ஈரானில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு திட்டமிடும் நெதன்யாகு: டிரம்ப் இதற்கு ஆதரவு தருகிறாரா?

தமிழில்: விஜயன்

ஈரானில் ஆட்சிக் கவிழ்ப்பிற்கு திட்டமிடும் நெதன்யாகு: டிரம்ப் இதற்கு ஆதரவு தருகிறாரா?

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, திங்கட்கிழமை அன்று அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான ஏபிசி நியூஸுக்குப் பேட்டி அளித்தார். ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியைக் கொல்வதற்காக இஸ்ரேல் வகுத்திருந்த திட்டத்தைத் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாக வெளிவந்த செய்திகள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அத்திட்டத்தை டிரம்ப் தடுத்து நிறுத்தினாரா அல்லது இஸ்ரேல் உண்மையிலேயே கமெனியைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததா என்பதை நெதன்யாகு முழுமையாகத் தெளிவுபடுத்தவில்லை. ஆயினும், "இது போரை மேலும் தீவிரமடையச் செய்யாது; மாறாக, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்" என்று நெதன்யாகு உறுதிபடத் தெரிவித்தார். தொடர்ந்து, "இஸ்ரேல் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறது" என்றும் அவர் அழுத்தமாக வலியுறுத்திக் கூறினார்.

இதன் தொடர்ச்சியாக, டிரம்ப்பின் "அமெரிக்காவை மீண்டும் மகத்தானதாக்குவோம் - MAGA" இயக்கத்தின் முக்கிய ஆதரவாளர்களான—முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பனோன் மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சன்—ஆகிய இரு முக்கிய ஆளுமைகளும், அமெரிக்க அரசாங்கம் ஈரானில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகத் தங்களது கருத்தை முன்வைத்தனர். கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கிய பின்னர், அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் அவர்கள் இக்கருத்தை வெளியிட்டனர். ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என்று தேசிய உளவுத்துறை இயக்குநர்(துளசி கப்பார்ட்) கடந்த மார்ச் மாதம்  அமெரிக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இவ்வாறிருக்க, "நாள் முழுவதும் நடந்த கேம்ப் டேவிட் மாநாட்டிற்கு துளசி கப்பார்ட் ஏன் அழைக்கப்படவில்லை?" எனப் ஸ்டீவ் பனோன் கேள்வி எழுப்பினார்.

“அனுசக்தித் திட்டம் குறித்து மட்டுமல்லாது, ஈரானின் உச்சபட்சத் தலைவர்கள் அனைவரையும் அழித்தொழிப்பதே இதன் இலக்கு,” என ஸ்டிவ் பனோன் தெளிவுபடுத்தினார். “இது அப்பட்டமான ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையாகும். ஒரு நாட்டின் ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் இருப்பது தவறல்ல – ஆனால் அதை அமெரிக்க மக்களுக்கு முதலில் விளக்க வேண்டும்,”.

"இது ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்ததல்ல. மாறாக, அதன் தலைமைப் பொறுப்பில் உள்ள அனைவரையும் அழித்தொழிப்பதே இதன் அடிநாதம்.”

– ஸ்டீவ் பனோன்(டிரம்பின் முன்னாள் ஆலோசகர், MAGA இயக்க ஆதரவாளர்)

“ஈரானில் ஆட்சி மாற்றம் கொண்டு வருவதே இதன் உள்ளார்ந்த நோக்கம்,” என்று டக்கர் கார்ல்சனும் வலியுறுத்தி பேசியிருந்தார். “இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நான் அறிவேன். நான் உண்மையையே சொல்கிறேன். இதைக்கூற எனக்கு எந்தவிதமான மறைமுக உள்நோக்கமும் இல்லை,”.

ஆயினும், 22 ஆண்டுகளுக்கு முன்னதாக ஈராக்கில் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் கையாண்ட அதே அனுகுமுறையை, பின்பற்றத் டிரம்ப் ஆட்சி உண்மையிலேயே துணிந்திருக்கிறதா?

“இன்று டெல் அவிவ்; நாளை அது நியூயார்க்காகவும் இருக்கலாம்,” என்று ஏபிசி நியூஸ் நேர்காணலின்போது நெதன்யாகு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருந்தார். “‘அமெரிக்காவே முதன்மை“ என்ற கோட்பாட்டை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ‘அமெரிக்கா அழிவு’க்கு வழிவகுக்கக்கூடிய ஒரு கருத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்று ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் முன்னாள் தொகுப்பாளரும் MAGA இயக்க ஆதரவாளருமான டக்கர் கார்ல்சன்  அழுத்தமாகத் தெரிவித்தார்.

ஆனால், ‘அமெரிக்காவே முதன்மை’ என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கும் பலரும் – ட்ரம்பின் ஆதரவாளர்கள் மத்தியிலும், டிரம்ப் ஆட்சியில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் நபர்கள் உட்பட – நெதன்யாகுவின் கருத்துடன் ஒத்துப்போகவில்லை. மத்திய கிழக்கில் அமெரிக்கா மீண்டும் ஒரு போரில் அடியெடுத்து வைப்பதற்குத் தாங்கள் முற்றிலும் எதிராக இருப்பதாக அவர்கள் வெளிப்படையாகப் பிரகடனம் செய்துள்ளனர்.

1600-களின் காலம் தொட்டே, சர்வதேசப் போர்ச் சட்டங்களும், போர் மரபுகளும், நாடுகளின் தலைவர்களைக் குறிவைத்து அழித்தொழிப்பதோ, அல்லது படுகொலை செய்வதோ அறவே தடைசெய்யப்பட்டுள்ளதெனத் தெளிவுறப் பறைசாற்றியுள்ளன.

இருப்பினும், செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னராக, அமெரிக்கா தனது ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ எனத் தானே பிரகடனப்படுத்திய ஒன்றைத் தொடங்கியபோது, அங்கீகரிக்கப்பட்ட போர் விதிகள் ஓரங்கட்டப்பட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது வழக்கமான ஒரு தேசத்திற்கோ, அல்லது அதன் அதிகாரப்பூர்வமான படையணிக்கோ எதிராக தொடுக்கப்படுவது அன்று; மாறாக, கொரில்லா போரில் ஈடுபடும் சிறு குழுக்களுக்கும், சர்வதேச அளவிலான போராளி குழுக்களுக்கும், அத்துடன் அமெரிக்கா ‘தீவிரவாதம்’ அல்லது ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்று குறிப்பிட்ட சில சிந்தனைகளுக்கும் எதிராகவே தொடுக்கப்படுவதாகும்.

1984 ஆம் ஆண்டு முதல், ஈரானைப் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடாகவே அமெரிக்கா அதிகாரபூர்வமாகப் முத்திரை குத்தி வருகிறது. அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி செய்த ஷா முகமது ரெசா பஹ்லவி, 1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சியின் விளைவாகப் தூக்கியெறியப்பட்டு ஐந்தாண்டுகளுக்குப் பின்னரே இது போன்று முத்திரை குத்துவது நிகழ ஆரம்பித்தது.

"இஸ்ரேலியர்கள் காமினியைப் படுகொலை செய்ய முயற்சிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால்... இது ஒரு குழு அல்ல, இது ஒரு நாடு." — சினா அசோடி, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம்

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஈரான் விவகார நிபுணரான சினா அசோடி, ‘மிடில் ஈஸ்ட் ஐ’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ரஷ்யா அமெரிக்க அதிபரைக் கொல்ல முற்பட்டால், மேற்கத்தியர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்,” என ஈரான் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் குறித்துப் பேசுகையில் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில்: “ஒருவேளை இஸ்ரேல் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா காமினியைக் கொல்ல முயல்வதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் ஈரான் ஒரு சிறு குழு அல்ல; அது ஒரு இறையாண்மைமிக்க நாடு. அவர்களிடமும் தகுந்த மாற்றுத் திட்டங்கள் உண்டு. ஈரானில் ஒரு சிறப்பு சபை உள்ளது; தற்போதைய தலைவருக்கு ஏதேனும் நேர்ந்தால், அடுத்த உச்சபட்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதே அதன் முதன்மைப் பணியாகும்”.

நாம் பொதுவாகக் காணும் எதேச்சதிகார ஆட்சிமுறை ஏதும் ஈரானில் இல்லை. அங்கு, வாரிசுகளற்ற தனிப்பெரும் தலைவர் மட்டுமே ஆட்சி செய்யும் வழக்கம் இல்லை. இக்காரணத்தால், ஈரானிய அரசாங்கத்தை கவிழ்ப்பதில் அமெரிக்கா தலையிட முற்பட்டால், அது எதிர்பாராத சிக்கல்களை விளைவிக்கும். இது அமெரிக்காவை நேரடியாகக் போர்க்களத்திற்கு இழுத்து வருவதற்கான வாய்ப்பும் உள்ளது; அதிபர் டிரம்ப் பலமுறை இதைத் தாம் விரும்பவில்லை எனத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இச்சூழலை 1990களில் ஈராக்கில் நடந்தவற்றுடன் அசோடி ஒப்பிட்டு பேசுகிறார். ஈராக்கிற்கு எதிராக அமெரிக்கா படையெடுத்து அந்நாட்டின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைக்கொண்ட பிறகும்கூட, ஏறத்தாழ ஒரு பத்தாண்டுக் காலத்துக்குப் பின்னர்தான், ஆட்சி மாற்றம் சாத்தியமானது.

1990களில் யூகோஸ்லாவியாவில் நடந்தவற்றைப் பற்றியும் அசோடி பேசுகிறார். நேட்டோ படைகள் யூகோஸ்லாவியா மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்திய போதும், அது ஆட்சி மாற்றத்திற்கு இட்டுச் செல்லவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். களத்தில் இராணுவ வீரர்கள் இல்லாததால், ஆட்சி கவிழ்ப்பு நிறைவேறவில்லை.

பல ஆண்டுகளாக, ஈரானின் எரிசக்தி துறை, நிதித் துறை மீது அமெரிக்கா விதித்திருந்த தடைகளை மேலும் கடுமையாக்கியது. ஆனாலும், இந்த நடவடிக்கைகளால் ஈரானிய மக்கள், 1979இல் செய்ததைப் போல, அயத்துல்லா காமினியின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழவில்லை.

வெள்ளிக்கிழமை வரை, அதிபர் டிரம்ப் ஈரானுடன் ஓர் இராஜதந்திர ரீதியிலான வெற்றியைப் பெறவும், அத்துடன் தான் பெரிதும் எதிர்பார்த்த புதிய அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை எட்டவும் விரும்புவதாகவே தோன்றி வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, வியப்புக்குரிய வகையில், அவர் ஈரான் தலைவர் அயத்துல்லா காமெனியுடன் கடிதம் கூட அனுப்பியிருந்தார்.

இப்படியிருக்க, இந்தப் பேச்சு படுகொலை எனும் திசையை நோக்கி எப்படித் திரும்பியது?

சர்வதேச கொள்கை மையத்தின் (Center for International Policy) அரசு விவகாரங்களுக்கான துணைத் தலைவர் டிலான் வில்லியம்ஸ், MEE செய்தி நிறுவனத்திடம் இது குறித்து விளக்கமளித்தார். "போர்ச் சட்டம் உட்பட, சர்வதேச சட்டத்தின் பெரும்பாலான பிரிவுகள், இனி அர்த்தமற்றவையாக மாறிவிட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்." என்று அவர் குறிப்பிட்டார்.

"ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்கள் பற்றி அமெரிக்காவிற்கு எவ்விதக் கவலையும் இல்லை. இந்தச் செயல்கள் சர்வதேச சட்டத்தையும், அமெரிக்கச் சட்டத்தையும் மீறவே செய்கின்றன என்பது கவனிக்கத்தக்கது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கியிருக்கும் போரில், சர்வதேச சட்டத்தை மீறுவதிலிருந்து இஸ்ரேலைத் தடுக்க டிரம்ப் நிர்வாகம் முயற்சிக்கும் என நான் நம்பவில்லை," என்று டிலான் வில்லியம்ஸ் குறிப்பிட்டார்.

"அதிபர் டிரம்ப் மோதல்களைக் குறைத்து, இராஜதந்திர வழியை நாட விரும்புவதாகக் கூறும்போது, அவர் அதை மனதிலிருந்தேதான் சொல்கிறார் என நான் நம்புகிறேன். ஆனால், அவர் நெதன்யாகுவுக்கு வழங்கும் சுதந்திரம், அந்த நோக்கத்திற்கு முற்றிலும் நேரெதிராக அமைகிறது," என்று டிலான் வில்லியம்ஸ் மேலும் தெரிவித்தார்.

எதிர்விளைவு

இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்குப் போதுமான செல்வாக்கைக் கொண்டுள்ள ஒரே உலக வல்லரசு அமெரிக்கா மட்டுமே. ஆனால், நெதன்யாகுவிற்கு அமெரிக்கா அளிக்கும் இந்த கட்டுப்பாடற்ற சுதந்திரம், ஈரானிய அரசாங்கத்தின் நிலையை மேலும் உறுதிப்படுத்தி, மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஈரானிய மக்களை ஒன்றுதிரட்டும் விளைவை மட்டுமே ஏற்படுத்தக்கூடும்.

"நெதன்யாகு அரசாங்கம் ஈரானிய அரசை வலுவிழக்கச் செய்ய விரும்புவதாகப் பகிரங்கமாக அறிவிக்கிறது. ஆனால், என் உள்ளுணர்வு என்னவென்றால், இஸ்ரேலிய அரசு இஸ்லாமியக் குடியரசுக்கு மறைமுகமாகப் பக்கபலமாகவே செயல்படுகிறது என்று நான் கருதுகிறேன். ஏன்? ஏனெனில், வழக்கமாக ஒரு தேச அளவிலான அவசரகால நெருக்கடி ஏற்படும்போது, அரசாங்கங்கள் தங்கள் அதிகாரப் பிடியை மேலும் இறுக்கிக்கொள்வதோடு, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தங்கள் கட்டுப்பாட்டைப் பன்மடங்கு பெருக்குகின்றன," என்று சினா அசோடி குறிப்பிட்டார்.

"ஈரானிய அரசாங்கம் எப்போதுமே கடுமையும் ஒடுக்குமுறையும் நிறைந்ததாகவே திகழ்ந்து வந்துள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால், இப்போதோ, அவர்கள் தங்கள் ஒடுக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தவும், எந்த வகையான எதிர்ப்புக் குரலையும் அடியோடு ஒடுக்கவுமான ஒரு நியாயமான காரணம் கிடைத்துவிட்டதாக கருதுவர்," என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஈரான் விவகார நிபுணராக இருக்கும் சினா அசாடி மேலும் கூறினார்.

"ஈரானில் எட்டு கோடி மக்கள் வாழ்கின்றனர். ஆட்சி மாற்றத்திற்கான இந்தக் கிளர்ச்சிக்கு, எவரும் உண்மையான ஆதரவு தெரிவிப்பதாக நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை" என்று ஓர் யூத ஈரானிய-அமெரிக்க ஆய்வாளர் கூறியுள்ளார்.

ஈரானில் முக்கியமாக இராணுவம் அல்லாத இலக்குகளைத் இஸ்ரேல் தாக்கி அழிப்பதோடு, பல பொதுமக்கள் உயிரிழப்பதால், அயத்துல்லா காமெனிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவது "நாளுக்கு நாள் சாத்தியமற்றதாகவே தோன்றுகிறது," என்று MEE செய்தி நிறுவனத்திடம் டிலான் வில்லியம்ஸ் தெரிவித்தார். அதற்கு மாறாக, அரசாங்கத்தை ஆதரிக்காதவர்கள் உட்படப் பெரும்பாலான ஈரானிய மக்கள் தங்கள் தாய்நாட்டிற்காக ஒன்றுதிரண்டு, அதற்கு ஆதரவாக நிற்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்ரேலில் குடும்ப உறவுகளைக் கொண்டுள்ளவரும், MEE செய்தி நிறுவனத்திடம் வெளிப்படையாகப் பேசுவதற்காகத் தமது அடையாளத்தை வெளியிட விரும்பாதவருமான யூத ஈரானிய-அமெரிக்கர் ஒருவர், ஈரானின் உள்ளேயும் வெளியேயும் வாழும் இளைய தலைமுறை ஈரானியரிடையே ஆட்சி மாற்றத்திற்கான ஆதரவு மிகக் குறைவாகவே உள்ளது என்பதை விளக்கினார்.

"ஈரானிய தேசியம் எத்துணை வலிமையுடன் பரவி, ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதையும், ஈரானியர்கள் தங்கள் தேச ஒற்றுமையை எவ்வாறு உயிர்ப்பித்துக் கொள்ள முடியும் என்பதையும் நாம் அற்பமாக எண்ணிவிடக் கூடாது என்பது என் கருத்து," என  அந்த யூத ஈரானிய-அமெரிக்கர் குறிப்பிட்டார்.

"எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட ஒரு பரந்த நாடு ஈரான். ஆட்சி மாற்றத்திற்கான இத்தகையதொரு முயற்சிக்கு எவரும் ஆதரவளித்ததாக நான் கண்டதில்லை. மாறாக, மறைந்த ஷா முகமது ரெசா பஹ்லவி’ன் மகன் ரெசா பஹ்லவி வெளியிட்ட சில கருத்துக்களுக்காக மக்கள் அவரைக் கேலி செய்வதை மட்டும் நான் பார்த்திருக்கிறேன்," என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அந்நிய நாடுகளின் தலையீட்டின் துணையுடன் ஈரானிய அரசாங்கத்தைப் தூக்கியெறிவதற்கு ஒரு தன்னியல்பான, உள்நாட்டு இயக்கம் அங்கு உருவாவதற்கு வாய்ப்வில்லை. ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற கோஷம் உருவான காலகட்டத்தில் ஈராக்கில் அமெரிக்கா இழைத்த பெரும் தவறுகளையே தற்போதைய நிகழ்வுகள் அநேகமாக நினைவூட்டுகின்றன.

நெதன்யாகு, இராணுவத்தைச் சாராத ஈரானிய அரசியல் தலைவர்களை உண்மையில் படுகொலை செய்ய ஆணையிட்டால், அத்தகையதொரு நிகழ்வுக்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பாகும், அல்லது குறைந்தபட்சம் அதற்கு உடந்தையாகக் கருதப்படும் என்று பெரும்பாலானோர் உறுதியாக நம்புவார்கள்.

"இத்தாக்குjலுக்காக இஸ்ரேலுக்குத் தேவையான ஆயுதங்களை நாங்கள் வழங்கி வருகிறோம், மேலும் அதிக ஆயுதங்களை அனுப்பவும் உள்ளோம் என்று அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சர்வதேசப் பேச்சுவார்த்தைகளிலும் நாங்கள் இஸ்ரேலுக்குப் பக்கபலமாக நின்று, அவர்களை ஊக்குவித்து வருகிறோம் என்பதே டிரம்ப்ன் நிலைப்பாடு," என்று டிலான் வில்லியம்ஸ் MEE செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.

"தற்போது இஸ்ரேல் மட்டுமே நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும்கூட, எவ்விதச் சந்தேகமுமின்றி இப்பிராந்திய மக்கள் இதை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளின் கூட்டு சதியாகவே கருதுகின்றனர்," என்று அவர் தொடர்ந்து விளக்கினார்.

அசோடியின் மதிப்பீட்டின்படி, இக்காலகட்டத்தில், ஈரான் பேச்சுவார்த்தைக்கும் இணக்கத்திற்கும் தயாராக இருக்கும் வரையில், ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித ஆபத்தான முயற்சிகளிலும் இறங்க விரும்பவில்லை.

"மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஈரான் ஏற்றுக்கொள்ளும் வரை, அங்கு எத்தகைய அரசாங்கம், எத்தகைய ஆட்சி செய்கிறது என்பது குறித்தெல்லாம் அமெரிக்கா கவலை கொள்வதாக எனக்கு தோன்றவில்லை," என்று அவர் விளக்கினார்.

"ஈரானிய அரசாங்கம் அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்கிறது என்பதே அமெரிக்காவைப் பொறுத்தவரை உள்ள முதன்மையான முரண்பாடாகும். ஈரான் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஏற்க மறுப்பதுடன், அமெரிக்காவை அங்கிருந்து வெளியேற்றவும் தீவிரமாக முயல்கிறது. இந்த அடிப்படையிலேயே அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இத்தகையதொரு முரண்பாடு நிலவுகிறது," என்பதையும் சர்வதேச கொள்கை மையத்தின் (Center for International Policy) அரசு விவகாரங்களுக்கான துணைத் தலைவர் டிலான் வில்லியம்ஸ் தெளிவுபடுத்தினார்.

(யாஸ்மின் எல்-சபாவி)

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை: https://www.middleeasteye.net/news/netanyahu-wants-regime-change-in-iran-is%20trump-on-board?utm_source=facebook&utm_medium=social&utm_campaign=Social_Traffic&utm_content=ap_zyft8xprgk

  Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு