இந்திய தொலைத் தொடர்புத் துறையை எலான் மஸ்க்-க்கு தாரை வார்க்கும் பாஜக அரசு

தமிழில்: விஜயன்

இந்திய தொலைத் தொடர்புத் துறையை எலான் மஸ்க்-க்கு தாரை வார்க்கும் பாஜக அரசு

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை விரைவில் தொடக்கம்: மாத கட்டணம் ₹3,000 முதல் ₹4,200 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

எலான் மஸ்க்’ன் செயற்கைக்கோள் இணைய நிறுவனமான ஸ்டார்லிங்க், கடந்த வாரம் இந்திய அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றதை அடுத்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் தனது சேவைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்லிங்கின் இணைய இணைப்பைப் பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் ஒரு நிறுவல் சாதனத் தொகுப்பை வாங்க வேண்டியிருக்கும். இத்தொகுப்பில் செயற்கைக்கோள் டிஷ், வைஃபை ரவுட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கும், இதன் விலை தோராயமாக ₹33,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைய இணைப்புக்கான மாதாந்திர கட்டணமாக, வரம்பற்ற டேட்டா திட்டங்களுக்கு ஸ்டார்லிங்க் ₹3,000 முதல் ₹4,200 வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் ஆரம்பத்தில் மாதத்திற்கு $10 (தோராயமாக ₹840) க்கும் குறைவான விலையில் வரம்பற்ற டேட்டா சேவைகளை வழங்கும் சிறப்பு விளம்பரத் திட்டத்தை அறிமுகப்படுத்தக்கூடும் என முன்னதாக வெளியான சில செய்திகள் தெரிவித்திருந்தன. இருப்பினும், பெரும்பாலான தகவல்கள் தற்போது, மாதக் கட்டணம் ₹3,000 முதல் ₹4,200 என்ற வரம்புக்குள் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்தியாவில் இயங்கும் வழக்கமான இணைய சேவை வழங்குநர்களுடன் ஒப்பிடுகையில், ஸ்டார்லிங்க் நிர்ணயம் செய்துள்ள விலை என்பது மிகவும் அதிகமாகும். உண்மையில், உலகளவில்—அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளானாலும், கென்யா, நைஜீரியா போன்ற வளரும் நாடுகளானாலும்—ஸ்டார்லிங்கின் சேவைகள், வழக்கமான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிக விலையை நிர்ணயம் செய்துள்ளது.

அதிகப்படியான பயனர்களை ஈர்ப்பதற்காக ஸ்டார்லிங்க் தனது கட்டணங்களை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் ஊகமாக இருக்கிறது. ஏனெனில், செயற்கைக்கோள்கள் வாயிலாக வழங்கக்கூடிய இணையத் தரவின் அளவு வரையறுக்கப்பட்டதாக இருப்பதோடு, அதிக பயனர்களைச் சேர்ப்பது சேவையின் தரத்தைப் பாதிக்கக்கூடும் என்று கூறுகிறார்கள்.

இந்தியாவில் தனது சேவைகளை அறிமுகப்படுத்தும் ஒரு பகுதியாக, ஸ்டார்லிங்க் ஒவ்வொரு புதிய பயனருக்கும் ஒரு மாத இலவச சோதனையை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. இது, வாடிக்கையாளர்கள் மாதாந்திர திட்டத்திற்கு உறுதியளிப்பதற்கு முன்னர், சேவையின் தரத்தை சோதித்துப் பார்க்க வழிவகை செய்யும்.

வழக்கமான பிராட்பேண்ட் சேவைகளை நிறுவுவதற்குச் சவாலாக உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய இணைப்பைக் கொண்டு சேர்ப்பதே ஸ்டார்லிங்கின் முக்கிய நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி கண்டால், தற்போதுள்ள வழங்குநர்களால் நீண்ட காலமாக செய்ய முடியாத, இணைய சேவை குறைபாடுள்ள இந்தியாவின் பல பகுதிகளில் இணையத்தை கொண்டு சேர்ப்பதற்கு இது கணிசமான அளவு பங்களிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணையச் சேவை

செயற்கைக்கோள்கள் வாயிலாக இணையச் சேவைகளை வழங்கும் நிறுவனமே ஸ்டார்லிங்க். இதன் செயற்கைக்கோள்கள் புவியின் தாழ்வட்டப் பாதையில் (Low Earth Orbit - LEO), சுமார் 550 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன – வழக்கமான செயற்கைக்கோள்கள் விண்வெளியில் மிக உயரமான சுற்றுப்பாதைகளில் உள்ளதைக் காட்டிலும் இது மிக அருகில் அமைந்துள்ளது. இந்த அண்மைத்தன்மை காரணமாக, அதிவேக இணையத்தை வழங்குவதற்கு மிகக் குறைந்த அளவிலான தாமதத்தையே  ஸ்டார்லிங்க் எடுத்துக்கொள்கிறது. இச்சேவை தற்போது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. தொலைதூரக் கிராமங்கள், பேரிடர் பாதிப்புக்குள்ளான பகுதிகள் மற்றும் இணைய வசதியே அற்ற நிலப்பரப்புகளுக்கும் இணையச் சேவையைக் கொண்டு சேர்ப்பதே தமது முதன்மையான நோக்கம் என்று அறிவித்துள்ளது.

ஸ்டார்லிங்க், எலான் மஸ்க் நிறுவிய விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)-க்குச் சொந்தமானது. இதுவரை, ஸ்பேஸ்எக்ஸ் ஏறத்தாழ 7,000 தாழ்வட்டச் சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது. மேலும், இந்த எண்ணிக்கையை 40,000-க்கும் மேலாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இடங்கள் அல்லது மோதல் நிலவும் மண்டலங்கள் போன்ற மிகவும் சவாலான சூழல்களிலும் இணையச் சேவையை வழங்குவது சாத்தியமாகும்.

இந்தியாவில் எப்போது ஸ்டார்லிங்க் சேவை தொடங்கும்?

எலான் மஸ்க் தலைமை தாங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது. இந்திய அரசு கடந்த மாதம் இந்நிறுவனத்திற்கு 'விருப்பக் கடிதம்' (Letter of Intent - LoI) ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்த அனுமதி கிடைத்துள்ளது. இது ஸ்டார்லிங்கின் வருகைக்கு இந்திய அரசின் அதிகாரபூர்வமான ஆதரவு இருப்பதை வெளிப்படுத்துகிறது.

இருப்பினும், இச்சேவை அதிகாரபூர்வமாகத் தொடங்குவதற்கு முன், ஸ்டார்லிங்கிற்கு மேலும் இரண்டு முக்கிய அனுமதிகள் தேவைப்படுகின்றன:

*   இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்திடம் (IN-SPACe) இருந்து ஒப்புதல்.

*   அரசிடம் இருந்து ரேடியோ அலைவரிசை (spectrum) ஒதுக்கீடு, 

ஆகியவை தேவைப்படுகின்றன. 

பிடிஐ (PTI) செய்தியின்படி, ஸ்டார்லிங்க் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தற்காலிக (சோதனைக்கான) அலைவரிசை அனுமதியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள் காட்டி, கடந்த வாரம் உரிமம் பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் சேவைகளைத் தொடங்க ஸ்டார்லிங்க் ஆயத்தமாகி வருகிறது என்று ஏஎன்ஐ (ANI) வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இச்சேவையை எளிதாக பெறும் வகையில், ஸ்டார்லிங்கின் கருவிகள் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) ஆகியவற்றின் விற்பனை நிலையங்களில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களுடனும் கூட்டு வணிகத்திற்கான  ஒப்பந்தங்களில் ஸ்டார்லிங்க் கையெழுத்திட்டிருந்தது. இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் 70% சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்த இரு நிறுவனங்களும் கொண்டுள்ளன. இவற்றின் உதவியுடன், ஸ்டார்லிங்கின் இணையச் சேவை இந்தியாவின் அதிகப்படியான மக்களைச் சென்றடையும் எனக் கருதப்படுகிறது.

யூடெல்சாட்-இன் ஒன்வெப் (Eutelsat’s OneWeb) மற்றும் ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து, இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையிடம் (Department of Telecommunications - DoT) இருந்து செயற்கைக்கோள் தகவல் தொடர்பு உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங்க் விளங்குகிறது.

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.news18.com/business/starlink-price-in-india-elon-musk-may-launch-satcom-plans-at-rs-3000-4200-per-month-says-report-ws-l-9377449.html?utm_medium=social&utm_source=whatsapp&utm_campaign=regular-editorial

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு