இந்திய-பாகிஸ்தான் மோதலில் வெளிப்பட்ட சீன-பாகிஸ்தான் இடையிலான போர்த்தந்திர கூட்டணி

தமிழில்: விஜயன்

இந்திய-பாகிஸ்தான் மோதலில் வெளிப்பட்ட சீன-பாகிஸ்தான் இடையிலான போர்த்தந்திர கூட்டணி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் நிகழ்ந்த இராணுவ மோதல்கள், ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தை சீனா-பாகிஸ்தான் உறவின்பால் குவித்துள்ளன. பாகிஸ்தான் – சீன உறவு பலரும் எண்ணியதைக் காட்டிலும் வலிமை மிக்கதாகவும், உயிர்ப்புடனும் திகழ்கிறது என்பதனை இம்மோதல்கள் அழுத்தந்திருத்தமாக உணர்த்தியுள்ளன.

ஆனால், கடந்த சில மாதங்களாகவே, சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சில சிக்கல்கள் தலைதூக்கின. பாகிஸ்தானில் வசிக்கும் சீனக் குடிமக்கள் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்கள் ஒரு பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளன. இத்தாக்குதல்களின் விளைவாக, சீனா அண்மைக் காலமாக பாகிஸ்தான் மீது கடுமையான இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்கள் கொடுத்து வருகிறது. சீனத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுத்த பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாகிஸ்தானை சீனா வற்புறுத்தியுள்ளது. சீனக் குடிமக்கள் மீதும், அங்குள்ள தொழிலாளர்கள் மீதும் நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் 'ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாதவை' என்றும், இத்தகைய தாக்குதல்கள் சீனாவின் ‘பட்டுப்பாதை திட்ட முன்முயற்சி’ (BRI) மூலம் பாகிஸ்தானில் மேற்கொண்டு முதலீடு செய்வதைச் கேள்விக்குறியாக்கிவிடும் என்றும் சீனா கடுமையாக எச்சரித்துள்ளது.

பாதுகாப்புச் சிக்கல்கள் குறித்து பொதுவெளியில் சீனா பாகிஸ்தானை விமர்சிப்பது அரிதான நிகழ்வாகும். இந்த விமர்சனம் பாகிஸ்தானுடனான சீனாவின் அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை அப்பட்டமாகப் பறைசாற்றுகிறது. இந்த மாற்றம், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி, நிலைமையை மேலும் மோசமாக்கலாம் எனச் சிலர் கூறி வருகின்றனர்.

பாதுகாப்புச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட (CPEC) திட்டத்திற்காகச் சிறந்த கடன் சலுகைகளைப் பெறவும் பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது. மார்ச் 2025-இல், 2 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை பாகிஸ்தானுக்கு சீனா மீண்டும் நீட்டித்துள்ளது. இதன் வாயிலாக, பாகிஸ்தானுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்த மேலும் ஓராண்டு கால அவகாசம் கிடைத்திருக்கிறது. ஏனெனில், இக்கடன் முதலில் மார்ச் 2024-இல் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதாக இருந்ததால், சீனா காலக்கெடுவை நீட்டிப்பது இது இரண்டாவது முறையாகும். பாகிஸ்தானில் தான் செய்த முதலீடுகளுக்குரிய பலனைப் பெற சீனா விரும்புவதால், இந்த கால நீட்டிப்பு சீனாவிற்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இத்தகைய சிக்கல்களால், சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான வலுவான உறவு பெரும் சவால்களை எதிர்கொண்டிருப்பதாகச் சிலர் வாதிடுகின்றனர்.

ஆனால், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு எத்துணை ஆழமானதாகவும், போர்த்தந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உருப்பெற்றிருக்கிறது என்பதைச் சில ஆய்வாளர்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை என்பதாகவே தெரிகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல்களை அடுத்து நிகழ்ந்த நிகழ்வுகள், இவ்விரு நாடுகளின் கூட்டணி தற்போது பன்மடங்கு வலிமை பெற்றுள்ளது என்பதையும், அது வெறும் இருதரப்பு விவகாரங்களைத் தாண்டி மிக ஆழமான தளங்களில் வேரூன்றியுள்ளது என்பதையும் தெளிவாகப் புலப்படுத்தின.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மோதல்கள் வெடித்த மறுகணமே, சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக வலுவான, எவரும் எதிர்பார்க்கதளவிற்கான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின் சொல்தேர்வுகளும், அது மையப்படுத்திய பொருளும், அது உணர்த்திய செய்தியும், இந்தியா-பாகிஸ்தான் மோதலில் சீனா இனி நடுநிலை வகிக்கப் போவதில்லை என்பதையே சுட்டிக்காட்டின. மாறாக, பிராந்திய விவகாரங்களில் அது வெளிப்படையாக ஒரு தரப்புக்கு ஆதரவாக நிற்கவே அதிக ஆர்வம் காட்டுவது போல் தெரிகிறது.

“பாகிஸ்தானின் உண்மையான பாதுகாப்புக் கவலைகளை சீனா முழுமையாகப் புரிந்துகொள்கிறது; பாகிஸ்தானின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதில் பாகிஸ்தானுக்கு முழுமையாகத் துணை நிற்கிறது,” என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்ததார். “பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான, நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சீனா வலியுறுத்துவதாக மேலும் கூறினார்; ஏனெனில், போர் என்பது எந்தவொரு நாட்டின் பிரதான நலன்களுக்கும் ஒருபோதும் பயன்படாது என்று சீனா உறுதியாக நம்புகிறது” என்று கூறியிருந்தார்.

இந்த அறிக்கை, பாகிஸ்தானின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் சீனா எந்தளவிற்கு மதிப்பளிக்கிறது என்பதை உலகிற்குப் பறைசாற்றியது. மேலும், பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எந்தவித விசாரணையுமின்றி பாகிஸ்தானைக் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இந்தியாவின் விளக்கத்தை சீனா முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் இது எடுத்துக்காட்டியது.

கடந்த சில வாரங்களாகப் பற்பலப் புதிய, அசாதாரண நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. அவை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டுறவு, வெறும் இராணுவத் தளவாட விற்பனையைத் தாண்டி, ஆழமாக வேரூன்றிப் படர்ந்துள்ளதை அப்பட்டமாகப் புலப்படுத்துகின்றன. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இந்தியப் போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்துவதற்கு சற்று முன்பாக, பாகிஸ்தானின் செயற்கைக்கோள்களின் நிலைகளை மாற்றியமைப்பதிலும், அதன் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சீர்செய்வதிலும் சீனா  கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், குறைந்தபட்சம் ஒரு ரஃபேல் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் தரப்பு, குறைந்தபட்சம் மூன்று பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் ஜெட் விமானங்களை வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியதாக உறுதியுடன் கூறுகிறது. பாகிஸ்தானுடனான இந்த மோதல்களின்போது தனது போர் விமானங்களை இழந்தது குறித்த இந்தத் தகவல்களை இந்தியா இதுவரை உறுதிப்படுத்தவும் இல்லை; மறுக்கவும் இல்லை.

இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, பாகிஸ்தான் சீனத் தயாரிப்பான PL-15 ஏவுகணையையும் பயன்படுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன — இதுவரையிலும் எந்தவொரு நேரடிப் போரிலும் களமிறக்கப்படாத அதிநவீன ஏவுகணை அது. சீனாவின் அதிநவீன J-35A ஐந்தாம் தலைமுறை 'மறைதாக்கு(ஸ்டெல்த்)' போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு போர்க்கால அடிப்படையில் வழங்கும் பணிகளில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படுகின்றன என்பதற்கான அறிகுறிகளும் சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாகின்றன. சீனா எந்தவித இராணுவ ஆதரவையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றபோதிலும், பாகிஸ்தானிய அதிகாரிகள் தாங்கள் அடைந்ததாகக் கூறும் போர்க்கள வெற்றிகள் குறித்து சீன அதிகாரிகளுடன் வெளிப்படையாகவே விவாதித்துள்ளனர். இந்த உரையாடல்களை இரு தரப்பினரும் மறைக்க எள்ளளவும் முயற்சிக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் மற்றும் இந்திய விமானப் படைகளுக்கிடையே நிகழ்ந்த வான்வழி மோதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், இப்போரின்போது பாகிஸ்தான் J-10C உட்பட சீன ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்தார்.

“அதிகாலை நான்கு மணிக்கே, சீனத் தூதரின் தலைமையில் சீனக் குழுவினர் வெளியுறவுத் துறை அலுவலகத்தில் மொத்தமாகக் கூடியிருந்தனர்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். “அதுவரை நிகழ்ந்த அனைத்து விபரங்களையும் நாங்கள் சீனக் குழுவினருக்கு எடுத்துரைத்தோம், அவர்கள் பெருமகிழ்ச்சியில் திளைத்தனர்,” என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த நெருக்கடியான தருணத்தில் சீனா வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டார்.

கடந்த வாரம் அவர் மேற்கொண்ட பயணத்தின்போது, சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுடன் நடந்த ஒரு முறைசாரா கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இவர் சென்ற அதே நேரத்தில் பீஜிங்கிற்கு ஆப்கானிஸ்தான் அமைச்சர் வருகைத் தருவது, வெறும் தற்செயல் நிகழ்வாக இருந்திருக்காது, பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும் என்றே பரவலாகக் கருதப்பட்டது. இந்த மூன்று நாடுகளும் இதற்கு முன்னர் மே 2023-இல் இதேபோன்ற ஒரு முறைசாரா கூட்டத்தை நடத்தியிருந்தன; அடுத்த சந்திப்பு காபூலில் நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எழுந்த நெருக்கடியைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளைச் சீர்செய்வதில் சீனா முனைப்புடன் செயலாற்றி வருவதாகப் தெரிய வருகிறது. நெடுங்காலமாகவே, தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) போராளிகளுக்கு ஆப்கான் தலிபான்கள் புகலிடம் அளிப்பதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. 2024ஆம் ஆண்டில் தங்கள் நாட்டிற்குள் நிகழ்ந்த தாக்குதல்கள் 70 விழுக்காடு அதிகரித்ததற்கு இப்போராளிகளே காரணம் எனப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது. இக்குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் பகிரங்கமாக மறுதலித்தபோதிலும், TTPயுடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சீனா மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சிகள், இரு தரப்பினரிடையேயும் மீண்டும் பேச்சுவார்த்தையைத் துவக்கி, நல்லிணக்கப் பாதையில் பயணிக்க துணைபுரிந்துள்ளதாகத் தென்படுகிறது. இது பாகிஸ்தானின் மேற்கு எல்லைப் பகுதிக்குக் கூடுதல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சீனாவில் நடைபெற்ற சந்திப்புகளின் பயனாக, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்த ஒருமித்த இசைவு தெரிவித்தன. விரைவில் தூதுவர்களைப் பரிமாறிக்கொள்வதிலும்கூட உடன்பாடு கண்டுள்ளனர். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை (CPEC) ஆப்கானிஸ்தானுக்குள் நீட்டிப்பதற்கும் அவை இசைவு தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான்-சீன கூட்டணியின் பிணைப்பு மேலும் வலுவடைவது என்பது, பாதுகாப்புச் சவால்களை, குறிப்பாகப் பாகிஸ்தானில் உள்ள சீனப் தொழிலாளர்களைப் பாதிக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளப் புதிய வழிமுறைகளை உருவாக்க இரு நாடுகளும் உடன்பாடு கண்டுள்ளதன் வெளிப்பாடாகும். இந்த வாரத்தின் முற்பகுதியில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலிருந்து ஒரு அரசுத் தரப்பு குழு, பாதுகாப்பு விசயங்கள் மட்டுமல்லாது மாகாணத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்துப் பேசுவதற்கு சீனாவிற்கு சென்றது. மாகாண அளவில் சீனா-பாகிஸ்தான் பாதுகாப்பு தொடர்பான விவாதங்கள் நடைபெறுவது வரலாறு காணாத ஒன்றாகும்.

இந்த போக்குகள், பாகிஸ்தானும் சீனாவும் பல்வேறு தளங்களில் இணைந்து செயலாற்றுவதை அப்பட்டமாகப் பறைசாற்றுகின்றன. அவை தங்களுக்குள்ளான சிக்கல்களைக் களைவது மட்டுமல்லாமல், பிராந்திய அமைதி, பிராந்திய பாதுகாப்பு மட்டுமல்லாது CPEC திட்டங்களின் புத்துயிர்ப்பு, விரிவாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பேரிலக்குத் திட்டங்களையும் துரிதப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, இந்தியா அண்மையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் நீர் விநியோகத்தைத் துண்டிப்பதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் மொஹ்மாண்ட் அணையைக் கட்டும் பணியைத் துரிதப்படுத்துவதாகச் சீனா அறிவித்தது.

பாகிஸ்தான்-சீனா உறவில் தற்போது நிலவும் சவால்கள், அவற்றின் நீண்டகால போர்த்தந்திர ஒத்துழைப்பைத் தடுத்து நிறுத்திவிடும் என எண்ணுவது அறிவுடைமையல்ல.

மெய்யாகவே, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அண்மைய மோதல், இந்தக் கூட்டணியை மேலும் பலப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், முன்னெப்போதையும் விட இரு நாடுகளையும் நெருக்கமாக பிணைத்திருக்கிறது என்றும் கூறலாம்.

- விஜயன் (தமிழில்) 

மூலக்கட்டுரை: https://thediplomat.com/2025/05/how-the-india-pakistan-clashes-revealed-chinas-strategic-commitment-to-islamabad/?fbclid=IwY2xjawKl-FFleHRuA2FlbQIxMQABHiuouJIH35pcKPMFsktRujftfr3fRBwMd-9WHaz0HnOvDNTGb6lCp2nyPOVC_aem_RdaAhkKT-GeOPeqY_aMOLg&sfnsn=wiwspwa