புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் இந்தி திணிப்பு

தமிழில் : விஜயன்

புதிய குற்றவியல் சட்ட மசோதாவில் இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு: புதிய குற்றவியல் சட்ட மசோதோவிற்கு இந்தியில் பெயர் சூட்டியதற்காக எதிர்கட்சிகள் மத்தியிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.  

இந்திய பன்முக கலாச்சாரத்தின் உயிராதாரத்தையே சிதைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியிருப்பது பா.ஜ.க அரசின் ஆணவத்தையே எடுத்துக் காட்டுகிறது; கிடைக்குமிடங்களிலெல்லாம் இந்தியை திணிப்பது இந்தி  மொழியின் எகாதிபத்தியப் போக்கையே நினைவுபடுத்துகிறது, என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நடப்பிலுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிதாக மூன்று குற்றவியல் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மோடி அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது. இவற்றின் பெயர்கள் இந்தியில் சூட்டப்பட்டிருப்பதால் எதிர்கட்சிகள் மத்தியிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இந்திய தண்டனைச் சட்டத்திற்கு(1860) பதிலாக நியாயா சன்கிதா மசோதா(2023)வும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு(1898) பதிலாக பாரதிய நகரிக் சுரக்ஷா சன்கிதா மசோதா(2023)வும், இந்திய சாட்சியங்கள் சட்டத்திற்கு(1872) பதிலாக பாரதிய சக்ஷயா மசோதா(2023) போன்ற சட்ட முன்வரைவுகளை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வெள்ளிக்கிழமையன்று(ஆகஸ்ட் 11) தாக்கல் செய்துள்ளார்.

மேற்கண்ட மசோதாக்கள் நாட்டிலுள்ள குற்றவியல் நீதி முறைமைகளை மறுசீரமைப்பததோடு, காலனிய எச்சங்களையும் துடைத்துவிடும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.

காலனிய எச்சங்களை துடைக்கிறோம் என்ற பெயரில் இந்தி “காலனியாத்திக்க”த்தை மத்திய அரசாங்கம் கொண்டு வருவதற்காக  முயற்சிக்கின்றது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமூக ஊடகமான எக்ஸில்(முன்னர் டிவிட்டர் என்று அறியப்பட்டது) கூறியதாவது, இந்திய பன்முக கலாச்சாரத்தின் உயிராதாரத்தையே சிதைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியிருப்பது பா.ஜ.க அரசின் ஆணவத்தையே எடுத்துக் காட்டுகிறது; கிடைக்குமிடங்களிலெல்லாம் இந்தியயை திணிப்பது இந்தி  மொழியின் எகாதிபத்தியப் போக்கையே நினைவுபடுத்துகிறது, என்றார்.

“வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என்ற அடிப்படை கொள்கைக்கே இது எதிராக உள்ளது. இனிமேல், பா.ஜ.விற்கோ அல்லது மோடிக்கோ தமிழ் என்று வார்த்தை சொல்வதற்குகூட எந்தவித தார்மீக உரிமையும் இல்லை” என்றார்.

“இந்தி மொழி ஆதிகத்திற்கு எதிரான பேராட்டத் ‘தீ’ மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கும். இந்தி மொழியை திணிப்பதன் மூலம் நமது அடையாளத்தை அழிக்க முயற்சிக்கும் பாஜகவின் ஆணவப் போக்கை உறுதியுடன் எதிர்ப்போம்.”  என்று பதிவிட்டிருந்தார்.

ஸ்டாலினின் டிவிட்டர் பதிவு “சில்லரைத்தனமான அரசியலையே” வெளிப்படுத்துகிறது என்று கல்வி மற்றும் திறன் வளர்ச்சிக்கான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

இதுபோன்ற “சில்லறை அரசியல்” தமிழக முதல்வரின் அரசியல் அபிலாஷைகளுக்கு வேண்டுமானால் நன்கு பயன்படும். ஆனால் “இந்தியா என்ற ஒற்றுமை உணர்வை பலவீனப்படத்திவிடும்” என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.

“தமிழ் மொழி உட்பட இந்தியாவின் மொழிப்பன்மையை பாதுகாப்பதற்காக, வளர்த்தெடுப்பதற்காக பிரதமர் மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் எப்போதும் குரல் கொடுத்தே வந்துள்ளன”  என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.

“காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் நடத்தப்பட்ட விழா இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளில ஒன்றாகும். மேலும், இந்திய நாட்டின் பாரம்பரியம் பற்றியும், இலக்கிய பெருமை பற்றியும் பேசுவதற்கு சில வாரிசு அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே உரிமை உள்ளது என தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு மாறாக வேறு யாரேனும் நாடடின் பாரம்பரியத்தையும், இலக்கிய பெருமையும் கொண்டாடிவிட்டால் இவர்களுக்கு நெஞ்சு வலியே வந்துவிடுகிறது” என்றார் தர்மேந்திர பிரதான்.

“ஸ்டாலின் கூறியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை, ஸ்டாலினிடமிருந்து இதுபோன்றதொரு எதிர்வினை வரக்கூடம் என்று அவர்களுக்கே தெரியும்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் கூறினார்.

“மசோதாக்களுக்கு இந்தியில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் பெயர் வைப்பதற்கு(இந்திய அரசிலமைப்புச் சட்டத்தின் சரத்து 348ன் படி) பெரிதாக செலவாகிவிடப்போவதில்லை” என்று கூறினார் சசி தரூர்.

“அவர்களின் இந்தி வெறியை காட்டுவதற்கு மற்ற மொழி பேசக்கூடியவர்கள மீது இந்தியை திணிக்கிறார்கள். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் மொழியின் பழம்பெருமை பற்றியும், பண்பாடு பற்றியெல்லாம் வாய்க்கிழிய பேசிய மோடி மற்றும் பிற அமைச்சர்களின் முயற்சியில் மண் அள்ளிப் போடும்படியாக இவை அமைந்துவிட்டன”

“பாஜகவில் உள்ள சல்லிகள் மீண்டும் தங்களது தலையில் தானே மண் அள்ளி போட்டுக்கொண்டனர்” என்றார் சசி தரூர்.

நாடாளுமன்றத்தின் எந்தவொரு அவையிலும் அல்லது மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எல்லா மசோதாக்களும் அல்லது எல்லா சட்டத்திருத்தங்களும், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டபேரவைகளில் இயற்றப்படுகிற எல்லா சட்டங்களும், குடியரசுத் தலைவர் அல்லது மாநில ஆளுநர்களால் கொண்டுவரப்படுகிற அவசரச் சட்டங்கள் போன்றவை மட்டுமல்லாது நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டப்பேரவையால் இயற்றப்பட்ட சட்டத்தை பயன்படுத்தியோ அல்லது அரசியலமைப்பு சட்டத்தை பயன்படுத்தியோ கொண்டு வரப்படுகிற எல்லா அரசாணைகள், விதிகள், நெறிமுறைகள் மற்றும் துணை விதிகளும் ஆங்கில மொழியில் இருக்க வேண்டும் என்று சரத்து 348(2) கூறுகிறது.

ஒரு வேளை மாநில சட்டப்பேரவைகளில் ஏதேனும் ஒரு இந்திய மொழியில் சட்டம் இயற்றப்படுகிற பட்சத்தில், ஆங்கில மொழிப்பெயர்ப்பில் அவசியம் வெளியிட வேண்டும் என்பதையும் சேர்த்தே அப்பிரிவில் கூறப்பட்டுள்ளது.

சட்டம் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளிக்கிழைமையன்றே திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் என்பவர், புதிய மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் சூட்டுவதென்பது “இந்தித் திணிப்பின் இன்னொரு வடிவம்” என்று கூறினார்.

“வழக்காடுமன்றங்களில் இந்தியில் உள்ள சட்டங்களின் பெயர்களை சொல்வதற்கு முயற்சிப்பதிலேயே தென்னிந்திய வழக்கறிஞர்களுக்கு நேரம் ஓடிவிடும் ” 

புதிய மசோத்தாக்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியதற்கு எதிராக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மோகன் கடார்கியும் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

“ஆங்ககில மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு மசோதாவிற்கு இந்தியில் பெயர் சூட்டுவதென்பது முற்றிலும் ஏதேச்சதிகாரமானது மட்டுமல்ல அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. இந்தி மொழி பேசாத மக்கள் மத்தியில் இந்தியை திணிப்பதற்கான முயற்சியே இது. வெறும் பெயரை மட்டும் மாற்றுவது இந்தியை ஊக்குவிக்குவிறோம் என்று கூட சொல்ல முடியாது” என்றார் மோகன் கடார்கி.

தி வயர் செய்திதளத்திற்கு பேட்டியளித்தபோது “இதுபோன்றதொரு கூத்தெல்லாம் இதற்குமுன் நடந்ததேயில்லை” என்று உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஷ் கூறியுள்ளார்.

“அவசரத் சட்ட வடிவிலோ அல்லது மசோதா வடிவிலோ கொண்டுவரப்பரப்படுகிற எல்லா சட்டங்களும் இந்தி மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டத்திற்கு இந்தி மொழியில் பெயர் சூட்டியிருப்பது இதுவே முதல்முறை, ஆங்கிலச் சட்டத்தில் இந்தியில் பெயர் சூட்டியதன் மூலம் இந்தி மொழியை திணித்துள்ளனர்.” என்றார் சஞ்சய் கோஷ்.

இந்த இந்தி திணிப்பு பிராமணிய மேலாதிக்கத்திலிருந்து திணிக்கப்பட்டதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

“பச்சையான சமஸ்கிருத சொற்களை கொண்டு பெயர் சூட்டியதால்தான் நான் இவ்வாறு சொல்கிறேன், உதாரணத்திற்கு, பாரதிய தண்ட கோஷ் என்றே எளிதாக பெயர் சூட்டியிருக்கலாம். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை, மாறாக பாரதிய நியாய சன்கிதா என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்; பச்சையான சமஸ்கிருத சொல்லைக் கொண்டு இந்தியில் பெயர் சூட்டியிருக்கிறார்கள்,” என்றார் சஞ்சய் கோஷ்.

- விஜயன்

(தமிழில்) 

மூலக்கட்டுரை : https://thewire.in/politics/hindi-imposition-modi-govts-nomenclature-for-new-criminal-law-bills-stirs-row