனைத் தலைமையிடமாகக் கொண்ட மூல உத்திக்கான சர்வதேச ஆய்வு மையம் (CSIS), பாதுகாப்புத் துறையின் வரவு செலவுத் திட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

இந்த நிதி பல்வேறு வழிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதியின் நேரடி அதிகாரத்தின் கீழ் (Presidential Drawdown Authority - PDA) 46 பில்லியன் டாலர்கள், உக்ரைன் பாதுகாப்பு உதவிக்கான முன்னெடுப்பின் (Ukraine Security Assistance Initiative - USAI) மூலம் 33 பில்லியன் டாலர்கள், மற்றும் வெளிநாட்டு இராணுவ நிதியுதவியின் (Foreign Military Financing - FMF) மூலம் 7 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா ஒதுக்கிய இந்த நிதி, முக்கியமாக உக்ரைனுக்கு அனுப்பப்படும் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதில், வான் பாதுகாப்பு சாதனங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், டாங்கிகள், கடலோர பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு கவச உடைகள் ஆகியவையும் அடங்கும். ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போரிடுவதற்கு உடனடியாக அனுப்பப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருட்களை மீண்டும் கையிருப்பு வைப்பதற்கும் இந்த நிதியிலிருந்து பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உக்ரைனின் இராணுவப் பாதுகாப்பிற்காக அமெரிக்க அரசாங்கம் ஒதுக்கிய பெரும்பாலான நிதி இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்று CSIS ஆய்வு கூறுகிறது.

நிறுத்தப்பட வாய்ப்புள்ள உதவிகள் என்னென்ன?

உக்ரைனுக்கு வழங்கப்படவிருந்த பல பில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவிகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம்.

இந்த தடை எதை உள்ளடக்கியது என்பதை வெள்ளை மாளிகை இன்னமும் முழுமையாக விளக்கவில்லை. எனினும், இது எதிர்கால உதவிகளை நிறுத்துவது மட்டுமல்லாமல், ஏற்கனவே உக்ரைனுக்காக ஒதுக்கப்பட்டு, ஆயுதங்களாகவோ அல்லது இராணுவ உதவியாகவோ இன்னும் வழங்கப்படாத நிதியையும் நிறுத்துவதாக இருக்கலாம்.

டிரம்ப் அதிபராகப் பதவியேற்றதில் இருந்து, உக்ரைனுக்கான புதிய உதவித் திட்டங்களுக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, தற்போது நிறுத்தி வைக்கப்படக்கூடிய உதவிகள் அனைத்துமே முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள்தான்.

மூல உத்திக்கான சர்வதேச ஆய்வு மையத்தின் (CSIS) மதிப்பீட்டின்படி, உக்ரைனுக்காக ஒதுக்கப்பட்ட 86 பில்லியன் டாலர்களில், உண்மையில் அனுப்பப்பட்டவை 20.2 பில்லியன் டாலர்கள் மட்டுமே.

மேலும், 28.6 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதாவது, இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அமெரிக்கப் பாதுகாப்புத் துறை திட்ட அளவில் முடிவெடுத்துள்ளது. கூடுதலாக, இராணுவ உபகரணங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தங்கள் மூலம் 34.2 பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிபர் ஜெலென்ஸ்கி, டிரம்ப் உடனான உறவை மேம்படுத்தாவிட்டால், இந்த உதவிகள் எதுவும் உக்ரைனைச் சென்றடைவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கக்கூடும்.

சுமார் 2.7 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பயன்படுத்தப்படாததால் காலாவதியாகிவிட்டது.

அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க கடற்படை அதிகாரியும், CSIS அமைப்பின் மூத்த ஆலோசகருமான மார்க் கேன்சியன், ஹோவிட்சர்கள் எனப்படும் பீரங்கி துப்பாக்கிகளுக்கான வெடிமருந்துகள், வான் பாதுகாப்பு சாதனங்கள் ஆகியவற்றை இந்தாண்டு(2025) வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

உக்ரைன் அமெரிக்க ஆயுதங்களை எந்த அளவிற்கு சார்ந்திருக்கிறது?

முன்பளவிற்கு இல்லை என்று சொல்லாம்.

போர் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கடந்த ஆண்டு குறிப்பிட்டதைப் போல, உக்ரைன் தனக்குத் தேவையான ஆயுதங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியான ஒரு பேட்டியில், அதிபர் ஜெலென்ஸ்கி பிரிட்டிஷ் ஊடகவியலாளர் பியர்ஸ் மோர்கனிடம் பேசுகையில், தற்போது உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்களில் சுமார் 40 விழுக்காடு உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதாகவும், அமெரிக்கா 30 விழுக்காடு வழங்குவதாகவும் தெரிவித்தார். "இந்த இன்றியமையாத 30 விழுக்காடு இல்லாவிட்டால் எங்கள் நிலை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்," என்று ஜெலென்ஸ்கி கூறினார். பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, உக்ரைன் முக்கியமாக ஆளில்லா போர் விமானங்கள் (ட்ரோன்கள்), மின்னணு போர் சாதனங்கள், பீரங்கிகளை உற்பத்தி செய்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உக்ரைனின் எஞ்சியிருக்கும் 30 விழுக்காடு ஆயுதங்கள் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்றன.

இருப்பினும், அமெரிக்காவிடமிருந்து பெறப்படும் ஆயுதங்களே உக்ரைனின் போர் தளவாடங்களில் மிகவும் அதிநவீன, ஆற்றல் வாய்ந்த கருவிகளாக உள்ளன.

அமெரிக்காவின் ஆதரவு இல்லாவிட்டால் உக்ரைனால் தொடர்ந்து போரிட இயலுமா?

அமெரிக்கா ஆயுத உதவிகளை நிறுத்திவிட்டால், ரஷ்யப் படைகள் முன்னேறுவதற்குள் உக்ரைனியப் படைகள் சுமார் இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என்று இராணுவ வல்லுநர் மார்க் கான்சியன் எச்சரிக்கிறார்.

"அமெரிக்காவின் உதவி நிறுத்தப்படுவது உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிபொருட்கள், போர் உபகரணங்கள் கிடைப்பதை பாதியாகக் குறைத்து விடும். அமெரிக்காவின் உதவி இருந்தும் கூட, ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியும், மெதுவான போக்கிலும் கணிசமான உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய வண்ணம் முன்னேறி வந்ததாலும், உக்ரைன் மிகவும் நெருக்கடியான நிலையிலேயே தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தது," என்று கான்சியன் விளக்கமளித்தார்.

"அமெரிக்க இராணுவ உதவி இல்லையென்றால், உக்ரைனின் போர் புரியும் திறன் படிப்படியாகக் குறைந்துவிடும். உக்ரைனின் தற்காப்பு அரண்கள் தகர்க்கப்பட்டு ரஷ்யப் படைகள் முன்னேறுவதற்கு முன்பு உக்ரைனால் ஏறக்குறைய இரண்டு முதல் நான்கு மாதங்கள் வரை தாக்குப்பிடிக்க முடியும் என்பதே எனது மதிப்பீடு" என்று மார்க் கான்சியன் மேலும் கூறினார்.

ஐரோப்பாவால் இந்த இடைவெளியை நிரப்ப முடியுமா?

"இதுவரை, அமெரிக்கா வழங்கிய இராணுவ உதவிக்குச் சமமான உதவியை ஐரோப்பாவும் அளித்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவு தடைப்பட்டால், அந்த இழப்பை ஈடுசெய்ய ஐரோப்பா தனது பங்களிப்பை கணிசமாக உயர்த்த வேண்டியிருக்கும்," என்று இராணுவ நிபுணர் மார்க் கேன்சியன் குறிப்பிட்டார்.

"ஆயுத உற்பத்தியை உடனடியாகச் செய்துவிட முடியாது. ஐரோப்பா தனது உதவியை அதிகரித்தாலும், அந்த ஆயுதங்கள் உக்ரைனைச் சென்றடைய கால அவகாசம் எடுக்கும். எனவே, உடனடியாக இந்த இடைவெளியை நிரப்புவது கடினம்."

உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை ஐரோப்பியத் தலைவர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். லண்டனில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் உட்பட பல ஐரோப்பியத் தலைவர்கள் பங்கேற்றனர். இராணுவ ஆதரவை தொடர்ந்து வழங்குவது அவசியம் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும், 5,000 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு விற்பதற்கு ஏதுவாக £1.6 பில்லியன் (US$2 பில்லியன்) மதிப்பிலான ஒப்பந்தத்தை ஸ்டார்மர் அறிவித்தார்.

ஐரோப்பாவால் எந்த அளவுக்கு இராணுவ உதவி வழங்க முடியும் அல்லது அமெரிக்காவின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில், அந்த இழப்பை முழுமையாக ஈடுசெய்ய முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதை ஜெலென்ஸ்கியும் ஐரோப்பியத் தலைவர்களும் ஒருமனதாக ஒப்புக்கொள்கின்றனர். "ஐரோப்பாவில் அமைதியை நிலைநாட்டவும், வெற்றியை உறுதிப்படுத்தவும், அமெரிக்காவின் வலுவான ஆதரவு இந்த முயற்சிக்கு மிக அவசியம்" என்று உச்சி மாநாட்டிற்குப் பிறகு ஸ்டார்மர் கூறினார்.

ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்ய மத்திய வங்கியின் US$300 பில்லியன் சொத்துக்களை நிதி அபராதமாக முடக்கி வைத்தன. தற்போது, போலந்து, எஸ்டோனியா, லித்துவேனியா, லாட்வியா போன்ற சில ஐரோப்பிய நாடுகள் அந்த நிதியை உக்ரைனுக்கு மாற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. "ஐரோப்பா இந்த நிதியைப் பயன்படுத்தி அதிக ஆயுதங்களை வாங்க முடியும். ஆனால், அதற்கு கொள்கை அளவில் ஒரு பெரிய மாற்றத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்," என்று கேன்சியன் விளக்கினார்.

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களைப் பயன்படுத்துவதற்குத் தயக்கம் காட்டுகிறார். ஏனெனில், இது வெளிநாட்டு சொத்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மீறுவதோடு தவறான முன்னுதாரணமாகவும் ஆகிவிடும் என்று அவர் கருதுகிறார். மேலும், இது சீனா, சவுதி அரேபியா போன்ற நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களை அச்சுறுத்தக்கூடும் என்றும், எதிர்காலத்தில் தங்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்படலாம் என்றும் அவர் அஞ்சுகிறார்.

உக்ரைனுக்கான உதவிகளை நிறுத்திய டிரம்ப் – எதிர்ப்பலைகள்

டிரம்ப்பின் இந்த முடிவு ஜனநாயகக் கட்சியினரிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

பென்சில்வேனியா மாகாண காங்கிரஸ் உறுப்பினர் பிரெண்டன் பாயில் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், "இது ஒரு பொறுப்பற்ற செயல், ஏற்றுக்கொள்ளத் தகாதது, மேலும் தேசிய பாதுகாப்பிற்கு நேரடியான அச்சுறுத்தலாகும்" என்று வன்மையாகக் கண்டித்தார்.

"உக்ரைனுக்கு துணை நிற்பது என்பது ஜனநாயகத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமல்ல புதினின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்பதுமாகும் என்பதால், குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இருதரப்பினரின் ஆதரவுடன் இந்த உதவிகள் அமெரிக்க நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்து" என்று பாயில் குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதி டான் கோல்ட்மேன், டிரம்ப்பின் இந்த நகர்வை "ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை மிரட்டி பணிய வைப்பதற்கான மற்றுமொரு தந்திரம்" என்று விமர்சித்தார்.

விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.aljazeera.com/news/2025/3/4/what-ukraine-military-aid-has-trump-paused-and-can-kyiv-fight-without-it