அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர் : இனவாத நாணயத்தின் இரு முகங்கள்

கலையரசன்

அநகாரிக தர்மபாலா, ஆறுமுக நாவலர் : இனவாத நாணயத்தின் இரு முகங்கள்

சிங்கள இனவாதிகளின் பிதாமகனாக கருதப்படும் அநகாரிக தர்மபாலா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் :

 1. இங்கேயுள்ள படத்தில், விவேகானந்தருக்கு இடது பக்கம் அமர்ந்திருப்பவர் தான் அநகாரிக தர்மபால. 1893 ம் ஆண்டு, சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த சர்வதேச மதங்களின் பாராளுமன்றத்தில் கலந்து கொண்ட பொழுது எடுக்கப் பட்ட படம் அது.

2. அநகாரிக தர்மபாலாவின் இயற்பெயர் "Don David Hewavitharana". அவர் பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர். ஆங்கிலம் மட்டுமே பேசத் தெரிந்த சிங்கள மேட்டுக்குடிப் பிரஜை. கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்று, விவிலிய படிப்பில் பாண்டித்தியம் பெற்றவர். (சுருக்கமாக: ஒரு சிங்கள ஆறுமுக நாவலர்.

ஏகாதிபத்திய அடிவருடித்தனத்தில் ஆரியமும்-திராவிடமும் ஒன்றே!! ஏ.எம்.கே

3. 1886 ம் ஆண்டு, மேலைத்தேய நாட்டவரின் ஆன்மீக சபையான "Buddhist Theosophical Society" இல் இணைந்து கொண்டார். அந்த சபையானது, பௌத்த மதத்தை தழுவிக் கொண்ட ஆங்கிலேயரான Henry Steel Olcott இனால் உருவாக்கப் பட்டது. அவர் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேர்னல் ஆவார். இன்றைக்கும், அநகாரிக தர்மபாலாவுக்கு அடுத்த படியாக, கேர்னல் ஒல்கொட் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் நாயகனாக போற்றப் படுகின்றார்.

4. பௌத்த சமயத்தை தழுவிய அநகாரிக தர்மபாலாவும், ஒல்கொட்டும், இலங்கை முழுவதும் பௌத்த மதத்தை மீள் உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சியால் தான் மகாவம்சம் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப் பட்டது. துட்டகைமுனு சிங்களவர்களின் நாயகன் ஆனான்.

5. இலங்கையில் பௌத்த மத புத்துயிர்ப்பில் ரஷ்யப் பெண்மணியான Blavatsky யின் பங்களிப்பும் அளப்பெரியது. Blavatsky யின் தொடர்பினால் தான் அநகாரிக தர்மபாலா பாளி மொழி பயின்றார். Blavatsky யின் ஆரிய இனப்பெருமை பேசும் கருத்துக்கள் ஹிட்லரையும் ஈர்த்தன. Theosophical Society இப்போதும் சென்னை, அடையாறில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இலங்கையின் சாவர்க்கர் தர்மபாலாவை கொண்டாடும் அம்பேத்கரைட்டுகள்

6. இலங்கையை காலனிப் படுத்திய போர்த்துக்கேயர்களும், டச்சுக்காரர்களும் பௌத்த மதத்தை ஒடுக்கி, ஏறக்குறைய அழித்து விட்டார்கள். நாட்டில் எந்தப் பாகத்திலும் பௌத்த மதக் கல்வி போதிக்கப் படவில்லை. அநகாரிக தர்மபாலா பெருமுயற்சி எடுத்து, பௌத்த மதப் பாடசாலைகளை உருவாக்கினார். விகாரைகள் புதுப்பிக்கப் பட்டன.

7. அநகாரிக தர்மபால முன்மொழிந்த தத்துவங்கள், பிற்காலத்தில் சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகள் தோன்றுவதற்கு பெரிதும் உதவியது. அதனால், இன்றைக்கும் சிங்கள தேசியவாதிகள்/மதவாதிகள் அவரை மிகுந்த மரியாதையுடன் நினைவுகூருகின்றனர்.

8. மறுபக்கத்தில், தமிழ் தேசியவாதிகள்/இனவாதிகள் அநகாரிக தர்மபாலாவை வெறும் இனவாத குருவாக மட்டும் பார்க்கின்றனர். ஆனால், அதே நபர்கள் ஆறுமுக நாவலரை மரியாதையுடன் நினைவுகூரும் முரண்நகையையும் அவதானிக்கலாம்.

9. பௌத்தமும், சிங்களமும் வளர்த்த, அநகாரிக தர்மபாலா "ஒரு சிங்கள ஆறுமுகநாவலர்". சைவமும், தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலர், "ஒரு தமிழ் அநகாரிக தர்மபாலா". ஆனால், சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் அதனை ஏற்றுக் கொள்ள முன்வர மாட்டார்கள்.

10. தெற்கில் பௌத்த மதத்தையும், வடக்கில் சைவ மதத்தையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உள்நோக்கம் குறித்து யாரும் அக்கறைப்படுவதில்லை. ஆனால், இன்றைய சிங்கள-தமிழ் இன முரண்பாட்டின் விதைகள் அப்போதே தூவப் பட்டிருக்கலாம். "மக்களை பிரித்தாள்வதன்" மூலமே, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் பல நூறாண்டுகள் நிலைத்து நின்றது என்பது வரலாறு.

- கலையரசன் (கலையகம்)

கட்டுரையாளரின் வலைதள பக்கத்திற்கு செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்

http://kalaiy.blogspot.com/2017/04/blog-post_25.html?m=1

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு