வக்ஃப் திருத்த சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்

G. மஞ்சுளா

வக்ஃப் திருத்த சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 18.05.25 அன்று நடைபெற்ற 'வக்ஃப் திருத்த சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்' கருத்தரங்கில் உரையாற்றியது...

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், 40 திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 8 ம் தேதியில் இருந்து அமலில் உள்ளது புதிய வக்ஃப் சட்டம். 

இஸ்லாமியர்களின் நலனுக்காகதான் இச்சட்டத்தை கொண்டு வந்ததாக மோடி அரசு கூறுகிறது. இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது, பொய்வழக்குகளின் கீழ் சிறையிலடைப்பது, சிஏஏ போன்ற சட்டங்களின் மூலம் அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற முயற்சித்தது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370 பிரிவை நீக்கி மாநில அந்தஸ்துக்கும் குறைவாக  வைத்திருப்பது போன்ற கொடும் பாதகங்களை செய்து வரும் பாஜக அரசு, இஸ்லாமியர் நலன் என்று தற்போது நாடகமாடுவது ஆடு நனைகிறதே என்ற ஓநாய் அழுவது போன்றதானதுதான்.

ஆனால், மக்கள் நம்பும்படியான காரணங்களை பாஜக கூறிவருவது கவனத்திற்குரியது.  1. வக்ஃப் வாரியத்தின் நிர்வாகத் செயல்திறனை மேம்படுத்துவதற்காக 2. அதில் நடைபெறும் ஊழல் மற்றும் முறைகேடுகளை களைவதற்காக 3. வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் இருவரை இணைப்பதன் மூலம் பெண்களை அதிகாரப்படுத்துவது 4. சியா, சுன்னி தவிர போஹ்ரா, அகாகானி போன்ற  முஸ்லிம் சமூகங்களின் பங்களிப்பை உறுதி செய்ய என்பதான  காரணங்களை முன்வைக்கிறது.

ஆனால், அரசியல் ஆய்வாளர் குர்பான் அலி போன்றோர் இது  'நிலங்களை அரசு கையகப்படுத்தும் முயற்சி' என்று உறுதியாக கூறுகிறார்கள். வக்ஃப் அமைப்புகளில் நிறைய ஊழல்கள் உள்ளன. முறையான நிர்வாகமும் இல்லை" என்பதை அவர் உட்பட பலர் ஏற்றுக் கொள்கின்றனர். வக்ஃப் வாரியத்தின் ஊழல் செய்யும் உறுப்பினர்களை சிறைக்கு அனுப்புவதை தவிர வேறு எந்த மாற்றமும் தேவையில்லை என உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரவூப் ரஹீம் கூறுகிறார். 

பாஜகவின் உண்மையான நோக்கம் நிலத்தை கையகப்படுத்தி தனியாருக்கு வழங்குவது என்பதை சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்துத்துவ மாடலில் நடைபெற்று வரும் சம்பவங்களும்  நிரூபிக்கின்றன. 

இஸ்லாம் மீது நம்பிக்கை கொண்ட எவரும் மத நோக்கில் அல்லது தொண்டு செய்யும் நோக்கத்திற்காக நன்கொடையாக வழங்கும் அசையும் அல்லது அசையா சொத்துகள் வக்ஃப் எனப்படுகிறது. இந்த சொத்துகள் மூலம் வரும் வருமானத்தில் கல்வி நிறுவனங்கள், மசூதிகள், கல்லறைகள் தங்குமிடங்களுக்கு நிதியளிக்கப்படுகிறது. வக்ஃப் சொத்துக்களை விற்கவோ, வேறு யாருக்கும் தானமாக வழங்கவோ முடியாது.  வக்ஃப் சட்டம் 1995, பிரிவு 51(1A)ன் படி வக்பு சொத்துகளை வாங்குவது விற்பது சட்டவிரோதமாகும்

முகலாயர் ஆட்சி காலத்திலிருந்தே வக்ஃப் நடைமுறையிலிருக்கிறது. 1863-ல் முந்தைய சட்டங்களனைத்தையும் நீக்கி பிரிட்டிஷ் அரசால் கொண்டு வரப்பட்ட புதியசட்டமானது வக்ஃப் சொத்துக்களை ஆங்கிலேயர்கள் அபகரிப்பதற்கு ஏற்றதாக இருந்ததால் திருத்தம் கோரி கிளர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன.  

1910-ல் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற சர் சையத் அலி இமாம், 1911-ல் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் வக்ஃப் மசோதாவைக் கொண்டு வருகிறார். அதன்படி, 1913-ல் `முசல்மான் வக்ஃப் சரிபார்ப்புச் சட்டம் 1913 வந்தது. அதன்பின், முசல்மான் வக்ஃப் சட்டம் 1923  மூலம் வக்ஃப் நிர்வாகத்தில் முறையான கணக்கு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 

சுதந்திரத்திற்கு பின்பு வக்ஃப் சொத்துகளை முறையாக நிர்வகிக்க 1954ம் ஆண்டு வக்பு சட்டம் கொண்டு வரப்பட்டு மாநில வக்ஃப் வாரியங்கள் (State Waqf Boards) அமைக்கப்பட்டன. இவை மாவட்ட வக்பு சொத்துகளை நிர்வகிக்க, பாதுகாக்க, ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தன. 1964ல் மாநில வக்பு வாரியங்களை மேற்பார்வையிட வழிகாட்ட சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் மத்திய வக்பு கவுன்சில்(Central Waqf Council) அமைக்கப்பட்டது.

பின்னர், 1995-ல், விரிவாக்கம் செய்து வக்ஃப் சட்டம் 1995 கொண்டுவரப்பட்டது. அப்போது, வக்ஃப் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டன. வக்ஃப் சொத்துக்கள் தொடர்பான பிரச்னைகளில் இந்தத் தீர்ப்பாயங்களே இறுதி முடிவெடுக்கும். இந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய இயலாது. 

அதன்பின் 2013-ல் இச்சட்டத்தில் செய்த திருத்தங்களின்படி... ஒரு முஸ்லிம் சட்ட நிபுணர் உட்பட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட வக்ஃப் தீர்ப்பாயங்கள் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில வக்ஃப் வாரியத்தில் இரண்டு பெண் உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டுமென்பது அப்போதே செய்யப்பட்டு விட்டது.

தற்போது 30 வக்ஃப் வாரியங்கள் உள்ளன. 1995 மற்றும் 2013 ல் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் வாரியங்களின் அதிகாரத்தை வலுப்படுத்தியதுடன் வக்ஃப் சொத்துகள் தொடர்பான சிக்கல்களை தீர்க்க தனி வக்ஃப் தீர்பாயங்கள் சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 

ஆனால்,  புதிய வக்ஃப் சட்டம் இஸ்லாமியருக்கான எல்லா அதிகாரங்களையும் பறித்து, ஒன்றிய அரசின் கீழ் அதிகாரத்தை குவித்துள்ளது.

சில திருத்தங்களை பார்ப்போம் 

1. நன்கொடை வழங்குபவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும். 

இஸ்லாமிய நெறிமுறைபடி மனப்பூர்வமாக கலிமா(விசுவாச பிரகடனத்தை) மொழிந்தவுடன் ஒருவர் இஸ்லாமியராகிறார். ஆனால் இத்திருத்தத்தின் மூலம் ஒருவரை முஸ்லிம் என்பதை வரையறை செய்யும் அதிகாரத்தை அரசு தன் கையில் எடுத்துக் கொண்டு விட்டது.

2. மத்திய வக்ஃப் கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்களில் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். வக்ஃப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் நீக்கப்படுகிறது,

அரசியலமைப்பு சட்டம் பிரிவு  26 (a) மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக அமைப்புகளை நிறுவி அவற்றைப் பராமரிக்கவும், 26(d)  அத்தகைய சொத்தை நிர்வகிக்க ஒவ்வொரு மதத்துக்கும் சுதந்திரம் அளிக்கிறது.

இஸ்லாமியர்கள் தங்கள் சமூகத்தினருக்காக நன்கொடை அளித்து உருவாக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களுக்கான அமைப்பில், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை நுழைப்பது அவர்களின் மத சுதந்திரத்தை மீறுவதாக அமைகிறது. வக்ஃப் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் நீக்கப்படுவதன் மூலம், அரசுக்கு சாதகமான பிற மதத்தைச் சேர்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டு வக்ஃப் சொத்துக்கள் அரசுக்கு சாதகமாக அபகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

3. தீர்ப்பாயங்களின் முடிவை எதிர்த்து 90 நாள்களுக்குள் உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்யலாம். 

சொத்துகள் சம்பந்தமாக தீர்ப்பாயம் எடுக்கும் முடிவே இறுதியானது என்பது இதன்மூலம்  மாற்றப்பட்டுள்ளது.

4. ஏற்கனவே இருந்த பிரிவு 107- நீக்கப்பட்டு, வரம்பு சட்டம் 1963 ( Limitation Act, 1963) இதற்குள் கொண்டுவரப்படுகிறது. 

அதாவது, இந்த திருத்தத்தால், 12 ஆண்டுகளுக்கு மேல் வக்ஃப் சொத்துக்களை ஆக்ரமித்து வைத்திருப்பவர்கள் இத்திருத்தத்தின் மூலம் உரிமையாளர் ஆக முடியும். பஞ்சாப், ஹரியானாவில் வக்ஃப் சொத்துகளை சட்டவிரோதமாக ஆக்ரமித்து வைத்திருப்பவர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகளின் உரிமையாளராக மாறுவார்கள் என்கிறார் ஒரு வருமான வரி ஆணையர்

5. வக்ஃப் சொத்துக்களை, குறிப்பாக அரசுக்கு சொந்தமானது என்ற சர்ச்சைக்குரிய வக்ஃப் சொத்துக்களை ஆய்வுசெய்ய கணக்கெடுப்பு ஆணையர்கள் மற்றும் கூடுதல் ஆணையர்கள்  அங்கீகரிக்கப்பட்டு வந்தனர். அது மாற்றப்பட்டுள்ளது. 

அதாவது, சர்ச்சைக்குரிய சொத்துகளில் இனி மாவட்ட ஆட்சியர் எடுக்கும் முடிவே இறுதியானது.

6. வக்ஃப் சொத்துக்களை தணிக்கை செய்ய இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அல்லது நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் நடத்த உத்தரவிட மத்திய அரசுக்கு அதிகாரம். 

எந்த நேரத்திலும் வக்ஃப் கணக்குகளைத் தணிக்கை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருந்த நிலையில், அந்த உரிமை பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.(பாஜக ஆளாத மாநிலங்களில் கூட தன் அதிகாரத்தை செலுத்த இந்த திருத்தம் உதவும்)

7. வக்ஃப் தீர்ப்பாயத்தில் முஸ்லிம் சட்ட நிபுணர் நீக்கப்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தலைவராகவும், மாநில அரசிலிருந்து இணைச் செயலாளரும் சேர்க்கப்படுவர்.

 மற்ற பெரும்பாலான திருத்தங்களும் இஸ்லாமியருக்கு இருந்த அதிகாரங்களை பறிப்பதாகவேதான் உள்ளன. 

வக்பு சொத்துகளை கையகப்படுத்துவதை ஏற்கனவே பாஜக அரசு துவங்கி விட்டது அதை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காகவே இந்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன .

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் வக்பு சொத்துகள் ஏற்கனவே அரசால் பெருமளவு சூறையாடப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டு ஜனவரியில், ம.பி உஜ்ஜைனில் உள்ள நிசாமுதீன் காலனியில் அமைந்திருந்த நூற்றாண்டு பழமையான தக்கியா மசூதியை மாநில அரசு இடித்தது. இந்த நிலம், 1985 ஆம் ஆண்டு வெளியான அரசு அறிவிப்பின் படி வக்ஃப் சொத்தாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த மசூதி மற்றும் அதனைச் சுற்றியிருந்த 250க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், மகாகாலேஸ்வர் கோயில் வளாக விரிவாக்கத் திட்டத்திற்காக அகற்றப்பட்டன. அதாவது, 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகாகாலேஸ்வர் கும்பமேளா விழா ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, இந்நிலத்தை கைப்பற்றி, அதில் உள்ள கட்டிடங்களை இடித்து, கோயிலை சுற்றி வழிதடம் அமைக்கப்பட்டுள்ளது.

 2020ல் இருந்தே வக்ஃப் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு செல்வாக்கு மிக்க கட்டுமான நிறுவனங்கள் சட்டவிரோதமாக வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்து வந்தனர். 2023 ஆம் ஆண்டு, வருவாய்த் துறை அதிகாரி  இந்த வக்ஃப் நிலத்தை கையகப்படுத்தும் மாநில அரசின் திட்டத்திற்கு ஆட்சேபம் தெரிவித்தார். அங்கு குடியிருந்தவர்கள் வக்ஃப் சொத்து என்பதற்கான ஆவணங்களை சமர்பித்துள்ளதால், இந்த நிலத்தை கைப்பற்றுவதற்கு முன் மாநில வக்ஃப் வாரியத்திடமிருந்து 'No Objection Certificate' (NOC) பெற வேண்டியது அவசியம் என பரிந்துரை செய்தார். இருப்பினும், மாவட்ட நிர்வாகம் சமூக நலன் காரணமாக தங்களுக்கு நிலம் தேவைப்படுவதால் அனுமதி தேவையில்லை எனக் கூறி நிலத்தை கைப்பற்றியது. இந்த நில அபகரிப்பை எதிர்த்து வழக்கறிஞர் சோஹைல்கான் வாதாடி வருகிறார். 

அதிகாரிகள் வக்பு சொத்துகளை கையாண்ட விதத்தில் வேண்டுமென்றே அபகரித்தல், முறைகேடுகள் ஊழல் போன்ற நீண்டகால பிரச்சனைகள் உள்ளன. 1985ம் ஆண்டின் அரசாங்க வெளியீட்டின்படி உஜ்ஜைன் நகரில் 1014 அசையாச் சொத்துகள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவையாக இருந்தன. ஆனால்  வருவாய்துறையின் அதிகாரபூர்வ பதிவேட்டில் இவை வக்ஃப் சொத்தாக காட்டப்படவில்லை. 

2000ல் டிஜிட்டல்மயமாக்கத் தொடங்கியபோது பிரச்சனை மேலும் மோசமடைந்துள்ளது. புதிய மென்பொருள், நிலங்களை அரசு அல்லது தனியார் சொத்துகள் என மட்டும் வகைப்படுத்துவதால், பல வக்ஃப் சொத்துகள் அரசு சொத்துகளாக பதிவு செய்யப்பட்டுள்ளன. போபாலில், 1857ஆம் ஆண்டு கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மோதி மசூதி, தற்போது அரசு சொத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, சமூக அமைப்புகள் வக்ஃப் தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளன.  தீர்ப்பாயத்திற்கு முடிவு செய்யும் அதிகாரமே இல்லை எனும்போது இந்த வழக்குகள் நிலை என்னவாகும்? 

மத்தியப் பிரதேச வக்ஃப் வாரியமும், மத்திய சிறுபான்மை நலத்துறையும் 2001 முதல் 2023 வரை பலமுறை மாநில அரசுக்கு கடிதங்கள் அனுப்பி, நிலப்பதிவுகளை சரிசெய்யக் கோரியுள்ள போதிலும் மத்திய பிரதேச மாநில அரசு இந்த வேண்டுகோள்களை புறக்கணித்து, வக்ஃப் சொத்துகளை அபகரிக்க அனுமதி அளித்துள்ளது .

அதேபோல் 2021ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேச அரசு, பாஜக தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்த ஒரு தொண்டு நிறுவனத்திற்கு, போபாலில் உள்ள 1.2 ஹெக்டேர் வக்ஃப் நிலத்தை ஒப்படைத்தது. இந்த நிலம், அரசு பதிவுகளில் கல்லறையாக குறிப்பிடப்பட்டிருந்தது.  வக்ப் வாரியத்தின் தீர்ப்பாயம் அல்லது நீதிமன்றம் தடை உத்தரவு வழங்குவதற்கு முன்பே, தொண்டு நிறுவனம் அந்த இடத்தைச் சுற்றி சுவர் கட்டி, அங்கு ஒரு சமூக மண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளது.

“இந்த சட்டதிருத்தங்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கும் இதுபோன்ற நிலங்களை ஆக்ரமித்து வைத்திருக்கும் தொழிலதிபர்களுக்கும் பலனளிக்கும் – அதேசமயத்தில் வாரியங்களில் முஸ்லிம் எம்பிகள் எம்எல்ஏக்கள் ஏகபோகத்தை உடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வாரியங்களில் ஊழல் நடந்திருக்கிறது. அவற்றை முறையாக செயல்படுத்தினால் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்கிறார்” சமூக ஆர்வலர் ஜப்பார்கான்.

2006ல் வெளியான சச்சார் குழு அறிக்கையும் வக்ஃப் சொத்தை முறையாக நிர்வகிப்பதன் மூலம் 10000 கோடி ஆண்டு வருமானத்தை ஈட்ட முடியும். ஆனால் இப்போது 163கோடிதான் வருகிறது என்று கூறியது. வக்பு வாரியங்கள் எளிய மக்களுக்கானவை என்பதில் இருந்து விலகி ஊழல் முறைகேடுகளால் மோசமான நிலைமையை அடைந்துள்ளன என்பதும் அதை பாஜக அரசு சரியாக பயன்படுத்தி நிலங்களை பறிக்கிறது என்பதையும் மக்கள் போராட்டங்கள் இல்லாமல் இதற்கு தீர்வில்லை என்பதையே இவையனைத்தும் நிரூபிக்கின்றன.

- G. மஞ்சுளா

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid029kEkXK5X2Q3njxANy1L1hkWn8f6VvahaR8vsQTiA9Pv3a8RE6GxCSQSMBjZaiLVl&id=100001530942887&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&_rdr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு