அமெரிக்காவின் புலன்விசாரணையின் கீழ் அதானி குழுமம்: ஈரானிலிருந்து பெட்ரோகெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்தது குறித்து
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி

அதானி குழுமம் ஈரானிலிருந்து பெட்ரோகெமிக்கல் பொருட்களை இறக்குமதி செய்ததா என்பது குறித்து அமெரிக்க நீதித் துறை விசாரணை செய்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இதே அதானி நிறுவனம் மற்றொரு நாட்டில் லஞ்சம் தொடர்பான ஒரு தனி வழக்கை சமரச வழியில் தீர்க்க முயன்று வரும் இதே வேளையில்தான், அமெரிக்காவில் இந்த புலன்விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இக்குற்றச்சாட்டுகளை 'ஆதாரமற்றவை என்றும் உள்நோக்கம் கொண்டவை' என்றும் கடுமையாகச் சாடியுள்ளார். ஈரானிலிருந்து திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) மீது விதிக்கப்பட்ட தடைகளையோ அல்லது வர்த்தக விதிமுறைகளையோ தெரிந்தே மீறவில்லை என அச்செய்தித் தொடர்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளால் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படுவது குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
'அமெரிக்க நீதித் துறையால் அதானிக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்மறையாகப் பாதிப்பு ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன்தான் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனம் இத்தருணத்தில் செய்தி வெளியிட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது,' என்று அச்செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார். முன்னதாக, ஏப்ரல் 13 அன்று, இந்தியாவில் சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 250 மில்லியன் டாலருக்கும் அதிகமான லஞ்சம் வழங்க ஏற்பாடு செய்ததாக கௌதம் அதானி மீது சுமத்தப்பட்ட குற்றவியல் வழக்குகளை இரத்து செய்யுமாறு, அவரது வழக்கறிஞர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டிருந்தது. அக்டோபர் 2024-இல் வெளிச்சத்திற்கு வந்த இந்தக் குற்றச்சாட்டுகளில், கௌதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மட்டுமல்லாது மூன்று வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மேலும் ஆறு உயர்மட்ட நிர்வாகிகளின் பெயர்களும் குற்றவியல் வழக்கில் இடம்பெற்றிருந்தன.
இவற்றுடன் தொடர்புடைய ஒரு சிவில் வழக்கில், நிதிச் சந்தைகளில் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட அமெரிக்கச் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு எதிராக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) புகார்களைப் பதிவு செய்துள்ளது. மே 5 அன்று, அதானியின் சட்டக் குழுவிற்கும் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மேலும் தீவிரம் அடைந்துள்ளதாகவும், 'அடுத்த ஓரிரு மாதங்களுக்குள்' ஒரு தீர்வு எட்டப்படலாம் என்றும் ப்ளூம்பெர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஜூன் 2 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், நம்பகத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டு சரக்குகளை ஏற்றிச் செல்லும் பல LPG (திரவ பெட்ரோலிய எரிவாயு) டேங்கர் கப்பல்களின் போக்குவரத்தை அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகத் தெரிவித்திருந்தது. வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களுக்கும், அதானி குழுமத்தால் இயக்கப்படும் இந்தியாவின் முந்த்ரா துறைமுகத்திற்கும் இடையே பயணித்த LPG டேங்கர் கப்பல்களின் மீதும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனிக்கவனம் செலுத்தி ஆய்வு செய்துள்ளது. இந்தக் கப்பல்களில் சில, தங்களின் உண்மையான பயணப் பாதைகளை மறைக்க அல்லது மாற்றியமைக்க முயன்றதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இதில், கப்பலின் இருப்பிடம் மற்றும் வழித்தடத்தைக் காட்டும் தானியங்கி இருப்பிடம் காட்டும் அமைப்பை (AIS) மாற்றுவது அல்லது நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டதாக தெரிய வருகிறது.
இத்தகைய வணிக நடைமுறைகளை நன்கு அறிந்த பல வல்லுநர்களின் கூற்றுப்படி, ஈரானிய எண்ணெய் மற்றும் எரிவாயுப் பொருட்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, அப்பொருட்கள் ஓமன் அல்லது ஈராக் போன்ற நாடுகளிலிருந்து வந்ததாகப் பொய்யாகக் காட்டுகின்றனர் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சுட்டிக்காட்டியது. எஸ்எம்எஸ் ப்ரோஸ் (SMS Bros) என்ற பெயரில் பனாமா நாட்டின் கொடியுடன் இயங்கிய ஒரு டேங்கர் கப்பலை முக்கியமாக மையப்படுத்தி இந்த செய்திக் கட்டுரை வெளிவந்துள்ளது. இக்கப்பல் பின்னர் நீல் (Neel) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 3 அன்று, இக்கப்பல் ஈராக்கில் உள்ள கோர் அல் சுபையர் (Khor al Zubair) துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததாக தானியங்கி இருப்பிடம் காட்டும் அமைப்பு (AIS) தரவுகள் காட்டின. ஆனால், அதே நாளில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் அங்கு இந்தக் கப்பல் இருந்ததற்கான எந்தத் தடயமும் தெரியவில்லை. மாறாக, இதையொத்த அம்சங்களைக் கொண்ட ஒரு கப்பல் ஈரானின் தொன்பாக் (Tonbak) பகுதியில் உள்ள ஒரு LPG முனையத்தில் காணப்பட்டது.
நான்கு நாட்களுக்குப் பிறகு, அதே கப்பல் ஐக்கிய அரபு அமீரக (UAE) கடற்கரைக்கு அருகில் காணப்பட்டது. அதன் தரவுகள், அது நீரின் மட்டத்திலிருந்து தாழ்வாக மிதந்து செல்வதுபோல் காட்டின – இது சரக்குகள் ஏற்றப்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருந்தது. ஓமானின் சோஹார் (Sohar) துறைமுகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டிருப்பதாகக் கப்பல் சமிக்ஞை அனுப்பிய போதிலும், அது உண்மையில் அங்கு நிறுத்தப்பட்டதற்கான எந்தத் தடயமும் காணப்படவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஓமானின் சோஹார் துறைமுகத்தில் சுமார் 11,250 மெட்ரிக் டன் LPG சரக்கை ஏற்றிக்கொண்டு, அதை இந்தியாவின் முந்த்ரா துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்காக அதானி குளோபல் PTE நிறுவனம் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 அன்று வெளியான இந்திய சுங்கத்துறை பதிவுகளின்படி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் மேற்குறிப்பிட்ட விவரங்களுடன் கூடிய ஒரு சரக்கு இறக்குமதியை இந்தியாவில் பெற்றுள்ளது. இச்சரக்கின் மதிப்பு 7 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் சற்று அதிகம் என்று பட்டியலிடப்பட்டிருந்தது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, கடந்த ஆண்டு 'நீல்' எனப் பெயர் மாற்றப்பட்ட 'எஸ்.எம்.எஸ். பிரதர்ஸ்' என்ற டேங்கர் கப்பலின் போக்குவரத்துப் பதிவேடுகளில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. ஜூன் மாதத்தில், அடையாளம் தெரியாத ஒரு வாடிக்கையாளருக்காக ஈரானில் உற்பத்தி செய்யப்பட்ட எல்.பி.ஜி எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகக் வங்கதேசத் துறைமுக ஆவணம் தெரிவித்திருந்தது. ஆனால், அந்தக் கப்பலின் தானியங்கி இருப்பிடம் காட்டும் அமைப்பு (AIS) தரவுகளோ, அஃது ஈராக்கை நோக்கிப் பயணித்ததாகக் குறிப்பிட்டன. இதேபோன்றதொரு முரண்பாடு ஏப்ரல் மாதத்திலும் கண்டறியப்பட்டதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல், அதானியின் முந்த்ரா துறைமுகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று எல்.பி.ஜி டேங்கர் கப்பல்கள் பற்றியும் சிலத் தகவல்களை வெளியிட்டிருந்தது. இவை, தங்களின் உண்மையான இருப்பிடங்களை மறைக்கும் விதமாகச் செயல்படுவதாகவும், இந்தக் கப்பல்களில் ஒன்று, 'நீல்' கப்பலை இயக்கும் அதே நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு, அதைப் போலவே போலியான AIS சமிக்ஞைகளையும் அனுப்பியிருக்கிறது. மேலும், ஈரானிய எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கொண்டு செல்வதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல்களை அமெரிக்க நாடாளுமன்றத்தின் (மாநிலங்களவை - செனட்) கண்காணிக்கும் பட்டியலிலும் அக்கப்பலின் பெயர் இடம்பெற்றிருந்த்தது கவனிக்கத்தக்கது.
மற்றொரு டேங்கர் கப்பல், ஈராக்கிலுள்ள 'கோர் அல் சுபைர்' துறைமுகத்தில் நின்றதாக சமிக்ஞை அனுப்பியது. எனினும், செயற்கைக்கோள் புகைப்படங்கள் அதன் இருப்பை அங்கு உறுதிப்படுத்தவில்லை. முந்த்ரா துறைமுகத்தில் அடிக்கடி வந்து செல்லும் நான்காவது டேங்கர் கப்பல், ஈரானிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டு, அமெரிக்க எரிசக்தித் துறை 2024ல் வெளியிட்டிருந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்ட கட்டுரையில் முன்வைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் முற்றிலுமாக மறுத்துள்ளது. தங்கள் எல்.பி.ஜி வணிகம் மிகச் சிறியது என்றும், அதானி எண்டர்பிரைசஸின் சென்ற(2024-25) நிதியாண்டின் மொத்த வருவாய் $11.7 பில்லியனுக்கும் மேல் இருக்கையில், அதில் வெறும் 1.46% மட்டுமே எல்.பி.ஜி வணிகத்திலிருந்து கிடைப்பதாகக் குறிப்பிட்டது.
அதானி குழுமம், தங்கள் நிறுவனங்களின் அனைத்து எல்.பி.ஜி வர்த்தகமும், இந்திய மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கும், அமெரிக்கத் தடைகளுக்கான விதிகளுக்கும் முழுமையாக இணங்கியே நடைபெறுவதாக திட்டவட்டமாகத் தெரிவித்தது. நம்பகமான சர்வதேச விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்கள் மூலம் எல்.பி.ஜி கொள்முதல் செய்யப்படுவதாகவும், அமெரிக்கத் தடைப் பட்டியலில் எவரும் இடம்பெறவில்லை என்பதை உறுதிப்படுத்த உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும் பன்னாட்டு தரநிலைகளின்படி செயல்படும் மூன்றாம் தரப்பு சரக்கு பரிமாற்ற நிறுவனங்களிடம்தான் கப்பல் போக்குவரத்துப் பணிகள் ஒப்படைக்கப்படுவதாகவும் அக்குழுமம் விரிவாக விளக்கமளித்தது.
குறிப்பாக, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்ட சரக்கு அனுப்புதலைப் பற்றி அதானி குழுமம் கருத்து தெரிவிக்கையில், அது மூன்றாம் தரப்பு தளவாட நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்ட ஒரு வழக்கமான வணிக ஒப்பந்தம் எனக் குறிப்பிட்டது. சரக்கு புறப்பட்ட துறைமுகம் ஓமானிலுள்ள சோஹார் என்றுதான் ஆவணங்கள் காட்டுகின்றன என்று தெரிவித்திருந்தது.
“நாங்கள் கப்பல்களை (எஸ்.எம்.எஸ். பிரதர்ஸ்/நீல் உட்பட) சொந்தமாக வைத்திருக்கவோ, இயக்கவோ, கட்டுப்படுத்தவோ இல்லை. நாங்கள் வாடகைக்கு எடுக்காத அல்லது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கப்பல்களின் தற்போதைய அல்லது கடந்தகால செயல்பாடுகள் குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க இயலாது,” என்றும் அதானி குழுமம் தெளிவுபடுத்தியது. சட்டபூர்வமான, முறையான இறக்குமதியாளரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் அனைத்துப் பொறுப்புகளையும் தாங்கள் பின்பற்றியுள்ளதாகவும் அக்குழுமம் மேலும் தெரிவித்தது.
- விஜயன் (தமிழில்)
மூலக்கட்டுரை: https://thewire.in/world/us-probing-adani-group-over-suspected-iran-petrochemical-imports-wsj-reports