பாசிசத்திற்கு சேவை செய்யும் திராவிட - இடது மாடல்கள்
Sidhambaram Voc

மையப்படுத்தப்பட்ட நிதி மூலதனத்தின் ஏகபோக சர்வாதிகாரமே பாசிசத்தின் வர்க்க அடிப்படை என மார்க்சியம் வரையறுக்கிறது. அதாவது ஒரு நாட்டில் உள்ள பிற முதலாளிகளின் வளர்ச்சியை அழித்து, ஒரு சில பெரும் கார்ப்பரேட்டுகளின் ஏகபோக சர்வாதிகாரத்திற்கான ஆட்சி அமைப்பே ( சிறு கும்பலின் சர்வாதிகாரம்) பாசிசம் என்கிறது மார்க்சியம்.
இதுவே ஸ்டாலின், டிமிட்ரோவ், டோக்ளியாட்டி ஆகியோர் மூன்றாம் அகிலத்தில் உருவாக்கியுள்ள மார்க்சிய அடிப்படையிலான தீர்மானமாகும்.
அந்த வகையில் இந்தியாவில் அம்பானி, அதானி, டாட்டா, பார்தி ஏர்டெல் போன்ற பெரும் கார்ப்பரேட்டுகள்..அமெரிக்க கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துக்கொண்டு....மாநில அளவிலான முதலாளிகளை அழித்து ஏகபோக சந்தை அதிகாரத்தை பெற்றுள்ளன. இந்த ஏகபோக சந்தை உருவாக்கத்திற்காகவே மாநில உரிமைகள் அதாவது மாநில அளவிலான முதலாளிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு மையப்படுத்தப்பட்ட ஆட்சி அமைப்பு முறை உருவாக்கப்படுகின்றது. இதுதான் பாசிசத்தின் வர்க்க அடிப்படையாகும்.
விரல் விட்டு எண்ணக்கூடிய இத்தகைய சிறு முதலாளித்துவ கும்பலின் ஏகபோக சந்தை அதிகாரத்துக்கான வேலையை செய்யும் அரசியல் கருவிதான் பாஜக. இதை மூடிமறைக்கவே பாசிசம் சாதி, மதம், இன வேற்றுமைகளை தூண்டிவிடுகிறது. ஜெர்மனியில் நாஜிச வடிவில் பெரு முதலாளிகளின் ஏகபோக ஆட்சி நிறுவப்பட்து போல, இந்துத்துவ வடிவில் இங்கு அரங்கேறிவருகிறது.
இந்த ஒற்றைச் சந்தை உருவாக்கத்தின் பாசிச வடிவத்தை (இந்து ராஜ்ஜியம் அல்லது இந்துத்துவா) வடிவமைக்கும் அரசியல் கருவிதான் ஆர்.எஸ்.எஸ் - பாஜக.
இவ்வாறு...பாசிசம் தீவிரமாக இங்கு அரங்கேற்றப்பட்டு வருகிறது. அது வேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் ஜெர்மனியைப் போல இறுதி வெற்றியைப் பெறவில்லை எனினும் அதை நோக்கி நகர்ந்து வருகிறது.
ஆகவே, திமுகவும், கேரள சி.பி.எம் அரசும் மாநில அளவிலான முதலாளிகளின் வளர்ச்சிக்கு திட்டமிட்டால் அம்பானி, அதானிகளின் ஒற்றைச் சந்தை உருவாக்கத்தை தடுக்க முடியும். ஆனால் அவை அவ்வாறு செய்யவில்லை.
அதற்கு மாறாக கார்ப்பரேட் பாசிசத்தின் வர்க்க வேர்களாக உள்ள அமெரிக்க கார்ப்பரேட்டுகள் மற்றும் அம்பானி அதானிகளின் ஏகபோகத்திற்கு சேவை செய்யும் வகையில் ...அவர்களுடன் இணைந்து மாநில முதலாளிகளின் அழிவுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
பாஜக போல மத வடிவில் அல்லாமல் திராவிட மாடல், இடது மாடல் எனும் பேரில் பாசிசத்துக்கு சேவை செய்கின்றது. பாசிச வடிவங்களில் சிற்சில வேறுபாடு. அவ்வளவுதான். ஆனால் வர்க்க வேர்கள் ஒன்றுதான்.
காட்டுப்பள்ளி, விழிஞ்சம் துறைமுக திட்டங்களை அவ்வாறு தமிழக, கேரள முதலாளிகள் மூலம் திட்டமிட்டிருந்தால் அதை பாசிசத்துக்கு எதிரான நடவடிக்கையாக கொள்ளலாம். மாறாக திமுகவும், சி.பி.எம்உம் அம்பானி, அதானிகளை தமது மாநிலங்களில் அனுமதிப்பது என்பது பாசிசத்தின் ஏவல்கருவிகளாக, தொங்கு சதைகளாக அவை மாறிவருகின்றன என்பதையே காட்டுகின்றது.
- Sidhambaram voc
https://www.facebook.com/share/p/1J89xRUReY/?mibextid=oFDknk
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு