தேசிய இனங்களின் ஒற்றுமையே இந்திமொழித் திணிப்பை முறியடிக்க முடியும்!
தெய்வ சுந்தரம்

பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றே இன்றைய இந்தியா! தமிழ், கன்னடம், தெலுங்கு , மலையாளம் என்று பல்வேறு தேசிய இனங்கள் இந்தியாவின் தென்பகுதியில் நீடிக்கின்றன. தேசிய இனம் என்பது நிலப்பகுதி, அரசியல் , பொருளாதாரம், பண்பாடு, மொழி போன்ற பல கூறுகளைக் கொண்டு ஒன்று.
குறிப்பிட்ட ஒரு தேசிய இனம் என்பது முந்தைய வரலாற்றில் ஒன்றுபட்ட ஒன்றாக நீடிக்கவில்லை. தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றைப் பார்த்தால், பல்வேறு நிலப்பகுதிகளாகவும், பல்வேறு அரசுகளின்கீழும் நீடித்து வந்துள்ளன. ஆனால் அவை அனைத்துக்கும் ஒரு பொதுக்கூறு தமிழ்மொழியும் தமிழர் பண்பாடும். அரசியல், பொருளாதாரக் கூறுகள் வேறுபட்டு இருந்தாலும், மொழி , பண்பாடு இரண்டும் அவற்றிக்குப் பொதுக்கூறுகளே.
கிபி 10 ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு, அந்நியர்களின் படையெடுப்பு, அந்நியர்களின் அரசியல் ஆதிக்கம் போன்றவற்றாலும் நிலவுடமை அரசியல் பொருளாதார அமைப்பு பலவீனமடையத் தொடங்கியதாலும், உற்பத்திமுறை மாறத் தொடங்கியதாலும் தமிழ் பேசும் மக்கள் - தமிழ்ப்பண்பாடு உடைய மக்கள் - ஒரே திரட்சியாக - அரசியல் பொருளாதாரத் திரட்சியாக - தமிழ்த் தேசிய இனமாகப் பரிணமிக்கத் தொடங்கியது. இதுபோன்றே இந்தியப் பூகோளப் பகுதியில் பல்வேறு தேசிய இனங்கள் உருவெடுக்கத் தொடங்கின.
இவ்வாறுதான் இன்று இந்தியப் பூகோளப்பகுதியில் நிலவுகிற பல்வேறு தேசிய இனங்கள் தோன்றி வளர்ந்திருக்கமுடியும். இந்தத் தேசிய இனம் என்பது மனிதகுல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றி நிலவுகிற வரலாற்று விளைபொருளே ஆகும்.
இங்குத் தேசிய இனங்கள் தோன்றி வளர்ந்த சூழலில் உலகில் மேலைநாடுகளில் முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றி, வளர்ந்து நிலவியது. மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகள் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காக, தங்கள் பூகோள எல்லைகளைத் தாண்டி, தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிறுவி, அதைத் தக்கவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டன. அந்த ஆதிக்க முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்திய நிலப்பரப்பில் ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் என்று மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகள் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை நிறுவினர். தங்களுக்கு ஏற்றவகையில் இந்தியப் பகுதியின் பொருளாதார அமைப்பையும் மாற்றத் தொடங்கினர்.
அதன் ஒரு பகுதியாகவே இங்கு நிலவிய நிலவுடமை உற்பத்திமுறையும் மாறத் தொடங்கியது. இங்கு நிலவிய விவசாய உற்பத்தியும் உற்பத்திமுறையும் மாறத் தொடங்கின. இங்கிருந்த நிலவுடைமையாளர்கள் மேலைநாட்டு முதலாளித்துவ அரசுகளின் ஆதரவுடன் முதலாளித்துவ உற்பத்திக்கு மாறத் தொடங்கினர். இந்தியப் பகுதியின் பொருளாதாரம் காலனித்துவப் பொருளாதாரமாக மாறத் தொடங்கியது.
மேலும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றி வளர்ந்த ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலன்களுக்காகவே இங்குப் பொருளாதார உற்பத்திமுறைகளை மாற்றி அமைக்கும்போது, உள்ளூர் நிலவுடைமையாளர்களுடன் கைகோர்த்தபோது, ஏகாதிபத்தியத்தைச் சார்ந்த உள்ளூர் முதலாளிகள் வளரத் தொடங்கினர். அவர்களில் ஒரு சிறு பகுதியினர் முழுக்க முழுக்க ஏகாதிபத்திய தாசர்களாக மாறியநிலையில், உள்ளூர் முதலாளிகள் தங்கள் நலன்களுக்காகத் 'தங்கள் மண்' என்னும் முழக்கத்தை முன்வைக்கத் தொடங்கினர். இங்குள்ள நிலவுடைப் பொருளாதாரமும் மாறவேண்டும், அதேவேளையில் ஏகாதிபத்தியங்களும் முழுமையாக இங்கு ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்ற ஒரு நிலையை எடுக்கத் தள்ளப்பட்டனர்.
இதுபோன்ற ஒரு சூழலில் இந்தியப் பூகோளப் பகுதியில் பல்வேறு தேசிய இனங்கள் தோன்றி நிலைக்கத் தொடங்கின. இந்தத் தேசிய இனங்கள் அனைத்துக்கும் பொது எதிரியாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் நீடித்தது.
ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு இவ்வாறு தேசிய இனங்கள் வளரத் தொடங்கியது ஆபத்து. எனவே, அவை தங்களுக்குள் ஒன்றிணைந்து பொது எதிரி என்ற வகையில் தனக்கு எதிராக நின்றுவிடக்கூடாது என்பதற்காகப் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டன. அவற்றின் ஒரு பகுதியே ஒப்பீட்டு மொழியியல் ஆய்வில் ஏற்பட்ட வளர்ச்சி. எல்லீஸ், சர் வில்லியம்ஸ் ஜோன், இராபர்ட் கால்டுவெல் போன்றோர் முன்வைத்த இந்தோ ஆரிய மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பம் போன்ற கருத்துகள். இவற்றை அடிப்படையாகக்கொண்டு, இந்தியப் பகுதியில் ஆரியர், திராவிடர் என்ற இரண்டு 'இனங்களே' உண்டு என்று கூறத் தொடங்கினர். பொது எதிரிக்கு - ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு - எதிராக இங்குள்ள தேசிய இனங்கள் ஒன்றுபட்டு விடக்கூடாது, தங்கள் அரசியல் அதிகாரம் பலவீனமடைந்துவிடக்கூடாது என்பதே அவற்றின் நோக்கம்.
தமிழ்த் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம், கன்னடத் தேசிய இனம், மலையாளத் தேசிய இனங்கள் , தங்களுடைய பொது எதிரிக்கு எதிராகப் போராடக்கூடாது, பிளவுபட்டு நிற்கவேண்டும் என்பதே இன்றைய இந்திய ஆளும் வர்க்கத்தின் - அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தின் விருப்பம் போன்று - விருப்பம். அதன் ஒரு பகுதியே திராவிடமொழிகளைப் பற்றிய ஆராய்ச்சியை - மூல திராவிடம் என்ற கருதுகோளை - ஆரியர், திராவிடர் என்ற கற்பனை 'இனங்கள்' பற்றிய கருத்தை - பலவகைகளில் தேசிய இனங்களின்மீது மீண்டும் திணிக்க விரும்புகிறது. அத்தோடு நிற்காமல், தமிழிலிருந்துதான் தெலுங்கு வந்தது, கன்னடம் வந்தது, மலையாளம் வந்தது அல்லது பிறந்தது போன்ற கருத்துகளைப் பரப்ப விரும்புகின்றன. தேசிய இனங்களின் ஒற்றுமைக்கு எதிரான இதுபோன்ற 'பரப்பல்களை' தெரிந்து சொய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி, அது தேசிய இனங்களின் ஒற்றுமையையை சீர்குலைக்கும். இன்றைய ஆளும் வர்க்கங்களின் ஆதிக்க அரசியலுக்கே பயன்படும்.
இந்த சூழ்ச்சிக்குத் தேசிய இனங்கள் பலியாகிவிடக்கூடாது. மொழிகளில் நீடிக்கிற ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்கிற மொழியியலின் ஒரு பிரிவைத் தவறாக அரசியல் நோக்கத்திற்காக ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்த முயல்கின்றன. தமிழ்த் தேசிய இனம், தெலுங்குத் தேசிய இனம் என்று அந்தந்தத் தேசிய இனங்கள் தங்களுடைய தேசிய இனத்தின் தனித்துவத்தைத் தக்கவைப்பதை மழுங்கடிக்க முயல்கின்றன. ஆங்கிலேயர் தொடங்கிவைத்த ஆரிய - திராவிட 'இனக் கோட்பாட்டை' பல வகைகளில் மீண்டும் திணிக்க முயல்கின்றன. இந்தச் சூழ்ச்சிக்கு நாம் பலியாகிவிடக்கூடாது.
இன்று தேவையானது அனைத்துத் தேசிய இனங்களின் தனித்துவமும் அரசியல் உரிமையும் மொழி உரிமையும் ஆகும். இந்திமொழியின் ஆதிக்கம் அகற்றப்பட வேண்டும். அனைத்துத் தேசிய இனங்களின் மொழிகளும் ஆட்சிமொழிகளாக அரசியல் சட்டத்தில் இடம்பெறவேண்டும். அதற்காக அனைத்துத் தேசிய இனங்களும் ஒன்றுபட்டு, தங்களுக்கு எதிராக நிற்கிற பொது எதிரியை எதிர்த்துப் போராடவேண்டும். ஆளும் வர்க்கங்களின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடக்கூடாது.
ஒடுக்கப்படுகிற அனைத்தும் தேசிய இனங்களும் தங்களுக்கு எதிரான பொது எதிரியை எதிர்த்து ஒன்றுபட்டு நிற்கவேண்டும். தங்களது தேசிய இன உரிமைகளைப் பெறவேண்டும்.
https://www.facebook.com/share/1FtpfSvSji/
=============================================================
தேசிய இனங்களுக்கிடையே மோதல் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு லாபமே!
இந்தியப் பகுதியில் நீடிக்கிற தேசிய இனங்கள் ஒவ்வொன்றின் பாதிப்புகளும் வேறுபட்டு இருந்தாலும், அத்தனைப் பாதிப்புகளுக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் தேசிய இன ஒடுக்குமுறை அரசியலே அடிப்படை!
இந்நிலையில் பாதிக்கப்படுகிற, ஒடுக்கப்படுகிற அத்தனை தேசிய இனங்களும் தங்களது பொது நோக்கமாக, இந்திய ஆளும் வர்க்கங்களின் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்துநின்று போராட வேண்டும்.
அதற்கு அடிப்படை, இவற்றிற்கு இடையே ஒற்றுமை நீடிப்பதாகும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டிய நேரத்தில் . . . நதிநீர்ப் பங்கீடு, மொழிப் பிரச்சினை என்று ஏதாவது ஒருவகையில் தேசிய இனங்கள் பிரிந்துநின்றால், அது ஆளும் வர்க்கங்களின் அரசியலுக்குச் சாதகமாகவே அமையும்!
ஆங்கில ஏகாதிபத்தியம் பின்பற்றிய தந்திரத்தையே இன்றைய இந்திய ஆளும் வர்க்கங்களும் பின்பற்றுகின்றன. தேசிய இனங்களின் ஒற்றுமையைப் பாதிக்கக்கூடிய வகையில் பிரச்சினைகள் தோன்றி நீடிக்கவேண்டும் என்று விரும்புகின்றன. இதற்கு ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் பலியாகிவிடக்கூடாது!
விவசாயிகளுக்கு அடிப்படையான பிரச்சினை நதி நீர்ப் பிரச்சினை. அடுத்து, அனைத்துப் பிரிவு மக்களுக்கும் உள்ள பிரச்சினை இந்தித் திணிப்பு! மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்தல்! தேசிய இனங்களின் தனித்தன்மைகளையே மழுங்கடித்தல்!
இவற்றை மனதில்கொண்டுதான் ஒடுக்கப்படுகிற தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் கவனமாகச் செயல்படவேண்டும். ஆளும் வர்க்கங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகிவிடக்கூடாது.
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் ஒடுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடானாது அடிப்படையான முரண்பாடுகளில் ஒரு முக்கியமான முரண்பாடு! இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கே கவனம் செலுத்தப்படவேண்டும்!
தேசிய இனங்களுக்கிடையே மேற்கூறியவாறு சில முரண்பாடுகள் நீடிக்கலாம். இல்லை என்று கூறமுடியாது! இந்த முரண்பாடுகள் பகையற்ற முரண்பாடுகளாகக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்படவேண்டும்! பகையுள்ள முரண்பாடுகளாக இவை மாறிவிட அனுமதிக்கக் -கூடாது!
https://www.facebook.com/share/p/1AaC9YVrgH/
- தெய்வ சுந்தரம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு