அணு உலை விபத்து இழப்பீடு சட்டத் திருத்தம் – அமெரிக்க நிறுவனங்களின் லாபவெறிக்கு இந்திய மக்களை பலிகொடுக்கும் மோடி அரசு
ராய்ட்டர்ஸ்

அந்நிய நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கில் அணுசக்தி விபத்து பொறுப்புச் சட்டங்களை தளர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது: தரவுகள் தெரிவிக்கின்றன
அரசின் மூன்று தரவுகளின்படி, அணுசக்தி விபத்தில் ஏற்படும் சேதங்களுக்கான பொறுப்புச் சட்டங்களில் திருத்தம் செய்ய இந்தியா உத்தேசித்துள்ளது. இதன்படி, உபகரணங்களை வழங்கும் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகைக்கு ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். இந்த திருத்தம் முக்கியமாக அமெரிக்க நிறுவனங்களை ஈர்ப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் விபத்து நேர்ந்தால் வரம்பற்ற நிதிச்சுமையைச் சுமக்க நேரிடுமோ என்ற கவலையினால் இந்நிறுவனங்கள் இதுவரை இந்தியத் திட்டங்களில் பங்கேற்கத் தயக்கம் காட்டி வந்துள்ளன.
மோடி அரசின் இந்த முன்மொழிவு படி, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் அணுசக்தி உற்பத்தியை அதன் தற்போதைய நிலையிலிருந்து 100 கிகாவாட்டாக (GW) (12 மடங்கு) உயரும். அதே சமயம், இந்த சட்டத்திருத்தம் அமெரிக்காவுடனான வணிக மற்றும் வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இந்தியாவுக்கு சாதகமான நிலையை உருவாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அணுசக்தித் துறையால் தயாரிக்கப்பட்ட புதிய சட்ட வரைவு, 2010 ஆம் ஆண்டின் அணுசக்தி விபத்து சேதங்களுக்கான சட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியை நீக்குகிறது. முந்தைய விதியின் கீழ், அணு உலை வழங்கியவர்கள் எந்தவொரு உச்ச வரம்புமின்றி அனைத்து சேதங்களுக்கும் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தின்படி, விபத்து நேரும்போது, வழங்கியவர் செலுத்த வேண்டிய தொகை தொடர்புடைய தரப்புகளின் ஒப்பந்த மதிப்பின் அளவுக்குக் கட்டுப்படுத்தப்படும். சிறிய அணு உலைத் திட்டங்களுக்கு இந்த வரம்பு 58 மில்லியன் டாலராகவும், பெரிய திட்டங்களுக்கு 175 மில்லியன் டாலராகவும் நிர்ணயிக்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
டெலாயிட் தெற்காசியாவின் தலைமை வளர்ச்சி அதிகாரி தேபாஷிஷ் மிஸ்ரா கருத்து தெரிவிக்கையில், "இந்தியாவுக்கு அணுசக்தி இன்றியமையாதது. இது தூய்மையான எரிசக்தி ஆதாரமாகவும், நமது எதிர்காலத்திற்கு மிக முக்கியமானதாகவும் விளங்குகிறது" என்றார். மேலும், வழங்கியவர் செலுத்த வேண்டிய தொகைக்கு உச்ச வரம்பு விதிப்பதன் மூலம், அணு உபகரணங்களை வழங்கும் நிறுவனங்களின் முக்கிய கவலை தணியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பல நாடுகளின் சர்வதேச நடைமுறைகளுடன் ஒத்துப் போகின்றன. சர்வதேச வழக்கத்தின்படி, அணு உலையின் பாதுகாப்பை நிர்வகிக்கும் பொறுப்பு உபகரணங்களை வழங்கும் நிறுவனத்திடம் இல்லாமல், அதன் செயல்பாட்டை நிர்வகிக்கும் நிறுவனத்திடமே முக்கியமாக உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் வரம்பற்ற தொகையைச் செலுத்த வேண்டிய அபாயம் காரணமாக தயக்கம் காட்டி வந்த ஜெனரல் எலக்ட்ரிக், வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் கவலைகளை இந்த மாற்றங்கள் குறைக்கும் என்று மோடி அரசு கூறுகிறது.
இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதானது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பெரிய அளவிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு 191 பில்லியன் டாலராக இருந்த இரு நாடுகளின் வர்த்தகத்தை 2030 ஆம் ஆண்டிற்குள் 500 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு வைத்துள்ளன. ஜூலை மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் புதிய சட்டம் நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
* விபத்து நேரிட்டால், அணு உலை இயக்கும் நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மற்றும் காலவரையறைக்கு உட்பட்டு மட்டுமே வழங்கியவரிடம் இழப்பீடு கேட்க முடியும்.
* தற்போதைய சட்டத்தில் இழப்பீட்டுத் தொகைக்கோ அல்லது பொறுப்புக் காலத்திற்கோ எந்தவிதமான வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.
2010 சட்டத்தின் தோற்றம்: போபால் பேரழிவு
வரலாற்றில் தொழிற்துறையில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாகக் கருதப்படும் 1984 ஆம் ஆண்டு போபால் வாயுப் பேரழிவுக்குப் பதிலளிக்கும் விதமாகவே 2010 ஆம் ஆண்டு அணுசக்தி விபத்துச் சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில், அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடுக்குச் சொந்தமான தொழிற்சாலையிலிருந்து வெளியான விஷ வாயு 5,000 க்கும் மேற்பட்டோரின் உயிர்களைப் பறித்தது. 1989 ஆம் ஆண்டில், யூனியன் கார்பைடு பாதிக்கப்பட்டவர்களுக்கு 470 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்கி நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கை முடித்துக் கொண்டது.
முதலில் எழுதப்பட்டிருந்த அந்தச் சட்டம், மேற்குலக நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தியச் சந்தைக்குள் நுழைவதற்குப் பெரிய தடையாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னரும் கூட, இது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் பிரச்சினைகளை உருவாக்கியது. மேலும், ரஷ்ய மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களுக்கு அவற்றின் அரசாங்கங்கள் விபத்து தொடர்பான செலவுகளை ஏற்றுக்கொண்டதால், அப்போதைய சட்டம் அமெரிக்க நிறுவனங்களை ஒப்பீட்டளவில் பின்தங்கச் செய்தது.
அணுசக்தியில் இந்தியாவின் புதிய முதலீடு
நிகர கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாகக் குறைக்கும் தனது வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற அதே நேரத்தில், அதிகரித்து வரும் எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா தற்போது அணுசக்தியில் கணிசமான முதலீடு செய்து வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்குள்ளேயே தனியார் நிறுவனங்களும் அணு மின் நிலையங்களை நிறுவ அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா பவர், அதானி பவர் மற்றும் வேதாந்தா போன்ற பெரும் நிறுவனங்கள் இந்தத் துறையில் தலா 5.14 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்வது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
(டாலர்-ரூபாய் மாற்று விகிதம்: 1 டாலர் = 85.6320 ரூபாய்)
- வெண்பா (தமிழில்)
மூலக்கட்டுரை: https://www.reuters.com/world/india/india-plans-ease-nuclear-liability-laws-attract-foreign-firms-sources-say-2025-04-18/