காங்கிரசை கழற்றிவிட்டு பாஜகவும் சி.பி.எம் அரசும் அதானியுடன் கைகோர்த்தனர்
தமிழில்: விஜயன்

வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற விழிஞ்சம் துறைமுகத் திறப்பு விழா, மோடிக்கும் பினராயி விஜயனுக்கும் இடையில் வழக்கத்திற்கு மாறான நெருங்கிய தோழமையை வெளிப்படுத்தியது
துறைமுகத் திட்டத்தை அமைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட தனியார் நிறுவனமான அதானி குழுமத்தைப் பாராட்டுவதற்கு இரு தலைவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசாங்கம் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைப் பின்பற்றினாலும் கூட, அரசுத்-தனியார் பங்கேற்புத் திட்டங்களை ஏற்றுக்கொண்டதற்காகவும், அதானி குழுமத்தின் சாதனைகளை அங்கீகரித்ததற்காகவும் பிரதமர் மோடி பினராயி விஜயனை பாராட்டினார்.
“துறைமுக அமைச்சர் வரவேற்புரை ஆற்றியபோது, இந்தத் திட்டத்தில் அதானி கேரள அரசின் கூட்டாளியாக இருக்கிறார் என்று குறிப்பிட்டதை” மோடி நினைவு கூர்ந்து பேசினார்.
”இந்தப் பாராட்டு ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் அமைச்சரிடமிருந்து வருவது கவனிக்கத்தக்கது.” “கடல்சார் துறையில் புதிய உயரங்களை அடைய, நாம் தனியார் துறையின் பங்கை அவசியம் ஏற்க வேண்டும். அரசுத்-தனியார் பங்கேற்பு மாடலின் மூலம் நாட்டில் கோடிக்கணக்கான முதலீடுகள் வந்துள்ளன. இந்த ஒத்துழைப்பு நமது துறைமுகங்களின் தர நிலையை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், சரியான பராமரிப்பு, எதிர்கால உள்கட்டமைப்பு மேம்பாட்டையும் உறுதி செய்வதற்காகவும் பயன்படும். தனியார் துறையின் ஈடுபாடு இயற்கையாகவே செயல்திறனை மேம்படுத்துகிறது” என்று மோடி தொடர்ந்து பேசினார்.
30 ஆண்டுகளாக குஜராத்தில் தொழில் செய்துவிட்டு, இவ்வளவு பெரிய துறைமுகத் திட்டத்தை கேரளாவில் நிறைவேற்றியதற்காக குஜராத் மக்களிடமிருந்து வரும் புகார்களையும் அதானி குழுமம் எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் மோடி சேர்த்துக் குறிப்பிட்டார்.
“நம் முதல்வர் அவர்களே, நீங்கள் இந்தியா கூட்டமைப்பின் வலிமையான தூண் போன்றவர். சசி தரூரும் இங்கே வந்திருக்கிறார். இன்றைய நிகழ்வு பலரின் தூக்கத்தைக் கெடுக்கும்,” என்று காங்கிரஸைக் விமர்சிக்கும் வாய்ப்பைத் தவறவிடாமல், மோடி இந்தியில் குறிப்பிட்டார். உரைபெயர்ப்பாளர் இந்தப் பகுதியை மட்டும் மலையாளத்தில் உரைபெயர்க்காமல் தவிர்த்துவிட்டார், “அவரால் அந்தப் பகுதியை உரைபெயர்க்க முடியாதுதான், இருப்பினும் நான் கூறியது புரிய வேண்டியர்களுக்கு சென்றடைந்துள்ளது,” என்று மோடி சிரித்துக் கொண்டே சொன்னார்.
திருவனந்தபுரத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த மெகா துறைமுகம், கேரளாவில் முதலீடுகளையும், ஏற்றுமதியையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்துப் பாதையில் இருந்து வெறும் 10 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் முதல் ஆழ்கடல் கொள்கலன் பரிமாற்ற (transshipment) துறைமுகம் என்று அழைக்கப்படுகிறது; தற்போது 1 மில்லியன் TEU க்கான திறனைக் கொண்டுள்ளது. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டப் பணிகள் முடிந்த பிறகு, அதன் திறன் கூடுதலாக 6.2 மில்லியன் TEU க்களாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. (TEU - Twenty-foot Equivalent Unit என்பது இருபது அடிக்கு சமமான பிரிவு கண்டெய்னரை ஒப்பிட்டு அளக்க உதவும் அளவீடு - இது கொள்கலன் கப்பல்களாலும், முனையங்களாலும் பயன்படுத்தப்படும் சரக்குத் திறனுக்கான ஒரு தரநிலையான அளவீடு ஆகும்).
இந்தத் துறைமுகத் திட்டம் 2016 இல் தொடங்கியது. முதல் கட்டம் முடிவடைந்து, துறைமுகம் 2024 டிசம்பர் 3 அன்று செயல்படத் தொடங்கியது. அதன் பின்னர், இது 280-க்கும் மேற்பட்ட கப்பல்களுக்கும், 6,00,000-க்கும் மேற்பட்ட TEU-களுக்கும் சேவைகளை வழங்கியுள்ளது; உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான MSC துருக்கிகூட இத்துறைமுகத்தின் சேவையைப் பெற்றுள்ளது. அதானி குழுமத்தால் அரசுத்-தனியார் பங்கேற்பு (PPP) மாடலின் கீழ் உருவாக்கப்பட்ட இந்தத் துறைமுகத்தில் கேரள அரசாங்கமே பெரும்பான்மையான பங்கு முதலீடுகளைக் கொண்டுள்ளது. மொத்த முதலீடான ரூ 8,686 கோடியில், கேரள அரசாங்கம் ரூ 5,370.86 கோடி நிதியளித்திருக்கிறது. அதே நேரத்தில், அதானி துறைமுகங்கள் நிறுவனமோ ரூ 2,497 கோடியை வழங்கியிருக்கிறது; ஆதாய இழப்பை ஈடு செய்யும் வகையில் (Viability Gap Funding) மத்திய அரசு ரூ. 818 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
திட்டத்தை நிறைவேற்றுவதில் அதானி குழுமம் ஆற்றிய பங்கிற்கு பினராயி விஜயன் பாராட்டுகளைத் தெரிவித்தார். “கேரள மக்கள் சார்பாக, இந்த முக்கியத் திட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணிப்பதற்காக எங்கள் மாநிலத்திற்கு வருகை தந்த மாண்புமிகு பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பணியை சிறப்பாகச் செயல்படுத்திய அதானி குழுமத்திற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அதாவது சிபிஐ(எம்) தனியார் முதலீடுகளை ஈர்ப்பதில் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது. 2023-ல், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக பல விதிமுறைகள் தளர்த்தப்பட்ட தொழில்துறை கொள்கை ஒன்றையும் கேரள அரசு அறிமுகப்படுத்தியது. பிப்ரவரியில் உலக முதலீட்டாளர்களுக்கான உச்சி மாநாடு ஒன்றையும் கேரள அரசு நடத்தியது. இந்த இரண்டு நாள் நிகழ்வில், அதானி குழுமத்திடமிருந்து 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான விருப்பம் தெரிவிக்கும் அறிவிப்பு (Expressions of Interest - EoIs) உட்பட, ரூ 1,52,905 கோடி மதிப்பிலான ஒப்பந்த கோரிக்கைகள் பெறப்பட்டன. அப்போது, காங்கிரஸ் தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், LDF அரசாங்கத்தின் சீர்திருத்தங்களைப் பாராட்டியிருந்தார்; இதற்காக அவரது சொந்தக் கட்சிகாரர்களின் விமர்சனங்களையும்கூட எதிர்கொண்டார்.
LDF அரசின் பத்தாம் ஆண்டில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது
நீண்டகாலமாக தாமதப்படுத்தப்பட்டு வந்த, கனவுத் திட்டமான விழிஞ்சம் துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு விழா முடிந்தவுடன் “இதையும் நாங்கள் சாதித்துள்ளோம்,” என்று பினராயி விஜயன் கூறினார்.
இந்தத் துறைமுகத்திற்கான திட்டம் முதன்முதலில் 1996-ம் ஆண்டு LDF ஆட்சியிலிருந்த போது வகுக்கப்பட்டது என்றும், அது நிறைவேற பல தடைகளை கடக்க வேண்டியிருந்தது என்றும் அவர் விளக்கினார். “2015-இல் ஒரு உடன்பாடு எட்டப்பட்ட போதிலும் பலதரப்பட்ட கணிசமான விமர்சனங்களை எதிர்கொண்டது. பரவலான ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், அரசியல் வேறுபாடுகள் ஒரு தடையாக மாறிவிடாமல், திட்டத்தை நிறைவேற்ற நாங்கள் விடாமுயற்சி செய்தோம். 2016-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், இந்தத் திட்டத்தை முடிக்க விரிவான முயற்சி மேற்கொண்டோம்,” என்று பினராயி விளக்கினார்.
நிகழ்வின் போது, ஒரு விளம்பர வீடியோ இந்தத் துறைமுகத்தை கேரளாவின் கனவுத் திட்டம் என விவரித்தது; இது பினராயி விஜயன் தலைமையிலான LDF அரசாங்கம் சட்டப்பேரவையில் தனது பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சமயத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என்று காட்டப்பட்டது.
இந்தக் கனவு நீண்ட காலமாக நிறைவேறாமல் இருந்தது. ஆரம்பக் கட்ட வேலைகள் 1991-ல் கே. கருணாகரன் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் தொடங்கின. பின்னர், ஈ.கே. நாயனார் தலைமையிலான LDF அரசாங்கமும் திட்டத்தை முன்னெடுத்தது. இருப்பினும், பல்வேறு சவால்கள் - குறிப்பாக உள்ளூர் மீனவர்களின் போராட்டங்கள் உட்பட பல்வேறு காரணங்களால், இத்திட்டம் முன்பு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடையவில்லை. 2014-ல் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசால் மீண்டும் தொடங்கப்பட்டதோடு, அடுத்த ஆண்டிலேயே அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
திறப்பு விழாவில், காங்கிரஸ் சார்பில் லோக்சபா எம்.பி.க்களான சசி தரூர் (திருவனந்தபுரம்) மற்றும் அடூர் பிரகாஷ் (அட்டிங்கல்) ஆகியோர் கலந்து கொண்டாலும், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
ஆனால், பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகருக்கோ, மோடி, பினராயி விஜயன், ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், மத்திய அமைச்சர்கள் சுரேஷ் கோபி, ஜார்ஜ் குரியன், பிற லோக்சபா எம்.பி.க்களுடன் முன் வரிசையில் இருக்கை வழங்கப்பட்டிருந்தது. அழைக்கப்படுவோர் பட்டியலில் ராஜீவ் சந்திரசேகரரின் பெயர் பிரதமர் அலுவலகத்தால் சேர்க்கப்பட்டது என்று முன்பே கேரள அரசு தெரிவித்திருந்தது.
திறப்பு விழா நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் சதீசன் அழைக்கப்படாதது குறித்து ஊடகங்களில் பேசுபொருளானப் பிறகு, செவ்வாய்க்கிழமை அன்று நிகழ்சிக்கான கடிதம் மட்டுமே தனக்கு கேரள அரசு அனுப்பி வைத்திருந்து என்று கூறிய சதீசன், கடிதத்தை அதிகாரப்பூர்வ அழைப்பிதழாக கருத முடியாது என்பதால் கலந்துகொள்ளவில்லை என்ற தெரிவித்திருந்தார்.
சதீஷன் நிகழ்ச்சியில் பங்கேற்காதபோதிலும், வெள்ளிக்கிழமை காலை சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். மறைந்த முதல்வர் உம்மன் சாண்டி அவர்கள் 2015 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது; விழிஞ்சம் துறைமுகத்தை நிறைவேற்றுவதற்காக கேரள அரசு 1991 முதல் பாடுபட்டு வருகிறது; இதுவொரு கனவுத் திட்டம் என்றும் அந்த வீடியோவில் உம்மன் சாண்டி பேசியிருந்தார்.
“உம்மன் சாண்டி இப்போது நம்மிடையே இல்லை என்றாலும் அழிக்க முடியாத ஒரு நீங்கா வரலாறாக மக்கள் மனங்களில் வாழ்ந்து வருகிறார். வரலாற்றை அழிக்க அல்லது மீண்டும் எழுத முயற்சிப்பவர்கள் உண்மையில் அவரது நினைவைக் கண்டுகூட அஞ்சுகிறார்கள்,” என்று சதீசன் துறைமுகத்திற்கான வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கும் போது பதிவிட்டிருந்தார்.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://theprint.in/politics/keralas-vizhinjam-port-inauguration-brings-cpim-bjp-and-adani-together-congress-out/2612752/